Monday, August 16, 2010

சிவலோகம் ஆளலாம்


நமக்கெல்லாம் ஒரு சந்தேகம் அடிக்கடி வரும். சொர்க்கம் , நரகம் என்பதெல்லாம் உண்மையிலேயே உண்டா அல்லது வெறும் கற்பனையா ; யார் பார்த்துவிட்டு வந்து சொன்னார், என்பதே அது.ஒருவருக்கு நடந்ததை அவரே சொல்லிவிட்டுப் போயிருந்தால் அதை அகச்சான்று என்றும் , பிற்காலத்தில் வந்தவர் அதைப் பற்றி சொல்லியிருந்தால் புறச்சான்று என்றும் சொல்வார்கள். மூவர் தேவாரத்தில் அகச்சான்றுகளாகத்தெரியவரும் செய்திகள் ஏராளம்.

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தனது பதினெட்டாவது வயதில் ஆப்த சிநேகிதரான சேரமான் பெருமாள் நாயனாருடன் திருவஞ்சைக்களத்தில் தங்கியிருந்தார். அங்கு கோயில் கொண்டுள்ள அஞ்சைக்களத்து அப்பரிடம் பதிகம் மூலம் உலக வாழ்க்கையிலிருந்து விடுவித்துத் தனக்குச் சிவலோகம் தந்தருளுமாறு வேண்டவே, சுவாமியும் தேவலோகத்திலிருந்து வெள்ளை யானையை அனுப்பி அதில் சுந்தரரை ஏறி வரும்படி அருளினார். இறைவனது அருளை வணங்கியவாறு சுந்தரர் அதில் அமர்ந்தவுடன் அந்த யானை ஆகாய வீதியில் கிளம்பியது. அந்த நிலையிலும் உலகத்தவர்களுக்கு உபதேசம் செய்கிறார் குருநாதர். தனக்குக் கிடைத்த பேரருள் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற பெரும் கருணை, தேவாரப் பதிகமாக வெளிப்படுகிறது. "தான் எனை முன் படைத்தான்" என்ற அப்பதிகத்தில் தனக்கு வெள்ளையானை தந்தருளிய கருணையைப் போற்றுவதோடு தன்னை இந்திரன்,திருமால்,பிரமன் முதலியோரும் எதிர்கொண்டு அழைப்பதைக் குறிப்பிடுகிறார். வேத மந்திரங்களும் ஆகமங்களும் அடியார்களும் முழங்கும் ஓசை எங்கும் கேட்கிறது. இவ்வாறு யானை ஏறி வரும் மகான் யார் என்று இறைவனை முனிவர்கள் கேட்க அதற்கு, எனது பரம பக்தன் நம்பியாரூரன்" என்று ஸ்ரீ பரமேச்வரன் பதில் சொன்னதாகப் பதிகத்தில் வருகிறது.

பூலோகத்தில் பிறந்து சிவபக்தி செய்யும் அனைவருக்கும் சிவலோகம் கிடைக்கும் என்று சுந்தரரின் இந்தப் பதிகம் உறுதியாகக் கூறுகிறது. இதற்கு அவர் சொல்லும் பிரமாணம் என்ன தெரியுமா? தானே இது சத்தியம் என்பதைக் கண்டுகொண்டதாகக் கூறுகிறார். இதோ அவ்வினிய வரிகள்:

மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழி அடியார்
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்
விண்ணு லகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல்
என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான் மலை உத்தமனே.

நொடித்தான் மலை என்பது கயிலாய மலையைக் குறிக்கும். சிவ பெருமானுக்கு வாழையடி வாழையாக மீளா அடிமைசெய்யும் வம்சத்தில் பிறந்த அடியார்கள் சிவலோகம் பெறுதல் உண்மை என்பதை சுந்தரரின் இந்த அகச்சான்று உறுதி செய்கிறது. இதில் சந்தேகம் வேண்டாம். "சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவில்லையே" என்ற அவரது தேவார அடிகள் இக்கருத்துக்கு உறுதுணை ஆவதை மனத்தில் கொண்டு ஆடி சுவாதி நன்னாளில் குருநாதரின் பாத கமலங்களை வணங்கிச் சிவத்தொண்டு ஆற்றுவோமாக.