Tuesday, April 17, 2018

தானதருமம்

திருநாவுக்கரசர் 
உலகம் இருக்கும் வரை தானமும் தருமமும் இருக்கும். காக்கைக்குக் கூடக் கரந்து  உண்ணும் தன்மை இருக்கும்போது நமக்கு இருக்க வேண்டாமா ? அளவுக்கு அதிகமாகப் பொருள் ஈட்டியவனுக்கும் பிறருக்குக் கொஞ்சமாவது கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை. அதேபோலத்  தனக்கு எவ்வளவு தான் பணம் வந்தாலும் அடுத்தவனுக்கு வருவதில் முழு அளவில்லாவிட்டாலும் அதில் ஒரு பங்காவது கொடுக்க மாட்டானா என்று   போராடும் மனோபாவம் இருப்பவர்களும் உண்டு. தனக்கு மிஞ்சியதை எல்லாம் தானம் செய்யாத மனநிலை வந்துவிட்டதால், பழமொழியைத்  தனக்கு வசதியாக, " தனக்கு மிஞ்சினால்தான் தான் தான தருமம் " என்று மாற்றிக் கொள்கிறார்கள். அதை ஆயிரம் கோடி சம்பாதித்தவனும் சொல்லலாமா? தானம்  செய்யத் தனக்கு இறைவன் தந்த உயர்ந்த வாய்ப்பாகக் கொண்டு தருமசாலியாக வாழலாமே ! 

ஒருவரிடம் சென்று யாசித்தலை " இரத்தல் " என்கிறோம். வறியவனாக இருந்து யாசிப்பவனைப் பிச்சைக் காரன் என்கிறோம். முன்பெல்லாம் இராப்பிச்சைக்காரனும், கையில் சொம்பு ஒன்றை ஏந்தியபடி சுடும்  உச்சி வெய்யிலில் சாலைகளில் உருண்டு வந்து பிச்சை எடுப்போரையும் பார்த்திருக்கிறோம். சிறுவயதில்  வீட்டு வாசலுக்கு வந்த  ஒரு இராப்பிசைக்காரன்  " அம்மா, பிச்சை போடுங்கம்மா " என்றவுடன், " எங்கம்மாவை நீ எப்படி அம்மா என்று கூப்பிடலாம் என்று நான் அவனிடம் சண்டைக்குப் போனதாக எனது தாயார் சொன்னது நினைவுக்கு வருகிறது.  இப்போது கோயில் வாசலிலும் மக்கள் கூடும் இடங்களிலும் பிச்சைக்காரர்கள் இருப்பதைப் பார்க்கிறோம். விடியற்காலையில் வரும் குடுகுடுப் பாண்டிகளையும் இப்போது காணோம். நரிக்குறவர்களைப் பார்ப்பதும் அரிதாகி விட்டது. ஆகவே பிச்சை எடுப்பது குறைந்தாலும், யாசகம் என்பது கடன் என்ற பெயரில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. 

பிச்சை புகினும் கற்கை நன்றே என்று சொன்னாலும் சொன்னார்கள், வங்கிகளில் கடன் வாங்கியாவது படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். கடன் என்பதும் ஒருவகையில் கௌரவப் பிச்சை தான். அதற்கு சமாதானமாக எவ்வளவு சொன்னாலும் கடன் கடன் தானே !அதில் ஒரே வித்தியாசம்  வட்டியுடன்  திருப்பித் தர வேண்டும் என்பதே. மனசாட்சி உள்ளவர்கள் திருப்பித் தருகிறார்கள். மற்றவர்களோ சட்டமே ஒன்றும் செய்ய முடியாதபோது நாம் ஏன் திருப்பித் தரவேண்டும் என்று ஏமாற்றத் தயாராக இருக்கிறார்கள். 

