Thursday, December 19, 2013

பாதமலர்

மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தைத் தனது திருக்கரத்தால் எழுதிவைத்துக்கொண்ட நடராஜப் பெருமானை  , அதிலுள்ள 51 தலைப்புக்களில் "திருவெம்பாவை" யில் அமைந்த பாடல்கள்   பெரிதும் கவர்ந்தன  போலும். அதனால் தானோ என்னவோ " பாவை பாடிய வாயால் கோவை பாடுக" என்று மணிவாசகருக்குக் கட்டளை இட்டான் பரமன் . " பாவை" என்றது இங்கு திருவெம்பாவையைக் குறிக்கும். அப்படியானால் நாமும் அம்   மணிவாசகத்தின் பெருமையை உணர்ந்து அப்பாடல்களை ஒதிவந்தால், சிவனருளை எளிதாகப் பெறலாம் அல்லவா?

எடுத்துக் காட்டாக ஒரு திருவெம்பாவைப் பாடலை இங்கு சிந்திப்போமாக. பரமேச்வரனது பாத கமலங்கள் திருமாலும் பன்றி வடிவில் அகழ்ந்து சென்றும் காண முடியாதவை. சொல்லால் வருணிக்க முடியாதவை. " எங்கள் பெருமான் பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக்கு அப்பால் "  என்று மற்றோரிடத்தில் குருநாதர் கூறுவது நினைவுக்கு வருகிறது. அவனது திருமுடியை பிரமனும் காண முடியவில்லை. ஆகவே, "மாலறியா நான்முகனும் காணா மலை" என்றார் . 'வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடி தேடி இன்னமும் துதிக்கின்றார் எழில் மறை அவற்றாலே..." என்கிறது திருவிசைப்பாவும். எல்லாப் பொருளின் முடிவும் ஆகி நிற்கும் பரம்பொருளுக்கு என்ன வடிவம் சொல்வது? அம்பிகையை இடப்பால் கொண்டவன் என்பதா? ஈருருவும் ஓர் உருவாய் இருக்கும் அர்த்த நாரீச்வர வடிவத்தைப் "பேதை ஒருபால்" என்றார்.

அதே சமயத்தில்  பல்வேறு வடிவும் எடுக்க வல்ல பரமனை எப்படி ஒரே வடிவம் கொண்டவனாகக் கூற முடியும்? அதனால் , " திருமேனி ஒன்றல்லன்" என்பதே அடுத்த வருணனை. விண்ணுலகும் மண்ணுலகும் துதிக்கும் இறைவனை வேதங்களாலும் துதிக்க முடியவில்லை என்றால் அவனது பெருமையை யாரால் பேச முடியும்? "ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்" என்றார். இப்படி "ஆராலும் காண்டற்கு அரியான்" அடியார்க்கு மட்டும் எளியவனாவது அவனது பெரும் கருணையைக் காட்டுகிறது. இப்படி " விண்ணுக்கு ஒரு மருந்து" எனவும் "வேத விழுப்பொருள் " எனவும் இருக்கும் பரம்பொருள் தனது அடியார்களுக்குத் தோழனாகவும் ஆகிறான். சுந்தரர் பெருமானுக்குத்            "தோழனுமாய்",  "வன் தொண்டன்   என்பதோர்  வாழ்வு"ம் தந்த பெருமானை     " ஒரு தோழன்" என்றார்  மாணிக்க வாசகப்பெருமான். அடியார்களுக்கு நடுவில் இறைவனே இருப்பதால், " தொண்டர் உளன்" என்றார். இதே கருத்தை, " ... அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் , அடியேன் உன்  அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்.. " என்று பாடுகிறார்.

எல்லா இடங்களிலும் நீக்கமற நிற்பவனை ஒரு ஊரைச் சேர்ந்தவன் என்று குறிப்பிடுவதும் முடியாத காரியம்தான்! ஆகவே, " ஏது அவன் ஊர்? " என்பார்.     " ஒற்றியூரேல் உம்மது அன்று .. " என்ற சுந்தரரின் வாக்கும் நினையத்தக்கது. அதேபோல் அவனை எந்தப் பெயருக்கு உரியவனாக ஆக்கமுடியும்? இப்படி ஊரும் பேரும் கடந்த கடவுள் அல்லவா அவன்? ஆனால் நாமோ அவனைப் பல பெயர்களால் துதிக்கிறோம். "பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மான்", என்று அப்பர்  சுவாமிகள்  பாடியது போல், மணிவாசகரும்,

" .... ஒருநாமம் ஓருருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ."  எனப்பாடுகிறார். உருவமும் அருவமும் ஆகிய பெருமானுக்கு எந்த உருவத்தை மட்டும் சொல்லிக் குறிப்பிடமுடியும்?  இதையே காரைக்கால் அம்மையாரும், .. " நின் உருவம் ஏது? " என்று வினவுகிறார் .

இப்படிப்பட்ட பரம்பொருளுக்கு உற்றாரோ , உறவினர்களோ, அயலவர்களோ யார் இருக்கிறார்கள்?  " தாயும் இலி , தந்தை இலி , தான் தனியன்.." என்று கூறியுள்ள திருவாதவூரர் , " ஆர் உற்றார் ; ஆர் அயலார்?' என்கிறார். இருந்தாலும் அவன் அருள் வழங்கும் கோயில்களைச் சென்று வழிபடாமல் இருக்கலாமா? "கண்ணுக்கு இனியானை"க் கண்ணாரக் காண வேண்டாமா? அப்படிக் கண்டபின்னர் அவனைப் " பாடிக்,கசிந்து உள்ளம் நெக்கு உருக வேண்டாமா? சித்தம் அழகிய அடியார்கள் சிவபெருமானைத் துதிக்கக் கண்ட பிறகும் , " சிவனே சிவனே என்று ஓலமிடுவதைக் கண்டும் ,அவமே காலத்தைப் போக்கலாமா? அவனோ நம்மைத் தலை அளித்து ஆட்கொள்பவன். விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப் பாதத்தையும் அடியார்களுக்குத் தந்து அருள்பவன். ஊழி முதல்வனாய் நிற்பவன். பிறவித் துயர் கெடும்படி அருள் செய்பவன்.உலகங்களை எல்லாம் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடுபவன்.  எங்கும் இல்லாததோர் இன்பம் நம் பால் வரும்படி அருள் செய்யவல்ல கருணாமூர்த்தி. அப்புண்ணியமூர்த்தியின் பூங்கழல்களே ஆதியும்,அந்தமும், தோற்றமும், போகமும், ஈறும் ஆகி நிற்பவை. மாலும்  நான்முகனும் காணாத அப்பாதமலர்களை நாமும் பரவி, மார்கழி நீர் ஆடுவோம் என்கிறது குரு வாசகம்.

பூதங்கள் தோறும் நிற்கும் பராபரனைக் கீதங்கள் பாடியும் ஆடியும் வழிபட வேண்டும். சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து பாடவேண்டும்." ... நின்னையே பாடி நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு ஆட வேண்டும் நான் .. " என்று தனக்காகப் பாடுவதுபோல் நமக்கு உபதேசிக்கிறார் மாணிக்க வாசகப் பெருமான். நம் கண்கள் அவன் கழல் கண்டு களிக்க வேண்டும். அவன் கழலை வாழ்த்த வைத்த திருவருளை நினைந்து நினைந்து உருக வேண்டும். அப்படி உருகுவதால் ஏற்படும் பலனையும் அடிகளே கூறுவார்: ..." தன் அடியார் குற்றங்கள் நீக்கிக் குணங் கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான்... " என்பார்.

