Tuesday, December 27, 2016

பட்டங்களை நாடுவது ஏன் ?

உலகத்தில் புகழுக்கும் செல்வத்திற்கும் ஆசைப்பட்டு அடிமை ஆகாதவர்கள் மிகச் சிலரே. இதில் பெரும்பாலானவர்கள் அவற்றைத் தேடி அலைபவர்களே! மீதி இருப்பவர்களை இவ்விரண்டையும் காட்டித் தங்கள் வலைக்குள் இழுத்துக் கொண்டு ஆதாயம் அடைபவர்களும் உண்டு. இந்த இரண்டு வகையிலும் மாட்டிக்கொள்ளாத அந்த " மிகச் சிலர் " , இறைவனது அருட் செல்வத்தைக் காட்டிலும் உயர்ந்ததும் நிலையானதும் வேறு ஒன்றும் இல்லை என்ற தெளிந்த மனப்பான்மை உடையவர்கள். 

பட்டங்கள் கொடுத்துக் கெளரவிப்பவர்கள் அதன் மூலம் தாங்கள் கௌரவிக்கப்படுவதாக நினைத்து விடுகிறார்கள். இதன் மூலம் பட்டம் பெறுபவருக்கு அகந்தை அதிகரிக்க அது வழி செய்து விடுவதை ஏனோ மறந்து விடுகிறார்கள். ஏற்கனவே பல பட்டங்கள் பெற்றுப்  புகழ் ஏணியின் உச்சியில் இருப்பவர்களுக்கு வேறு ஓர் பட்டம் வழங்கினால் தனது கௌரவத்திற்கு அப்பட்டம் ஏற்றது அல்ல என்றும் அதை விட உயர்ந்த பட்டமே வழங்கியிருக்க வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கருத்து தெரிவிப்பதோடு அப்பட்டத்தை ஏற்க மறுத்து விடுவதையும் காண்கிறோம். 

சமய உலகையும் இந்த மோகம் விட்டு வைக்க வில்லை. சமயத் தொண்டு ஆற்றுபவர்களுக்குப் பட்டம் தரும்போது, " தமிழ்க் கடல், செந்தமிழ் அரசு, சைவ நன்மா மணி, திருமுறைக் காவலர், கலாநிதி, தமிழாகரர், செந்நாப்புலவர், திருப்பணிச் சக்கரவர்த்தி "  என்றெல்லாம் பட்டம் சூட்டி விடுகிறார்கள். திருமுறையைப் பாடி விட்டால் காவலர் ஆகி விட முடியுமா? அந்த ஆழ் கடலில் ஒரு சில முத்துக்களை எடுத்தார்களோ இல்லையோ, அதற்கே இப்படிப் பட்டம் வழங்குவது அதிகமாகத் தெரிய வில்லையா?  நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் எத்தனையோ திருக்கோயில்களைத் திருப்பணி செய்திருந்தும் அக்காலத்தில் எந்தப்பட்டமும் அவர்களுக்கு  வழங்கப்படவில்லை. அதை அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை. இவ்வளவு என்? திருமுறைகளைக் கண்டெடுத்தும், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியும்  அளப்பரிய தொண்டாற்றிய மாமன்னனும் தன்னை, " சிவபாத சேகரன்" என்றே அடக்கத்துடன் அழைத்துக் கொண்டான்.  

இப்படியெல்லாம் பெறப்படும் பட்டங்களால் புகழ் கிடைத்து விடுவதும் , பிரபலமாகி விடுவதும் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். வாழ்க்கை முடியும் பொது, நம் பெற்றோர் இட்ட பெயரே மறைந்து விடும் போது, நடுவில் வரும் பட்டங்களா கூட வரப்போகின்றன? ஐயடிகள் காடவர்கோன் என்ற அரசர் இந்த உண்மையை நமக்குத் தெரிவிக்கிறார். இந்த உடல் அநித்தியமானது. பெயரும் புகழும் கூட வரப்போவதில்லை. ஆகவே, இப்போதே ஈசன் நாமத்தை நாவில் கொண்டு, அவன் உறையும் தலங்களுக்குச் சென்றால் உய்யலாம் என்று நமக்கு உபதேசிக்கிறார். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான அவர் பல தலங்கள் மீது பாடியருளிய பாடல்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன. 

திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள நெடுங்களம் என்ற தலத்தின் மீது அவர் பாடிய வெண்பாவை நாம் இப்போது சிந்திக்கத் திருவருள் கூட்டியுள்ளது. கூட்டை விட்டு உயிர் பிரிந்த பிறகு நிகழ்வதை அப்படியே காட்டுகிறார் நாயனார். உயிர் இன்னும் உடலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்கிறார்களாம் காலமானவரின் உறவினர்கள். அவ்வுடலைத் தொட்டுப்  பார்த்து உடல் சூடு இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். உடல் குளிர்ந்து போனதை அறிந்தவுடன் அதனைத்  தடவியும் தேய்த்தும் சூடேற்ற முயலுகிறார்கள். அதனால் எந்தப் பயனும் ஏற்படாததை அறிந்ததோடு , மார்பில் துடிப்பு நின்று போனதையும் தெரிந்து கொள்கிறார்கள். அதுவரை பெயரோடு திகழ்ந்த அவ்வுடலுக்குப் பிணம் என்று பெயரிடுகிறார்கள்.  பின்னர் அவ்வுடலைக் கட்டி எடுங்கள், இடுகாட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார்கள். அந்த நிலை நம் அனைவருக்கும் என்றோ ஒரு நாள் வரப்போவது தான். பிறருக்கு அந்நிலை வருவதைப் பார்த்தும் நமக்கும் ஒருநாள் இப்படி வரும் என்று எண்ணாமல் பெயருக்காக அலைகிறோமே என்ற எண்ணமும் வருவதில்லை. ஆனால் மெய் வடிவேயான ஞானிகள் அப்படி அல்ல. " வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம் " என்றார் மாணிக்க வாசகர். உலகியலைக் காட்டி நமக்கு உணர்த்தும் ஐயடிகள் காடவர்கோன் , நில்லா உடலைச் சுட்டிக்காட்டி , இப்போதே நெடுங்களத்தான் பாதத்தை நினைப்பாயாக என்று அறிவுறுத்துகிறார். 

தொட்டுத் தடவித் துடிப்பு ஒன்றும் காணாது

பெட்டப்பிணம் என்று பேரிட்டுக் - கட்டி 

எடுங்கள் அத்தா என்னா முன் ஏழை மட நெஞ்சே 

நெடுங்களத்தான் பாதம் நினை 

என்பது அவ்வுயரிய பாடல். நாமும் நெடுங்களத்தான் பாதம் நினைப்போம். அத்தலத்தைச் சென்று வழி படுவோம். அப்போது நம்மை அறியாமல் நமக்குள் இருக்கும் பணத்தாசையும் புகழாசையும் அறவே நீங்கி விடுவதை உணர்வோம். 

Tuesday, December 20, 2016

எம்பிரான் செய்யும் நாடகம்

நம்மில் பலருக்கு அடிக்கடி ஒரு சந்தேகம் ஏற்பட்டு விடுகிறது. நமது பூஜையையோ அல்லது கோரிக்கைகளையோ இறைவன் ஏற்றுக்கொண்டு  செவி சாய்க்கிறானா என்பதே அது. " செய்யாத பூஜையோ பரிகாரமோ , ஏறாத கோவில்களோ இல்லை,இருந்தும்  என் பிரார்த்தனை இறைவனின் செவிகளில் விழவில்லையே "  என்று அலுத்துக் கொள்பவர்களைப் பார்க்கிறோம். சற்று அமைதியாக யோசித்தால் ஒரு உண்மை தெரியக் கூடும். நாம் உண்மையிலேயே பூஜையில் லயித்து விடுகிறோமா என்று கேட்டுப் பார்த்துக் கொண்டால் , உள் மனது இல்லை என்றே சொல்கிறது. அதேபோல் கோயில் கோயிலாகச் சென்றாலும் ஆனந்த  நீர் அருவி பெருக இறைவனைத் தரிசிக்கிறோமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. கோயில் வாசலில் விட்டு வந்த செருப்புக்களும் அடுத்த பஸ் போய் விடக்கூடாதே என்ற கவலையும் முன்னே வந்து நிற்கின்றன. 

திரை போடப்பட்டிருந்தால் எப்பொழுது இந்தத் திரை விலகி சுவாமி பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பலாம் என்ற எண்ணமே மேலோங்குகிறது. ( கவனிக்கவும்: தரிசித்துவிட்டு என்பதற்குப் பதில், பார்த்துவிட்டு என்று எழுத வேண்டியிருக்கிறது) இந்த அவசர  வழிபாடும் பிரார் த்தனையும் நமக்கு வசதியாகச் சீக்கிரம் முடிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தால் சிறப்புக் கட்டணம் செலுத்தி விட்டு எல்லோரையும் முந்திக் கொண்டு உள்ளே செல்லவும் தயங்குவதில்லை. இப்படிப்பட்ட நமக்கோ வேண்டுதல்கள் உடனே நிறைவேற வேண்டும் என்ற பேராசை! கால தாமதமானால் கடவுளுக்குக் கண் இல்லை , காது இல்லை என்று அங்கலாய்க்க மட்டும் தெரிகிறது. நாம் கூப்பிட்ட குரலுக்கு சுவாமி ஓடி வர வேண்டும் என்றால் அதற்கு நாம் தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டாமா? அப்படித் தகுதி உள்ளவர்களோடு பழகினால் நமக்கும் அத்தகுதி பெறுவது சற்று எளிதாகி விடும் அல்லவா? அதற்குத் தான் நாம் தயாராக இல்லையே!!!

