Monday, October 23, 2017

சந்தத் தமிழ்

திருஞானசம்பந்தர்-சீர்காழி-இணையதளப் படம் 
திருஞானசம்பந்தரைப் போலவே தானும் சந்தத்தமிழ் பாடுமாறு அருளவேண்டும் என்று முருகப்பெருமானிடம் விண்ணப்பிக்கிறார் அருணகிரிநாதர். “ புமியதனில் ப்ரபுவான புகலியில் வித்தகர் போல அமிர்த கவித் தொடைபாட அடிமை தனக்கு அருள்வாயே” என்பது அவ்விண்ணப்பம். இங்கு “ புகலியில் வித்தகர் என்பது சம்பந்தரைக் குறிப்பது. புகலி என்பது சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களுள் ஒன்று. 

திருஞானசம்பந்தர் அருளிய ஞானப் பனுவல்கள் அனைத்தும் இயல்,இசை என்ற இரண்டும் விஞ்சுமளவில் அமைந்துள்ளதை வியக்காதவர் இலர். ஆனால் சம்பந்தரோ தனது வாக்கில் இருந்து பனுவல்களை வெளிப்படுத்துபவர் சிவபெருமானே என்பதை, “ எனது உரை தனது உரையாக”  எனப்பாடியதால் அறியலாம். மேலும், “ இயல் இசை எனும் பொருளின் திறமாம் “ என்று பாடியதால் அனைத்தும் சிவனருளே என்பதைத் தெளிவு படுத்தியுள்ளார் குருநாதர்.

சந்த அழகு ஒரு பக்கம் இருக்க, ஒரே எழுத்தைப் பாடலில் பல இடங்களில் வைத்து ஞானசம்பந்தப்பெருமான் பாடும்போது சிலிர்க்க வைப்பதாய் அமைந்துள்ளது. எடுத்துக் காட்டாக அவரது தேவூர்த் திருப்பதிகத்தை நோக்குவோம்:

முதல் பாடலிலேயே அழகுத் தமிழ் கொஞ்சுவதைக் காணலாம். இதில் டகரம் விரவி வருவதைப் பார்க்கலாம்.

காடு பயில் வீடு முடைஒடு கலன் மூடும் உடை 

  ஆடை புலித்தோல்  
                                        
தேடுபலி ஊண் அது உடை வேம் ; மிகு வேதியர் 
   
  திருந்து பதிதான்                                                       

நாகம் அது ஆ மஞ்ஞை பா அரி கோல்                      

  கை மறிப்ப நலமார்                                                

சேடு மிகு பேடை அன்னம் ஓடி மகிழ் மாம் மிடை                    

தேவூர் அதுவே.

திரண்ட பொருள்:
இறைவனுக்குக் காடே இருப்பிடமாவது. பிரமனது தலை ஓடே கையில் ஏந்தும் பாத்திரமாவது. புலித்தோலே ஆடையாக விளங்குவது. இப்படிப்பட்ட வேடம் பூண்ட பெருமான் அமரும் தேவூர் என்ற பதியில் மாடங்களும்,நாடக சாலைகளும், நான்மறை ஓதும் வேதியர்களின் இடங்களும்உள்ளன. சோலைகளைச் சார்ந்த இடங்களில் அன்னங்கள் ஓடி விளையாடுகின்றன. இப்படியாகப் பாடலில் வருணனை செல்கிறது. அதில் டகர எழுத்து எவ்வளவு நயமாகவும்,பொருள் சுவையை மிஞ்சுவதாகவும் அமைந்துள்ளது எனப் பாருங்கள்.மீண்டும் பாடலைப் படித்தால் இதன் அருமை விளங்கும்.

இதே பதிகத்தின் மற்றொரு பாடலில் ணகரம் விளையாடிவருவதைக் காணலாம்.

ண்ணம் முகில் அன்னஎழில் அண்ணலோடு சுண்ணம் 
  
    வண்ணம் மலர்மேல்                                               
ண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள் கண்ணவன்         

    நலங்கொள் பதிதான்                                                
ண்ண வனநுண்ணிடையின் எண்ணரிய அன்னநடை 

    இன்மொழியினார்                                                    
திண்ணவன மாளிகை செறிந்த இசை யாழ் மருவு                 
    
    தேவூர் அதுவே.  

மற்றோர் பாடலின் அழகும் அலாதியானது:

பொச்சம் அமர்பிச்சை பயில் அச்சமணும் எச்சமறு போதியருமாம்                                                                     மொச்சை பயில் இச்சை கடிபிச்சன் மிகு நச்சரவன்                      
மொச்ச நகர் தான்                                             

மைச்சில் முகில் வைச்ச பொழில் ......" 