இத்தனை அருமை-பெருமைகளை நமக்கு வாரி வழங்கும் திருவெம்பாவையின் ஒரு பாடல் இதோ:

" பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
பேதை ஒருபால் திரு மேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன் தன் கோயில் பிணாப் பிள்ளைகாள்
ஏது அவன் ஊர் ; ஏது அவன் பேர் ; ஆர் உற்றார் ; ஆர் அயலார்
ஏது அவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
  

Friday, October 25, 2013

ஏறு ஏற்ற ஈசன்

ரிஷபம் என்பதற்குத் தமிழில் காளை என்றும் , விடை  என்றும், ஏறு என்றும் பலப்பல சொற்கள் உண்டு. அதனை வாகனமாகக் கொள்வதால் பெருமானுக்குக் "காளையார்" என்றும், விடையவன்  என்றும், ஏற்றன்  என்றும் பெயர்கள் வந்தன. ரிஷப வாகனத்தில் ஈசுவரன் ஏறுவதால் அந்த வாகனம் ஏறு எனப்பட்டது. இதையே மாணிக்கவாசகரும்  "ஏறுடை ஈசன் " என்றார் .  இவ்வாறு ஏற்றின் மீது ஏறி வரும் பெருமானை  ஏற்றார்  என்று குறிப்பதோடு மட்டுமல்ல. யாராவது ஒரு பொருளை ஏற்றுக்கொள்பவரையும் ஏற்றார் என்றுதானே சொல்வது வழக்கம்! அப்படியானால் அதை சுவாமிக்கும் பொருத்திப் பார்ப்பதில் தான் எத்தனை இன்பம்! ஏற்றின் மேல் ஏறி வரும் பெருமான் எதையெல்லாம் ஏற்றான் என்று குறிப்பிடுகிறார் அப்பர் பெருமான் ஒரு அழகிய பாடலில்.

 உலகையே அழித்துவிடும் வேகத்தில் வந்த கங்கையைத் தன் சடை முடியில் ஏற்றான். அதனால் கங்காதரன் ஆனான். கங்கை தங்கிய செஞ்சடையில், பலரது சாபத்தையும் பெற்று அடைக்கலம் வேண்டி வந்த சந்திரனை ஏற்று சந்திரசேகரன் ஆனான். இக்கருணையை, " நீருலாம் சடைமுடிமேல் திங்கள் ஏற்றார் " என்றார்  அப்பர். திங்கள் என்றது சந்திரனை.

தாருகாவனத்து முனிவர்களின் அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவாகப் பிக்ஷாடனக்  கோலத்தில் எழுந்தருளி பிக்ஷை (பலி) ஏற்றான். அது கண்டு கோபம்  கொண்டு ஆபிசார  வேள்வி செய்து முனிவர்கள் ஏவி விட்ட நெருப்பைக் கரத்தில் ஏற்றான். முனி பத்தினிகளின் கற்பை ஏற்றான். " நெருப்பு ஏற்றார்  அங்கையில் நிறையும் ஏற்றார் " என்று வாகீசப் பெருமான் இந்நிகழ்ச்சியைக் காட்டுகிறார்

தாருகாவனம் முழுவதும் சென்று பலி ஏற்றதோடு முனிவர்கள் ஏவிய பாம்பை (அரவத்தை) ஆபரணமாகத் தன் மேனியில் ஏற்றான் . பன்னகாபரணன் ஆனான். இதனை அப்பர்  சுவாமிகள், " ஊரெலாம் பலி ஏற்றார்  அரவம் ஏற்றார் " எனக் குறிப்பிடுகிறார்.

இன்னும் எதையெல்லாம் ஏற்றான் தெரியுமா? அலைகடலிலிருந்து அனைவரையும் அழிப்பதற்காக எழுந்த ஆலகால விஷத்தை உண்டு , தனது கழுத்தில் நிலைபெறச் செய்து நீலகண்டன் ஆனான். இப்படி ஆலந்தான் உகந்துஅமுது செய்தபடியால் விஷத்தையும் ஏற்று அகில உலகையும் காத்து அருளிய செயலை, " ஒலி கடல் வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார் " என்றார். மிடறு என்பது கழுத்தைக் குறிப்பது.

தன்னை அடைய வேண்டித் தவம்  செய்த அம்பிகையை இடப்பாகத்தில் ஏற்றான் என்பதை, " வாருலா முலை  மடவாள் பாகம் ஏற்றார்." என்றும் ,  முனிவர்கள் ஏவிய மானையும் மழுவையும் தனது கரங்களில் ஏற்றான் என்பதை ,

" மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார்."  என்றும் அருளினார்  திருநாவுக்கரசர் .

எல்லாப் புகழும் இறைவனையே சேரும் என்பதை உணத்துவதாக, " பாருலாம் புகழ் ஏற்றார்." ஏற்றார்.

நிறைவாக இறைவன் ஏற்றின் மேல் ஏறி வருவதைக் குறிப்பிடுகையில், அந்த அழகிய மிரண்ட, உருண்டு திரண்ட கண்களை உடைய வெள்ளை விடையாகக் காட்டுகிறார் அப்பர் சுவாமிகள். "பைங்கண் ஏற்றார்  " என்பது அவ்வுயரிய வரிகள்.  பந்தணை  நல்லூரில் அருளிச் செய்த அத் தேவாரப் பாடலை இப்போது பார்ப்போம்:

    நீருலாம் சடைமுடிமேல் திங்கள் ஏற்றார்
            நெருப்பு ஏற்றார்  அங்கையில் நிறையும் ஏற்றார்
     ஊரெலாம் பலி ஏற்றார்  அரவம் ஏற்றார்
             ஒலி கடல் வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார்
    வாருலா முலை  மடவாள் பாகம் ஏற்றார்
             மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார்
    பாருலாம் புகழ் ஏற்றார்  பைங்கண் ஏற்றார்
             பலி ஏற்றார்  பந்தணை நல்லூராரே .
என்பது இவ்வினிய திருப்பாடல். 

Tuesday, October 1, 2013

நித்தம் பல கால் நினை

 தெய்வத் தமிழ் என்பதற்குப்  பல பொருள்கள் கொள்ள இடமுண்டு. தெய்வம்தந்த தமிழ் என்று கூடச் சொன்னாலும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் , சிவபெருமானே தமிழ்ச் சங்கப் புலவராக இருந்தபடியால் இம்மொழிக்கு அந்தப் பெருமை உண்டு. மேலும் அகத்திய முனிவரால் இலக்கணம் வகுக்கப்பெற்ற பெருமையும் இதற்கு உண்டு. நக்கீரருக்கே அகத்தியர் மூலமாக இலக்கணம் கற்பிக்கச் செய்தான் இறைவன்.

மதுரை சொக்கநாதர் தமிழ் விடு தூது என்று ஒரு பிரபந்தம் உண்டு. அதன் ஆசிரியர் இன்னார்  என்று தெரியவில்லை. தமிழையே தூது விடுவதாக அமைந்த அந்நூலில் தமிழ் மொழியின் பெருமைகள் ஏராளமாகப் பேசப்படுகின்றன. தெய்வம் தந்த மொழி என்பதாலோ என்னவோ, தமிழை, "அடிகளே " என்று ஆர்வம்  கூர அழைக்கிறார்  ஆசிரியர். மேலும், "பித்தா" என்றும். "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்  " என்றும் சுந்தரருக்கு  இறைவனே அடி எடுத்துக் கொடுத்ததால் அத்தேவாரத் தமிழ், தெய்வம் தந்த தமிழ் தானே! "உலகெலாம்" என்று சேக்கிழாருக்கு அடி எடுத்துக் கொடுத்தமையால், அப்பெரியபுராண ஆசிரியரான சேக்கிழாரை நாம் தெய்வச் சேக்கிழார் என்று அல்லவா போற்றுகின்றோம்!

தெய்வத்தைப் போற்றும் தமிழாக அது மிளிர்வது , அம்மொழியைத்தந்த இறைவனுக்குச் செய்யும் கைம்மாறாக அமைகிறது. தே + ஆரம்  என்று , தெய்வத்திற்குச் சூடும் மாலையாகவே  அத் தெய்வத் திருமுறை அமைந்துள்ளது. அது மட்டுமா? தெய்வத்தையே தூது போகச் சொன்னதும் அத் தெய்வத் தமிழுக்கே உள்ள தனிச் சிறப்பு. மறைக்  கதவைத் திறந்து மூடச் செய்தது, முதலை உண்ட பாலனை உயிர்ப்பித்தது போன்ற அற்புதங்களைச் செய்ததும் இத்  தமிழே !

