Monday, January 11, 2016

துறவி வைத்தார்

நல்லூரில் அப்பர் திருவடி தீக்ஷை பெறுதல் 
" ஊனாகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வும் ஆகிப் பிற அனைத்தும் நீயாய் நின்றாய் "  என்று சிவபரம் பொருளைப் பாடுகிறார் திருநாவுக்கரசு நாயனார். அவ்வாறு " ஊன் கருவின் உள் நின்ற சோதி " யாகத் திகழ்பவன் இறைவன். இப்படிப் புலால் உடம்பில் புகுந்து நின்று கருவைத் திருத்திப் பின்னர் நல்லனவும் தீயனவும் காட்டுபவனாகவும் பெருமான் விளங்குகிறான். உயிர்களைப் படைத்து அவைகளின் வினைப்பயனுக்கேற்ப அருள் செய்து நிறைவாக முத்தியும் வழங்குகிறான்.

பிறவிகள் ஏழு என்பர். " ஏழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன் " என்பது அப்பர் வாக்கு. பிறப்பே ஒரு பிணி போன்றது. உலகியல் பந்தத்தாலும் ஆசைகளாலும் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கச் செய்வதால் அதைத் தீராப் பிணி  என்று கூட சொல்லலாம். இதனைப் " பவ ரோகம் " என்று வடமொழியில் கூறுவார். அந்த நோய்க்கு மருத்துவன் ஒருவன் தான். அவன் தான் வைத்தியர்களுக்கெல்லாம் பிரதம வைத்திய நாதனாகிய பரமேசுவரன்.  அவனைச் சரண் அடைந்துவிட்டால் நம்மைப் பாழ் நரகக் குழியில் விழ விடமாட்டான். சிவலோகத்தில் இருத்துவான் என்கிறார் அப்பர் பெருமான்.

அவர் நல்லூரில் அருளிய திருத்தாண்டகத்தில் ,
" உற்றுலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் "  என ஒரு பாடல் துவங்குகிறது. சிவபிரான்  உயிர்களைப் படைப்பதோடு நின்றுவிடாமல் பரம கருணையுடன் அவை கடைத்தேறும் வழிகளையும் அமைத்துத் தந்தார் என்கிறார். வழிகள் அநேகம் இருந்தாலும் மீண்டு வாரா வழி அருள்பவன்  என்றபடி மறுபடியும் உலகில் பிறவாமல் நம்மை இட்டுச் செல்லும் வழியே கதி எனப்படும். நமக்கு ஒரே கதி சிவகதி என்பதால் இவ்விதம் கூறினார்.              " உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் "  என்பது அவரது வாக்கு. கதி என்று கூறாமல் கதிகள் என்று பன்மையில் கூறினாரே என ஐயம் எழலாம். சிவகதி என்ற ஒரே கதியை அடையப் பல மார்க்கங்களை அமைத்துத் தந்தார் என்பதே அதன் உட்பொருள். தேவர்களையும் தெய்வ நான் மறைகளையும் தோற்றுவித்து வேத வேள்விகளால்    தேவர்களையும் தேவ  நாயகனாகிய தன்னையும் ஆராதிப்பதன் மூலம் சிவ கதி அடையச் செய்தார்.  
  "மற்று அமரர் கணம் வைத்தார்  அமரர் காணா  மறை வைத்தார் " என்பதால் தேவர்களுக்கும் அறிய மாட்டாத வேதங்கள் என்பது பொருள்  படும்.
தனது பிறைகள் தக்ஷ சாபத்தினால் தேய்ந்து உடற்பிணியோடு குன்றிய சந்திரனை எல்லாத் தேவர்களும் கைவிட்ட போது கயிலாய நாதனே அவனுக்கு அடைக்கலம் தந்து தனது சடை மேல் ஏற்று சந்திர சேகரன் ஆனான். எல்லா உயிர்களும் தஞ்சம் என அடைய வேண்டுவதும் போற்ற வேண்டியதும்,தியானிக்க வேண்டியதும் சிவபெருமான் ஒருவனே என்பது இதனால் அறியப்படும். "குறை மதியம் வளர வைத்தார் " என்ற அழகான வரிகள் இந்த அருட் செயலைப் புகழ்கின்றன.

