Tuesday, December 27, 2016

பட்டங்களை நாடுவது ஏன் ?

உலகத்தில் புகழுக்கும் செல்வத்திற்கும் ஆசைப்பட்டு அடிமை ஆகாதவர்கள் மிகச் சிலரே. இதில் பெரும்பாலானவர்கள் அவற்றைத் தேடி அலைபவர்களே! மீதி இருப்பவர்களை இவ்விரண்டையும் காட்டித் தங்கள் வலைக்குள் இழுத்துக் கொண்டு ஆதாயம் அடைபவர்களும் உண்டு. இந்த இரண்டு வகையிலும் மாட்டிக்கொள்ளாத அந்த " மிகச் சிலர் " , இறைவனது அருட் செல்வத்தைக் காட்டிலும் உயர்ந்ததும் நிலையானதும் வேறு ஒன்றும் இல்லை என்ற தெளிந்த மனப்பான்மை உடையவர்கள். 

பட்டங்கள் கொடுத்துக் கெளரவிப்பவர்கள் அதன் மூலம் தாங்கள் கௌரவிக்கப்படுவதாக நினைத்து விடுகிறார்கள். இதன் மூலம் பட்டம் பெறுபவருக்கு அகந்தை அதிகரிக்க அது வழி செய்து விடுவதை ஏனோ மறந்து விடுகிறார்கள். ஏற்கனவே பல பட்டங்கள் பெற்றுப்  புகழ் ஏணியின் உச்சியில் இருப்பவர்களுக்கு வேறு ஓர் பட்டம் வழங்கினால் தனது கௌரவத்திற்கு அப்பட்டம் ஏற்றது அல்ல என்றும் அதை விட உயர்ந்த பட்டமே வழங்கியிருக்க வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கருத்து தெரிவிப்பதோடு அப்பட்டத்தை ஏற்க மறுத்து விடுவதையும் காண்கிறோம். 

சமய உலகையும் இந்த மோகம் விட்டு வைக்க வில்லை. சமயத் தொண்டு ஆற்றுபவர்களுக்குப் பட்டம் தரும்போது, " தமிழ்க் கடல், செந்தமிழ் அரசு, சைவ நன்மா மணி, திருமுறைக் காவலர், கலாநிதி, தமிழாகரர், செந்நாப்புலவர், திருப்பணிச் சக்கரவர்த்தி "  என்றெல்லாம் பட்டம் சூட்டி விடுகிறார்கள். திருமுறையைப் பாடி விட்டால் காவலர் ஆகி விட முடியுமா? அந்த ஆழ் கடலில் ஒரு சில முத்துக்களை எடுத்தார்களோ இல்லையோ, அதற்கே இப்படிப் பட்டம் வழங்குவது அதிகமாகத் தெரிய வில்லையா?  நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் எத்தனையோ திருக்கோயில்களைத் திருப்பணி செய்திருந்தும் அக்காலத்தில் எந்தப்பட்டமும் அவர்களுக்கு  வழங்கப்படவில்லை. அதை அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை. இவ்வளவு என்? திருமுறைகளைக் கண்டெடுத்தும், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியும்  அளப்பரிய தொண்டாற்றிய மாமன்னனும் தன்னை, " சிவபாத சேகரன்" என்றே அடக்கத்துடன் அழைத்துக் கொண்டான்.  

இப்படியெல்லாம் பெறப்படும் பட்டங்களால் புகழ் கிடைத்து விடுவதும் , பிரபலமாகி விடுவதும் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். வாழ்க்கை முடியும் பொது, நம் பெற்றோர் இட்ட பெயரே மறைந்து விடும் போது, நடுவில் வரும் பட்டங்களா கூட வரப்போகின்றன? ஐயடிகள் காடவர்கோன் என்ற அரசர் இந்த உண்மையை நமக்குத் தெரிவிக்கிறார். இந்த உடல் அநித்தியமானது. பெயரும் புகழும் கூட வரப்போவதில்லை. ஆகவே, இப்போதே ஈசன் நாமத்தை நாவில் கொண்டு, அவன் உறையும் தலங்களுக்குச் சென்றால் உய்யலாம் என்று நமக்கு உபதேசிக்கிறார். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான அவர் பல தலங்கள் மீது பாடியருளிய பாடல்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன. 

திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள நெடுங்களம் என்ற தலத்தின் மீது அவர் பாடிய வெண்பாவை நாம் இப்போது சிந்திக்கத் திருவருள் கூட்டியுள்ளது. கூட்டை விட்டு உயிர் பிரிந்த பிறகு நிகழ்வதை அப்படியே காட்டுகிறார் நாயனார். உயிர் இன்னும் உடலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்கிறார்களாம் காலமானவரின் உறவினர்கள். அவ்வுடலைத் தொட்டுப்  பார்த்து உடல் சூடு இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். உடல் குளிர்ந்து போனதை அறிந்தவுடன் அதனைத்  தடவியும் தேய்த்தும் சூடேற்ற முயலுகிறார்கள். அதனால் எந்தப் பயனும் ஏற்படாததை அறிந்ததோடு , மார்பில் துடிப்பு நின்று போனதையும் தெரிந்து கொள்கிறார்கள். அதுவரை பெயரோடு திகழ்ந்த அவ்வுடலுக்குப் பிணம் என்று பெயரிடுகிறார்கள்.  பின்னர் அவ்வுடலைக் கட்டி எடுங்கள், இடுகாட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார்கள். அந்த நிலை நம் அனைவருக்கும் என்றோ ஒரு நாள் வரப்போவது தான். பிறருக்கு அந்நிலை வருவதைப் பார்த்தும் நமக்கும் ஒருநாள் இப்படி வரும் என்று எண்ணாமல் பெயருக்காக அலைகிறோமே என்ற எண்ணமும் வருவதில்லை. ஆனால் மெய் வடிவேயான ஞானிகள் அப்படி அல்ல. " வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம் " என்றார் மாணிக்க வாசகர். உலகியலைக் காட்டி நமக்கு உணர்த்தும் ஐயடிகள் காடவர்கோன் , நில்லா உடலைச் சுட்டிக்காட்டி , இப்போதே நெடுங்களத்தான் பாதத்தை நினைப்பாயாக என்று அறிவுறுத்துகிறார். 

தொட்டுத் தடவித் துடிப்பு ஒன்றும் காணாது

பெட்டப்பிணம் என்று பேரிட்டுக் - கட்டி 

எடுங்கள் அத்தா என்னா முன் ஏழை மட நெஞ்சே 

நெடுங்களத்தான் பாதம் நினை 

என்பது அவ்வுயரிய பாடல். நாமும் நெடுங்களத்தான் பாதம் நினைப்போம். அத்தலத்தைச் சென்று வழி படுவோம். அப்போது நம்மை அறியாமல் நமக்குள் இருக்கும் பணத்தாசையும் புகழாசையும் அறவே நீங்கி விடுவதை உணர்வோம். 

1 comment: