Friday, December 26, 2014

நஞ்சுண்ட தெய்வ நாயகன்

பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்துள்ள பிரபந்தங்களுள் ,பதினொன்றாம் திருமுறையில் உள்ள  " கோயில் நான்மணி மாலை "  என்பதும் ஒன்று. கோயில் என்பது சிதம்பரத்தைக் குறிக்கும். தில்லைச் சிற்றம்பலத்தே  நடம் புரியும் ஆனந்த சபேசனைப் பேசாத  நாட்கள் எல்லாம் பிறவாத நாட்களே என்பார் அப்பர் பெருமான். அவன் புகழை எப்படிப் பேசுவது? அது அளவிடமுடியாத, எவராலும் சொல்லமுடியாத புகழ் அல்லவா  என்றுகூடத் தோன்றும். அவனோ தோன்றாப் பெருமையன். வானோர்க்கும் அரியவன். மறைகளுக்கும் எட்டாதவன். அவன் புகழைப் பாடவோ பேசவோ புண்ணியம் வாய்ந்தவர்கள் உண்மை அடியார்கள் அல்லவா? அவர்கள் வாய் மூலமாவது ஒருசில புகழையாவது நாம் கேட்டு உய்யலாம். அது நமது பாவ வினைகளை ஓடச் செய்யும் சுலபமான வழிதானே! இதைத்தான் பட்டினத்தாரும், " வினை கெடக் கேட்பது நின் பெருங் கீர்த்தி"  என்றார்.

மனித உடல் அன்றாடும் பாவக் குப்பைகளை சேர்க்க வல்லது. இதற்குக் " குப்பாயம் " என்ற பெயர் திருவாசகத்தில் காணப்படுகிறது. ஒழுக்கமின்மை, பொய், சூது , கடும் பிணிகள் ஆகியவற்றை ஏற்றி வினையாகிய மீகாமன் , கலத்தைச்  செலுத்தும்போது, புலன்களாகிய சுறா மீன்கள் அதனைத் தாக்குகின்றன. பிறவியாகிய பெரும் கடலில் அதனைக் கொண்டு தள்ளத் துவங்குகின்றன. குடும்பம் என்ற நெடும் கல் விழுந்து அக்கலத்தின் கூம்பு முறிகிறது. உணர்வுகளாகிய பாய்மரம் கிழித்து எறியப்படுகிறது. கலமானது தலைகுப்புற விழ ஆயத்தமாகும்போது, " தெய்வ நாயகமே, தும்பை மாலையை விரும்பிச் சூடிய பன்னகாபரணா , தில்லை அம்பலவாணா , உனது அருளாகிய கயிற்றைப் பூட்டி , இக்கலம் கவிழாமல் காத்து அருள்வாயாக " என்று மனதாரப் பிரார்த்தனை செய்கிறார்  பட்டினத்து அடிகள்.

பெருமானது புகழ் எப்படிப்பட்டது? பட்டினத்தார் அருளுவதைக் கேட்போம்: "  எல்லா சராசரங்களும் உன்னிடத்துத் தோன்றி உன்னிடத்தில் அடங்குவன. ஆனால் நீயோ ஒன்றினும் அடங்காதவன். தோன்றும் பொருள் அனைத்திலும் நீயே நீக்கமற நிற்கின்றாய். நின்பால் எனக்கு அன்பு பெறுவதற்கு நீயே அருளல் வேண்டும். உன் அருட் செல்வம் கிடைத்துவிட்டால் வேறு எனக்கு என்ன வேண்டும்? நின் தெய்வக்கூத்தையும், எடுத்த பொற்பாதத்தையும் கண்ட கண்களுக்கு வேறு ஒரு பேறு  உளதோ? உன்னை நினைப்பதே சிறந்த தவம். { " தில்லை நகரில் செம்பொன் அம்பலம் மேவிய சிவனை நினைக்கும் தவம் சதுராவதே." }

எனினும் ,எளியேனது சிந்தையில் தேவரீர் தோற்றுவித்தபடி , " நான் முகனின் தந்தையாம் திருமாலுக்குச் சக்கரம் கொடுத்ததையும், குபேரனுக்குச் சங்கநிதியையும்,பதும நிதியையும் கொடுத்த வள்ளன்மையையும், மார்க்கண்டனுக்காகக் காலால் காலனைக் கடந்ததையும், உலகம் யாவற்றையும் ஆல நஞ்சு அழிக்க வந்தபோது, அதனை அமுதாக உண்டு காத்த கருணையையும் ஒருநொடியில் மூன்று புரங்களையும் எரித்த வீரத்தையும் , தாருகா வன முனிவர்கள் ஏவிய யானையைப் போர்த்த பெருமையையும் , பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்த திருவிளையாடலையும் , கயிலையை எடுத்த அரக்கனது ஆணவத்தை அடக்கி அவனுக்கு இரங்கியதையும், தாதையின் தாளைத்தடிந்த வேதியச் சிறுவனுக்கு அருளி, அவனுக்குச் சண்டீச பதம் தந்ததையும், சிறுத் தொண்டர் மனையில் உண்டு பேரருள் செய்ததையும்,வேதாரண்யத்தில் விளக்கைத் தூண்டிய எலியை அரசனாக்கிய கருணையையும், கங்கையும் பாம்பும் செஞ்சடையில் பகைதீருமாறு  ஒருசேர வைத்த பண்பையும் மலையான் மகளுக்குப் பாகம் ஈந்த பெருமையையும் , தில்லையில் " அம்பலத்து ஆடும் நாடகத்தையும்  "  போற்றுவதற்கு அடியேனுக்கு ஆற்றல் இல்லை . என்றாலும் ஆசையால் இவ்வாறு போற்ற எண்ணினேன். " என்கிறார் அடிகள்.

இத்தனை பெருமையும் ,கருணையும் வாய்ந்த ஒப்பற்ற கடவுளைத் தொழாது வேறு கடவுளர்களைத் தொழுவோரும் உளரே என்கிறார் அவர். அப்படிச் சொல்ல காரணம் இல்லாமல் இல்லை. ஆல நஞ்சு எழுந்தபோது எந்தத்தேவரும் அதனை எதிர்க்கவோ, பிறரைக் காக்கவோ முடியாதபோது, கயிலை நாயகனையே சரண் அடைந்தனர். அவ்வாறு நஞ்சுண்டு அவர்கள் காக்கப்பட்டிராவிட்டால் அப்போதே மாண்டிருப்பார்கள் அல்லவா? ஆகவே, கருணைக்கடலான நீல கண்டனைத் தொழுவதே நன்றியுடையவர்க்கு அடையாளம்.  மறைகளின் பிறப்பிடமாகவும், மறையோர்கள் தங்கள் கதி எனத் தொழப்படுவனுமான தில்லைக் கூத்தனை வணங்குவதே முறையாகும் என்று நம்மை எல்லாம் நல்வழிப்படுத்துவார்  பட்டினத்துப் பிள்ளையார்.

வாழ்வாகவும் தங்கள் வைப்பாகவும் மறையோர் வணங்க
ஆள்வாய் திருத்தில்லை அம்பலத்தாய் உன்னை அன்றி ஒன்றைத்
தாழ்வார் அறியாச் சடில நஞ்சுண்டிலை ஆகில் அன்றே
மாள்வர் சிலரையன்றோ  தெய்வமாக வணங்குவதே.
   

Saturday, December 13, 2014

மாணிக்க வாசகர் கண்ட அதிசயம்

உலகில் இறைவனைப்பற்றிய சிந்தனை இல்லாதவன் வறியவன் ஆகிறான். ஏழ்மையன் ஆகிறான். இந்த ஏழைமை எதனால் வருகிறது என்பதை இவ்வாறு நமக்கு மாணிக்க வாசகப் பெருமான் அழகாக விளக்குகிறார்.  நாமோ செல்வம் இல்லாதவன் மட்டுமே ஏழை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதனால்தான் ,திருஞான சம்பந்தரும் ,"செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே" என்று அருளினார். ஏழைமை என்பதற்கு அறியாமை என்று பொருள் கொள்வோரும் உளர். சிவபெருமானைப் பற்றிய எண்ணம் முதலில் அவன் அருளாலே நமக்கு ஏற்படவேண்டும். அதிலும் அவனது பஞ்சாக்ஷரத்தை எண்ணி எண்ணி அனுதினமும் ஜபம் செய்ய வேண்டும்.

வேதம் நான்கில் நடுநாயகமாய் , மெய்ப்பொருளாய், எல்லாத் தீங்கையும் நீக்கும் அரு மருந்தாய், பந்தபாசம் அறுக்க வல்லதாய், இயமன் தூதர்களையும் நெருங்க விடாமல் செய்வதாய் விளங்கும் சிவ பஞ்சாக்ஷரத்தை ஜபிக்க நமக்கு நல்வினைப்பயன் இருக்க வேண்டும். அத்தகைய பேறு தனக்கு இல்லையே என்று உருகுவார்  மணிவாசகர்.

" எண்ணிலேன் திருநாம அஞ்சு எழுத்தும்  என் ஏழைமை அதனாலே "  என்பது அவ்வுயர்ந்த வரிகள்

கலைகளைக் கற்பவர்கள் எல்லோரும் ஞானிகள் ஆகிவிட மாட்டார்கள். தாம் கற்ற அக்கலைகளை  சிவார்ப்பணமாகச் செய்வோரே உண்மை ஞானிகள்.
" கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே; கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே." என்பது அப்பர் வாக்கு.

ஆகவே கலைகளைக் கற்ற சிவ ஞானிகள் பால் அணுகினால் நமக்கும் அந்த ஞானிகளின்  அருள் கிடைக்கும்.  அதற்கு நாம் நல்வினை செய்திருக்க வேண்டும் அல்லவா? இதைத்தான்,

" நண்ணிலேன் கலை ஞானிகள்  தம்மொடு நல்வினை நயவாதே " என்ற திருவாசக வரிகள் இந்தக் கருத்தை நமக்கு அறிவிக்கின்றன.

