Sunday, April 26, 2015

காஞ்சிப் பெரியவர்களும் தேவாரமும் - 2

 காஞ்சி மாமுனிவர்,  சிவிகைக்குப் பின்னால் வந்த   ஒதுவாமூர்த்திகளைக்  காஞ்சி ஏகம்பம்,காஞ்சி மேல்தளி, விருத்தாசலம் ஆகிய தலங்களின் மீது அமைந்த தேவாரப் பாடல்களைப்  பாடச் சொல்லிக் கேட்டதில் முதலாவதாகக் கச்சி ஏகம்பத்தின் மீது பாடிய பாடலையும் அதன் பொருளையும் நம் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் பார்த்தோம். இனி, இரண்டாவதாகக் கச்சி மேற்றளி என்னும் தலத்தின் மீது அமைந்த பாடல் ஒன்றைக் காண்போம்.  

காஞ்சிபுரத்தின் மேற்குத் திசையில் அமைந்துள்ள தலம் மேற்றளி என்ற பாடல் பெற்ற தலம். இங்கு,சிவசாரூபம் பெற வேண்டித் திருமால் சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு. இங்கு தரிசிக்க வந்த ஞானசம்பந்தர் பதிகம் பாடியபோது அதைக் கேட்டுத் திருமால் உருகியதால் சுவாமிக்கு ஓத உருகீசர் என்ற பெயர் உண்டு. அதைத் தவிரவும் மேற்கு பார்த்த சிவ சன்னதியும் கோயிலுக்குள் இருக்கிறது.இத்தலம், அப்பராலும் சுந்தரராலும் பாடப்பெற்றது. சம்பந்தரின் திருப்பதிகம் கிடைக்கும் பேற்றை நாம்  பெறவில்லை. இக் கோயிலை நோக்கியவாறு சம்பந்தருக்கென்று தனிக் கோயில் இருக்கிறது.

காஞ்சிப் பெரியவரிடம் ஓதுவாமூர்த்திகள் பாடிய இத்தலப் பாடல் எது என்று தெரியாததால்,அத்தலப் பதிகத்திலிருந்து ஒரு பாடலின் பொருளையாவது உணர சிவபரம்பொருள் அருளுவானாக.

தருமமே வடிவெனக் கொண்டவனே செல்வன்  என்று அழைக்க முற்றிலும் தகுதியானவன். செல்வத்தை உடையவன் என்று பொருள் காண்பதை விட இவ்வாறு பொருள் காண முற்படுவது பொருத்தமாகவும் இருக்கிறது.  பொய்யிலியாகவும் மெய்யர்  மெய்யனாகவும் விளங்குவதே பெருமானது தனி சிறப்பு. " செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே " என்ற சம்பந்தர் வாக்கையும் நோக்கலாம். எனவே தருமமும் செல்வமும் பிரிக்க முடியாதவைகள் ஆகி விடுகின்றன. செல்வனது பாகம் பிரியா நாயகி செல்வி எனப்படுகிறாள். அவளை " அறப் பெரும் செல்வி " என்றுதானே நூல்கள் போற்றுகின்றன !  அவளே காஞ்சியில் கம்பை ஆற்று மணலால் மாவடியின் கீழ் லிங்கம் அமைத்து ஆகம வழியில் நின்று சிவபூஜை செய்கிறாள்.  சேக்கிழாரும் அவளைப்  " பெருந் தவக் கொழுந்து "  எனப்போற்றுவார். அப்படிப்பட்ட செல்வியைப் பாகமாகக் கொண்ட மேற்றளி ஈசனை அப்பர் பெருமான்

" செல்வியைப் பாகம் கொண்டார் "  என்று நமக்குக் காட்டுகின்றார்.
முருகனுக்குச் சேந்தன் என்ற பெயர் உண்டு. " சேந்தனைக் கந்தனை செங்கோட்டு வெற்பனை " என்று கந்தர் அலங்காரம் கந்தவேளின் பெயர்களை அழகாகக் காட்டுகிறது. " சேந்தர் தாதை " என்று முருகனின் தந்தையாகச் சிவபெருமானை வருணிக்கப்படுகிறது. இதையே அப்பரும், "சேந்தனை மகனாக் கொண்டார் "என்கிறார்.

