Sunday, May 8, 2016

முத்தை வென்ற முறுவலாள்

பாகம் பெண் உருவாய் நின்ற கோலத்தைத் தனது தேவாரத் திருப்பதிகங்களில் ஞானசம்பந்தர் அனேக இடங்களில் போற்றிப் பாடியுள்ளார். அவ்வாறு பாடுகையில் அம்பிகையை அழகிய நாமங்களால் குறிப்பது நாம் அறிந்து மகிழத்தக்கது. " மலைச் செல்வி  பிரியா மேனி"  உடைய எம்பெருமானது பிராட்டியை, "  வேயுறு  தோளி " ,  " பந்து சேர் விரலாள்" , " காவியம்கண் மடவாள்" , " வாள் நுதல் மான் விழி மங்கை" , " பெண்ணின் நல்லாள்" , " வண்டார் குழல்  அரிவை "  " அங்கயற் கண்ணி" போன்ற அருமையான  நாமங்களால் குறிப்பிடுகிறார் அம்பிகையால் சிவ ஞானப்  பால் அருளப்பெற்ற சீகாழிப் பிள்ளையார் .

ஞானப்பால் வழங்கிய அம்பிகையின் மதி முகத்தைப் பார்த்துப் பரவசப்பட்டதால் அவளது பவளத் திருவாய் மலர்ந்து தன்னையே அருட்கண்ணால் நோக்கிப்  புன்னகை செய்ததையும் எண்ணி எண்ணி மகிழ்ந்திருப்பார் அல்லவா? அவ்வாறு புன்னகை செய்தபோது தோன்றிய அம்பிகையின் பற்களை முத்துக்களோடு உவமித்தால் ஓரளவு திருப்தி ஏற்படத்தான் செய்கிறது. அவளோ முழுதும் அழகிய பிராட்டி. அபிராமவல்லி என்றும் சர்வாங்க சுந்தரி என்றும் சொல்கிறோம் . அவள் திருவாய் மலர்ந்தாலோ  தேனைக் காட்டிலும் இனிமையான, மதுரமான சொற்கள் வெளிப்படுகின்றன. ( " தேனை வென்ற மொழியாள் ஒரு பாகம்.." - சம். தேவா.சீகாழி)

ஞானப்பாலூட்டிய ஞானாம்பிகை முறுவலித்தால் அவளது பற்கள் முத்தைப் போன்று ஒளி வீசுகின்றன. ( முத்திலங்கு முறுவல் உமை.." -திருக்கருகாவூர்/ சம்.தேவா.) சுவாமியை முத்தாகவும்,மணியாகவும் ,வயிரத் தூணாகவும் , மாணிக்கமாகவும் போற்றுவதுண்டு.                    ( " முத்தினை மாமணி தன்னை வயிரத்தை..." -சுந். தேவா. திருவாரூர்).   சம்பந்தரும், " முத்தினை முழு வயிரத் திரள் மாணிக்கத் தொத்தினை..." என்று திரு வெண்ணியூரில் அருளியுள்ளார்.
ஆனால் இந்த நவமணிகளும் உமையொருபாகனால் தோற்றுவிக்கப்பட்டவை என்னும்போது அவற்றை இறைவனுக்கோ அல்லது இறைவிக்கோ சமமான  உவமையாகக் கூறுவதைக் காட்டிலும்  அவற்றை விட உயர்ந்ததாகப் போற்ற  எண்ணிய திருஞானசம்பந்தப் பெருமான்,        " முத்தை வென்ற முறுவலாள் " என்று அழகாகக் குறிப்பிடுகிறார்.

முத்தை அணிந்தவன் என்றோ அணிந்தவள் என்றோ  வருணனைகள் வருவதுண்டு. பாண்டிய நாட்டிற்கு எழுந்தருளிய போது சம்பந்தப்பெருமானைப் பாண்டி மாதேவியான மங்கையர்க்கரசியும் அமைச்சரான குலச்சிறையாரும்  வரவேற்கிறார்கள்.  முத்தாலான மாலையும்,திருநீறும் சந்தனமும் அணிந்த மார்பினள் என்று அரசியாரைப் போற்றுவதை,

" முத்தின் தாழ் வடமும் சந்தனக் குழம்பும் நீறும் தன்  மார்பினில்  முயங்கப் பத்தியார்கின்ற  பாண்டிமாதேவி.."  எனப் பாடுவதால் அறியலாம்.

முத்தை வென்ற பற்களை உடைய உமாதேவியைப் பாகமாக் கொண்டவன் என்று பெருமானைத் தேவர்கள் தோத்திரம் செய்கிறார்கள். அவனோ யாவர்க்கும் அரியவன் . எனவே "அரியாய் " என்று போற்றுகிறார்கள். ஆனால்  பக்தர்களுக்கு எளியவனாகிய அப்பரம்பொருள் , பக்தி செய் அடியரைப்  பரம்பரத்து உய்ப்பவன். அவர்களால் பரம் எனப் பேணப் படுபவன். இப்படி இருக்கும்போது பொய்யான நூல்களைக் கொண்டு பெருமானைச் சமணர்களும் புத்தர்களும் தூற்றுவது விசித்திரமாக இருக்கிறது என்கிறார் சம்பந்தர். இதே கருத்தைத் திருவாவடுதுறையிலும், " புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்  பத்தர்கட்கு  அருள் செய்து பயின்றவனே " எனப் பாடுகிறார்.

விழுப்புரத்திற்கு அருகிலுள்ள திருவாமாத்தூர் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்திலுள்ள ஒரு பாடலின் கருத்தையே இங்கு சிந்திக்கத் திருவருள் கூட்டியது. இப்போது அப்பாடல் முழுதையும் காண்போம்:

"புத்தர் புன்சமண் ஆதர் பொய்ம் மொழி

நூல் பிடித்து அலர்  தூற்ற; நின்னடி
                                                        
பத்தர் பேண நின்ற பரமாய பான்மையது என்

முத்தை வென்ற முறுவலாள் உமை

பங்கன் என்று இமையோர் பரவிடும்

அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே "

என்பது ஆமாத்தூர் மேவிய முத்தாம்பிகை உடனாய அபிராமேசுவரர் மீது பாடியருளிய  அவ்வினிய பாடல்.