உலகத்து உயிர்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் உழல்பவை. உலக வாழ்க்கை முடிந்ததும் மண்ணோடு மண்ணாக ஆகும் தன்மை உடையவை. மீண்டும் பிறவா நெறி  தர வல்ல கடவுளை சிந்திக்காமலும், கலைஞானிகளைச் சென்று அடையாமலும் வீணே காலத்தைக் கழிப்பவை.  கடவுள் அருள் இருந்தால் மட்டுமே கரை ஏறக்கூடியவை. நமக்கும் அந்த அருள் கிடைக்குமா என்று ஒவ்வொரு நாளும் ஏங்குவோருக்கு நிச்சயம் சிவனருள் கிட்டும். பிறவிப் பிணி தீரும். இப்படி ஒன்றுக்கும் பற்றாத நமக்கும் அருள் வழங்கத் தயாராக இருப்பது அவனது வற்றாத மாப்பெருங் கருணையை அல்லவா காட்டுகிறது! இதை விட அதிசயம் ஒன்று இருக்க முடியுமா?

கருணைக் கடலான கலாதரன் தன்னை ஆட்கொண்டதோடு, தனது உயர்ந்த பழைய அடியார் கூட்டத்தோடு சேர்த்து வைத்தது அதை விட அற்புதம் தானே என்று நெகிழ்கிறார் குருநாதர்.

" மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை
அண்ணல் ஆண்டு தன்  அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே."

என்ற திருவாசக வரிகள் கல் நெஞ்சையும் உருக்குவதாக உள்ளன.

முழுப்பாடல் இதோ:
" எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும்  என் ஏழைமை அதனாலே
நண்ணிலேன் கலை ஞானிகள்  தம்மொடு நல்வினை நயவாதே
மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை
அண்ணல்  ஆண்டு தன்  அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே." 

Tuesday, November 11, 2014

திருமந்திர சிந்தனை

சாத்தனூரில் திருமூலர் குருபூஜை 
சித்தத்தில் சிவானந்தம் சேர்வது எப்படி என்பதை திருமூலதேவ நாயனார் அருமையாக நமக்கு வழங்குகிறார். சிவனருளால் ஞானம் விளையும் என்று திருமந்திரப் பாடல்கள் இதனை வலியுறுத்துகின்றன. உலகில் புண்ணிய பாவங்களை சில ஞானிகள் அறிவார்களாம். அவ்வாறு அறிவதன்மூலம் அவர்களுக்குப் பிறவி நீங்கப்பெற்று முக்தி தருவான் இறைவன் என்கிறார். வினைகள் நீங்கிவிட்டால் சிவலோகம் கிட்டும் என்பதை " சிவனருளால் வினை சேரகிலாமை , சிவனருள் கூடின் அச் சிவலோகமாமே." என்பது திருமந்திர  வாக்கு. எனவே, அவனருளாலே செல்வமும் ,ஞானமும் கிட்டுவது எளிது என்பதை, " பிரான் அருள் உண்டு எனில் உண்டு நற் செல்வம் ; பிரான் அருள் உண்டு எனில் உண்டு நன் ஞானம் " என்ற வரிகளால் அறியலாம்.

" வாடித் தவம் செய்வதே தவம் " என்கிறார் திருமூலர். மற்றபடி தவ வேடங்கள் பூண்பதால் மட்டும் சிவனருள் பெற்று விட முடியாது என்பது இதன் உட்பொருள். ஆகவே, " தவம் மிக்கவரே தலையாய வேடர் " என்று அருளினார் நாயனார். அதே சமயம் சாதனங்கள் வேண்டாம் என்று ஒருபோதும் அவர் கூறவில்லை. பூதி சாதனம், காதில் அணியும் குண்டலம், கண்டிகை, யோகபட்டம், தண்டம் ஆகியவற்றை தவ வேடர்க்கான லக்ஷணங்களாகக் காட்டவும் அவர் தவறவில்லை. இதனால், தவ யோகியர்களுக்கு இச்சாதனங்கள் அத்தியாவசியம் ஆவதை உணர்த்துகிறார் அவர். இந்தக் காலத்தில், தவசிகள் என்று சொல்லிக் கொண்டு ருத்திராக்ஷம் அணியாதவர்களையும், புறத்தே வேடம் பூண்டு, ஆடம்பர வாழ்க்கை நடத்துபவர்களையும் நாம் காண்கின்றோம் என்றால் அது நமது புண்ணியக் குறைவே ஆகும்.

ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்

வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்

 தேடியும் காணீர் சிவனவன் தாள்களே.                                                                                  
என்பது திருமந்திரம்.

ஞானம் இல்லாதவன் வேடம் மட்டும் பூண்டிருந்தால் ஒரு பயனும் விளையாது; நாடு  நலம் கெடும்;பஞ்சமே மிஞ்சும் என்று எச்சரிக்கிறார் திருமூலர். ஞானம் வந்து விட்டால் வேடம் அத்தனை முக்கியமில்லை. ஞானத்தை வேண்டுவோர் ஞானமயமாகிய பரமேச்வரனை நண்ணி நிற்பார்கள். இந்த வேடங்கள் எல்லாம் உடலுக்கே. உயிர்க்கு அல்ல. உடல் நீங்கும் போது வேடம் உடனே கழன்று விடும் அல்லவா? இதைத்தான் நமக்கு அவர் எடுத்துக்காட்டுகிறார். இந்த உண்மையை உணராதவர்கள் கடலில் சிக்கிய கட்டையைப் போன்றவர்கள் என்கிறார்.

உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா

உடல் கழன்றால் வேடம் உடனே கழலும்

உடலுயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்  

கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே.

என்பது அப்பாடல்.

ஆகவே வேடம் மட்டும் பூண்டு துயரமுற்று என்ன பயன்? நுண்ணுணர்வது அல்லவா முக்கியம்? ஆகவே இது வேண்டாம். அதைத் தவிர்ப்பீர்களாக என்று உபதேசிப்பதை, " வேடம் கொண்டு என்செய்வீர்  வேண்டா மனிதரே" என்று பாடுவதால் அறியலாம். வாய் ஒன்று சொல்லி மனம் ஒன்று சிந்தித்து வேடம் மட்டும் பூண்பதைக் காட்டிலும், சித்தத்தை  ஒருக்கிச் சிவாயநம என்று இருப்பதே மேலானது அன்றோ?    
 
அவ்வாறாயின், ஞானம் எவ்வாறு கைகூடும் எனக் கேட்கலாம். அதையும் விளக்கும் போது, சத்தையும் அசத்தையும் உள்ளவாறு உணர்ந்து, சிந்தை உருக நின்றால் , பக்தியின் பயனாக , சிவஞானத்தை சிவனருளே கை காட்டும் என்பார் திருமூலர். அப்பொழுது ஞானத்தின் பால் இச்சை செல்கிறது. அதனால் உயிர் பக்குவப்படுகிறது. எள்ளளவும் இடைவிடாது சிந்தித்து அறிபவர்க்கு  சிவபதம் சித்திக்கிறது என்ற சைவ சித்தாந்த உண்மையை திருமந்திரம் புலப்படுத்தும் அழகே அலாதியானது.

எனவே, நூலறிவும் முக்கியம் தான், தவமும் தவ வேடமும் அதை விட முக்கியம் தான். இதனை அறியாதவர்கள் சமயத்திற்கேற்ப திசை (எண்ணம்) மாறுபவர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் வினை நீக்கம் பெறும் வழியைக் காண மாட்டார்கள். ஆக்கைக்கே இரை  தேடி அலைபவர்கள் அவர்கள். இறுதியில் காக்கைக்கே இரையாகிப் பிறவியை வீணடிப்பார்கள். இது எதைப்போல இருக்கிறது தெரியுமா? ஆற்றில் முதலையைக் கண்டு அஞ்சி ஓடிய ஒருவன், எதிரில் கரடியைக் கண்டது போன்றது என்று உவமையால் விளக்குவார் திருமூலர். அப்பாடலை நோக்குவோமாக:

ஆற்றில் கிடந்த முதலை கண்டு அஞ்சிப் போய்      

 ஈற்றுக் கரடிக்கு எதிர்ப்பட்ட தன்னொக்கும்  

 நோற்றுத்தவம் செய்யார் நூல் அறியாதவர்
 
 சோற்றுக்கு நின்று சுழல்கின்றவாறே.                                                                      

வேடமும் வழிபாடும் ஞானம் பெறுவதற்கான ஆரம்பப் படிகள். பெருமானை உள்ளத்தில் எழுதி வைத்து நெக்குருகி தியானிப்போர்க்கு சிவன் முன் நின்று அருளுவான் என்பதை , மனத்தகத்தே கோயில் கட்டிய பூசலார் நாயனாரது சரிதம் மூலம்  பெரிய  புராணமும் தெளிவாக நமக்கு  உணர்த்துகிறது. திருமந்திரப்பாடல்களை ஓதுவதோடு , நாடும் நகரமும் நற் திருக்கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமானை வழிபட்டு , சித்தத்தில் அவனை இருத்தி ஞானம் வேண்டினால், பெருமானது கருணை அதனை வழங்கி முத்திப்பேறு வழங்கும் என்பது இதன் மூலம் பெறப்படுகிறது. 

Tuesday, October 28, 2014

"அடியேற்கு முன்னின்று அருள்"

தமிழிலும்,வடமொழியிலும் பல கடவுளர்கள் மீது கவசம் பாடப்பெற்றிருப்பது பலரும் அறிந்ததொன்றாகும். இவை கவசம் போல இருந்து,ஓதுபவர்களை இன்னல்களிலிருந்து காப்பாற்றுவன. தமிழ்மொழியில் உள்ள விநாயகர் கவசம்,கந்த சஷ்டி கவசம்,ஷண்முக கவசம்,சிவ கவசம் ஆகிய நூல்கள் அன்பர்களால் பாராயணம் செய்து வரப்படும் நூல்களுள் சிலவாகும்.