தெய்வத்திடம் நம்மைச் சேர்க்கும் தமிழ் என்றும் பொருள் கொள்ளலாம். மிகவும் எளிய முறையில் இறை அருளைப் பெறவும் வகை செய்கிறது இத்தெய்வத் தமிழ். இறைவனை நினைவுபடுத்தி,அவனை மறக்காமலிருக்க நமக்கு  உறுதுணையாகவும் நிற்கிறது. அப்படிப்பட்ட ஒரு பாடலை இப்போது சிந்திக்கலாம்:

சிவத்தலங்களின் பெயர்களைச் சொன்னவுடனேயே அங்கு கோயில் கொண்டுள்ள இறைவனை  நினைக்கத் தூண்டுவதாக உள்ளது. அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பார்கள். எனவே அத்தலத்தை முதலாவதாக வைத்து, அத்துடன் மற்றும் சில தலங்களையும் நினைக்கும்படி நம்மை ஆற்றுப் படுத்துகிறது இப்பாடல்.  திருவாரூர் தியாகேசப்பெருமானது பூங் கோவிலை மறக்கவும் முடியுமா என்கிறார் சுந்தர மூர்த்தி சுவாமிகள். ஆறு நாட்கள் விழித்திருந்து ஒப்பில்லாத அன்புடன் காவலாக நின்ற கண்ணப்பருக்கு அருளிய காளத்தி நாதனையும் நினைக்க வேண்டும்.தன்னைத்  தரிசித்த மாத்திரத்திலேயே முக்தி அளிக்கும் அம்பலவாணனையும் அவனது கோவில் அழகையும், அக்  கோயிலின் தனிச் சிறப்பு வாய்ந்த மணியின் ஓங்கார ஓசையையும், அடியார்கள் ஆனந்தக் கண்ணீர் பெருகும்படி , ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளும் பெருமானையும்  எவ்விதம் மறக்க முடியும்? திருவானைக்காவில் சிற்றுயிர்க்கும    இர ங்கியருளிய  கருணாமூர்த்தியை நினைக்க வேண்டாமா? அதுவும் அனுதினமும் நினைக்க வேண்டும். ஒரு முறை அல்ல. பலமுறையும் நினைக்க வேண்டும்.

இதோ அப்பாடல்:

                " அண்ணாமலையரையும் ஆரூர்த் தியாகரையும்
                   கண்ணான  காளத்தி நாதரையும்  -- ஒண்ணான
                   சிற்றம்பலவரையும் தென்னானைக்காவரையும்
                   நித்தம் பல கால் நினை. "

Saturday, September 21, 2013

அருளமுதம்

தமிழை முன்னிலைப்படுத்துவது எப்படி என்று கருத்தரங்கம் வைக்கிறார்கள். அதற்கு முன் தமிழ் எதில் வாழ்கிறது என்று சிந்திப்பது நல்லது. தமிழ் வெறும் பேச்சு மொழியாக இருந்தால் போதுமா? எழுதப்படிக்கத் தெரியாத எத்தனையோ இளந்தமிழர்களுக்குத் தமிழின் அருமையை  எப்படித் தெரிவிப்பது? பள்ளிப் படிப்பிலிருந்து வேற்று மொழியைக் கற்றுக் கொண்டு, தமிழை அறவே ஒதுக்க முற்படும் காலம் இது. பேசும் போதும் பிற மொழியில் பேசினால்தான் கெளரவம் என நினைப்பவர் பலர்! எட்டாம் வகுப்பு வரை தாய் மொழி ஒரு பாடமாகக் கண்டிப்பாக அனைவரும் கற்க வேண்டும் என்று அண்டை மாநிலத்தில் செயல் படும் போது, தமிழ்நாட்டில் அம்முறையைச் செயல் படுத்தலாம் அல்லவா? தமிழைத் தாய்மொழியாக அல்லாதவர்களுக்குச் சற்று சிரமாக இருக்கும் என்பதை ஒப்புக் கொள்கிறோம். தமிழைத் தமிழனே உதாசீனம் செய்யும்போது தமிழைக் காக்க இதைத் தவிர வேறு வழி இல்லை.

தமிழைக் கற்கும் மாணவர்களுக்கோ அதன் அருமை தெரிவிக்கப்படுகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். நேற்று வந்தவர்கள் எழுதிய கவிதைகள்,கட்டுரைகள் புதிய சிந்தனை என்ற பெயரில் புகுத்தப்படுகின்றன. பெயர்  அளவிற்குப் பழந்தமிழ்ப் பாடல்கள் பாட திட்டத்தில்  இருந்த போதிலும், புரட்சி, சீர்திருத்தம் என்ற போர்வையில் அமையும் பாடங்களே அதிகம். அவற்றையெல்லாம் பற்றி சிந்திக்கும் பருவத்தில் இல்லாத மாணவர்களுக்கு அவை வலுக்  கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன.

முன்பெல்லாம் பாடத்திட்டம் என்பது , நீதிகளைப் புகட்டும் விதத்தில் அமைந்திருந்தது. திருக்குறள்,நாலடியார், நீதிநெறி விளக்கம், ஆத்திசூடி,கொன்றைவேந்தன்  போன்ற நீதி நூல்கள்  கற்பிக்கப்பட்டு வந்தன. ஆசிரியர்களும் அவற்றின்  நயத்தையும், சொல்ல வந்த கருத்தையும் திறம்பட  மாணவர்களுக்கு விளக்கி வந்தார்கள். இப்போதைய பாட திட்டத்தில் எதை நயம்பட விளக்குவது?

பெரிய புராணத்தில் ஒரு பாடலை இங்கு பார்ப்போம். திருஞான சம்பந்தர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தன் தந்தையுடன் சீர்காழி ஆலயக் குளக் கரைக்கு வந்தார். தந்தை நீரில் மூழ்கி ஜபம் செய்து கொண்டிருந்தார். பசிமேலிட்ட அக்குழந்தை, தோணியப்பரின் விமானத்தை நோக்கி " அம்மே, அப்பா" என்று அழுதது. அகில உலகங்களுக்கும் அம்மையப்பர்  இவரே என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. அக்குழந்தையின் அழுகையையையும், பசியையும்  தீர்த்தருள வேண்டிக் கயிலை நாதனாகிய கருணாமூர்த்தி, உமாதேவியாரை  நோக்கி, அக்குழந்தையின் பசி தீருமாறு பாலூட்டியருளுவாயாக என  அருளிச் செய்தார். உமையம்மையும்  திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் ஏந்தி, அக்குழந்தையின் கண்ணீரைத் துடைத்து, அப்பாலில் சிவஞானத்தையும் சேர்த்துக் குழைத்து ஊட்டியருளினாள்.  இந்நிகழ்ச்சியை சேக்கிழார் பெருமான் நமக்கு எவ்வளவு நயத்தோடு தெரிவிக்கிறார் பாருங்கள்:

இது அருள் மயமான நிகழ்ச்சி அல்லவா? எத்தனை இடங்களில் "அருள்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது பாருங்கள்:
பிரம தீர்த்தக் கரையில் புண்ணிய வடிவாய் நின்ற இக்குழந்தை நிற்கிறது எனச் சொல்லும்போது,
" புண்ணியக் கன்று அனையவர்தாம்  பொருமி அழுது அருளினார் ."  என்கிறார் சேக்கிழார்.
தோணிச் சிகரத்தை நோக்கி, " அம்மே அப்பா " என்று அழைத்து அழுதார் எனும்போது,
" அம்மே அப்பா என்றென்று  அழைத்தருளி  அழுதருள"  என்பார்.
இறைவனும் மலைவல்லியுடன் " அருள்புரிவான் "எழுந்தருளுகின்றான்.
அம்பிகையைப்பார்த்து இறைவன் சொல்லும் இடத்தில்,
" அரு மறையாள்  உடையவளை அளித்தருள அருள் செய்வார்." என்பது நயம்  மிக்கது.

இறைவனது அருட்  செயலை வருணிக்கையில், அவனது திருவுள்ளத்தின் பெருமையை நமக்கு உணர்த்துகின்றார்.  " அருட் கருணை எழுகின்ற திருவுள்ளத்து இறையவர்" என்பது அத்தொடர்.
கருணையே வடிவான அம்பிகையும், இவ்வாறு சிவபெருமான் அருளியவுடன் அக்குழந்தையிடம் சென்றடைந்தாள்  என்பதை, "கருணை திருவடிவான சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் " என  பக்திச் சுவைபட எடுத்துரைக்கிறார்.

அம்பிகை, திருமுலைப் பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து அக்குழந்தைக்கு அளிக்க முற்பட்டாள் என்பதை, " திருமுலைப் பால் வள்ளத்துக் கறந்து அருளி " என்கிறார்.

இங்கேதான் அந்த அற்புதமான பாடல் அமைந்திருக்கிறது:
நினைத்துப் பார்ப்பதற்குக் கூட அரியதான சிவஞானத்தை அப்பாலோடு அமுதமெனக் குழைத்துத் தந்ததை, " எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்து அருளி " என்ற தொடர் காட்டுகிறது.

இதனை உண்பாயாக என்று கூறிய உமையம்மையை அக்குழந்தை எதிர் நோக்குகிறது. அதன் கண்களில் பசியாலும் நீரில் மூழ்கச் சென்ற தந்தை திரும்பக் கால தாமதமானதாலும்  கண்ணீர் ததும்புகிறது. சாதாரணக் கண்களா அவை? அவற்றை எப்படி வருணிப்பது! மலர் போன்ற கண்கள் என்று உவமையாகக் கூறுவதைக் காட்டிலும், கண்ணாகிய மலர் என்று உருவகித்துச் சொல்வதே மிகவும் பொருத்தம் என்று தோன்றுகிறது.அம்பிகையே எழுந்தருளி அக்  கண் மலரைத் துடைப்பது  அருள்தானே! யாருக்கு அது கிடைக்கும்? இப்போது பாடலைப் பார்ப்போமா?

" உண் அடிசில் என ஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்
  கண் மலர் நீர்  துடைத்தருளிக் கையில் பொற்கிண்ணம் அளித்து "
என்றவர், அவ்வற்புதத்தை, மேலும்,
சம்பந்தராகிய அண்ணலை அங்கணன் ஆகிய சிவபெருமான் அழுகை தீர்த்து அருளினான்.என்றார்.
" அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள் புரிந்தார்." என்பது அப்பாடல் வரிகள்.

இவ்வாறு கை மலர்களால் கண் மலர்களைப் பிசைந்துகொண்டு "அம்மே அப்பா" என்று அழைத்தவுடன் அம்மையப்பர் முன்னின்றருளினார்  என்று சொல்லும் பாடல் எவ்வளவு நயம் மிக்கது , அருள் மயமானது என உணர்கிறோம்.

சம்பந்தப்பெருமானது திருவடிகளும் மலர் போன்றவை என்பதால், அவரது புராணத்தைத் துவங்கும்போது,சேக்கிழார் பெருமான், "திருஞான சம்பந்தர் பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்" என்பார். இவ்வாறு சேக்கிழார் அருளிய பாடலைப் படிக்கும்போது அமுதத் தமிழில் திளைத்து, அமுதகடேசனின் அருளைப் பெறுகிறோம்.

இறைவனை " அருட்பெருங்கடலே" என்று அழைக்கிறார் மாணிக்கவாசகர். அந்த அருளில் சிறிதாவது பெற நாம் தவம்  செய்தவர்களாக இருக்கவேண்டும். அந்த ஆனந்த மா கடலின் அருளில் ஒரு திவலையையாவது பருகப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட விதியில்லாத அடியேன் உன்னையே அடைக்கலமாக அடைந்துள்ளேன்.உன்  அருளமுதத்தைப் பருகும் விதியில்லாததால் விக்கினேன். அப்போது தேன் போன்ற உனது அருளமுதத்தைப் பருகத் தந்து அடியேனை உய்யக்கொள்வாயாக என நெக்குருகி வேண்டுகின்றார்.

வழங்குகின்றாய்க்கு உன்  அருளார்  அமுதத்தை வாரிக் கொண்டு
விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என் விதி இன்மையால்
தழம் கருந்தேன் அன்ன தண்ணீர் பருகத் தந்து உய்யக் கொள்ளாய்
அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன்  அடைக்கலமே.
                                                                                            -- திருவாசகம்
  

Tuesday, August 20, 2013

நினைந்து உருகும் மனம்

இறைவனிடத்தில் அன்பு செலுத்துவதற்கும் , மனிதர்களிடமோ விலங்கினங்களிடமோ , அன்பு செலுத்துவதற்கும் என்ன வித்தியாசம் என்று சந்தேகம் ஏற்படுவது உண்டு. இவை இரண்டும் மனத்தளவில் ஏற்படுவன என்றாலும் இரண்டும் வேறுபாடு உடையன. இரண்டுக்கும் அடிப்படையானது அன்பு என்றாலும் , மனிதர்களிடத்துச் செலுத்தும் அன்பு, பஞ்சேந்திரியங்களின்   செயல் பாட்டாலே பெரும்பாலும் நிகழ்வது . தற்காலிக மன மகிழ்ச்சி அதனால் விளைகிறது. தாம் அன்பு செலுத்துபவர்  மன  மாற்றம் கொண்டால் அந்த அன்பு முறிவதோடு  மறக்கவும் துணிகின்றனர். இது, தான் நினைத்தது நடைபெறாததால் ஏற்பட்ட விரக்தியாகக் கூட இருக்கலாம். எனவே, நினைக்கத் தெரிந்த மனம் , மறக்கத் துணிகிறது.

இறைவனிடம் அன்பு செலுத்துவதால் மனம் கசிந்து உருகுகிறது. பக்தி மேலிடும் போது கண்ணீர்  பெருகுகிறது. இந்நிலையைத்தான் சம்பந்தர், "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி..." என்றார்.  நமக்கு அருள் செய்யாமல் இருக்க மாட்டான் என்று மனம் உறுதி கொள்கிறது.உன்னை மறந்தாலும் எனது நாக்கு நமசிவாய மந்திரத்தைச் சொல்லுவதை மறக்காது என்று நினைக்கிறது. மனத்திலும்,தலைமீதும்,வாக்கிலும் இறைவன் இருப்பதை மெல்ல உணருகிறது.

இறையன்பு, மெதுவாக வைராக்கியமாக மாறி, அன்பின் எல்லைக்கே சென்றுவிடுகிறது. "எழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன்,துடைக்கினும் போகேன்..." என்ற நிலை சாத்தியமாகிறது. மனித்தப் பிறவிக்கே உரிய தவறுகளைச் செய்தாலும், இறைவனது பாதங்களை அடைக்கலமாக  அடைந்துவிட்ட பிறகு, அத்தவறுகளை அவனே தண்டித்துத் திருத்துவான் என்ற எண்ணம் மேலோங்குகிறது. "நின் பணி பிழைக்கில் புளியம் விளாரால் மோதுவிப்பாய்" என்று தந்தையிடம் தனையன் மன்னிப்புக் கோருவதுபோலக் குழைந்து விண்ணப்பிக்கிறது.

ஒரு நாமமும் இல்லா இறைவனின் ஆயிரம் நாமங்களையும் ஓத விழையும் எண்ணமும் சித்திக்கிறது.அந்த நாமங்களை நாக்குத் தழும்பு ஏறும்  வண்ணம் பேசிப் பேசி அதுவே பிதற்றலாக மாறுகிறது. ஆரூரா,சங்கரா என்றென்றே அரற்றுகிறது. அப்படி வாழ்த்தும் போது  மனம் கசிந்து, வாய் குழறுகிறது. சொற்கள் வாயிலிருந்து வருவது நின்றுவிடுகிறது. இப்படிப் பல்காலமும் பெருமானைப் பாவித்து, அவன் சதாகாலமும் ஆனந்த தாண்டவம் புரியும் பொன்னம்பலத்தை நினைந்து நினைந்து நெக்குருகி நிற்கும் இந்த உயிர்க்கும் இரங்குவாயாக என்று வேண்டுகின்றார் மாணிக்க  வாசகர். அவ்வாறு இறைவன் இரங்கினால் அந்தக் கணமே கருணை மழை  பொழிந்து அருளி விடுவான்.  கலங்குகின்ற அடியேனின் கண்ணின் நீரைத் துடைத்து என்னை அப்பா அஞ்சேல் என்று அபயம் அளித்து,அடியார் கூட்டமும் காட்டி,நின் கழல் கீழ் வைப்பாய் என்று மனமுருகி வேண்டியவர் மணிவாசகர்.

நம் மனமோ கல்லைக் காட்டிலும் கடினமாக இருக்கிறது. உருகுவதற்கான வழியே அறியாமல் பல திசைகளிலும் அலை மோதுகிறது. இறைவனோ நம் மனக் கல்லைப் பிசைந்து, கனி ஆக்கித் தன் கருணை வெள்ளத்தில் நம்மைத் திளைக்க வைக்கத் தயாராக இருக்கிறான். நமது பழ வினை  அவனை நாடாது செய்கிறது. இந்நிலையில் மனம் உருகுவது எப்படி ? "திருவாசகத்திற்கு  உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே! அப்படியானால் நம் நெஞ்சக் கன  கல்லை நெகிழ்ந்து உருக வைக்கும் திருவாசகத்தை ஓதினால் அதை அடைந்து விடலாம் அல்லவா?அதன் பின்னர் உருகிய மனம் மேலும் நைய வேண்டும் . ஆயினும்,அதற்கும் அவன் அருள் தேவை.எனவேதான் , "நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்" என்கிறார் திருநாவுக்கரசர். அப்படிப்பட்ட மனத்தைத் தந்தருளுமாறு வேண்டிப் பின் வரும் திருவாசகப் பாடலை ஓதி நலம் பெறுவோம்.

நல்காது ஒழியான் நமக்கு என்று உன் நாமம் பிதற்றி நயன நீர்
மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தான் நினைந்து உருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம்பலம் என்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி அருளாய் என்னை உடையானே.

Wednesday, May 22, 2013

ஆலந்துறை அதுவே


விண்ணகத் தேவர்களும் , கடும் தவம்  செய்யும் முனிவர்களும் காணவும் அரிய சிவபரம்பொருள்  அடியார்களுக்கு எளியவனாக, அவர்கள் குற்றம் செய்தாலும் குணமாகக் கொண்டு அருள் வழங்கும் தலங்களுக்கு எல்லாம் நமது சமயாசார்ய மூர்த்திகள் சென்று வழிபாட்டு, அடியார்களையும் நன்னெறி காட்டியுள்ளனர். அத்தலங்களை நாமும் நேரில் சென்று வழிபடவேண்டும் என்பது இதனால் அறியப்படுகிறது. இதனை வலியுறுத்துவதாகப் பல தேவாரப் பதிகங்கள் அமைந்துள்ளன. " நெய்த்தானம் அடையாதவர்  என்றும் அமர்  உலகம் அடையாரே" என்றும், " ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே" என்றும் வரும் திருமுறை வரிகளை நோக்குக. தல யாத்திரை மேற்கொள்ளாத காலத்தில், அத்  தலத்தின் பெயரைச் சொல்வதும் புண்ணியச்செயல் ஆகும்.அத்தலம் உள்ள திசையை நோக்கித் தொழுதாலும் பாவ வினைகள் அகலும் என்பதை, " தில்லை வட்டம் திசை கை தொழுவார் வினை ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே" என்கிறார் அப்பர் சுவாமிகள்.

அருளாளர்கள் தல யாத்திரை மேற்கொண்டபோது, தலத்தை அடியார்கள் தொலைவிலிருந்தே காட்டியவுடன், அந்த இடத்திலிருந்தே, கசிந்து உருகி, பதிகங்கள் பாடியுள்ளார்கள். தூரத்தில் சீர்காழி  தெரிந்ததும். மகிழ்ச்சி மேலிட்டு, " வேணுபுரம் அதுவே" என்று ஞானசம்பந்தப் பெருமான் பாடியதாகப் பெரிய புராணம் கூறும். அதேபோல், திருப்புள்ளமங்கை என்ற திருத் தலத்தின் சமீபம் வந்தடைந்ததும், ஆலந்துறையப்பர் அருள் வழங்கும் ஆலந்துறை அதுவே  எனப் பாடினார்.

எல்லா உலகங்களையும் ஆளும் அரசன் பரமேச்வரன். விண்ணாளும் தேவர்க்கும் மேலாய தேவன். மகாதேவன். மாணிக்கவாசகரும், "அரைசே பொன்னம்பலத்து ஆடும் அமுதே" என்று துதிக்கிறார். அவன் செங்கோல் வேந்தன் மட்டும் அல்ல. நீதியே வடிவான அரசன். பொய்யிலி.சத்திய மூர்த்தி மட்டுமல்ல. புண்ணியமூர்த்தியும் கூட. ஆகவே, பெருமானை,        "மன்னானவன் " என்று குறிப்பிடுவார் சம்பந்தர்.

மேகமாகி, மழை பொழியச்செய்பவனும் அப்பரமன். "ஒளிகொள் வெண் முகிலாய்ப் பரந்து எங்கும் பெய்யும் மா மழை.." என்பது சுந்தரர் தேவாரம். இப்படி மேகம்,மின்னல், மழை  ஆகியவைகளாக ஈச்வரன் இருப்பதை,
" நமோ மேக்யாய ச வித்யுத்யாய ச நம ஈத்ரியாய சாதப்யாய ச நமோ வாத்யாய ச.." என்று    ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது.
இதைதான் சம்பந்தரும், " உலகிற்கு ஒரு மழை ஆனவன்" என்கிறார்.

உலகியலில் பல உலோகங்கள் இருந்தாலும் பொன்னே போற்றப்படுகிறது. ஆனால் பொன்னிலும் மாசு இருக்கக் கூடும். இறைவனோ மாசற்ற பொன்னாவான். ஆகவே,  "பிழையில் பொன்னானவன்" என்று சம்பந்தரால் போற்றப்படுகிறான்.

எல்லார்க்கும் முன்னே தாமே தோன்றிய தான்தோன்றியப்பனை , பல்லூழிகளையும் கடந்து தோற்றமும் இறுதியும் இல்லாமல் இருக்கும் பராபரனை,தயாபரனை, தத்துவனை, முதலாய மூர்த்தி என்பதும் உபசாரமே என்றாலும் அதுவும் அழகாகத்தான் இருக்கிறது.
"நமோ அக்ரியாய ச  பிரதமாய ச ,,, " என்ற வேத வாக்கியத்தை, சம்பந்தப்பெருமான், "முதலானவன்" என்று அழகிய தமிழால் சிறப்பிக்கிறார். அது மட்டுமல்ல. நம் எல்லோருக்கும் வாழ்முதலாகவும் விளங்குகின்றான் என்பதும் ஒரு பொருள்.

இறைவனை சொந்தம் கொண்டாடுவதும் அவனது தலத்தை உரிமையோடு குறிப்பிடுவதும் தேவாரம் நம்மை ஆனந்த வெள்ளத்தில் திளைக்க வைக்கும் எண்ணற்ற செய்திகளில் சில." அவன் எம் இறையே" என்றும் "நம் திருநாவலூர்" என்றும் வரும்  தொடர்களைச் சில எடுத்துக் காட்டுகளாக இங்கு எண்ணி மகிழலாம். எனக்குத்  தலைவனாகவும், தலையின் உச்சி மீதும் இருப்பவனை, " சிந்தை இடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார் வந்து மாலை  வைகும் போழ்து என் மனத்து உள்ளார்.." என்று திருப்பாசூரில் அருளிய சம்பந்தர், ஒரே வார்த்தையில் " என்னானவன்" என்று அருளினார்.
பண்ணாகிப் பாட்டின் பயனாகி அருளும் பரம்பொருளைப் பாட்டான நல்ல தொடையாய்  என்றும், ஏழிசையாய்,இசைப்பயனாய் என்றும் துதிக்கப்படும் இறைவனைக் சீர்காழிக் கற்பகமாம் சம்பந்த மூர்த்திகள், "இசை ஆனவன்" என்பார்.

ஒளி மயமான இறைவனை எந்த ஒளியோடு ஒப்பிட முடியும்? இருந்தாலும், நம் கண்ணுக்குத் தெரியும் ப்ரத்யக்ஷ பரமேச்வரனாகிய சூரிய ஒளியை, அதுவும், உதய காலத்தில் இளம் சிவப்பு நிறத்தோடு ஒளிரும் ஆதவனை இங்கு நமக்குக் காட்டுகின்றார் திருஞான சம்பந்த சுவாமிகள்.
"இள ஞாயிறின் சோதி அன்னானவன்" என்பது அந்த அழகிய தொடர். இந்த வரி, நமக்கு,
 "நமஸ் தாம்ராய சாருணாய ச.." என்ற ஸ்ரீ ருத்ரத்தை நினைவு படுத்துகிறது. வேத வாயராகிய சம்பந்தர் வாக்கிலிருந்து இவ்வாறு வேத சாரமாக அமைந்த தேவாரப் பாடல் வெளி வந்தது நாம் செய்த புண்ணியம் அல்லவா?