காமக் குரோத,லோப மத ஆச்சர்யங்களைக் கடந்தால் ஒழிய பிறவியிலிருந்து விடுதலை பெற முடியாது. காலகாலனாகவும், காம நாசனாகவும் பெருமானே திகழ்கிறான். கோபத்தின் அடையாளமாகத் திகழ்ந்த துருவாச முனிவரும் தனது கோபம் நீங்கும்படித் திருக்களர் என்ற      தலத்தில் சிவ பூஜை செய்ததாகப் புராணம் கூறும். எனவே இக்குற்றங்கள் நீங்கும் வழியையும்  அப்பரமனே அமைத்துத் தருகிறான் என்கிறார் திருநாவுக்கரசர். "செற்ற மலி ஆர்வமொடு காம லோபம் சிறவாத நெறி வைத்தார்" என்பன அவ்வரிகள்.
" துறவி வைத்தார் " என்று அவர் கூறுவது மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது துறவறம் என்ற நெறியை அமைத்துத் தந்தார் என்று தோன்றினாலும். அவ்வழிக்கான நன்நெறிகளையும் அமைத்துத் தந்தார் என்றே கொள்ளவேண்டும். விபூதி- ருத்திராக்ஷம் போன்ற  புறச் சாதனங்களை அமைத்துத் தந்ததோடல்லாமல் தானே அவற்றை  ஏற்றது தன்னிகரற்ற சிறப்பாகும். " நீறு தாங்கிய திருநுதலான்" என்று இதைத் தேவாரம் குறிப்பிடுகிறது. துறவிக்கு புறச் சாதனமும் முக்கியம். ருத்ராக்ஷம் அணியாத துறவி சைவராகவோ அல்லது அத்வைதியாகவோ இருந்து என்ன  பயன்?  உலகிற்கு உதாரணமாக இருக்க வேண்டியவர்கள் இவற்றை ஒருபோதும் கை விடலாகாது. புற வேடத்தோடு நின்றுவிடாமல் மேற்கூறியபடி காமக் குரோத,லோப மத ஆச்சர்யங்களைக் கடந்தவராகத் துறவி விளங்கவேண்டும். 

தவம் செய்தவர்கள் சென்று அடையக்கூடிய தனது திருவடிகளை அப்பர் பெருமானது முடியில் நல்லூர்ப் பெருமான் வைத்தருளினார்  என்பதால் " நற்றவர் சேர் திருவடி என் தலைமேல் வைத்தார் நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே "  என்று அத்தாண்டகப் பாடல் நிறைவு பெறுகிறது. முழுப் பாடலையும் மீண்டும் தருகிறோம்:

உற்றுலவு பிணி உலகத்து எழுமை வைத்தார்
உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார்
மற்று அமரர் கணம் வைத்தார்  அமரர் காணா  மறை வைத்தார்
குறை மதியம் வளர வைத்தார்
செற்ற மலி ஆர்வமொடு காம லோபம் சிறவாத நெறி வைத்தார்
துறவி வைத்தார்
 நற்றவர் சேர் திருவடி என் தலைமேல் வைத்தார்
நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே
---- திருநாவுக்கரசர் தேவாரம் ( திருநல்லூர்* )

{* திருநல்லூர் என்ற தலம் கும்பகோணத்திலிருந்து தஞ்சை செல்லும் வழியிலுள்ள சுந்தர பெருமாள் கோயில் என்ற ஊருக்கு அண்மையில் உள்ளது.    அமர்நீதி நாயனார் அருள் பெற்ற தலம். }

No comments:

Post a Comment