Tuesday, May 18, 2010

சபாநாதனிடம் ஒரு கேள்வி


காரைக்கால் அம்மையாருக்கு ஒரு சந்தேகம். பகவானின் உருவம் செக்கச்செவேல் என்று இருப்பதாக வேதமும் புராணங்களும் சொல்கின்றன அல்லவா? ஸ்வர்ண மயமானவன் என்று ஸ்ரீ ருத்ரமும் செம்மேனி எம்மான் என்று தேவாரமும் ,தாமரைக்காடு போன்ற மேனியன் என்று திருவாசகமும் சொல்வதை சில உதாரணங்களாகக் காட்டலாம். இப்படி இருக்கும்போது, காரைக்கால் அம்மையார் பகவானிடமே தனது சந்தேகத்தை கேட்கிறார்.


"சித் சபையில் அனவரதமும் ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டு இருப்பவனே, உனது இடது கையில் அக்கினியை ஏந்திக்கொண்டு பேய்கள் ஆடும் காட்டில் நடனம் ஆடிக்கொண்டு இருக்கிறாய். அந்த அக்னிக்கு உன் சிவந்த கை பட்டதனால் சிவந்த நிறம் வந்ததா; அல்லது அக்னியை ஏந்தியதால் உன் கை சிவந்ததா? எனக்கு இதனைச் சொல்லவேண்டும்" என்கிறார்.


ஈச்வரனிடம் அபாரப் பிரேமை உடையவர்களுக்கு இப்படியெல்லாம் தோன்றும்.சுவாமி எதுவும் சாப்பிடாமல் காட்டு விலங்குகளுக்கு நடுவில் இருக்கிறாரே என்று நினைத்தாராம் கண்ணப்ப நாயனார். தான் கொண்டு வந்த நைவேதியத்தை பிள்ளையார் சாப்பிடவில்லையே என்று தன தலையை மோதிக்கொண்டாராம் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி. ஒரு சமயம் தஞ்சாவூருக்குச் சென்றிருந்த காஞ்சி பெரியவர்கள், பங்காரு காமாட்சிக்கு நிறைய நகைகள் சார்த்தப்பட்டு இருந்ததைப் பார்த்து, "அம்பாளுக்குக் கழுத்து வலிக்காதா " என்று கவலைப்பட்டாராம். நடராஜ மூர்த்திக்கு அலங்காரம் செய்யும்போது அக்னி ஏந்திய கரத்தில் புஷ்பத்தைச் சார்த்தும்போது, அந்த புஷ்பம் அக்னி ஜ்வாலையில் கருகி விடுமே என்றுகூட நினைக்கத்தோன்றும். இதெல்லாம் பகவானைக் கல்லாகவோ,பஞ்சலோக விக்கிரகமாகவோ பார்க்காதவர்களுக்கு ஏற்படும் நிலை. அதேபோல அவனது ஒவ்வொரு செயலும் மகான்களது பார்வையின் மூலம் நமக்கு மேலும் விளக்கத்தைக் கொடுக்கும்.


இனி, அம்மையார் அருளிய அற்புதத் திரு அந்தாதி என்ற நூலில் வரும் இந்தப் பாடலைக் காண்போம்:

அழல் ஆட அங்கை சிவந்ததோ

(அழல் = நெருப்பு; அங்கை= உள்ளங்கை)

அங்கை அழகால் அழல் சிவந்தவாரோ - கழல் ஆடப்

பேயாடு கானில் பிறங்க அனல் ஏந்தித்

(பேயாடு கானில்- பேய்கள் ஆடும் காட்டில்;பிறங்க-விளங்கும்படி)

தீ ஆடுவாய் இதனைச் செப்பு.

(செப்பு= சொல்வாயாக.)

என்பது இந்த அழகிய வெண்பா.

பகவானது ஸ்வரூபத்தில் லயிக்கும் இப்படிப்பட்ட பக்தி நமக்கும் ஏற்படவேண்டும் என்று அவனைப் பிரார்த்திப்போமாக.