இப்பொழுது, அந்த அற்புதமான பாடலை  மீண்டும் ஓதி வழிபடுவோம்:

"மன்னானவன்  உலகிற்கு ஒரு

 மழை ஆனவன் பிழை இல்

பொன்னானவன் முதல் ஆனவன்

பொழில் சூழ் பு(ள்)ள மங்கை  
                                            
என்னானவன் இசை ஆனவன்

இள ஞாயிறின் சோதி        
      
அன்னானவன் உறையும் இடம்

ஆலந்துறை அதுவே."

Saturday, May 18, 2013

வினை சிதைக்கும் அகத்தியான் பள்ளி


அகத்திய முனிவர்  எக்காலத்தும் இருப்பவர். எல்லையற்ற ஆற்றல் மிக்கவர். எல்லோராலும் வழிபடத் தக்கவர். தலை சிறந்த சிவ பக்தர். சிவ பார்வதியர்களின் திருக்கல்யாணம் இவருக்காகவே பிரத்தியேகமாகக் காட்டப்பெற்றது. "அகத்தியனை உகப்பானை" என்று தேவாரமும் இவரது பெருமையை அறிவிக்கிறது. தமிழ் இலக்கண நூலாகட்டும், மருத்துவ நூலாகட்டும், நாடி சாஸ்திரமாகட்டும்,புராணங்களாகட்டும், தேவாரத் திரட்டாகட்டும், இம் முனிவரோடு தொடர்புடையன ஆகின்றன. வடமொழியிலும் இவர் புகழ் பல நூல்களில் பேசப்படுகிறது. இவர் வழிபட்ட சிவத்தலங்கள் அநேகம். ஆகவே, இறைவனும் அப்பூஜையை உகந்தவராக அகஸ்தீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அவ்விடங்களில் காட்சி அளிக்கிறார். அவற்றில் ஒன்று , வேதாரண்யத்திலிருந்து,கோடிக்கரை செல்லும் வழியிலுள்ள அகத்தியான்பள்ளி என்ற பாடல் பெற்ற ஸ்தலம்.

அகத்தியான்பள்ளி ஈசனை ஞான சம்பந்தர் ஒரு திருப்பதிகத்தால் பாடியுள்ளார். சமண பௌத்த சமயங்கள் ஓங்கியிருந்த காலத்தில் சைவத்தை மீண்டும் ஸ்தாபிக்க அவதரித்தபடியால், சம்பந்தப் பெருமானது பாடல்களில் அச்சமயங்களைக்  கண்டிப்பதைக் காணலாம்.அகத்தியான் பள்ளித் திருப் பதிகத்திலும், செந்துவர் ஆடை உடுக்கும் பௌத்தர்களும், வெற்றரையுடன் திரியும் சமணர்களும்பேசும் பேச்சு மெய் அல்ல என்றும் அவை எல்லாம் பொய் மொழி என்பதை,

" செந்துவர் ஆடையினாரும் வெற்று அரையே திரி
    புந்தி இலார்களும் பேசும் பேச்சவை பொய்ம்மொழி .."

என்கிறார்.

இனி, குருநாதர் நமக்கு உபதேசிப்பதைக் காணுங்கள்:  எல்லார்க்கும் ஈசனாகவும், பிரானாகவும்   திகழும் சிவபெருமான், வேத நாவினன். வேதங்களால் வழி படப் படுபவன். வேத வடிவாகவே இருப்பவன். எனவேதான், அப் பெருமானை, "வேதியா, வேத கீதா.." என்று தேவாரம்  வாயார அழைக்கிறது. அனைத்து உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் இப்பரம்பொருள், தானே அந்தணணாகி அருள்பவன். எனவேதான், வேத வாயினராகிய சம்பந்தர், மறையின் பொருளாய் விளங்கும் பரமனை, " அந்தணன் எங்கள் பிரான்.." என்று போற்றுகிறார்.

அகத்தியான் பள்ளியில் வீற்றிருந்து, உலகுக்கு ஓர் ஒண் பொருளாகி,மெய் சோதியாகத்  திகழும் எம்பெருமானை ச்  சிந்தை செய்யுங்கள். அப்படிச் சிந்தித்தால், உங்களது பாவ வினைகள் எல்லாம் சிதைந்து ஓடி விடும் என்கிறார் திருஞான சம்பந்தர்.

" அந்தணன் எங்கள் பிரான் அகத்தியான்பள்ளியைச்
   சிந்திமின் நும் வினையானவை சிதைந்து ஓடுமே. "

என்பது அப்பாடலின் ஈற்றடி.

இவ்வாறு, அகத்தியான்பள்ளியைச்  சிந்திக்கும்போது, அகத்திய முனிவரையும் தியானிக்க வேண்டும்.பதினெட்டு சித்தர்கள் வரிசையில் அகத்தியருக்குத் தனி இடம் உண்டு. அண்மையில், அகத்திய நாடி வாசிக்கும் ஒரு அன்பரின் வலைப்  பதிவைக் கண்ட போது, அம்முனிவரிடம் பக்தி பல மடங்கு அதிகரித்தது.

அகத்தியான் பள்ளி ஈசனது அருள் பெற்றவர் ஆதலால், தன்னைத் தஞ்சம் என அடைந்தவர்களை இன்றும் அகத்திய முனிவர் காப்பாற்றி வருகிறார் என்பதை நாடி மூலம் தெரிவித்திருந்த அந்த அன்பருக்கும் அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் பலரும் அறியச் செய்த அன்பருக்கும் நமது நன்றி உரியது.

அகத்திய நாடி பார்க்கும் அன்பரைத் தேடி வந்த ஒருவர், கால்கள் இரண்டும் சுவாதீனம் அற்றவர். தனவந்தர். நாடியைப் பார்த்தால் அதிர்ச்சி காத்திருந்தது. தனது தாயைக் காலால் உதைத்ததற்கான  தண்டனையை இப்பிறவியிலேயே அவர் அனுபவிக்கிறார் என்கிறார் அகத்தியர். ஒரு சிறுவனை சிலையைத் திருடிவர மறுத்ததற்காக அவனது வயிற்றில் உதைத்துத் துன்புறுத்தினார் அந்தச் செல்வந்தர். அச்சிறுவனது பெற்றோர்கள் பைத்தியம் பிடித்தவர்களாகத் திரிந்தனர்.தனது செயலுக்குப் பிராயச்சித்தம் தேடிய அப்பணக்காரரை அகத்திய நாடி என்ன  சொல்லியது தெரியுமா? "அச்சிறுவன் கடுமையான காய்ச்சலுடன் காளையார் கோவிலில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறான். அவனையும்,அவனது பெற்றோரையும் உடனே சென்று காப்பாற்று; இல்லையேல் உனது கைகளும் சுவாதீனம் இழந்து விடும் " என்று எச்சரித்தது.

அகத்தியர்  சொல்லியதுபோல் செய்து இருபது நாட்களுக்கு மேலாகியும், கால்கள் குணமாகாதது கண்டு, அந்த செல்வந்தர், மனம் நொந்துபோய், மீண்டும் நாடியைப் பார்க்க வேண்டியது தான் என்று நாற்காலியை விட்டு எழுந்தார். என்ன ஆச்சர்யம்! யார் துணையும் இன்றி, நடக்கவும் ஆரம்பித்தார். முனிவரின் கருணையை எண்ணி எண்ணிக்  கண்ணீர் விட்டார். இப்போது , தானாகவே வெளியிலும் நடக்கிறார். அகத்தியருக்கு ஆலயம் கட்டும் பணியிலும் அவருக்கு ஆர்வம்  ஏற்பட்டது. இப்படி விவரிக்கிறது அந்த வலைப்பதிவு.

அகத்திய முனிவர் மேரு மலையை அடக்கியவர் மட்டும் அல்ல. மேருவைப்போல் வரும் நமது பாவ வினைகளையும் சிவனருளால் நீக்கி அருளுபவர். இருவரையும் ஒருசேர த் துதிக்க நாமும் அகத்தியான்பள்ளிக்குச் செல்லலாம் அல்லவா?