மாணிக்க வாசகர் அருளுவதை இப்போது கருத்து உணர்ந்து  பார்ப்போம். " உன்னுடைய அடியார்களோடு இணங்குவதற்கு அடியேனுக்குத் தகுதி இல்லை. அப்படி இருந்தும் இத் தகுதி இல்லாதவனைத்  திருப்பெருந்துறையில் வந்து ஆட்கொண்டருளினாய். ( " சிவன் எம்பிரான் என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமை கண்டும்.." - திருவாசகம் )  நீயோ நிர்மல மணி . மாசிலா மணி. நானோ பொல்லாக் குரம்பையில் ஐந்து புலன்களால் அலைக்கப்படுபவன் . உன் அருள் பெறும் நாள் என்று என்று ஏங்குகிறேன். நாடகத்தால் உன் அடியார் போல நடிக்கின்றேன். அவ்வடியார்களுக்கு வீடு பேறு  கிடைக்கும் என்பதால் எனக்கும் அப்பேறு கிடைக்க வேண்டும் என்ற அவா ஏற்பட்டு , மிகப் பெரிதும் விரைகின்றேன். நானோ உனது கழலடிகளை நினைந்து உருகி அப் பாத மலர்களுக்கு நல்ல மலர் புனையாதவன் . நாக்குத் தழும்பு ஏற அகம் குழைந்து, அன்பு உருகிச்  சொல் மலர்களாலும் தோத்திரங்களாலும் துதிக்கவில்லை. நின் திருக்கோயிலைத் தூகேன்,மெழுகேன், கூத்து ஆடேன். அலறிடேன்.உலறிடேன். ஆவி சோரேன். வியந்து அலற மாட்டேன். வல்வினைப்பட்டு ஆழ்கின்றேன். யாவரினும் கடையவனாக இருந்தும் உனக்கு அன்பன் என்று சொல்லிக் கொள்கிறேன்.

உன் நாமங்களைக் கேட்ட அளவில் பதைத்து உருகும் அடியார்கள் எத்தனையோ பேர். அப்படிப்பட்ட அடியார்கள் இருக்கும்போது என்னுடைய தகுதி இன்மையைப் பொருட் படுத்தாமல் நீ ஆட்கொண்ட கருணையைக் கண்ட பிறகாவது என் நெஞ்சம் உருகி இருக்க வேண்டும். உடம்பெல்லாம் கண்களாகி ஆனத்தக் கண்ணீர் சொரிந்திருக்க வேண்டும். ஆனால் நானோ தீ வினையேன். எனது நெஞ்சம் கல்லாகி நிற்கிறது. கண் இணைகள் மரம் போல விளங்குகின்றன. மாக் கருணை வெள்ளமாக  நீ அருளியதை நோக்கும் போது அடியேனுக்கு நகைப்பு வருகிறது. ஏன் தெரியுமா? அல்லும்  பகலும்  தேவர்களும் முனிவர்களும் பிறரும் உனது அருள் பெறக் கடும் தவம் செய்தும் அவர்களை விடுத்துப்  புன்மையான இந்த எளியவனை மிகவும் உயர்த்தியுள்ளாய் அல்லவா? அதை நினைக்கும் போது நகைப்புத்தான் வருகிறது. இதுவும் உனது நாடகம் (திருவிளையாடல்)என்றே எண்ணத் தோன்றுகிறது.
    
"புகவே தகேன் உனக்கு அன்பருள் 

யான் என் பொல்லா மணியே 

தகவே எனை உனக்கு ஆட்கொண்ட 

தன்மை எப்புன்மையரை 

மிகவே உயர்த்தி விண்ணோரைப் 

பணித்தி அண்ணா அமுதே 

நகவே தகும் எம்பிரான் என்னை 

நீ செய்த நாடகமே. "

நாத் தழும்பு ஏற நாமங்களால் துதித்திலேன் என்று மணிவாசகர் கூறினும் இந்த ஒரு பாடலில் பெருமானை, " பொல்லா மணியே என்றும் அண்ணா என்றும் அமுதே என்றும் எம்பிரான் என்றும் பலவாறு பரவியிருப்பதைக் காணலாம். எனவே அவர் கூறிய புன்மைத் தன்மை அவருக்கு ஒருபோதும் பொருந்தாது. நம் போன்றவர்களுக்கே சாலப் பொருந்தும். 

இறையருள் பெறுவதற்கு உரியவர்களாக நம்மை நாம்  தயார் படுத்திக் கொண்டால்  இன்றைக்கும் பெருமான் பல்வேறு நிலைகளில் நமக்கு அருள் புரிகிறான் என்பது பெரியோர்கள் அனுபவத்தால் கண்ட உண்மை. அதற்கு அடுத்த நிலையாவது, அடியார்களோடு இணங்குவது. அதுவும் இறையருளால் மட்டுமே நடை பெறுவது.அந்த அனுபவம் நமக்கும் கிடைக்குமாறு பெருமான் கருணை புரிய வேண்டும்.