என்று சகரத்தின் அழகை வெளிப்படுத்துவதாக உள்ளது. 
  
அருணகிரிக்கு அருளும் அழகன்-இணையதளப் படம் 
அருணகிரியாரது வேண்டுகோளும் நிறைவேறியது. பெருமான் மீது சந்தப்புகழ் பாடத் தொடங்கினார். விவரிக்கில் பெருகும் என்பதால் அவர்,   “ நாயக “ என்ற சொல்லைக் கொண்டு எப்படியெல்லாம் குமரவேளைத் துதிக்கிறார் என்பதை மட்டும் எடுத்துக் காட்டி நிறைவு செய்வோமாக.

“ .... குறிஞ்சி வாழும் மறவர் நாயக; ஆதிவிநாயகர் இளைய நாயக;          காவிரி வடி விநாயக ஆனை தன் நாயக; எங்கள் மானின் மகிழும் நாயக; தேவர்கள் நாயக;கவுரி நாயகனார் குரு நாயக வடிவதா மலை யாவையும் மேவிய பெருமாளே.” எனப் பாடுகின்றார்.

எவற்றைஎல்லாமோ வாயாரக் கொண்டாடி விருது வழங்கும் இந்நாளில் இது போன்ற அருளாளர்களது பாடல்கள்  கண்களுக்குத் தெரிவதில்லை.  கலியின் கொடுமையாகவும் இருக்கலாம். தமிழ் இதுபோன்ற தெய்வப் பனுவல்களில் மட்டுமே வாழ்கிறது என்பதை மட்டும் அறுதியிட்டுச் சொல்ல முடியும். அருமை உணர்ந்து ஓதுபவர்கள் பாக்கியசாலிகள்.

Tuesday, October 17, 2017

தன்னடைந்தார்க்கு இனியன்

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயம் 
தீபாவளி என்றவுடனேயே, சிறியவர்-பெரியவர் என்ற பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தந்துவிடுகிறது  சிந்தனைக்கும், கண்ணுக்கும் மட்டுமல்லாமல் நாவுக்கும் இனிப்பை, அதாவது தித்திப்பைத் தந்துவிடுகிறது. எத்தனையோ கவலைகள் இருந்தபோதிலும் அவற்றை மறந்து மக்கள் இந்தப் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். சில வாரங்கள் முன்னரே அதைக் கொண்டாடுவதற்கான ஆயத்தங்கள் துவங்கி, தீபாவளித் திருநாளன்று இந்த உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால் இந்த இனிமையும் மகிழ்ச்சியும் நிரந்தரமாக இருப்பதில்லை. பண்டிகை முடிந்தவுடன் அவை நம்மிடம் விடை பெற்றுக் கொள்கின்றன. 

நாக்கால் சுவைக்கப்பெற்றவை தொண்டைக்குள் இறங்கியவுடன் தித்திப்பும் கூடவே மறைந்து விடுகிறது. நிரந்தரமாகத்  தித்திப்பை எது நமக்குக் கொடுக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா? உலகியலில் பார்த்தால் இந்த இனிமையைத் தரவல்லவை ஏராளம் உண்டுதான். 
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் இனிமையைத் தரக்கூடும். 

கோடைக் காலங்களில் எத்தனை வகை வகையாக மாம்பழங்கள் விற்பனைக்கு வந்தாலும், அவற்றிலும் அதிக சுவையான வகையைக்  கூடுதல்  விலை கொடுத்தாவது வாங்கிச் சாப்பிடுகிறோம். மாங்கனியைச்  சுவைத்த மாத்திரத்தில் அதன் சுவையைப்  புகழ ஆரம்பித்து விடுகிறோம். அதை விட இனிய ஒன்று இல்லை என்று கூட சொல்கிறோம். 
பொங்கல் பண்டிகை வந்தால் கரும்பின் சுவையில் மெய் மறந்து போகிறோம். அதன் சாற்றிலும், ஆலையில் அதை இட்டு வெல்லக் கட்டிகளாக்கி சுவைப்பதில்தான் எத்தனை ஆனந்தம்! சிலர் நீண்ட குழலுடைய மங்கையர்களைக் கண்டு மயங்குவர். மற்றும் சிலர் அரசாங்க ஆதரவு கிடைத்தவுடன் மகிழ்ச்சிக் கடலில் மிதப்பார்கள். அம்முடிசூடிய மன்னர்களின் பார்வை நம் மேல் படாதா என்று ஏங்குவர். அப்பார்வை ஒன்றே நம் வாழ்க்கையை வளப்படுத்தி விடும் என்று நம்புவோரும் இருக்கிறார்கள்.  

அருளாளர்களோ  இறைவனது அருளே கரும்பாகவும், கனியாகவும், தேனாகவும் பாலாகவும் தித்திக்க வல்லது என்பார்கள். " தேனாய் இன் அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்" எனப் பாடுகிறார் மாணிக்க வாசகர்.  கனியைச்  சுவை உடையது என்று நாம் சொல்கிறோம். ஆனால் அப்பர் பெருமானோ, " ஈசன் எனும் கனி இனிது " எனப் பாடுகிறார்.  ஏன் என்றால் பழமாகவும் பழத்தின் சுவையாகவும் பெருமான் விளங்குவதால்  " பழத்தினில் இன் சுவை" அந்தக் கனி தானே ! அதுவன்றோ  நெஞ்சைக் கனிய வைக்க வல்லது!  " நெஞ்சம் கனிய மாட்டேன், நின்னை உள் வைக்க மாட்டேன் "  என்று கரைந்து உருகுவார் அவர். மெய்ப்பொருளாகிய இறைவனை கனிக்கும் , பாலுக்கும், தேனுக்கும் உவமை கூற முடியுமா? எனவேதான் தனது ஞானம் உண்ட வாயால் சம்பந்தர், " தேனினும் இனியர்" என்று பெருமானை வருணிக்கிறார். 

இவ்வாறு ஆலைக் கரும்பின் சாற்றையும் , பாலில் திகழும் பைங்கனியாகவும் பரம்பொருளை உவமித்தாலும், உண்மையான இனிமை எதில் பெறப் படுகிறது என்பதைத்   திருமுறைகள் நமக்கு இனிதே  காட்டுகின்றன. இறைவனது அஞ்செழுத்தை உச்சரித்தால் அதுவே கரும்பின் சுவையை மிஞ்சுகிறது. அவனது திருநாமத்தை இராவணன் போற்றியதை  " ஆர்வமாக அழைத்தவன்" என்று வான்மியூர் ஈசனைப் பரவும்போது குறிப்பிடுகிறார்  திருநாவுக்கரசர். " சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என் உள்ளம் குளிருமே" என்பார் ஞான சம்பந்தர். " எட்டான மூர்த்தியை நினைந்தபோது அவர் நமக்கு இனியவாறே."  என்பது சுந்தரர் வாக்கு. 

இவ்வாறு உலகியலில் புலன்களுக்குத் தற்காலிகமாக  இனிமையத் தர வல்லவற்றைக் காட்டிலும்  நிரந்தரமாக இனிமையைத்தரவல்ல ஈசனை நாம் நாட வேண்டும். இதுவே நமக்காகத் திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமானிடம் அப்பர் சுவாமிகள் பாடிய அந்த அற்புதமான பாடல்.

கனியினும் கட்டி பட்ட கரும்பினும்                                                         
பனி மலர்க் குழல் பாவை நல்லாரினும் 
தனி முடி கவித்து ஆளும் அரசினும் 
இனியன் தன்  அடைந்தார்க்கு இடைமருதனே.   

Monday, October 2, 2017

என் தங்கம்

செல்லக் குழந்தையைக் கொஞ்சும்போது "  என் தங்கமே " என்று கொஞ்சுகிறோம். தங்கத்திற்கும் குழந்தைக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் இப்படித் தான் கூப்பிடுகிறோம். ஒரு குழந்தை நிறத்தால் செக்கச்செவேல் என்று இருந்துவிட்டால், பவுனை வார்த்தாற்போல இருக்கிறது என்று சந்தோஷப்படுகிறோம். பொன்னன், பொன்னி என்ற பெயர்கள் கூட இந்த அன்பின் வெளிப்படையாகக் கூட இருக்கலாம். இதேபோல்மணி, மாணிக்கம்,முத்து போன்ற பெயர்களும் சுருக்கமாக அழைக்கப்பட்டவை ஆனாலும், இதுபோன்ற விலை உயர்ந்த பொருள்களை நினைவு படுத்துவதாக இருக்கின்றன.

பொன்னார் மேனியனாகத் திகழும் சிவபெருமானையும் அடியார்கள் இப்படித்தான் அன்போடும்,  மிகுந்த வாஞ்சையோடும் அழைப்பார்கள். ஊரின் பெயரையும் சுவாமியின் பெயரையும் இணைத்து ஸ்வர்ணபுரி என்றும், சுவர்ணபுரீசுவரர் என்றும் அழைப்பர். ஒரு  ஊரில் சுவாமிக்கு ரத்னபுரீசுவரர் என்றும், மற்றோர் ஊரில் நிர்மலமணீசுவரர் என்றும் பெயர்கள் இருக்கக் காண்கிறோம். அம்பிகையும் ஸ்வர்ணாம்பிகை , ஸ்வர்ண வல்லி என அழைக்கப்படுகிறாள். 