கொன்றை,ஊமத்தை,தும்பை ஆத்தி,எருக்கு போன்ற மணமில்லாத மலர்களை ஏற்கும் பெருமான், அடியார்கள் அன்போடு நகம் தேயும்படி விடியலில் கொய்த  மணம் மிக்க மலர்களையும் ஏற்கிறான். மல்லிகையும் முல்லையும் அவற்றுள் சில . எனினும் அவன் கொன்றை சூடுவதில் விருப்பம் உள்ளவன். " கொன்றை நயந்தவனே " என்று பாடுகிறார் சுந்தர மூர்த்தி சுவாமிகள்.  திருநாவுக்கரசரும், " மல்லிகைக் கண்ணியோடு  மாமலர்க் கொன்றை சூடி " என்பதால் மல்லிகை மாலையையும் ,சரக் கொன்றையையும் பெருமான் அணிகிறான் என்பது கருத்து.

நாலந்தா,காஞ்சி போன்ற இடங்களில் பெரிய பல்கலைக் கழகங்கள் இருந்தன என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கடல் போன்றது கல்வி என்று சொன்னாலும், கல்விக் கடலைக் கரை இல்லாத ஒன்றாக வருணிப்பது நயம் மிக்கது. கடலின் ஆழத்தைக் கணிக்கலாம். கல்விக் கடலோ ஆழம் அறியப்படாதது. ஒவ்வொரு முறையும் புதுப்புது முத்துக்களையும், பவழங்களையும். அதுவரை  கண்டிராதவற்றையும் கிடைக்கச் செய்வது. உலகமாதாவான காமாக்ஷி தேவி அறம் புரியும் இத்தலம்  எல்லாக் கலைகளுக்கும் இருப்பிடமாகத் திகழ்வதில் வியப்பு ஏது?  " கல்வியைக் கரை இலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால் " என்ற வரி இதனைத் தெரிவிக்கிறது.

இரவில் காட்டில் ஆடுவதையும் பெருமான் விரும்புகிறான். " இரவாடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே " என்கிறார் நாவரசர்.  இரவு என்பதை " எல்லி " என்றும் குறிப்பதுண்டு.இவ்வாறு எல்லி  ஆட்டு உகந்த பிரான் செம்மேனியன். தீவண்ணன். ஆகவே ஆகவே துன்னிருள் அகன்று சோதி புலப்படுகிறது. அகஇருளையும் புற  இருளையும் நீக்க வல்ல பெருமான் அவ்வாறு ஆடுவதால் இரவும் விளக்கம் பெறுகிறது. எனவே, இப்பாடலில்  வரும்      " எல்லியை  விளங்க நின்றார் "   என்பது நோக்கி மகிழத்தக்கது. இப்போது பாடலை முழுவதுமாகக் காண்போம்:

 செல்வியைப் பாகங் கொண்டார்  சேந்தனை மகனாக் கொண்டார்                            
 மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக்                                                
 கல்வியைக் கரையி லாத  காஞ்சிமா நகர்தன் னுள்ளால்                                              
 எல்லியை விளங்க நின்றார் இலங்குமேற் றளிய னாரே.

கச்சி மேற்றளி என்னும் இத்தலம், காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியான பிள்ளையார் பாளையத்தில் உள்ளது.

Wednesday, April 22, 2015

காஞ்சிப் பெரியவர்களும் தேவாரமும் - I

காஞ்சி காமகோடிப்  பெரியவர்களுக்குத் தேவாரத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. ஒதுவாமூர்த்திகளோ அல்லது தேவாரத்தில் ஈடுபாடு உடையவர்களோ தரிசனத்திற்காகச் செல்லும்போதெல்லாம் அவர்களைக் கொண்டு தேவாரம் சொல்லச் சொல்லிக் கேட்பது வழக்கம். அதற்குப்  பிறகு அப்பாடலுக்குப் பெரியவர்கள் தரும் விளக்கத்தை வேறு எங்கும் காண இயலாது.சில சமயங்களில், தேவாரத்தில் இருந்து ஒரு வாக்கியத்தைக் கூறி அதை யார் பாடியது என்று கேட்பார்கள்.