தானம் என்பது இரக்கத்தின் வெளிப்பாடு. தனது கண்ணில்  குழிவிழுந் தவன் யாசகம் கேட்கும்போதும் மனம்  இர ங்காமல் முகத்தைத் திருப்பி வைத்துக் கொள்பவர்கள் உண்டு.  " கண் குழிந்து இரப்பார்க்கு ஒன்று ஈயேன் "  " சிறுச் சிறிதே இரப்பார்க்கு ஒன்று ஈயேன் " என்பன சுந்தரர் தேவார வரிகள். மண் தானம், பொன் தானம் , கன்னிகா தானம் ,கோ தானம் என்று எத்தனையோ தானங்கள் இருந்தாலும் அன்ன தானம் சிறந்தது என்பார்கள். அதிலும்  மதி சூடும் மகாதேவனின் அடியார்களுக்கு அன்னம் பாலிப்பதை அறுபத்து மூவரில் பலர்  செய்தருளியிருக்கிறார்கள். 

பிக்ஷாடன மூர்த்தியாக வந்த பரமேசுவரனை, " பிச்சைத் தேவா "  என்று அழைக்கிறது திருவாசகம். ஆனால் பெருமான் பிக்ஷைக்காக வந்தது உணவை ஏற்று உண்பதற்கல்ல. தாருகாவனத்தில் பிச்சை எடுத்தது போலத் தோன்றினாலும், அங்கிருந்த நாற்பத்தொன்பதாயிரம் முனிவர்களுக்கும் ஞானப்பிச்சை போட்டருளினான் அல்லவா ?   உண்ணாது உறங்காது இருக்கும் பிரான் இவ்வாறு ஞானோபதேசம் செய்ய எழுந்தருளியபோது, பிக்ஷாடனமூர்த்தியாகத்  தோன்றினான். 

எல்லோரும் ஏதாவது ஒரு வகையில் யாசகம் கேட்பவர்களுக்கு முடிந்த வரையில் உதவ வேண்டும். நான் கஷ்டப் பட்டு சம்பாதித்ததை தானம் செய்வதா என்று எண்ணுகிறார்கள். காஞ்சிப் பெரியவர்கள் ஒரு சமயம் சொன்னார்கள் " நான் சம்பாதித்தது என்று எண்ணாதே. அவை அனைத்தும் இறைவனுக்கு சொந்தம். அவனே எஜமானன். நீ முற்பிறவிகளில் செய்த நற்பயன்களின் பயனாக உன்னை ஈசுவரன் அதற்கு டிரஸ்டியாக நியமித்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம் . ஆயுள் முடிந்தவுடன் அதை விட்டுச் செல்லத்தான் வேண்டும்  அதை உன்னிடம் கொடுத்ததன் காரணம் நீ பிறரூக்கு அதைக் கொண்டு தான தருமங்கள் செய்ய வேண்டும் என்பதே. "   

" இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார் 
   * கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார் ...." 

( * கரப்பவர்: பிறருக்குக் கொடாமல் தனக்கு மட்டுமே செல்வம் உரியது என்று அதனை மறைத்து வைத்துக் கொள்பவர்கள் )

என்று திருவையாற்றுத் திருப்பதிகத்தில் அருளிச்செய்கிறார்  திருநாவுக்கரசர்.   