அப்பர் சுவாமிகளுக்கும் பரமேசுவரனை பொன் மயமாகவே அழைக்க ஆசை. அதிலும் வரிக்கு வரி அப்படிப் பொன்னாகவே பெருமானை அழைத்தால்  எப்படி இருக்கும்!  அந்த ஆசை அண்ணாமலையில் வெளிப்படுவதை இங்குக் காண்போம்: 

முதலாவதாகப்  பெருமானைப் பைம்பொனே  எனத் துதிக்கிறார்.  பச்சைப் பசும்பொன் அவன். சொக்கத்தங்கம் என்பார்களே அதுவும் அவனே. இந்தத் தங்கமே சொக்கன் தந்தது தானே. ஆகவே அதனைச் சொக்கத் தங்கம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கிறது. அது மட்டுமல்ல. பவளம் போல் மேனியனான ஈசுவரனை , பவளக் குன்றமாகவே காண்கிறார் அப்பர் பெருமான். திருமாற்பேறு  என்ற சிவத்தலத்திலும், பாடல் தோறும் பெருமானைச் செம்பவளக் குன்று என்று வருணிப்பதைக் காணலாம். எனவே, பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு பூசியவனாகக் காட்சியளிக்கும் பரமனைப்       " பரமனே, பால் வெண்ணீறா " என்று போற்றுகின்றார். 

உருக்கி வார்த்த செம் பொன்னைக் காணும் போது , செம்பொன் மேனியனாகிய சிவபிரானது நினைவு வரவேண்டுமல்லவா ?  உருக்கும்போது இளகிய பொன்னே, குளிர்ந்ததும் இறுகி விடுகிறது. ஆனால் பரம்பொருளாகிய இறைவன் இதனினும் மாறு பட்டவன். உருகி அழைக்கும்போது ஓடி வந்து துணை என நிற்பான். பொன்னைப் போல் மேனியனானாலும் இறுகி விடாமல் மென்மையான மலர்ப் பாதத்தைத் தந்தருளுகின்றான். அந்தத் திருவடியின் பெருமையை யாரால் வருணிக்க முடியும்? மழபாடியுள் மாணிக்கமெனத் திகழும் பெருமானை " மணியே"  : என்று அகம் குழைந்து அழைக்கிறார் அப்பர்.

பொன்னானது இயல்பாகவே அழகானது. காண்போரை வசீகரிக்க வல்லது. ஆனால் இந்தப் பொன்னோ பொன்னுக்கே அழகைக் கொடுக்க வல்லது. உண்மையில் பார்த்தால் அழகிய பொன் என்ற சொல் பெருமானுக்கே பொருத்தமாகத் தோன்றுகிறது. ஆதலால், " அம்  பொன்னே " என்றார். 
அண்ணாமலையில் அருவிகள் பாய்ந்து,திரண்டு ஓடி வரும் அழகைக் குறிப்பதாக " கொழித்து வீழும் அணி அண்ணாமலை உளானே " என்று சிறப்பித்தார். இதையே, பொன் கொழித்து வரும் அருவிகள் மலை மீதிருந்து வீழ்வதாகவும் சேர்த்துப் பொருள் கொள்ளலாம். 

முதலில் கூறியபடி, குழந்தையை நாம் " என் தங்கமே " என்று அழைப்பதுபோல், " என் பொன்னே " என்று அப்பர் சுவாமிகள் அழைப்பது இன்புறத்தக்கது. அண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பர் பெரியோர். அப்படி இருக்கும்போது அண்ணாமலையானை நாம் மறக்கலாகுமா? அவனைத் தவிர வேறு நினைவே இல்லை என்கிறார் திருநாவுக்கரசர். " என் பொன்னே உன்னை அல்லால் எது நான் நினைவு இலேனே " என்று பாடலை நிறைவு செய்கிறார். 

இவ்வாறு பரமேசுவரனை ஒரே பாடலில் , பைம்பொன், செம்பொன், அம்பொன், என்பொன் என்றெல்லாம் வருணிப்பதை வேறு எங்கும் காண்பது அரிது. அப்படிப்பட்ட  சிவ வடிவத்தை, அண்ணாமலையானை நாமும் தியானித்து இப்பாடலை மீண்டும் காண்போமாக:

பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால் வெண்ணீறா 

செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க 

அம்பொனே கொழித்துவீழும் அணி அண்ணாமலை உளானே 

என்பொனே உன்னையல்லால் ஏதுநான் நினைவிலேனே.