Wednesday, December 28, 2011

ஒற்றியூர் உத்தமன்

உலகத்தில் நல்லனவும் கெட்டனவும் கலந்தே இருக்கக் காண்கிறோம். இவ்விரண்டையும் காட்டி அதில் நல்லதைப் பகுத்து அறிந்து எடுத்துக்கொள்ளும் ஆறாவது அறிவை இறைவன் மனித்தப் பிறவிக்கு அருட் கொடையாக வழங்கியிருக்கிறான். " நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்" என்று தேவாரமும் எடுத்துக்காட்டுகிறது. தீய காரியங்களில் ஈடுபடும்போது பாவ வினைகள் வந்து சேர்கின்றன. இப்பாவங்கள், தெரிந்தும்,தெரியாமலும் செய்யப்படுபவையே. கண், காது, மூக்கு,வாய், உடல் ஆகிய பஞ்ச இந்திரியங்களால் செய்யப்படுபவையே. இவை. மனத்தின் ஏவலால் செய்யப்படுவதாகக் கொள்ளலாம். அனுதினமும் இப்பாவ மூட்டையின் பாரம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கண்ணால் பார்க்கப் படுவதை எல்லாம் அடைய ஆசைப்படுகிறோம். கேட்கக் கூசுபவைகளைக் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். வாயால் கூசாமல், பொய் சொல்கிறோம். பிறர் மீது அபாண்டமாகப் பழி சுமர்த்தத் துணிந்துவிட்டோம். பிறரை எசுகிறோம். இறைவனை வாழ்த்தவேண்டிய வாயால் மனிதர்களை வாழ்த்துகிறோம். இப்படி வாக்கினால் வரும் பாவத்தை, " உரையினால் வந்த பாவம்" என்று சம்பந்தர் தேவாரம் கோடிட்டுக் காட்டுகிறது. இந்திரிய வயம் இப்படி நாம் மயங்கிக் கிடப்பதாக மணிவாசகரும் குறிப்பிடுகிறார். இதிலிருந்து விடுபட முடியாமல் நாம் தள்ளாடுகிறோம்.மேன்மேலும் பல கஷ்டங்களை அனுபவிக்கிறோம். மீண்டும் பல பிறவிகள் எடுப்பதற்குத் தயாராக்கிக் கொள்கிறோம்.


சிலர் கேட்கலாம். " நாம் அவ்வப்போது செய்யும் பாவங்களை முடிந்தபோது கோவிலுக்குப் போவதாலும், பரிகாரங்கள் செய்து கொள்வதாலும் களைந்து கொள்ள முடியாதா?" என்று. அப்படியே இருந்தாலும் இது பாசிக் குளம் போலத்தான். பாசியை விலக்கி விட்டு ஸ்நானம் செய்தாலும் மீண்டும் தண்ணீரைப் பாசி மூடிவிடுவது போல நம் மனத்தைப் பாவ அழுக்குகள் மூடி விடுகின்றன. குளத்தைப் பாசி பிடிக்காமல் பார்த்துக் கொண்டால் எவ்வளவு நல்லதோ , அதே போல் மனத்தையும் பாவ அழுக்கு மூடாமல் தினந்தோறும் பார்த்துக்கொள்ள வேண்டும். என்றாவது ஒரு நாள் குளத்திலிருந்து பாசியை நீக்குவதுபோலத்தான், எப்போதாவது கோவிலுக்குப் போவதோ அல்லது, பரிகாரம் செய்து கொள்வதோ ஆகும். அதனால் தான், "நித்தலும் எம்பெருமானுடைய கோயில் புக்கு" என்று பாடினார் அப்பர் சுவாமிகள்.


பாவம் செய்வதையெல்லாம் செய்துவிட்டு, தினமும் கோயிலுக்குப் போவதும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போலத்தான். எங்கும் வியாபித்துள்ள இறைவனை ஏமாற்ற முடியாது. "அடிமையை அளப்பர் போலும்" என்று தேவாரம் சொல்வதைக் கவனிப்போம். பக்த்ர்களது பக்குவத்தை அளந்து அதற்கேற்றபடி அருளுபவன் இறைவன் ஆதலால் வஞ்சனையாலும், பரிகாரமாகக் கடவுளை விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைப்பதாலும் ஒருநாளும் தீய எண்ணம் நிறைவேறாது.


ஞானிகளைப் போல் பஞ்ச இந்திரியங்களை முழுவதும் வெல்ல நம்மால் முடியாவிட்டாலும். தெரிந்து (வேண்டுமென்றே) செய்யும் பாவங்களையாவது செய்யாமல் இருக்க வேண்டும். அதற்கு நம்மைப் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். நல்லவர்கள் நடுவில் நாம் இருந்தால் நாமும் நல்லவர்களாக முயற்சிப்போம் அவர்களோடு சேர்ந்து நல்லவற்றையே பார்ப்போம். நல்லவற்றையே கேட்போம். உடல் பெற்ற பயனாக நல்ல செயல்களையே செய்யத் தொடங்குவோம். "தொண்டரொடு கூட்டு கண்டாய்" என்று அபிராமிபட்டர் வேண்டுகிறார். ஆலயங்களைத் தரிசிப்பதும், வேள்விகள் நடக்கும் இடங்களுக்குச் செல்வதும் நம்மை நல்ல மார்க்கத்தில் செல்லத் துணை செய்யும். திருவொற்றியூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதிருத்ர மகா யக்ஞத்தை தரிசித்தபோது மந்திரங்களின் அதிர்வலைகள் நம்மைப் புனிதப்படுத்துவதை உணர முடிந்தது. காஞ்சி காமகோடி பீடத்தில் ஆயிரத்து எழுநூறுகளில் பீடாதிபதியாக இருந்த மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இங்கு இருப்பதால் இதனை இவ்விடத்தில் நடத்துகிறார்கள். காஞ்சிபுரத்திலிருந்து பெரியவர்களும் வந்திருந்து,யாக சாலையையும்,அதிஷ்டானத்தையும் தரிசித்துவிட்டுச் சென்றார்கள்.


நம்முடைய மனம் ஒரு தோணி போன்றது. அதைச் செலுத்துவதற்குப் புத்தியாகிய கோலைப் பயன் படுத்துகிறோம். நம்முடைய கோபமே அதில் ஏற்றப்படும் சரக்கு. இதில் கோப மூட்டையின் பாரம் அதிகரித்தாலோ , தோணி கவிழ்ந்துவிடும் ஆபத்து உண்டு. போதாக் குறைக்கு, மன்மதனாகிய பாறை அத்தோணியைத் தாக்கினாலோ அத்தோணி நடுக கடலில் கவிழ்ந்து விடும். அப்படிப்பட்ட நிலையிலாவது உன்னை நினைக்கும் வரம் எனக்கு அருளுவாயாக என்று அப்பர் பெருமான் திருவொற்றியூரில் இறைவனை வேண்டித் துதிக்கும் பாடல் இதோ:



மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றிச்

சினம் எனும் சரக்கை ஏற்றிச் செறி கடல் ஓடும்போது

மனன் எனும் பாறை தாக்கி மறியும் போது அறிய ஒண்ணாது

உ(ன்)னை உ(ன்)னும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.



இப்பாடலைப் பலர் நாள் தோறும் பாடி வருவது உண்டு. "துஞ்சும் போதாக வந்து துணை ஆகி அஞ்சல் என்று அருள வல்ல " ஒற்றியூர் உத்தமன் இப்படிப்பட்ட உயர்ந்த பிரார்த்தனைக்குச் செவிசாய்க்காமல் இருப்பானா?