திருவீழிமிழலை,சீர்காழி போன்ற தலப் பதிகங்களில் அவர்களுக்கு இருந்த ஈடுபாட்டைப் பல முறை அனுபவித்தும், கேட்டும் மகிழ்ந்ததுண்டு. ஒருமுறை, "திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கே  சேர்கின்றாரே" என்ற வரியைக் கூறி அது யார் பாடியது என்று கேட்டார்கள்.  இன்னொரு சமயம்,        " சந்தோக சாமம் ஓதும் வாயானை " என்ற பகுதியைக் குறிப்பிட்டுக் கேட்டார்கள்.  சுவாமிக்கு இளநீர் அபிஷேகம் பற்றிய குறிப்பு எங்கே வருகிறது தெரியுமா என்ற கேள்வி தொடர்ந்தது. இவை எல்லாம் அப்பர் சுவாமிகள் அருளிய திருவீழிமிழலைப் பதிகங்களில் காணப்படுபவை. அப்பர் சுவாமிகள் பாடிய திருத்தாண்டகப் பாடல்களைப்  பாடச் சொல்லி மிகவும் விரும்பிக்கேட்பதும் வழக்கம்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் திருவாலங்காட்டில் நடைபெற்ற நவராத்திரியின் போது தேவாரம் முழுவதும் பாராயணம் செய்யச் சொல்லி உத்தரவு ஆயிற்று. ஒன்பது தினங்களிலேயே முடிந்து விட்டதால் எஞ்சியுள்ள பத்தாவது தினத்தில் திருவாசகப் பாராயணமும் செய்யச் சொன்னார்கள். மூவர் தேவாரத்தையும் ஒரே புத்தகமாக இருநூறு ரூபாய்க்கு வெளியிட்டபோது, அதன் விலையை நூறு ரூபாய்க்கு ஒதுவாமூர்த்திகளுக்குக் கொடுக்கும்படி கருணை பாலித்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்..

அண்மையில் ஒரு ஓதுவாமூர்த்திகள் கூறிய தகவலைக் படிக்க  நேரிட்டது. பெரியவரின் சிவிகைக்குப் பின் சென்று  கொண்டிருந்த ஒதுவாமூர்த்திகளை அழைத்து , காஞ்சியில் உள்ள ஏகம்பநாதர் மீதும்,கச்சி மேற்றளியின் மீதும்,திருமுதுகுன்றம் என்ற விருத்தாசலத்தின் மீதும் அமைந்துள்ள பாடல்களைப் பாடுமாறு சொன்னவுடன் ஓதுவாரும் அவ்வாறே பாடி, பெரியவரின் ஆசியைப் பெற்றார் என்பதே அத்தகவல். இம்மூன்று பாடல்களையும் விளக்கி உதவுமாறு நமது ஆப்த நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்கி, திருவருளும் குருவருளும் துணை நிற்க ,அவற்றை இங்கே தர முயல்கின்றோம்.

 நமது துயரங்கள் தீர ஒரு வழியை அப்பர் பெருமான் உபதேசிக்கும் பாடலை முதலாவதாகக் காண்போம். துயரங்களுக்கு மூலகாரணம் பண்டு நாம் செய்த வினைகள் என்பதால் அவற்றிலிருந்து விடுபட்டால்தான் மீண்டும் வினைகள் செய்ய ஏதுவான பிறப்பை வெல்லலாம். அப்படியானால் அதை நாமே நீக்கிக் கொள்ள முடியுமா? ஒருக்காலும் முடியாது என்று திட்ட வட்டமாக அறிவிக்கிறது சைவ சித்தாந்தம். வினை நீக்கம் பெறும் பக்குவம் வரும்போது திருவருள் தானே முன்னின்று வினை நீக்கம் செய்து தூய்மை செய்யும். அப்போது உயிர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். இறைவனது திருவடியே துணை எனக் கொண்டு அதனைக் காண்டலே கருத்தாகி இருக்க வேண்டும். ஒருக்கால் பழவினை நல்லதாகவே இருந்து விட்டால் வினை நீக்கம் எளிதாகி விடுகிறது அல்லவா? அப்படிப்பட்டவர்களுக்கு ஆலய தரிசனம், குருவருள்,அடியவர் இணக்கம், ஆகியவை கிடைப்பது நல்வினைப்பயனால்தான். எனவே அப்பெருமானை மீண்டும் மீண்டும் கண்டு கண்டு, காதற் கசிவோடு களிக்க வேண்டும். அவன் சேவடிக்கீழ் நின்று இறுமாந்திருக்கும் பெருவாழ்வு பெற வேண்டும். இதற்கு என்ன புண்ணியம் செய்தோமோ என்று எண்ணி எண்ணி மகிழ்ந்து திருவருளைப் போற்ற வேண்டும். இதைத்தான் அப்பர் பெருமான் இப்பாடலில்,
" பண்டு செய்த பழ வினையின் பயன்
 கண்டும் கண்டும் களித்தி காண் நெஞ்சமே .."    எனப்பாடுகிறார்.

