Thursday, May 8, 2014

சிந்தையும் சிவமும்

காலை வேளைகளில் பலர் அருகிலுள்ள பூங்காக்களிலும், சாலைகளிலும் நடைப் பயிற்சி மேற்கொள்வதைப் பார்க்கிறோம். டாக்டர் சொல்லியிருப்பார்- "  Conscious walk" முக்கியம் என்று. அப்படியானால் , நடப்பதை மட்டுமே அல்லவா கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்? ஆனால் பலர்  நண்பர்களோடு அளவளாவிக்கொண்டும், பாட்டுக் கேட்டுக் கொண்டும், அக்கம்பக்கத்தில் வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டும் நடந்து கொண்டிருப்பர். சுருக்கமாகச் சொன்னால் , கண்கள் நடைபாதையை அடையாளம் காட்டியதைக் கொண்டு,கால்கள் அவ்வழியில் செல்கின்றன. வாயோ வம்பளந்து கொண்டிக்கிறது. காதோ பாட்டுக் கேட்பதில் லயித்திருக்கிறது. ஆகவே, மனம்,மெய்(உடல்),வாக்கு என்ற மூன்றும் வெவ்வேறு காரியங்களை அப்போது செய்து கொண்டிருக்கின்றன.
மனம் என்பதை இங்கு சிந்தனை என்று எடுத்துக்கொள்ளலாம். மனம், மெய், வாக்கு ஆகிய மூன்றையும் பரமேச்வரனிடத்தில் அர்ப்பணித்து விடுவார்கள் மகான்கள். " ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள" என்று சிதம்பரத்தில் நடராஜப் பெருமானைத் தரிசித்த சுந்தர மூர்த்தி சுவாமிகளின் நிலையைக் காட்டுகிறார் தெய்வச் சேக்கிழார் பெருமான். கண்டவுடன் சிந்தையில் அது ஒன்றே மேலோங்கியிருக்கிறது.  கண்களில் ஆனந்த நீர் அருவியாகப் பொழிகிறது. மாறிலாத மகிழ்ச்சி மலர்கிறது. நிறைவாக, வாய் அப்பெருமானைத் துதிக்கிறது. இதைத் தவிர வேறு எதையும் பார்க்காத,,கேட்காத,பேசாத  பேரின்ப நிலை!

சிந்தையில் சிவத்தைத் தவிரப்  பிறிதொன்றை நினையாத மாணிக்கவாசகரது அனுபவத்தை அவரது திருவாசகப் பாடல் நமக்குக் காட்டுகிறது. அவரது சிந்தனை சிவபெருமானிடம் லயப்படுகிறது. கண்களால் அக்கண் பெற்ற பயனாகப் பெருமானது பாத மலர்களையே காண்கிறார். வாயால் வந்திப்பதும் அம்மலர்ப்பாதங்களைத்தான். இவ்வாறு ஐம்புலன்களை  அவனுக்கே அர்ப்பணம் செய்வது என்பது எளிதான காரியமா? அந்தப் பக்குவமும் இறைவன் தந்தால்  அல்லவா சாத்தியம் ஆகமுடியும்!  அதை எவ்வாறு அருளுகிறான் என்று பார்ப்போமா?  இந்த ஊன் உடம்பின் உள் புகுந்து எலும்பெல்லாம் உருக்கி.எலும்புத் துவாரங்கள் தோறும் உலப்பிலாத ஆனந்தத் தேனைச் சொரிந்து கருணையினால் ஆட்கொள்கிறான்.

மாறிலாத மாப்பெருங் கருணையாளனாகிய இறைவனோ மலை போன்றவன். கடல் போன்றவன். சிவந்த மேனியன். அந்த செம்மை நிறத்தை எவ்வாறு வருணிப்பது?  செந்தாமரை மலருக்கு ஒப்பிட்டால் அதுவும் மிகக் குறைவாகத் தோன்றுகிறது. செந்தாமரை மலர்கள் மலர்ந்த காடு போன்றது அம்மலர்த் திருமேனி என்று சொன்னால் ஓரளவு ஆறுதல் தருகிறது. இப்படிப்பட்ட ஒப்பற்றவன் ஒன்றும் பற்றாத அடியேனை ஒரு பொருட்டாக ஆட்கொண்டு தன்னையே தந்ததை  எவ்வாறு புகழ்வேன் என்று பாடுகிறார் மாணிக்க வாசகர்.

சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன்
  கண்ணிணை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி      
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்
 மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர                
வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை
 மாலமுதப்பெருங்கடலே மலையே உன்னைத்
தந்தனை செந்தாமரைக் காடு அனைய மேனித்
 தனிச்சுடரே இரண்டும் இலித் தனியனேற்கே..

என்பது அம்மணிவாசகம்.
    

No comments:

Post a Comment