Sunday, May 5, 2013

திருக்கோயில் இல்லாத ஊர் காடே


ஒரு ஊர் என்றால் அதில் என்னவெல்லாம் எங்கெங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்று வரையறை இருந்தது. திருவிளையாடல் புராணத்தில் , ஆலவாய் அண்ணலின் ஆலயத்தைச்சுற்றி வீதிகளும் பிறவும் பாங்குடன் அமைக்கப்பட்டதைப் பரஞ்சோதி முனிவர் அழகாக வருணிப்பார். தில்லை போன்ற ஊர்களை நோக்கும்போது ஆலயம் நடுநாயகமாகத் திகழ்வதைக் காணலாம். இது நமது கலாசாரம், திருக்கோவிலைச் சார்ந்தே வளர்ந்து வந்தது  என்பதைக் காட்டுகிறது. திருக்கோவில் இல்லாத ஊர் "திரு இல்லாத ஊராகக்" கருதப்பட்டது.

திருவெண்ணீறு அணியாதவர்கள் இருக்கும் ஊர் "திரு இல்லாத ஊராகக்" எண்ணப்பட்டது. வெண்ணீறு அணிவதால் நோய்கள் நம்மை அணுக மாட்டா. "நீறு அணியப்பெற்றால் வெந்து அறும் வினையும் நோயும்" என்றார் அப்பரும். நோய் வந்தாலும் தீர்க்கும் மந்திரமும் மருந்தும் ஆவதும் திருநீறே ஆதலால், " அரு நோய்கள் கெட வெண்ணீறு ..." என்றார் .

பக்தி மேலிட்டு இறைவன்மீது பாடாத ஊர்களும் ஊர் அல்ல .காடு தான். ஊரில் ஒரு கோவில் மட்டுமல்லாமல் பல ஆலயங்களும் இருக்க வேண்டும். "கச்சிப் பல தளியும் " என்று தேவாரம் காஞ்சிபுரத்தில் இருந்த பல ஆலயங்களை ஒருங்கே குறிப்பிடுவதைக் காணலாம்.

மிகுந்த விருப்பத்தோடு சங்கு ஒலிக்க வேண்டும். இன்னிசை வீணையும், யாழும் , தூய மறைகளும்,தோத்திரங்களும் ஒலிக்காத ஊரெல்லாம் காடு அல்லவா? விதானமும் வெண்கொடிகளும் திகழ வேண்டியதும் அவசியம் தானே?

இவ்வளவு இருந்தும், மிக முக்கியமான ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இறைவனின் பஞ்சாட்சரத்தை ஓதி , வெண்ணீறு அணிந்தவர்களாய் ,ஒருக்காலாவது ஆலயம் சூழ்ந்து,வீடு திரும்பியதும்,உண்பதன் முன் மலர் பறித்து , ஆத்ம பூஜை செய்துவிட்டு அதன் பின்னரே உணவு அருந்தும் நியமம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யத் தவறியவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பதே தொழிலாக இறக்கின்றார்கள் என்கிறார் அப்பர்  பெருமான்.
இக்கருத்தோவியம் கொண்ட அப்பர் தேவாரப் பாடல் :

திருக்கோவில் இல்லாத திருவில் ஊரும் திருவெண்ணீறு அணியாத திருவில் ஊரும்
பருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும்
விருப்போடு வெண்  சங்கம் ஊதா  ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும்
அருப்போடு மலர் பறித்திட்டு உண்ணா ஊரும் அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.

காட்டிலும் எந்த உயிரினங்களுக்கும் உதவாத காடும் உண்டு. ஆதலால் அதனை அடவி என்ற சொல்லால் குறித்தார் திருநாவுக்கரசர்.

எனவே, கோவில் இருந்த ஊர்களிலேயே முன்பு குடியிருந்தார்கள். தற்போது ஜனத்தொகைப் பெருக்கத்தினால் புதிய குடியிருப்புப் பகுதிகள் தோன்றி வருகின்றன. அவற்றிலும் சிறிய அளவிலாவது ஒரு ஆலயத்தைக் கட்டியுள்ளார்கள்.

ஆனால், அரசாங்கத்தின் தேசீய நெடுஞ்சாலைத் துறை செய்வதைப் பாருங்கள். சாலையை அகலப்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு, சாலை அருகே இருக்கும் மிகப் புராதன ஆலயங்களை இடிப்போம் என்கிறார்கள். சென்ற ஆண்டில் விக்கிரவாண்டிக்கு அருகிலுள்ள பனையபுரம் ஆலயத்தை இடிக்கத் திட்டமிட்டார்கள். மக்களது எதிர்ப்பினால், இதுவரை அதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை.

தற்சமயம் , கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் (NH45C)மேல்பாடி என்ற ஊரிலுள்ள ஸ்ரீ நாகநாத சுவாமி ஆலயத்தை இடிக்கத் திட்டம்வகுத்திருக்கிறார்கள். 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டதும், அழகிய தேவகோஷ்டங்களைக் கொண்டதும்,ராஜேந்திர சோழனால் திருப்பணி
செய்யப்பட்டதுமான இக்கோயில் காப்பாற்றப்பட வேண்டும். தேசீய நெடுஞ்சாலைத் துறையின் கீழ்க்கண்ட படிவத்தில் தங்களது கருத்தைப் பதிவு செய்து அனுப்பி  எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டியது அன்பர்களது கடமை ஆகும்.
http://www.nhai.asia/register/rgr/traffic.asp

சித்திரைச் சதயமான அப்பர் குருபூசைத் திருநாளை ஆலயத் தூய்மை காக்கும் தினமாக அரசு அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் பல்லாண்டாக இருந்து வருகிறது. இக்கோரிக்கை அரசின் கவனத்திற்கு வருகிறதோ இல்லையோ, ஊரில் இருக்கும் ஒரே  கோவிலை இடிப்பதையாவது கைவிடக் கூடாதா?  நிலங்களைக் கையகப்படுத்தும் போது, அதில் ஆலயங்கள் இடிக்கப்படுவதை முற்றிலும் தடுக்கும் விதிமுறையைக் கொள்ளாமல்,   இந்த அச்சுறுத்தல் நடவடிக்கை எத்தனை ஆண்டுகள் தொடரப்போகிறதோ தெரியவில்லை.

Thursday, March 21, 2013

பிழை பொறுப்பாய்


நாம் தினந்தோறும் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் பிழைகள் ஏராளம். இதில் தெரிந்து செய்யும் தவறுகளே அதிகம் என்றுகூடச் சொல்லலாம். மனமோ சொல்லமுடியாத அளவுக்கு அழுக்கு ஏறிக் களங்கப்பட்டுப் போயிருக்கிறது. தண்டனை என்று ஒன்று வந்தால் பார்த்துக்கொள்ளலாம்  என்று மனம் பாறையாக இறுகிப்போய் இருக்கிறது. அதற்கும் மேலே ஒரு படி போய், நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணம் தலையோங்கி விட்டது.

ஒருவேளை நாம் செய்யும் தவறுகள் சிலவற்றை சமூகம் மன்னிக்கக் கூடும். எல்லாப் பிழைகளும் மன்னிக்கப் படுவதில்லை. மறக்கவும் படுவதில்லை. ஆனால்,எல்லாப் பிழைகளையும் பொறுத்து மன்னிப்பவன் இறைவன் ஒருவனே. நாம் இயங்குவதற்கு மூல காரணமாக உள்ள இறைவனை மறப்பதை விட ஒரு துரோகம் இருக்க முடியுமா? இப்படி நன்றி கெட்டவர்களாக வாழ்ந்தும் , நம்மை இறைவன் தண்டிக்காமல் விட்டிருப்பது, அவனது அளவிடமுடியாத கருணையைக் காட்டுகிறது. உலகமே, நஞ்சால் அழிய இருந்தபோது, சிவபெருமான் அதை உண்டு,தன் கழுத்தில் வைத்த கருணையை மறப்பது மன்னிக்க முடியாத துரோகம் தானே!