எனவே ஏகம்பநாதனுக்குத் தொண்டனாகத் திரிந்து பணி செய்ய வேண்டும். அப்பெருமானது ஜடை ,செஞ்சடையாக விளங்குகிறது. (அருண ஜடேச்வரர் என்று திருப்பனந்தாளில் சுவாமிக்குப் பெயர்.) அந்த ஜடாமுடியில் வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. அதாவது இயற்கையிலேயே மணம் வீசும் ஜடாபாரம் என்று  பொருள் கொள்ளலாம். ஏனென்றால் அவன் சூடும் மலர்கள் அத்துணை மணம் வாய்ந்தவை அல்ல. ஊமத்தை, தும்பை,ஆத்தி மலர்களை ஏற்றுக்கொண்டு மணம் வீசும் மலர்களை நமக்கு வழங்கிய தியாகராஜ வள்ளல் அவன்.   அச்சடையே மணம் வாய்ந்ததாக இருக்கும்போது மலர்களைத்தேடிப் போக வேண்டிய அவசியம் வண்டுகளுக்கு ஏது?  வண்டுகள் இறைவனை நாடுவதைப்போலத் தொண்டர்கள் அவனது திருவடிக் கமலங்களை நாடிப் பற்றவேண்டும். கண்டு கண்டு களிப்படைய வேண்டும். அதைக் குருமுகமாகக் காண்பதில் எத்தனை ஆனந்தம் ஏற்படுகிறது ! இதோ அப்பாடல்:

 பண்டு செய்த பழ வினையின் பயன்
 கண்டும் கண்டும் களித்தி காண் நெஞ்சமே
 வண்டுலாமலர்ச்  செஞ்சடை ஏகம்பன்
தொண்டனாய்த்  திரியாய் துயர் தீரவே.

என்பது அந்த அற்புதமான தேவாரப் பாடல்.
( தொடரும் )     

Tuesday, April 14, 2015

திருப்புகலூர்க் காட்சிகள்

திருப்புகலூர் கோயிலும் அகழியும் 
திருப்புகலூர் என்பது தேவார மூவர்களாலும் பாடல் பெற்ற தலம். மயிலாடுதுறையிலிருந்து சன்னாநல்லூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் வழியில் உள்ளது. இங்குதான் அப்பர் சுவாமிகள் சித்தரை சதயத்தன்று சிவ முக்தி அடைந்தார். இங்கு  அக்னி பகவான் பூஜித்ததால் சுவாமி அக்னீஸ்வரர் எனப்படுகிறார். இந்த சன்னதியைத் தவிரவும் மற்றோர் சிவசன்னதி இக் கோயிலுக்குள் உண்டு. அங்கு சுவாமிக்கு வர்த்தமாநீசுவரர் என்று பெயர் வழங்கப்படுகிறது. இம்மூர்த்தியின் மீதும் சம்பந்தர் அருளிய பதிகம் இருக்கிறது. இந்த வர்த்தமாநீசுவர சுவாமியை நாள்தோறும் பல்வேறு மலர்களாலும் மாலைகளாலும் ஆராதித்து வந்தவர் முருக நாயனார் என்பவர். இவரும் அறுபத்து மூவருள் ஒருவர்.

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருப்புகலூருக்கு வந்தபோது அவர்கள் முருக நாயனாரது இல்லத்தில் தங்கியிருந்ததாகப் பெரிய புராணம் கூறும். அவர்களது வருகையைப் பற்றிக் கேள்வியுற்றவுடன் ,  அருகிலுள்ள திருச்சாத்த மங்கை என்ற தலத்தில் வசித்து வந்த திருநீல நக்க நாயனாரும், திருச்செங்காட்டங்குடியில் வசித்த சிறுத்தொண்ட நாயனாரும் திருப்புகலூரை வந்தடைந்து அவர்களை வணங்கி அளவளாவி மகிழ்ந்தனர். சம்பந்தருடன் யாத்திரையில் கூட வரும் திருநீலகண்டப் பாணனாரும், அவரது மனைவியாரான மதங்க சூடாமணியாரும் அப்போது உடன் இருந்தனர். இவ்வாறு, பல நாயன்மார்கள் சந்தித்த தலமாக விளங்குகிறது திருப்புகலூர்.

மலர் கொண்டு மகாதேவனை முருக நாயனார் அர்ச்சித்த சிறப்பைக் காட்ட வந்த சேக்கிழார் பெருமான், அந்த ஊரின் இயற்கை வருணனையை நயம் பட எடுத்துரைக்கும் பாங்கு அறிந்து மகிழத் தக்கது. அது சோலைகளும் பொய்கைகளும் சூழ்ந்த வளம்மிக்க ஊராக இன்றும் காட்சி அளிக்கிறது. கோயிலைச் சுற்றிலும் அகழி இருக்கிறது. அங்கு களங்கமில்லாதவைகளாகக் காட்சி அளிப்பவைகளுள்  நல்லவர்களது மனமும் ஒன்று. களங்கம் உடைய சந்திரன் , அரவு (பாம்பு) வந்து சூழும் போது மேலும் களங்கமாகத் தோற்றம் அளிப்பான் அல்லவா? ஆனால் இங்கோ வெள்ளை வெளேரென்று காட்சி அளிக்கிறானாம். அது தூய வெண்ணீற்றை நினைவு படுத்துவது போல் இருக்கிறதாம். வெண்ணீறு களங்கம் இல்லாதது. " சுத்தமதாவது நீறு " என்று  ஞான சம்பந்தரும்  பாடுவார்.    " பால் வெள்ளை நீறு" என்றும் சொல்வார்கள். அந்த ஒளியில் அங்கு இரவும் பகல் போல் தோற்றமளிக்கிறதாம். அது மட்டுமல்ல. பூக்களில் மகரந்தம் உண்ட வண்டுகளும் களங்கமற்றவை என்கிறார் சேக்கிழார் பெருமான்.

கதிரவன் உதயம் ஆனவுடன் பொய்கைகளில் இருக்கும் தாமரை மொட்டுக்கள் மலரும். அப்போது அவற்றோடு ஒட்டிக் கொண்டிருந்த தண்ணீர் விடுபட்டாலும் ஈரத்தன்மை சிறிது நேரம் இருக்கும். மலரும் மகிழ்ச்சியில் அவை ஆனந்தக் கண்ணீர் அரும்புவதுபோல் இருக்கும் தானே ! ஆனால் அதைக்காட்டிலும் கண்ணீர் வடிப்பன எவை தெரியுமா ? தேவாதிதேவனாகிய சிவபெருமானின் புகழ் பாடும் அமுத கானங்களை ( பாடல்களை ) க் கேட்டு நெக்குருகும் பக்தர்களது முகமாகிய தாமரைகளின் கண்களே.அவற்றில்  இருந்து பெருகும் ஆனந்த நீர் அரும்பும் என்கிறது பெரிய புராணம்.

வண்டு பாடப் புனல் தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன

கொண்ட வாச முகை அவிழ்ந்த குளிர் பங்கயங்களே அல்ல;                                                                                                  
அண்டர் பெருமான் திருப்பாட்டின் அமுதம் பெருகச் செவி மடுக்கும்                    

 தொண்டர் வதன பங்கயமும் துளித்த கண்ணீர் அரும்புமால்.                                                                                                              
என்பது அந்த நயம் மிக்க பாடல்.

பொய்கையில் மலரும் தாமரையும் நீர் துளிக்கும். தொண்டர்களின் முகமாகிய தாமரையும் பெருமான் புகழ் கேட்ட ஆனந்தத்தில் கண்ணீர்  பெருக்கும். திருப்புகலூரிலோ  பங்கயங்கள் நீர் அரும்பாமல், தொண்டர் முகத்
தாமரைகளே கண்ணீர் பெருக்குவன என்பது மிக்க நயம் வாய்ந்தது.

இத் தெய்வத்தமிழைப் படிக்கும் நமக்கும் ஆனந்த நீர் அருவி கண்களிலிருந்து பெருகவேண்டும். அத்துணைச் சிறப்பு வாய்ந்தது தெய்வச் சேக்கிழாரது வாக்கு.