செந்திலாண்டவனின் பெருங்கருணையினால் ஊமைத்தன்மை நீங்கப்பெற்ற குமரகுருபர சுவாமிகள் அப்பெருமான் மீது பாடிய கந்தர் கலி வெண்பா என்ற நூல் 122 கண்ணிகளால் ஆன அற்புதமான தோத்திரம். இதனை அனுதினமும் பாராயணம் செய்யும் அடியார்கள் பலர். இதில் சிவபெருமானின் பரத்துவமும், கந்தப்பெருமானின் தோற்றமும் , சூர பதுமாதிகளைப் போரிட்டு வென்றமையும் கூறுவதோடு,சைவ சித்தாந்தக் கருத்துக்களையும் நிரம்ப அமைத்திருக்கிறார் அடிகள். செங்கமலப் பிரமனும்,பழ மறையும் இன்னமும் காண மாட்டா பரஞ்சுடராய் ஒளிரும் பரமசிவம் , அனாதியாகவும், ஐந்தொழிற்கும் அப்புறத்தனாகவும்,எவ்வுயிர்க்கும் தஞ்சம் அளிக்கும் தனிப்பெரும் கடவுளாகவும் ,உயிர்கள் மேல் வைத்த தயாவினால் மலபரிபாகம் வரும் காலத்தில்,குருபரனாகி, ஆணவ மலத்தை நீக்கி ,மெய்ஞ்ஞானக் கண் காட்டி, ஆட்கொண்டருளும் தன்னிகரற்ற கருணையைப் பரவுகிறார் குமரகுருபர அடிகள்.

ஆறு தாமரை மலர்கள் மீது மட்டுமா எழுந்தருளினான் கந்தன்? அடியார்களின் மனமாகிய தாமரையிலும்  எழுந்தருளி இருக்கிறான் அல்லவா?  "அன்பர் அகத் தாமரையின் மீதிருக்கும்  தெய்வ விளக்கொளியே " என்று பாடுகிறார் குமரகுருபரர். அப்பெருமான் ஐந்தொழிற்கும் நீங்காத பேருருவாய் நிற்பவன். ஐந்தொழிலையும் நடத்துபவன். அட்டமூர்த்தியாகவும் விளங்குபவன். மெய்ஞானத்தைத் தரும் அட்ட யோகத் தவமெனப் பொலிபவன். செந்தூரில் கருணை வெள்ளம் என வீற்றிருப்பவன். பானுகோபன்,சிங்கமுகன் ஆகியோரை வென்று வாகை சூடியவன். சூரனைத் தடிந்த சுடர் வேலவன். தேவர் சிறை மீட்ட தேவதேவன்.மறைமுடிவாகிய சைவக் கொழுந்தும், தவக்கடலும் அவனே. தெய்வக்களிற்றையும், வள்ளிக்கொடியையும் மணந்து ஆறு  திருப்பதிகளைப் படைவீடுகளாகக் கொண்டவன். ஆறெழுத்தும் சிந்திப்பவர் சிந்தையில் குடி கொள்பவன்.  இவ்வாறு கந்தன் கருணையைப் பரவுகிறது கலிவெண்பா.
 
நூலின் நிறைவில் காணப்படுவது கந்தவேளிடம் செய்யப்படும் பிரார்த்தனை. நமக்குப் பகையாகி  நிற்கும் பலகோடிபிறவிகளிலிருந்தும், பலகோடி துன்பங்களிலிருந்தும் , பலப்பல பிணிகளிலிருந்தும் செய்வினை, பாம்பு, பிசாசு,பூதங்கள், தீ,நீர், ஆயதங்கள் , கொடிய விஷம், துஷ்ட மிருகங்கள், முதலியவற்றால் வரும் தீங்கிலிருந்தும் காப்பாற்றவேண்டி, பச்சை மயிலேறி, பன்னிருதோளனாய், ஈராறு அருள் விழி காட்டி, இடுக்கண் எல்லாவற்றையும் பொடியாக்கி, வேண்டும் வரம் யாவும் தந்தருளி, உள்ளத்தே உல்லாசமாக வீற்றிருந்து பழுத்த தமிழ்ப்புலமையை  அருளி, இம்மை,மறுமையில் காத்தருளி, பழைய அடியாருடன் கூட்டிப் பரபோகம் துய்ப்பித்து பூங்கமலக் கால் காட்டி ஆட்கொண்டு அடியேனுக்கு முன் நின்று அருள்வாயாக என்று வேண்டுகின்றார் குமர குருபர சுவாமிகள்.

இந்நூலை அவசியம் ஒவ்வொருவரும் தினந்தோறும் பன்னிரு திருமுறை- திருப்புகழ்  பாராயணத்தோடு ஓதிவரின், சிவனருளையும் குகனருளையும் ஒருசேரப் பெறுவது திண்ணம். அவசர கதியில் இயங்கும் இவ்வுலகில் நேரமின்மை காரணமாகக் கூறப்படும் போது ,இந்நூலில் கவசமாக அமைந்துள்ள  கடைசி 12 கண்ணிகளையாவது ஓத வேண்டும். எனினும் முழுவதும் ஓதுதலே சிறப்பு.

   '' பூங்கமலக் கால் காட்டி ஆட்கொண்டு அடியேற்கு முன்னின்று அருள். " 

Saturday, October 11, 2014

உபாயம் செய்யும் உமை அன்னை

" ஸதாசிவ பதிவ்ரதை" யான பரமேச்வரியை ,  " சிவஞான ப்ரதாயினி" யாகத் துதிக்கிறது லலிதா சஹஸ்ர நாமம்.  சிவனருளே சக்தியாவதை சைவ சித்தாந்தமும் எடுத்துரைக்கிறது. பாலுக்காக சீர்காழி ஆலயக்கரையில் அழுத குழந்தைக்குப் பாலோடு சிவஞானத்து இன்னமுதத்தையும் சேர்த்து ஊட்டினாள் அம்பிகை என்று பெரியபுராணத்தால் அறிகிறோம். அதனால் சிவஞானசம்பந்தர் என்று பெயர் பெற்றது அக்குழந்தை.அதேபோல மூக கவிக்கு அருளியவுடன்  " முக பஞ்ச சதி " என்ற அற்புதமான தோத்திரங்கள் உருவாயின. அறிவு விளக்கம் பெறாத ஒருவன் திருவானைக்காவில் வாயிற்படியருகே உட்கார்ந்திருந்தபோது அவனை வாயைத் திறக்குமாறு கூறி, தனது தாம்பூலத்தை அகிலாண்டநாயகி வாயில்  உமிழ்ந்தவுடன், அவன் கலைகள் யாவும் சித்திக்கப்பெற்றுக் கவி காளமேகம் ஆயினான் என்று பெரியோர் கூறுவர் .

இப்போது திருமூலரது வாக்கைக் கேட்போம்: " தஞ்சம் என்று எண்ணித் தன் சேவடி போற்றுவார்க்கு இன்சொல் அளிக்கும் இறைவி"  என்பது திருமந்திரம்.  அவ்வாறு போற்றுபவர்களுக்குப் பவமாகிய துன்பம் நீங்கும் என்பதை, " பணிமின், பணிந்தபின் வெய்ய பவம் இனி மேவகிலாவே"  என்கிறார். "பவ நாசினி' என்று லலிதா சஹஸ்ர நாமமும் இவ்வாறே அம்பிகையைத் துதிக்கும்.

இவ்வாறு வினை கடிந்த மனோன்மனி நங்கை ,நம் தலைமீது மலர்ப்பாதம் வைத்து ஆண்டருளி, சிவஞானத்தை அருளுவதை, " மேலைச் சிவத்தை வெளிப்படுத்தாளே " என்று அருளினார் திருமூல நாயனார்.

உலகியலில் பார்த்தால் , தனது குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, அதனைப் பார் த்துப் பார்த்து மகிழ்வது   அன்னையின் இயல்பு. கண் விழித்தபிறகு, அதனை அரவணைத்துக் கொஞ்சி மகிழ்வது வழக்கம். ஆனால் தூக்கத்தைக் கலைக்கத் தயங்குவாள். ஆனால் அகிலங்களுக்கெல்லாம்  அன்னையாகிய சிவசக்தி என்ன செய்கிறாளாம் தெரியுமா? உறங்கும் அவ்வுயிரைத் தன்  வளைக் கரத்தால் கழுத்தோடு எடுத்து அணைத்து , தனது வாயிலிருந்து சிவஞானத் தாம்பூலத்தை வாயிலே உமிழ்ந்து, ," உறங்கியது போதும். " என்று அருளிச் செய்கிறாளாம். இது உயர்ந்த "உபாயம் " ஆகிறது என்கிறார் திருமூலர்.  இதைத்தான் மாணிக்கவாசகரும்,திருவெம்பாவையில், " கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" என்றார். இப்போது நாம் அவ்வுயரிய திருமந்திரப்பாடலை நோக்குவோம்:

உறங்கும் அளவில் மனோன்மனி வந்து
கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு
உறங்கலையா என்று உபாயம் செய்தாளே.

இப்பாடலில் வரும் " உறங்கலையா" என்பதை உறங்கவில்லையா என்று பொருள் கொள்ளக் கூடாது. ஏனென்றால் ஏற்கனவே உறக்கத்தில் இருப்பவனை ஒருவரும் அவ்வாறு கேட்க மாட்டார்கள். ஆகவே அச்சொல்லை " உறங்கல் ஐயா " என்று பிரித்துப் பொருள் காண வேண்டும். உறங்கல் என்றால் உறங்காதே என்று பொருள்படும். இவ்வாறு நம்மை உய்யக்கொண்டு அஞ்சேல் என்று அபயம் அளித்து, சிவ  நெறி  காட்டுகிறாள் அம்பிகை. 

Saturday, September 13, 2014

ஆரூர் தொழுது உய்யலாம்

நமக்கு அவ்வப்போது உயர்ந்த எண்ணங்கள் தோன்றுவதுண்டு. ஞானோதயம் என்றுதான் வைத்துக்கொள்வோமே! " தெய்வம் தந்த வீடு" என்போம். மனைவி, செல்வம் அமைவதெல்லாம் இறைவன் தந்த வரம் என்போம். ஆனால் அடுத்த கணமே அந்த எண்ணங்கள் மாயமாய் மறைந்து விடுகின்றன. நான் சம்பாதித்துக் கட்டின வீடு என்கிறோம். நான் உழைத்து சம்பாதித்தது என்கிறோம். எனது மனைவி,என் மக்கள் என்று எல்லாவற்றிலும் நான்,எனது மட்டுமே மேலோங்கி நிற்கிறது.  திரு ஞானசம்பந்தப்பெருமான் நமக்கு உபதேசிப்பதைக் கேட்போமா?

" நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து நீர்  

 அம்பரம் அடைந்து சால அல்லல் உய்ப்பதன் முனம்    

  உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுந்த செஞ்சடை                                                                
  நம்பன் மேவு நன்னகர் நலம்கொள் காழி சேர்மினே."

இப்படி எனது எனது என்று இருந்துவிட்டு,முடிவில் துன்பத்தை அடைவதன் முன், தேவதேவனும் , ஒப்பற்ற உத்தமனும், செஞ்சடை வேதியனும் ஆகிய பரமேச்வரன் விரும்பிஉறையும் சீர்காழிப் பதியைச் சென்று அடைந்து உய்வீர்களாக என்பதே அந்த உபதேசம். இவ்வாறு உய்யும் எண்ணம் புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். பிறர்க்கு ஏன் கிடைப்பதில்லை என்று நாம்  எண் ணலாம். அதற்கும் சம்பந்தப்பெருமானே விளக்கம் தருவதைக் காண்போம்:

" முன்னை நீர் செய்த பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது

   இன்ன நீர் இடும்பையில் மூழ்கிறீர்..."

சிவனது தாள்களைச் சிந்தியாத பேதைமார்கள் பாவத்தில் மூழ்கித் துயர வலையில் சிக்கித் தவிக்கிறார்கள் . பெருமானை சிந்திக்காததும், தொழாததும்,ஐந்தெழுத்தைச் சொல்லாததும் ஆகிய  பிழைகளின் பலனே  பாவ வினைகளை மேலும் பலப்படுத்தி இன்னல்களைத் தாண்டமுடியாமல் பலவீனப்படுத்துகின்றன. உடற்பிணிக்கும்,உள்ளப்பிணிக்கும் வித்திடுகின்றன.

பிறவி துன்பத்துக்கு ஏதுவாகும் என்பதால் ,"பிறவாமை வேண்டும் " என்று வேண்டினர் பெரியோர்கள். இருப்பினும் மனிதவாழ்க்கையை மெய் என்று எண்ணி ,இன்பத்தை நாடுவதே குறிக்கோள் என்பதாக மனித்தப்  பிறவி அமைந்துவிடக்கூடாது. பிற உயிர்களுக்குக் கிடைக்காத பேறு ,இந்த மனிதகுலத்திற்குக் கிடைத்திருப்பதை எண்ணி எண்ணி அப்பேற்றைத் தந்த இறைவனை மறவாத சிந்தையர்களாக வாழ வேண்டும். துறவிகளுக்கு மட்டுமே இது சாத்தியம் என்று நினைத்து விடக் கூடாது. இதனை அடைய எளிய மார்க்கம் ஒன்று உண்டு. அது என்னவென்றால் மறவாத சிந்தையோடு பெருமானது திருவாரூர் சென்று தொழுவதே ஆகும் என்று நம்மை ஆற்றுப் படுத்துகிறார் சம்பந்தர். அப்பெருமான் கங்கையைச் சடையில் ஏற்றுப் புவியைக் காத்தவன். தருமமே வடிவமாக உடைய புண்ணிய மூர்த்தி. எனவே மனம் மையல் கொண்டு என்ன ஆகிவிடுமோ என்று அஞ்ச வேண்டாம். நீலகண்டப்பெருமானது திருவருள் நம்மையும் காக்கும்.

" பிறவியால் வருவன கேடுள ஆதலால் பெரிய இன்பத்

  துறவியார்க்கல்லது துன்பம் நீங்காது எனத் தூங்கினாயே                                          

 மறவல்  நீ  மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி                                  

அறவன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே." 

Wednesday, July 2, 2014

செல்வன் கழல் ஏத்தும் செல்வம்

மாடு என்ற சொல் ஒருகாலத்தில் செல்வம் என்ற பொருளில் வழக்கத்தில் இருந்தது. கல்வியைக் காட்டிலும் செல்வம் வேறு இல்லை என்று சொல்ல வந்த திருவள்ளுவரும் மற்றவையெல்லாம் செல்வம் ஆக மாட்டா என்று கூறும் போது, " மாடல்ல மற்ற ..." என்றார். ஒருவனிடம் எத்தனை மாடுகள் இருக்கின்றனவோ அவ்வளவுக்கு அவன் பணக்காரன் என்று கருதப்பட்டது. அதனால், கால்நடைகளே செல்வம் என்று சொல்லும் வழக்கம் வந்தது.

பணத்துக்காகப் பேயாய் அலையும் இந்தக் காலத்தில் எந்த வழியிலாவது அதை அடைந்துவிட வேண்டும் என்ற நோக்கமே மேலோங்குகிறது. அதற்காக எதையும் செய்யத் தயாராகி விட்டனர் மக்கள். பொய், சூது,வஞ்சகம் போன்ற எல்லா இழிந்த செயல்களையும் செய்யத் துணிந்து விட்டனர். பிறரை ஏமாற்றியோ, பொய் சொல்லியோ ,உறவுகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டோ இவர்களது பயணம் தொடர்கிறது.

திருநாவுக்கரசர் இப்படிப்பட்டவர்களைக் கடுமையாகக் கண்டிக்கிறார். செல்வம் ஈட்டுவதற்காக உலகத்தில் உள்ள அத்தனை பொய்களையும் சொல்பவர்களை வெட்கம் கெட்டவர்களே என்று வன்மையாகச் சாடுகிறார். செல்வம் எந்த வழியில் வந்தாலும் கைக்கு வந்தவுடன் மகிழ்ச்சியைத் தருவதை மட்டும் நினைத்து அது தகாத வழி என்று நினைக்காத மாந்தரை நாணம் இல்லாதவர் என்று குறிப்பிடுவது சரிதானே!

மாட்டைத் தேடி  மகிழ்ந்து நீர்  நும்முளே
நாட்டுப் பொய் எல்லாம் பேசிடும் நாணிலீர்
என்கிறார் அப்பர் பெருமான்.

மனித உடலைக் கூடு என்று சொல்வது உண்டு. நரம்பும்,சதையும்,இரத்தமும் கொண்ட இப் பிண்டத்தைத் தோலாகிய போர்வை மூடியதால் கூடு போலத் தோற்றமளிக்கிறது. இப்பிண்டத்திற்குத்தான் எத்தனை எத்தனை ஆசைகள் !  அது மட்டுமல்ல. பேராசையும் கூடத்தான்!  அதைத்தான் மாணிக்கவாசகரும், "பேராசையாம் இந்தப் பிண்டம் அற .."  என்று பாடினார். இந்தக் கூட்டை இயக்குவது எது? உயிர் என்று  பதில்  சொல்கிறோம். உடலை விட்டு உயிர் நீங்கிவிட்டால் பெட்டப் பிணம் என்று பெயர் இடுகிறோம். அவ்வுடலுக்குக் கிடைத்து வந்த " அவர்" மரியாதை அகற்றப்பட்டு, " அது" என்று ஆகி விடுகிறது. உயிரோ இக்கூடு நீங்கி வேறொரு  கூட்டுக்குள் பயணம் செய்ய ஆயத்தமாகிறது.

பிறவி எடுத்து விட்டால் மரணம் என்பது நிச்சயம். " மண்ணாவது திண்ணம்" என்கிறார் சுந்தரர். யானை ஏறி உலா வரும் அரசர்களும் இதற்கு விதி விலக்கு அல்ல.

" மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்கள்
  செத்தபோதில்  ஆரும் இல்லை சிந்தையுள் வைம்மின்கள்.."  என்றும் எச்சரிக்கிறார். இதனை அப்பரடிகளும், "செத்தால் வந்து உதவுவார் யாரும் இல்லை சிறு விறகால் தீ மூட்டிச் செல்லா நிற்பர்" என்றார். எனவே தேடிய செல்வத்தை யாரும் உடன் கொண்டு போகப்போவதில்லை. சிவ தர்மம் செய்து சிவனருள் பெறுவோம் என்ற நிலை எத்தனை பேருக்கு வாய்க்கும். அதற்கும் அவனருள் வேண்டும் அல்லவா? அப்படிச் செய்பவரது தலைமுறைகள் எக்குறையும் இன்றி விளங்கும். இதை அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே விளங்கும்.

காக்கைக்கும் நரிகளுக்கும்,மண்ணுக்கும் இரையாகப் போகும் இவ்வுடலை வைத்துக் கொண்டு எத்தனை ஆணவத்தோடு மக்கள் இருக்கிறார்கள் பார்த்தீர்களா? எனவே அப்பர் பெருமான் நமக்கு உபதேசிப்பது என்னவென்றால், இக்கூட்டை விட்டு உயிர் பிரியும் முன்பாக காட்டுப்பள்ளியில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானது கழலைத் தஞ்சம் அடைய வேண்டும் என்பதே. திருக்காட்டுப்பள்ளி என்பது திருவையாற்றுக்கு அருகிலுள்ள கண்டியூருக்கு மேற்கே கல்லணை செல்லும் பாதையில் உள்ள ஒரு சிவ ஸ்தலம். சம்பந்தர்,அப்பர் இருவராலும் பாடல் பெற்றது. சுவாமிக்கு இங்கு அக்னீச்வரர் என்ற திருநாமம் வழங்கப்படுகிறது. இப்பொழுது முழுப் பாடலையும் பார்ப்போமா?  

மாட்டைத் தேடி  மகிழ்ந்து நீர்  நும்முளே
நாட்டுப் பொய் எல்லாம் பேசிடும் நாணிலீர்
கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளி உளான் கழல் சேர்மினே

நம்மால் முடிந்த அளவு சிவதர்மம் செய்வோம். அது ஒரு நாளும் வீண் போகாது. நம்மையும் நம் பரம்பரையையும் என்றென்றும் உடன் இருந்து காக்கும். 

Tuesday, June 10, 2014

எய்யாமல் காப்பாய்

காஞ்சிப் பெரியவர் சொன்னதாக ஒரு அன்பர் சொன்னார்:  "படுப்பதற்கு முன்  அலாரம் வைக்கிறோம். விடியற்காலையில் அலாரம் ஒலித்துவிடுகிறது. தூங்கினவன் எழுந்திருக்க வேண்டுமே!"  அவ்வளவு அற்பமானது மனித வாழ்க்கை."உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" என்று சொல்வது முழுவதும் உண்மையே. ஒவ்வொரு நாளும் பிறப்பதோடு நாமும் கூடவே    பிற க்கிறோம். ஒருக்கால் அப்படி விழிக்காவிட்டால் முதல் நாளோடு கணக்கு முடிந்து விட்டதாக அர்த்தம். முன்பெல்லாம் படுக்கும் முன்பு சிவ நாமங்களைச் சொல்லிவிட்டுப் படுப்பது வழக்கம். மறு நாள் நல்ல பொழுதாக விடியவேண்டும் அல்லவா? ஒருவேளை அப்படி விடியாவிட்டாலும் உறங்குமுன் சொன்ன சிவ நாமாக்கள் நம்மைக் கரை சேர்த்து விடும்.
நம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு கணமும் தெய்வத்தின் துணையோடு நடைபெறுவதை அன்பர்கள் பலர் தமது அனுபவத்தால் அறிவார்கள்.

எனவேதான் துன்பங்களிருந்தும் அகால மரணங்களிளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும்படி இறைவனை நாம் வேண்டுகிறோம். பொழுது புலர்ந்ததும் நமக்கு இன்னொரு  வாழ்நாள் தந்த ஈசனை வாழ்த்தி வணங்க வேண்டும். விடியலில் நீராடி, வெண்ணீற்றை மெய்யில் பூசி, திருக்கோயிலை அடைந்து, அலகிட்டு,மெழுக்கும் இட்டுப்,பூமாலைகள் மற்றும் இண்டை கட்டி அடியிணைக்குச் சார்த்தி, "சங்கரா , நீலகண்டா, சம்புவே, சந்திரசேகரா, கங்காதரா" .... எனப்பல நாமாக்களால் பரவிக் கைகள்  தலை மீதுற, கண்களில் நீர்மல்க வழிபடும் அடியார் நெஞ்சத்தைக் கோயிலாகக் கொள்வான் பரமேச்வரன்.

விடியற்காலத்தில் பொய்கையை அடைந்து, அதில் மூழ்கி நீராடுகையில் உன் கழலையே பாடுகின்றோம். நாங்கள் உனக்கு வழிவழியாக அடிமைசெய்யும் குடியில் பிறந்தவர்கள். உன் அருளால் மட்டுமே வாழ்பவர்கள்.   ஐயனே, தீயினைப் போன்று ஒளிரும் சிவந்த நிறம் கொண்டவனே,   சிற்றிடையையும், அழகிய மைதீட்டிய கண்களையும் உடைய பெருமாட்டியின் மணவாளனே. எம்மை ஆட்கொண்டு அருளுவதும் உனக்கு ஒரு விளையாட்டே அன்றோ!            நீ என்றுமுதல் எங்களை ஆட்கொண்டாயோ அன்றே எங்கள் ஆவியும் உடலும்,உடைமைகளும் உனக்கே உரியதாகி விட்டன  அல்லவா? எனவே எம்மை வருத்தாமலும் தண்டிக்காமலும் எம் பிழைக்கே இரங்கி அப்பிழைகளைப் பொறுத்துக் காப்பாற்றுவாயாக. இவ்வாறு இறைவனிடம் இத் திருவெம்பாவைப் பாடல் நமக்காகப் பரிந்து உரைப்பதுபோலத் தோன்றுகிறது.

"மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல் பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழல் போல்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடம்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்."

பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் சிற்றில் பருவத்தில் , மணலால் வீடு (சிற்றில்) கட்டும் சிறார்கள் எவ்வாறு வேண்டுவார்கள் தெரியுமா? " நீ காக்கும் கடவுள் அல்லவா . இம்மணல் வீட்டை உனது பாதங்களால் அழிக்கலாமா? உன்னைத் தவிர எம்மைக் காப்பவர் எவரே? "சிற்றில் சிதையலே"  என்று வேண்டுவதாகப்  பாடல் அமைந்திருக்கும்.

இறைவனை நினையாமல் பொழுது போக்கி அவனைப் புறக்கணிப்பார்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவதானால் எத்தனை பேர் எஞ்சுவரோ தெரியாது. மழை அவன் தருவது. உணவும் அவன் தந்தது. செல்வமும் அவன் தந்தது. இப்படி எல்லாமே அவன் அருளால் மட்டுமே கிடைத்திருந்தும் நன்றி மறந்தவர்களாய் இருக்கிறோம். ஈச்வரனின் கோபத்திற்குப் பாத்திரர்கள் ஆகிறோம். அவன் கோபப்பட்டாலோ உலகம் தாங்காது. ஆகவே அவனைக் கோபிக்க வேண்டாம் என்று நமஸ்கரித்து வேண்டுகிறது ஸ்ரீ ருத்ரம்.  அதையே மாணிக்கவாசகரின் திருவாசகமும் " எய்யாமல் காப்பாய்" என்று பிரார்த்திக்கிறது.  

Monday, May 12, 2014

வள்ளலாகும் அடியார்கள்

"கொடுத்தல்" என்ற பொருளில் "கொடை" என்ற சொல்லை உபயோகிக்கிறோம். கொடுப்பது எல்லாம் கொடை ஆகிவிடுமா? தர்ம காரியங்களுக்குக் கொடுப்பதை கொடை என்று சொன்னால் அதுவே பொருத்தமாகத் தோன்றுகிறது. பிறர் நல்வாழ்வு வாழ்வதற்கும் சமயப் பணிகளுக்கும் கொடுக்கப்படுவதால் அதை நன்கொடை என்று சொல்கிறோம். அதைக் காட்டிலும் நல்ல கொடை இருக்க முடியாது ஆதலால், அதை நல்ல கொடை -- நன்கொடை என்கிறோம்.

ஒருவகையில் பார்த்தால் பஞ்ச பூதங்களே நமக்கு முன் உதாரணங்களாக விளங்குகின்றன என்று சொல்ல முடியும். வானம் தரும் கொடையே மழை வடிவில் வந்து நம்மைக் காப்பாற்றுகிறது. பூமித்தாயின் கொடையே நமக்கு உண்ண உணவளிக்கிறது. வாயுவின் சீற்றமில்லாமல் இருந்தால் வாழைகளும் பிழைக்கின்றன. இப்படி இறைவனே பஞ்ச பூதங்களாகி நமக்கு அருட்கொடை வழங்குகின்றான். மழைத்துளியில் நின்ற நீராகவும், பயிர் காட்டும் புயலாகவும் பெருமான் அருளுவதைத் திருமுறைகள் நமக்கு உணர்த்துகின்றன. அடியார்களுக்காகத் தன்னுலகைத் தந்து மீண்டும் பிறவா நெறியளிக்கும் கற்பகமாய் இறைவன் விளங்குவதை, மாணிக்கவாசகர்,
" முழுது உலகும் தருவான் கொடையே சென்று முந்துமினே."  கூறுவதால் நமக்கும் அத்திருவருள் கிட்ட வேண்டும் என்ற குருநாதரின் உள்ளக்கிடக்கை புலனாகிறது.

உண்மை அடியார்கள் இறைவனது குணநலன்களைப் பெற்றுப் பிறரையும் வாழ வைப்பர். தர்மத்தின் வடிவமாகிய தயாபரனையே நாடி இருப்பதால் அவர்களும் கொடையாளிகளாக விளங்குவதோடு கொடை வடிவமாகவே ஆகி விடுவார்களாம். வலிவலம் என்ற தலத்துத் தேவாரப் பாடலில் இப்படிச் சொல்கிறார் திருஞானசம்பந்தர்: " கொடை வடிவினர் பயில் வலிவலம்" என்பது அவர் வாக்கு.

ஆக்கூர் என்ற தலத்தில் வாழ்ந்த வேளாளப் பெருமக்களின் கொடையையும் சம்பந்தப்பெருமான் சிறப்பிக்கிறார் : "வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளர் ஆக்கூரில் தான் தோன்றிமாடமே"  

கையில் இருந்தால் தானே கொடுக்க முடியும் என்று கேட்கலாம்.. கொடுக்க முடிகிறதோ இல்லையோ , எக்காலத்தும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்மட்டும்  மாறாது. கொடுக்க முடியவில்லையே என்ற  ஏக்கம் நிச்சயம் இருக்கும்.

சீர்காழியில் வாழ்ந்த வள்ளல்கள் எப்படித்திகழ்ந்தார்கள் என்று விளக்கும்போது, சம்பந்தர்,

விண் பொய்த்து அதனால் மழை பெய்யாவிட்டாலும், மண் வளம் கெட்டுப் பயிர்கள் விளைவு குறைந்து விட்டாலும் தங்களது வள்ளல் தன்மை மட்டும் அம்மக்களிடமிருந்து மாறாதாம். பிரமபுரத்து ஈசன் அடியார்களின் தன்மை இதுவே என்கிறார் அவர்.

" விண் பொய் அதனால் மழை விழாது ஒழியினும் விளைவுதான் மிக உடை
   மண் பொய் அதனால் வளமிலாது ஒழியினும் தமது வண்மை வழுவார்
   உண்பகர வாருலகின் ஊழி பலதோறும் நிலை பதிதான்
   சண்பை நகர் ஈசன் அடிதாழும் அடியார் தமது தன்மை அதுவே."

தற்காலத்தில் வள்ளல்களைத் தேட வேண்டியிருக்கிறது. தாமாகவே முன்வந்து கொடுப்பவர் வள்ளல். கேளாமலே கொடுக்கும் வள்ளல் இறைவன் .அதனால் அவனை வதான்யேச்வரர் என்று மயிலாடுதுறையில் அழைக்கிறார்கள். நன்கொடை கேட்பவர்களும் , " அள்ளிக் கொடுக்காமல் போனாலும் கிள்ளியாவது கொடுங்கள்" என்று கெஞ்சுகிறார்கள். அப்படிக் கிள்ளிக் கொடுப்பதை  வாங்கிக்கொள்வதற்குப் பலமுறை அலைய வேண்டியிருக்கும் . இப்பொய்மையாளரிடம் சென்று கால் கடுக்க நின்று கெஞ்சுவதைக் காட்டிலும் கொடுக்கக் காத்திருக்கும் தியாகேச வள்ளலைச் சரண் அடைவோம். பாண பத்திரனுக்கும், குங்கிலியக் கலயருக்கும், வாரி வழங்கிய வள்ளல் நமக்கும் செவி சாய்ப்பான். நம்மையும் வள்ளல் ஆக்குவான். அதற்கு வேண்டியதெல்லாம், சம்பந்தர் மேற்கண்ட பாடலில் அருளியபடி, " ஈசன் அடிதாழும் அடியார் " ஆவது தான்.      

Thursday, May 8, 2014

சிந்தையும் சிவமும்

காலை வேளைகளில் பலர் அருகிலுள்ள பூங்காக்களிலும், சாலைகளிலும் நடைப் பயிற்சி மேற்கொள்வதைப் பார்க்கிறோம். டாக்டர் சொல்லியிருப்பார்- "  Conscious walk" முக்கியம் என்று. அப்படியானால் , நடப்பதை மட்டுமே அல்லவா கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்? ஆனால் பலர்  நண்பர்களோடு அளவளாவிக்கொண்டும், பாட்டுக் கேட்டுக் கொண்டும், அக்கம்பக்கத்தில் வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டும் நடந்து கொண்டிருப்பர். சுருக்கமாகச் சொன்னால் , கண்கள் நடைபாதையை அடையாளம் காட்டியதைக் கொண்டு,கால்கள் அவ்வழியில் செல்கின்றன. வாயோ வம்பளந்து கொண்டிக்கிறது. காதோ பாட்டுக் கேட்பதில் லயித்திருக்கிறது. ஆகவே, மனம்,மெய்(உடல்),வாக்கு என்ற மூன்றும் வெவ்வேறு காரியங்களை அப்போது செய்து கொண்டிருக்கின்றன.
மனம் என்பதை இங்கு சிந்தனை என்று எடுத்துக்கொள்ளலாம். மனம், மெய், வாக்கு ஆகிய மூன்றையும் பரமேச்வரனிடத்தில் அர்ப்பணித்து விடுவார்கள் மகான்கள். " ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள" என்று சிதம்பரத்தில் நடராஜப் பெருமானைத் தரிசித்த சுந்தர மூர்த்தி சுவாமிகளின் நிலையைக் காட்டுகிறார் தெய்வச் சேக்கிழார் பெருமான். கண்டவுடன் சிந்தையில் அது ஒன்றே மேலோங்கியிருக்கிறது.  கண்களில் ஆனந்த நீர் அருவியாகப் பொழிகிறது. மாறிலாத மகிழ்ச்சி மலர்கிறது. நிறைவாக, வாய் அப்பெருமானைத் துதிக்கிறது. இதைத் தவிர வேறு எதையும் பார்க்காத,,கேட்காத,பேசாத  பேரின்ப நிலை!

சிந்தையில் சிவத்தைத் தவிரப்  பிறிதொன்றை நினையாத மாணிக்கவாசகரது அனுபவத்தை அவரது திருவாசகப் பாடல் நமக்குக் காட்டுகிறது. அவரது சிந்தனை சிவபெருமானிடம் லயப்படுகிறது. கண்களால் அக்கண் பெற்ற பயனாகப் பெருமானது பாத மலர்களையே காண்கிறார். வாயால் வந்திப்பதும் அம்மலர்ப்பாதங்களைத்தான். இவ்வாறு ஐம்புலன்களை  அவனுக்கே அர்ப்பணம் செய்வது என்பது எளிதான காரியமா? அந்தப் பக்குவமும் இறைவன் தந்தால்  அல்லவா சாத்தியம் ஆகமுடியும்!  அதை எவ்வாறு அருளுகிறான் என்று பார்ப்போமா?  இந்த ஊன் உடம்பின் உள் புகுந்து எலும்பெல்லாம் உருக்கி.எலும்புத் துவாரங்கள் தோறும் உலப்பிலாத ஆனந்தத் தேனைச் சொரிந்து கருணையினால் ஆட்கொள்கிறான்.

மாறிலாத மாப்பெருங் கருணையாளனாகிய இறைவனோ மலை போன்றவன். கடல் போன்றவன். சிவந்த மேனியன். அந்த செம்மை நிறத்தை எவ்வாறு வருணிப்பது?  செந்தாமரை மலருக்கு ஒப்பிட்டால் அதுவும் மிகக் குறைவாகத் தோன்றுகிறது. செந்தாமரை மலர்கள் மலர்ந்த காடு போன்றது அம்மலர்த் திருமேனி என்று சொன்னால் ஓரளவு ஆறுதல் தருகிறது. இப்படிப்பட்ட ஒப்பற்றவன் ஒன்றும் பற்றாத அடியேனை ஒரு பொருட்டாக ஆட்கொண்டு தன்னையே தந்ததை  எவ்வாறு புகழ்வேன் என்று பாடுகிறார் மாணிக்க வாசகர்.

சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன்
  கண்ணிணை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி      
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்
 மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர                
வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை
 மாலமுதப்பெருங்கடலே மலையே உன்னைத்
தந்தனை செந்தாமரைக் காடு அனைய மேனித்
 தனிச்சுடரே இரண்டும் இலித் தனியனேற்கே..

என்பது அம்மணிவாசகம்.
    

Thursday, April 17, 2014

பித்தன் என்றே பாடுவாய்

பித்தன் என்ற வார்த்தைக்குப் பேரருளாளன் என்று பொருள் கூறுவார்கள் . உலகில் நாம் காணும் பித்தர்களைப் போல் அல்லாமல் அருள் காரணமாகவே பித்துப் பிடித்ததுபோல் அடியார்களிடம் தோன்றி இன்ன தன்மையன் என்று அறிய முடியாதவனாக, தோன்றாத் துணையாக, சொன்னவாறு அறிபவனாக , அருள் சுரக்கும் துறையாக, கேளாமலே அருள் வழங்கும் தன்னிகரற்ற வள்ளலாக , வெளித் தோற்றத்தில், உலகத்தவர் பேணாத பொருள்களைப் பேணுபவனாகத்  தியாகராஜனாக  விளங்குவதால் "பித்தன்" என்ற பெயர் பரமேச்வரன் ஒருவனுக்கே உரியதும், பெருமை தருவதும், ஆகிய சொல் ஆகும். இப்பெயரைக் கொண்டுதான் சுந்தரர் முதலில் பாடத் தொடங்கினார். அதுவும் பெருமானே, அவ்வாறு பாடுமாறு அடியெடுத்துக் கொடுத்தான். சம்பந்தரும் எருக்கத்தம்புலியூர் பதிகத்தில், " பித்தா பிறைசூடி" என்று பாடியிருக்கிறார். ஆனால் பித்தன் என்ற சொல் முதலாவதாக வைக்கப்பெற்று சுந்தரர் வாயிலாக ஒரு திருமுறையே உதயமாயிற்று.

முன்பு நம்மைப் பித்தன் என்று பேசினாய் இப்போது அதையே துவக்கமாகக்கொண்டு பாடுக என்று அருட்கட்டளை இட்டான் பரமன். பேசுதலைக் காட்டிலும் பாடுதல் சிறப்பு வாய்ந்தது. கீதம் வந்த வாய்மையால் மிகப்பாடும் அடியார்கள் பெறும் பேற்றை அளவிட முடியாது.

பிறை சூடிய கருணை அடுத்ததாக எடுத்து உரைக்கப்படுகிறது. எவரும் அடைக்கலம் தராத நிலையில் தன்னைச் சரண் அடைந்த சந்திரனை சிரத்தில் ஏற்று சந்திரசேகரனாக  அருளியதால் "பிறை சூடீ" என்றார் சுந்தரர். அனை த்து உயிர்களுக்கும் அவன் ஒருவனே பெருமான் ஆனதால் பெருமானே  என்றும் அருள் நிதி தர வரும் ஆனந்த மலையாகத் திகழ்வதால் "அருளாளா" என்றும் விளித்தார்.

எந்த வகையில் பார்த்தாலும் உன்னை அடியேன் மறந்ததே இல்லை. "ஏற்றான் மறவாதே நினைக்கின்றேன்" என்றார் நாவலூர் நம்பிகள். உலகியலில் பற்று விட்டவர்க்கே இந்நிலை சித்திக்கும். இறைவனைப் பற்றிய நினைவு அறவே வராதவர்களும், அவ்வப்போது வருபவர்களும், ஆபத்துக் காலத்தில் வருபவர்களும் கொண்ட இவ்வுலகத்தில் இறைவனது நினைவே முற்றிலுமாக இருப்பவர்கள் அருளாளர்கள் மட்டுமே. "மறவாதே நினைக்கின்றேன்" என்று சுந்தரரும் , "இரவும் பகலும் பிரியாது வணங்குவன்" என்று அப்பரும் , "நனவிலும் கனவிலும் நம்பா உன்னை மனவிலும் வழிபடல் மறவேன்" என்று சம்பந்தரும், "இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்" என்று மணிவாசகரும் அருளியமை காண்க.

இனி வரும் பகுதி மிகவும் நயம் மிக்கது. "மனத்து உன்னை வைத்தாய்" என்று பிரித்துப் பொருள் கொண்டால், அவன் அருள் இருந்தாலன்றோ அவன் அருள் கிடைக்கும் என்ற  சித்தாந்த உண்மை வெளிப்படுகிறது. என் மனக்கோயிலில் நீங்காது உறையுமாறு அருள் வைத்தாய் எனப் பொருள் கொண்டால் பேரின்பம் பயக்கிறது. வெளிப்படையாகப் பொருள் கொண்டால், திருவெண்ணெய் நல்லூர் அருட் துறையை கோயிலாக வைத்தாய் எனக் கொள்ளலாம். இது, "கோலக்காவும்      கோயிலாக்  கொண்டான்" என்பது போல.

"வைத்தாய்ப் பெண்ணை " என்று பிரிக்கும்போது , ஒருபாகமாகப் பெண்ணை (உமாதேவியை) வைத்தாய் எனக் கொண்டு மகிழலாம். அதுவேயல்லாமல், "பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் " எனப் பிரித்துப் பொருள் நோக்கினால், பெண்ணை ஆற்றின் தென்புறம் உள்ள திருவெண்ணெய் நல்லூர் என்று பொருள்படும்.

அருட் துறை என்பது அத்தலத்து ஆலயத்திற்கான சிறப்புப் பெயர். அருள் பிரவாகிக்கும் துறை அல்லவா அது? முற்றிலும் பொருத்தமான பெயர் வேறு எதுவும் இருக்க முடியாது. சுவாமிக்கும் கிருபாபுரீச்வரர்  என்றே பெயர் வழங்கப்படுகிறது.

உனக்கு மீளா ஆட்செய்வதே அல்லாமல் உனது அடிமை இல்லை என்றோ உனக்கு ஆட்செய்ய  மாட்டேன் என்றோ இனிக் கூறவும் இயலுமோ என்று நெக்குருகிப் பாடுகின்றார் நம்பியாரூர் .

இத்தனை நயங்களையும் உள்ளடக்கிய பாடலை அதன் பொருட்சுவையை  உணர்வதோடு, தெய்வத் தன்மையையும் இணைத்துக்  கசிந்து பாடும் போது பெறும் இன்பமே அலாதி தான்!  

பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய்ப் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே."

Monday, March 3, 2014

சிவபுரம் நினைவோம்

லக்ஷ்மி கடாக்ஷம் இருக்கும் இடத்தில் சரஸ்வதி கடாக்ஷம் இருப்பது மிகவும் அரிது என்பார்கள். ஏழ்மையில் வாடிய புலவர்கள் ஏராளம். வெற்றித்திருமகள் இருக்கும் இடத்திலும் இப்படித்தான். ஆனால் இந்த மூன்று தேவியர்களின் அருளும் ஒரே இடத்தில் இருக்கும்படியாகச் செய்யும் சிவத்தலம் சிவபுரம் என்பது. கும்பகோணத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சாக்கோட்டை என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தூரம் சென்றால் திருக்கோயிலை அடையலாம்.

சிவபுரத்தை மனத்தால் நினைத்தாலே, அலைமகள்,கலைமகள், மலைமகள் ஆகிய மூன்று தேவியர்களின் அருளும் கிடைத்துவிடும் என்கிறார் சம்பந்தர். “ “சிவபுர நினைபவர் திருமகளோடு திகழ்வரே” என்றும், “சிவபுர நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே” என்றும், “சிவபுரமது நினைபவர் செயமகள் தலைவரே” என்றும் கூறுவதால் அறியலாம். அது மட்டுமல்ல. நமது இடர்களைக் களைய வல்ல தலமும் இது. இந்தப் பிறவியில் எதிர்ப்படும் துன்பங்களை மட்டுமல்ல. அடுத்த பிறவியில் வரக்கூடிய துன்பங்களையும் நீக்கும் அருள் மிகுந்த தலமாக இது விளங்குவதை, “இருமையும் இடர்  கெடுமே” என்பார் ஞானசம்பந்தர்.
இத்தலத்தின் மீது அவர் பாடிய தேவாரத் திருப்பதிகத்தில் னகரம் எவ்வளவு சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது பாருங்கள்.

மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்
நிறையவன் உமையவள் மகிழ் நட(ம்) நவில்பவன்
இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவென உடையவன் எமை உடையவனே.
என்பது அந்த அருந்தமிழ்ப் பாடல்.

திருமால் வெள்ளைப் பன்றியாகப் பலகாலம் சிவபூஜை செய்த அருமையான தலம் இது. இச்செய்தியை ஆச்சார்ய மூர்த்திகள் இருவரும் தம் பதிகங்களில் குறிப்பிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, அப்பர் பெருமானது திருப்பாடலை இங்கு சிந்திப்போமாக.

சிவபெருமானே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றான். 
நிலமாகவும்,நிலத்தில் விளையும் பயிராகவும்,அப்பயிருக்குக் காரணமான நீராகவும், நீரை (கங்கையை) ஏற்கும் சடையை உடையவனாகவும், செங்கோல் வேந்தன் என்று  மக்கள் புகழ்வதையே பரிசாகக் கொள்ளும் அரசனுக்கு அப்பெயர் விளங்கக் காரணமாகவும், பிறைபோன்ற கோரப்பல் உடைய வெள்ளைப்பன்றி வடிவில் திருமால் பலகாலம் பிரியாமல் வழிபட்ட பெருமையை உடையவனாகவும், தேவர்களுக்கெல்லாம் தேவனாகவும் சிவன் எனவும் அப்பெருமான் விளங்குகின்றான். இப்படிச் சொல்லும் அப்பரின் திருத்தாண்டகத்தை இப்போது முழுவதும் காண்போம்:

பாரவன் காண் பாரதனில் பயிர் ஆனான் காண்
   பயிர் வளர்க்கும் துளியவன் காண் துளியில் நின்ற
நீரவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண்
   நிலவேந்தர் பரிசாக நினைவுற்று ஓங்கும்
பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளைப்பன்றி
   பிரியாது என்றும் வழிபட்டு ஏத்தும்
சீரவன் காண் சீருடைய தேவர்க்கெல்லாம்
   சிவனவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே

ஆர்யாம்பிகையும் சிவகுருநாதரும் அருள் வழங்கும் சிவபுரத்தைத் தரிசித்து நலம் யாவும் பெறுவோமாக.          

Saturday, February 8, 2014

கசிந்த மனம்

பரமேச்வரனுக்குத்தான் எத்தனை எத்தனை பெருமைகள் ! அவனது பெருமைகளை அவனே அறியமாட்டான் என்கிறார் மாணிக்கவாசகர். அவன் எதைச் செய்தாலும் அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது. கங்கையையும் சந்திரனையும் ஏற்ற முடியில் வன்னி, எருக்கு, கொன்றை, ஊமத்தை ஆகியமலர்களைச் சூடிக்கொள்வதும் அழகுதான். இதற்கிடையில் சீறும் பாம்பையும் தரித்திருக்கிறான். அதுவும் அவனுக்கு ஆபரணமாகத்தான் திகழ்கிறது. அந்தச் செக்கச் சிவந்த மேனிக்கு வேறு நிறங்களும் அலங்காரமாகத்தான் அமைகின்றன. பால் போன்ற தூய வெண்ணீறு உத்தூளித்த மேனியனாகத் தோன்றுகிறான். கொடிய விஷத்தைக் கண்டத்தில் அடக்கியதால் அப்பகுதி நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது. இப்படி வண்ண வண்ண மேனியனாகவும் வண்ண மலைகளைச் சூடியவனாகவும், கங்கையும், பிறையும் பாம்பும் சூடிய செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியாகவும் திகழ்கிறான் பரமன்.

சிவபரம்பொருளின் பெருமைகள்  அளவிடமுடியாதவை. நாம் உய்ய வேண்டும் என்பதற்காகவே புராணங்களும் அருள் நூல்களும் சில பெருமைகளை நமக்கு உணர்த்துகின்றன. இந்த வகையில், தேவார திருவாசகங்கள் மூலம் நாம் அறியக்கூடிய செய்திகள் ஏராளம். கலயநல்லூர் என்ற தலத்தின் மீது அமைந்துள்ள சுந்தரர் தேவாரத்தை எடுத்துக்காட்டாக இங்கு கூறலாம். இத்தலம் கும்பகோணத்திற்கு அண்மையில் சாக்கோட்டை என்ற இடத்தில் இருக்கிறது. இப்பதிகத்தில் பாடல் தோறும் புராண வரலாறுகள் கூறப்பட்டுள்ளன.

ஈசனை அடையவேண்டி அம்பிகை தவம் செய்தது ,சலந்தரனை வெல்ல வேண்டித் தன் கண்மலரால் சிவபிரானைப் பூசித்துத் திருமாலானவர் சக்கரம் பெற்றது, மண்ணி  ஆற்றங்கரையில் மணலால் சிவலிங்கம் நிறுவிப் பசுக்களின் பாலால் அபிஷேகித்துப் பூஜை செய்த பாலன் மீது அவனது தந்தை வெகுண்டு பால் குடத்தை உதைக்கவே, அவரது கால்களை வெட்டி வீழ்த்திய பாலனுக்கு இறைவன் காட்சி அளித்துச் சண்டீச  பதம் தந்து அருளியது, உமாதேவியார் விளையாட்டாக இறைவனது கண்களை மூடியதால் உலகங்கள் யாவும் இருளவே, மூன்றாவது கண்ணைப் படைத்து ஒளிதந்து அருளியது, தேவர்களுக்காக முப்புரங்களை எரித்தது, தன்னை மதியாத தக்ஷனது யாகத்தைச் சிதைத்து, தேவர்களைத் தண்டித்தது, கயிலையை எடுத்த இராவணனைக் காலால் அழுத்தியது, மாலயனும் காண்பரிய நீண்ட தீச்சுடராய் நின்றது, காமனை நெற்றிக் கண்ணால் எரித்தது, முருகனைத் தோற்றுவித்து அசுரர்களை அழித்துத் தேவர்களைக் காத்தது, பிரமன் வழிபட்டது ஆகிய புராண வரலாறுகளை இப்பதிகத்தில் எடுத்துக் காட்டுகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இறைவன் எல்லாமாகி நிற்பவன் என்பதைக் கூறுமிடத்து,

“ நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி
  நிற்பனவும் நடப்பனவாம் நின்மலன் ஊர் ...”

என்பார் சுந்தரர். பெருமானது பெருமைகளைப் போலவே, அவன் உறையும் தலமும் பெருமை உடையது என்றும் காட்டுவார் அவர். அங்குள்ள சோலைகளில் குயில்கள் கூவுகின்றன. அழகிய மயில்கள் குதூகலித்து ஆடுகின்றன. வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. பசுங்கிளிகள் கிரீச்சிடுவதை, “ சொல் துதிக்க” என்று சொல்வது அழகிய வருணனை. இப்படிப்பட்ட தலத்தில் வசிப்போரும் பெருமை உடையவர்களாகத்தானே இருக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் அமிர்தகலச நாதரைத் தொழுது , தோத்திரம் சொல்லி, நெக்குருகி நின்று கசிந்த மனத்தவர்களாகத் திகழ்கிறார்களாம் அத்தலத்து அன்பர்கள். இப்படிச் சொல்லும் தேனினும் இனிய தேவாரத்தை இப்போது காண்போம்:

மால் அயனும் காண்பரிய மால் எரியாய் நிமிர்ந்தோன்
வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் ; மொய்த்து எழுந்த
வேலை விடம் உண்ட மணிகண்டன் விடை ஊரும்   
விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில்
சோலை மலி குயில் கூவக் கோல மயில் ஆலச்
சுரும்பொடு வண்டு இசை முரலப் பசுங்கிளி சொல் துதிக்கக்
காலையிலும் மாலையிலும் கடவுள் அடிபணிந்து
கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே .


இத்தலத்து இறைவரைத் தரிசித்து, இப்பாடலைப் பாடிக் கொண்டிருக்கும்போது, குயிலும்,மயிலும்,கிளியும் குலாவிய ஊர் இப்படி நிசப்தமாக இருக்கிறதே என்று ஏங்கியபோது மதிலை ஒட்டிய மரங்களிளிலிருந்து கிளிகள் எழுப்பிய ஓசை கேட்டவுடன் சிலிர்ப்பு ஏற்பட்டது. ஆம்! கிளிகள் இன்னமும் சொல் துதித்துக் கொண்டுதான் இருக்கின்றன. நாம் தான் கசிந்த மனத்தவர்களாக இல்லை.             

Monday, January 13, 2014

திருவடிப்பெருமை

திருவெம்பாவையின் நிறைவுப்பாடல் சிவபெருமானது திருவடிகளைப் போற்றுவதாக மட்டுமே அமைந்துள்ளது. அப்பாத மலர்களே ஆதியும் அந்தமும் ஆவன. அவையே ஐந்தொழில்களுக்கும் ஆதாரமாக விளங்குவன. அத்திருவடிகளைப் பாதமலர் என்றும், செந்தளிர்கள் என்றும் பொற்பாதம் என்றும் பூங்கழல்கள் என்றும் இணையடிகள் என்றும் புண்டரீகம் என்றும் பொன்மலர்கள் என்றும்  போற்றித் துதிக்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்.

இறைவனது திருவடிகளைத் தாமரையாக உருவகிப்பது வழக்கம். இறைவனோ பவளம்போன்றும் செம்பொன் போன்றும் ஒளிருபவன். தாமரையானது கதிரவனைக் கண்டால்தான் மலரும். ஆனால் இப்பாத தாமரையோ எப்போதும் என்றென்றும் மலர்ந்து விளங்குவது. ஆயிரம் தாமரைகள் சேர்ந்தது போல ஒளி வீசுவது. மணமும் வீசுவது. ஆம்! இயற்கையாகவே அவை மணம் வீசுபவை.எல்லா வகை மலர்களுக்கும்  மணம் கொடுப்பவனும்,மலரெனவே நிற்பவனும் அவனே. அதைத்தான் அப்பரும்,   “வாச மலர் எல்லாம் ஆனாய் நீயே” என்றும் ,” நறு மலராய் நாறு மலர்ச் சேவடி” என்றும் அருளினார். பெருமானது பாத மலர்களை மட்டும் தாமரையாக உருவகிப்பதில் திருப்தி அடையாத மணிவாசகர் , அவனது திருவுருவம் முழுவதுமே தாமரை போன்றது. அதிலும் தாமரைக் காடு போன்றது என்கிறார்.  “செந்தாமரைக்காடு அனைய மேனித் தனிச்சுடரே” என்பது திருவாசகம்.

திருநாவுக்கரசரது தேவாரத்திருப்பதிகங்களில் திருவடிச் சிறப்பைப் பேசுபவனவாகத் திருவதிகை, திரு இன்னம்பர், திருவையாறு,திருமாற்பேறு ஆகிய தலங்களின் மீது பாடல்கள் அமைந்துள்ளன. அவை அனைத்தும் ஒப்பற்ற பாடல்கள். நெஞ்சத்தை நெகிழ வைப்பவை. நித்திய பாராயணத்திற்கு உரியவை. அப்பேசற்கு அரிய திருவடிகளிடம் நம்மை ஆட்படுத்துபவை
.
பாம்பணையில் துயிலும் மாலும், நான்முகனும் சிந்திப்பரிய திருவடிகள் அவை. வராக வடிவெடுத்துப் பலகாலம் அகழ்ந்து சென்றும் சிவஜோதியின் பாதமலர்களைக்  காணமாட்டாமல் திருவாரூர்த் தியாகேசப்பெருமானைத் தியானித்தவாறே தமது மார்பில் அவனது அஜபா நடனத்தை ஏற்றுக் களிப்பவர் திருமால். அதோடு அமையாது, அம்மலரடிகளைச் சிந்தித்துப் போற்றுவதை, நாவுக்கரசர்,   “அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி” என்கிறார். போற்றுதல், வணங்குதல் , வழிபடுதல் போன்ற தொடர்களைக் காட்டிலும் சிறந்தது “அரற்றுதல்” என்ற இச்சொல் ஓலமிட்டு அலறுகிறானாம் திருமால். இப்படிச் சொல்கிறார் மாணிக்க வாசகர்: “மாலும ஓலமிட்டு அலறும் அம்மலர்க்கே மரக்கணேனையும் வந்திடப்பணியாய்”.என்பது அவரது வாக்கு.

அத்திருவடிகள் அண்மையில் உள்ளவை அல்ல. அதே சமயம் தூரத்தே உள்ளனவும் அல்ல. “சேயாய் நணியானே என்று சிவபுராணம் கூறுவதுபோல், அப்பரும், “ அணியனவும் சேயனவும் அல்லா அடி” என்றார். அவற்றை எப்படி வருணிப்பது? எவ்வாறு அளக்கத்தான் முடியும்? அவை ” சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து” நிற்பதோடு, “கணக்கு வழக்கைக் கடந்து” நிற்பவை அல்லவா? ஆகவே, “ அரை மாத்திரையில் அடங்கும் அடி என்ற அப்பர் பெருமான் “ அகலம்  அளக்கிற்பார் இல்லா அடி” என்று அருளினார்.  அப்படிப்பட்ட பாத கமலங்கள் அடியார்களுக்கு அமுதமாக விளங்குபவை. மருந்தாகிப் பிணி தீர்க்க வல்லவை. மந்திரமும் தந்திரமும் ஆனவை. பற்றுக்களை விட்டவர்க்கும் வேறு பற்றுக்கோடு இல்லாதவர்களுக்கும் ஒரே கதி என நிற்பவை. நிந்தனை செய்பவர்களது பொய் உரைகள் சென்று சேராதவை. தன்னைச் சரணம் என்று சார்ந்த மார்க்கண்டேயனைக் காப்பதற்காகக் காலனையும் உதைத்தவை.

அப்படியானால் அச்சேவடிகள் யார்க்கு எளியவை ? அப்பர் இதற்கும் விடை அருளுவார். “ சீலத்தராகித் தொடர்ந்து விடாத தொண்டர்க்கு அணியன” என்பதே அது. அத்தொண்டர்கள் பெறும் பேறு எத்தகையது தெரியுமா? உண்மைத் தொண்டர் வேண்டும் பிறவாமை ஆகிய வரத்தைக் கொடுப்பதேயாகும். இதைத்தான் குருநாதர், “ ஏழேழ் பிறப்பும் அறுத்தன” என்று ஐயாறப்பரின் திருவடிப்பெருமையைப் பேசுகிறார். அதோடு மட்டும் அல்ல. தன்னைப் போற்றும் குருடனையும் பாழ் நரகக் குழியிலிருந்து கை கொடுத்து ஏற்றி உய்விக்கும் பரம கருணாமூர்த்தியாகப் பெருமான் விளங்குவதை,

“குருடரும் தம்மைப் பரவக் கொடு நரகக் குழி நின்று
அருள் தரு கை கொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே.”
என்பன இவ்வினிய அடிகள்..

அடியார்களது அர்ச்சனைகள் சென்றடையும் இடம் பெருமானது பாதங்கள் அல்லவா? அப்பாதங்கள், போலிகளது அர்ச்சனைகளையும் கூடத்தான் ஏற்றுக்கொள்கின்றன. அது, அவன் அனைவரையும் மன்னித்து ஏற்கும் பெரும்கருணையை உணர்த்துவதாக உள்ளது. உற்றார் யாரும் இல்லாதவர்க்கும்  உறுதுணையாக இருப்பதும், அற்றார்களுக்கு அரும் பொருளாவதும் சிவபிரானது பாதங்களே என்று அப்பர் சுவாமிகள் நமக்கு உபதேசிக்கிறார். துயரம் வந்து நம்மை வெய்யில் சுடுவதுபோன்று சூழ்ந்துகொண்டால் , நிழலாக வந்து நம்மைக் காப்பன அத்திருவடிகளே. இப்படி எல்லாப்பொருளாக இருந்து திகழும் ஐயாறன் அடித்தலத்தை அப்பரது திருவாக்கால் இங்கே காணலாம்:

இப்பாடல், இறைவனே எல்லாமாகி நிற்பதை அறிவித்து அவனது திருவடிகளே எல்லாவற்றிக்கும் பிறப்பிடம் ஆவதை,

ஓதிய ஞானமும் ஞானப்பொருளும் ஒலி சிறந்த
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும்
சோதி அம்சுடர் ஞாயிறும் ஒப்பன தூ மதியோடு
ஆதியும் அந்தமும் ஆன ஐயாறன் அடித்தலமே.

என்று போற்றுகின்றார் திருநாவுக்கரசர்.  
    

இத்தனைச் சிறப்பு வாய்ந்த திருவடிகள் தன் சிரத்தில் எழுந்தருளவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார் அப்பரடிகள். வேண்டுவார் வேண்டுவதே ஈயும் வள்ளலான சிவ பெருமான் அவரைத் திருநல்லூருக்கு வரவழைத்துத் தன் பாதமலர் சூட்டினான். உவகை மேலிட்ட நாவுக்கரசு சுவாமிகள், “திருவடி என் தலைமேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே” எனப் பாடுகிறார். கனவிலும் இந்தப்பேற்றை அடையத் தவம் செய்யாத நாம், நல்லூர் சென்று அக்கோவிலில் நம் சிரத்தில் சார்த்தப்பெறும் திருவடிகளைச் சூடவாவது தவம் செய்ய வேண்டாமா?