Wednesday, January 20, 2010

எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய்



நாம் தினந்தோறும் தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ தவறுகள் செய்கிறோம்.மனதால் கெட்டதை நினைக்கிறோம் .
வாக்கால் மற்றவர்களைப் புண் படுத்துகிறோம்.சுய நலம் அதிகரிக்கும்போது செய்யும் காரியங்கள் தவறு மயமாக ஆகிவிடுகின்றன. கவனம் இப்படித் திசை மாறிப் போகும்போது என்றாவது ஒரு நாள் அதற்கானதண்டனையை
அனுபவித்தே ஆக வேண்டும்.

நம்மைத் தினமும் காப்பாற்றும் தெய்வத்தை நினைக்காமலும் வழிபடாமலும் காலத்தை வீணாகப் போக்கும் பிழை அந்த தெய்வத்தால் மட்டுமே மன்னிக்கக் கூடியது. அப்பிழைகளை நமக்குப் புரியும்படி ஒரே பாடலில் எளிமையாகக் காட்டுகிறார் பட்டினத்தார்.இப்பாடல் காஞ்சி ஏகாம்பர நாத சுவாமி மீது பாடப் பெற்றது.

கல்லாப் பிழை: இறைவனைப் பற்றிய நூல்களைப் படித்து அதன்படி வாழ்க்கையை நடத்தாமல் இருப்பது ஒரு பிழை.இதையே கல்லாப் பிழை என்கிறார் பட்டினத்தார்.

கருதாப் பிழை: இறைவனைப் பற்றிய எண்ணமே இல்லாமல் வாழ்வதும் பிழையே.

கசிந்து உருகி நில்லாப் பிழை: இறைவனது கருணையை எண்ணி எண்ணிக் கசிந்து மனம் உருகி வாழாவிட்டால் அதுவும் பிழையே.

நினையாப் பிழை: இறைவனை மறப்பது நன்றி மறப்பதற்கு சமம். அப்படிப்பட்ட நாட்கள் பிறவாத நாட்கள் என்கிறார் அப்பர் சுவாமிகள்.

பஞ்சாக்ஷர ஜபம் செய்யாத பிழை:முன்பெல்லாம் பஞ்சாக்ஷர ஜபம் செய்யாத வீடுகள் மிகக் குறைவாக இருந்தது. அதற்கு மேல் மந்திரம் வேறு எதுவும் இல்லாததால் நான்கு வேத நடுவில் இருக்கும் மகிமை உள்ள இந்த மந்திரத்தைப் பெரியோர்கள் ஜபிக்கும்படிச் சொன்னார்கள்.ஆதலால் இதைச் செய்யாமல் இருப்பது பெரிய பிழை ஆகிறது.

துதியாப்பிழை: தோத்திரங்களால் துதித்தல் மிகவும் முக்கியமானது.தேவர்களும் அசுரர்களும் முனிவர்களும் பிறரும் செய்த தோத்திரங்கள் ஏராளமாகப் புராணங்களில் காணப் படுகின்றன.இறைவனை அவனது நாமங்களால் துதித்தால் பிழைகளை மன்னித்து அருள்வான். அப்படித் துதிக்காமல் இருப்பது தவறு அல்லவா?

தொழாப்பிழை: தெய்வம் நமக்குத் தந்த கைகள் அவனைத் தொழுவதற்கே ஏற்பட்டவை.மனிதர்களைத் தொழுதுவிட்டுத் தெய்வத்தை தொழாதவர்களும் இருக்கிறார்கள்.இதனால் பெரிய பிழை செய்தவர்கள் ஆகிறார்கள்.

இப்படியாகப் பல பிழைகளை நாள்தோறும் செய்கிறோம்.இதைத் தெய்வத்தைத் தவிர யாரால் மன்னிக்க முடியும்? இப்பொழுது முழுப் பாடலையும் பார்ப்போம்.
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நினஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே.

என்பது அந்த அற்புதமான பாடல்.
தினமும் இரவில் படுப்பதற்கு முன் இப்பாடலைச் சொல்வதை இன்று முதல் வழக்கமாகக் கொள்வோமா?