Thursday, April 12, 2018

சித்தமும் சிவமும்

திருஞானசம்பந்தர்_ முகநூல் படம் 
" பல ஆண்டுகளாக இப்படி இணைய தளத்தில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதுகிறீர்களே, இதனால் கண்ட பலன் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ? எல்லோரும் படிப்பார்கள் என்றும், இது ஏதாவது மாற்றத்தை அவர்களிடம் ஏற்படுத்தும் என்றும் நினைக்கிறீர்களா? எனக்கு என்னவோ உங்கள் நேரத்தை வீணாகச் செலவு செய்கிறீர்கள் என்றே தோன்றுகிறது '  என்று பொரிந்து தள்ளினார் ஒரு ஆப்த நண்பர்.  அவரது ஆதங்கம் நன்றாகவே புரிந்தது. அதில்  உண் மையும் இருந்தது. சுமார் நூறு பேருக்கு அனுப்பினால் பாதிப் பேர்  அதைத் திறந்துகூடப் பார்ப்பதில்லை என்று புள்ளி விவரம் மூலம் அறிகிறோம். மீதி வாசகர்கள் மேலோட்டமாகக் கதை படிப்பதுபோல படித்துவிட்டு மூடி விடுவார்கள் போல இருக்கிறது. சிலர் பார்த்த மாத்திரத்திலேயே இவருக்கு வேறு வேலை இல்லை, அரைத்த மாவையே அரைப்பார் என்று முகம் சுளித்து விட்டு அழித்து விடவும் வாய்ப்பு உண்டு.  ஐந்துக்கும் குறைவானவர்களே முழுமையாகப் படிப்பவர்கள். சில சமயம் அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பின்னூட்டமாக இடுவதும் உண்டு. 

நவீன உலகில் படிக்கவே நேரம் இல்லாமல் போய் விட வாய்ப்பு உண்டு என்பதால் கட்டுரைகளை மிகச் சுருக்கமாக அமைத்தும் படிக்கவில்லை என்றால் என்ன காரணமாக இருக்கலாம் ? கோவிலுக்குத் தினமும் போவதோ, வீட்டில் பூஜை மற்றும் பாராயணம் செய்வதோ குறைந்து விட்ட நிலையில் நம்மை அனுதினமும் காக்கும் கடவுளுக்காக ஐந்து நிமிடம் கூட ஒதுக்க நேரம் இல்லை என்றால் எப்படி நம்புவது ?  தமிழ் பேச மட்டுமே தெரியும், எழுதிப் படிக்கத் தெரியாது என்று சொல்லும் தற்காலத் தமிழ்க் குடும்பங்கள் ஆங்கிலத்தில் எழுதலாம் என்றும், பேசியதைப் பதிவு செய்யது அனுப்பலாம் என்றும் கேட்கத் துவங்கி விட்டன. அப்போதும் இவற்றைக் கேட்க எவ்வளவு பேர் முன்வருவர் என்பது கேள்விக் குறியே.

ஆனால் நண்பர் கூறியது போல் நேரம் வீணாவதாக ஒருபோதும் நாம் நினைப்பதில்லை. எழுத ஆரம்பிக்கும்போது என்ன எழுதுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும்போது நம் கூட இருந்து சொல்லித்தரும் சிவ கிருபைக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் ? எழுத்து அறிவித்த இறைவன் சொல்லுவதை  அப்படியே எழுதும் பணியாளாக இருப்பதை விட பாக்கியம் வேறு ஏது ? ஈசுவரனது வாக்கானபடியால் அது அவனருள் பெற்றோருக்கே போய்ச் சேரும் என்று எண்ணத் தோன்றுகிறது. எழுதி முடிக்கும் வரை சிந்தையை விட்டு சிவம் நீங்குவதில்லை அல்லவா ? ஆகவே நேரம் செலவாவதில்லை, சம்பாதிக்கப் படுகிறது என்று நண்பருக்கு விடை கூறினோம். நண்பரோ விடாக் கண்டர். " அப்படியானால் சிந்தை என்பது என்ன, மனம் என்பது என்ன? அது உடலில் எங்கே இருக்கிறது? மூளையிலா அல்லது இருதயத்திலா " என்று படபட என்று கேள்விகளை எழுப்பத் தொடங்கி விட்டார்.

  சித்தம்,சிந்தை என்ற வார்த்தைகள் சிந்தனைக்கு ஊற்றுக் கால்களாக விளங்குபவை. முக்தி அடைவதற்கு முதல் படியாக சித்த சுத்தியும்,இரண்டாவதாக பக்தியும் முக்கியமானவை . சித்தம் போக்கு,சிவம் போக்கு என்றும், சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் இல்லை என்றும் சிந்தனையை சிவத்தோடு சம்பந்தப்படுத்தியுள்ளார்கள் பெரியோர்கள். சித்தத்தில் தெளிவு ஏற்படாவிட்டால் பக்தி ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆகவே தான், சித்தத்தைக் கட்டும் மலவாதனை இறை அருளால் மட்டுமே நீங்கும் எனத் தெளிவு படுத்தியுள்ளார்கள். " சித்த மலம் அறுவித்துச்  சிவமாக்கி எனை ஆண்ட "  என்கிறார் மாணிக்கவாசகர்.  

சிந்தனை தூய்மையானதாக விளங்குவது மிகவும் கடினமானதுதான். ஒருவேளை சில மணித்துளிகள் நிர்மலமாக ஆனாலும் விரைவிலேயே அது  களங்கப்பட்டு விடுகிறது. எனவே தினந்தோறும் அதனைத் தூய்மைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு ஒரே உபாயம் இறைவனைப் பற்றிய சிந்தனையை ஏற்படுத்திக் கொள்ளுவதே. " சிந்தனை நின்தனக்கு ஆக்கி " என்று இதனைத் திருவாசகம் கூறும். 

ஆகவே பக்தி நெறிக்கு நம்மை ஆயத்தப்படுத்த முதலாவதாகச் சிந்தை தூய்மை பெறுதல் மிகவும் அவசியமாகிறது. அடுத்தபடியாக ஒன்றிய சிந்தையுடன் இறைவனை மலர்களால் அர்ச்சித்து வழிபடும்போது பக்தி மேலோங்குகிறது. எனவே அது பக்தி மலர்களாகி அர்ச்சனைக்கு உரியதாகிறது. பக்தியாகிய நாரினால் மலர்களைக் கட்டி திருப்புகலூர் வர்த்தமானிசுவரப் பெருமானுக்கு மாலை சார்த்தி வழிபட்டார் முருக நாயனார். புத்தமதத்தைச் சார்ந்த சாக்கிய நாயனார் எறிந்த சல்லிக் கற்களை அவரது பக்தித்திறம் ஒன்றையே கருதி,புது மலர்களாக ஏற்றுக் கொண்டான் சிவபெருமான். 

மனத்  தூய்மையால் விளைந்த பக்தியுடன்  இறைவனை வழிபட்டால் முக்தி எளிதாகும் என்பதைக் கண்ணப்ப நாயனார் புராணத்தாலும் அறிகிறோம். அகத்து அடிமை செய்ததால் அன்பின் வடிவாகவே ஆனார் கண்ணப்பர். இங்கு அகம் என்பது மனமாகிய சிந்தை எனக் கொள்ளலாம். இதைத்தான் சிவானந்தலஹரியில் ஆதி சங்கரரும் எடுத்துக் காட்டி, " பக்தி எதைத் தான் செய்யாது ?" என்றார். 

இவ்வளவு கருத்தாழ்வு கொண்ட ஒப்பற்ற கொள்கையைத்  திருஞானசம்பந்தப் பெருமான் நாமும் உய்ய வேண்டும் என்ற பெருங் கருணையினால் இரண்டே வரிகளில் கீழ்க் கண்டவாறு பாடியருளினார் :

" சித்தம் தெளிவீர்காள்  அத்தன் ஆரூரை 
  பத்தி மலர் தூவ முத்தி ஆகுமே. " 

தெளிந்த சிந்தையுடன் ஆரூர்ப்பெருமானைப் பக்தி மலர்கள் தூவி வழிபட்டால் முக்தி எளிதில் கிடைத்துவிடும் என்பது இதன் கருத்து. 

முத்தி நெறி அறியாத மூடர்களோடு திரியும் உயிர்கள் பால் சிவபெருமான் இரங்கி,கருத்திருத்தி,ஊனுள்ளே புகுந்து, சித்த மலத்தை அறுவித்துச் சிவமயமாக்கிக்  கருணை பாலிக்கிறான் என்ற சிந்தாந்தக் கருத்தும் இங்கு சிந்திக்கற்பாலது .