சிவபரத்துவ நூல்களைக் கற்காமல் காலம் தள்ளுவது ஒரு பிழை; ஒருக்கால்,அதைக் கற்ற பின்பும்  அவை உணர்த்தும் நெறிகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பதும், அவனது பெருங்கருணையை நினைத்துக்  கசிந்து உருகாமலும், சிவபஞ்சாட்சரத்தை ஜபிக்காமல் காலம் தள்ளுவதும், அவனை  மலர் தூவித் துதியாத பிழையும், அப்பெருமானைத் தினமும் கைகளால் தொழாத பிழையும் , இப்படி எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வாய் என்று காஞ்சி  ஏகாம்பர நாதரிடம் மெய் உருக வேண்டுகிறார் பட்டினத்தார். தினந்தோறும் ஓதவேண்டிய அப்பாடல் இதோ:

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்து உருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே.

இப்பொழுதெல்லாம் மேற்கண்ட பிழைகளோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல்,தெய்வக் குற்றங்களைப்  பல்வேறு வகைகளில் செய்யத் துணிந்து விட்டார்கள். கோயில் சொத்தை அபகரிப்பது போன்ற பாவச் செயல்கள் தலைவிரித்து ஆடுகின்றன. கோயில் பூஜைகள் சரிவர நடக்காமல் போனால், பஞ்சமும், திருட்டும், மன்னனுக்குத் தீங்கும் விளையும் என்று எச்சரித்தார் திருமூலர். இப்போது , கோயில் சொத்தை கைப்பற்றுவது, கோயில் வீடுகளுக்கு வாடகை தர மறுப்பது போன்ற குற்றங்கள் அதிகரிக்கின்றன.

 கோவில் திருவிழாக்களில் மக்கள் கூட்டம் கூடுவதை சாதகமாகக் கொண்டு மதுக்கடைகள் ஒரு ஊரில் அதிகமாக்கப்பட்டதாகச் செய்தித்தாளில் படித்தபோது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல இருந்தது. மக்கள் காசுக்காக எதையும் செய்யப் போகிறார்களா என்று வேதனை மேலிடுகிறது.  இன்னும் எத்தனை பிழைகளைப் பொறுக்கப் போகிறான் அந்த இறைவன் என்று தெரியவில்லை. பொறுத்தது போதும். எங்களைத் திருத்துவதும் உன் கடமை அல்லவா என்று வேண்டத் தோன்றுகிறது.      

Thursday, January 24, 2013

அடியார் கூட்டம் காண ஆசை


ஆசைகள் பலவிதம். நமக்குத் தோன்றுவதோ உலகியல் ஆசைகள் மட்டுமே! ஆனால் அருளாளர்கள் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். உடலைப் பாரமாகக் கருதுபவர்கள். நரம்புகள் கயிறாகவும்,மூளையும் எலும்பும் கொண்டு மறையும்படியாகத் தோலால் போர்த்த குப்பாயமாகவும் , "சீ வார்த்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறுகுடில் " என்றும் உடம்பின் அற்பத்தன்மையை விளக்குகிறார் மாணிக்க வாசகப் பெருமான். இரத்தமும்,நரம்பும் எலும்புகளும் கொண்ட மானுட உடம்பு வெளியில் தோலால் மூடப்பட்டுக் காட்சி அளிப்பதை, புளியம்பழம் போல இருப்பதாகக் கூறுகிறார். அளிந்த அப்பழம், புறத்தில் அழகிய தோலால் மூடப்பட்டு இருப்பதுபோலத்தான் மனித உடலும் காணப்படுகிறது.

எல்லாப்பிறப்பும் பிறந்து இளைத்துவிட்ட பிறகாவது இறைவனது அருளைப் பெற்று,மீண்டும்  பிறவாத நிலையைப் பெற வேண்டும் என்று ஆசைப் படவேண்டும்  என்கிறார் குருநாதர். "கயிலைக்குச் செல்லும் நெறி இது என்று எம்பெருமானாகிய நீரே துணையாக   நின்று வழி காட்ட வேண்டும். அந்நிலையில்  சிறிதாவது என்பால் இரக்கத்துடன்  என் முகத்தை நோக்கி, "அப்பா! அஞ்ச வேண்டாம் "என்று தேவரீர் அருள வேண்டும் என்று என் மனம் ஆசைப் படுகிறது.அப்போது உனது திருமுகத்தில் தோன்றும் முறுவலைக் காண என் மனம் ஏங்குகிறது. முறுவலோடு அபயம் அளித்த பிறகு, தங்களது பவளத் திருவாயால் அஞ்சேல் என்று அருளுவதைக் கேட்க ஆசைப் படுகிறேன்

அது மட்டுமல்ல. நான் கைம்மாறு செய்ய முடியாதபடி ,இவ்வாறு  எனது ஆவியையும் உடலையும் ஆனந்தமாய்க் கனியும்படியாகச்  செய்து,கசிந்து உருகச் செய்தாய். நமசிவாய என்று உன் அடி பேணாப்  பேயன் ஆகினும் பெருநெறி காட்டிய உனக்கு அடியேன் என்ன கைம்மாறு செய்ய முடியும்?
ஆயினும் அடியேனுக்கு ஓர் ஆசை உள்ளது. உன் அடியார் நடுவில் இருக்க வேண்டும் என்ற விண்ணப்பமே அது.  மண்ணுலகத்துள்ள பெரியோர்களும், தேவலோகத்து இந்திரன், பிரமன்,திருமால் ஆகியோரும் ஓலமிட்டு அலறும்  மலர்ச் சேவடியை அடைய அடியேன் தகுதி அற்றவன். ஆனால் தொண்டர்களோடு இணைந்துவிட்டால் அதுவும் சாத்தியமாகிவிடும் அல்லவா?

இந்த உலகில் துன்பப் புயல் வெள்ளத்தில் அல்லல்  படுபவர்களில், உனது திருவடியாகிய துடுப்பைப் பிடித்துக் கொண்டு வானுலகம் பெறுபவர்கள் உனது அடியார்கள். யானோ இடர்க் கடலில் அழிகின்றனன்.

உன்னை வந்திக்கும் உபாயம் அறியாத எனக்கு உனது ஆயிரம் திருநாமங்களால் உன்னைப் போற்ற வேண்டும் என்று ஆசை. அதுவும் எவ்விதம் போற்ற வேண்டும் என்ற ஆசை தெரியுமா? உன்னை வாயார "ஐயா " என்றும் "ஐயாற்று அரசே " என்றும் "எம்பெருமான்,எம்பெருமான்" என்றும் போற்ற வேண்டும். கைகளால் தொழுதபடி உனது திருவடிகளை இறுகத் தழுவிக்கொண்டு அடியேனது தலைமீது வைத்தவண்ணம் கதற வேண்டும். இவ்வாறு உனது திருவடியைச் சிக்கெனப் பிடித்து, அனலில் சேர்ந்த மெழுகு போல உருகவேண்டும்."

 நமது கல்லாத மனத்தையும் கசிவிக்கும் வண்ணம் நமக்காக வேண்டுகிறார் மணிவாசகப்பெருமான். எப்படிப்பட்ட உயர்ந்த பிரார்த்தனை பார்த்தீர்களா! இப்போது திருவாசகத் தேன் நமது புன்  புலால் யாக்கைக்குள் புகுந்து என்பெல்லாம் உருக்குவதைக் காண்போம்:

"கையால் தொழுது உன் கழற் சேவடிகள் கழுமத் தழுவிக் கொண்டு

 எய்யாது என்றன் தலைமேல் வைத்து எம்பெருமான் எம்பெருமான் என்

 றையா  என்றன் வாயால் அரற்றி அழல்சேர்  மெழுகு ஒப்ப

 ஐயாற்று அரசே ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே."

இந்தத் தூய விண்ணப்பத்தை இறைவன் நிறைவேற்றாமல் இருப்பானா? திருவருள் கூடும் உபாயம் தெரியாமல் அரு நரகத்தில் விழ இருந்த தன்னை , முன்னை வினைகள் எல்லாம் போக அகற்றித் தனது அடியார்களிடத்தே கூட்டி அருளினான் என்று பெருமானின் கருணையை அதிசயித்தவாறு பாடுகின்றார் மாணிக்க வாசகர் :

"எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும்  என் ஏழைமை அதனாலே                                                  

நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு நல்வினை  நயவாதே  

மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை                                                          

அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே."