Sunday, October 18, 2020

மனமும் மதியும்

 

                                                        மனமும் மதியும்  

                                                                          சிவபாதசேகரன்

திருவொற்றியூர் ஆலய கோபுரம் 

உணர்ச்சிமயமான ஒரு நிகழ்ச்சியைப் பற்றி அண்மையில் படிக்க நேர்ந்தது. சுமார் பத்து வயது பெண் குழந்தையாக இருக்கலாம். அந்தப் பெண்ணை  இருதய அறுவை சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். மறுநாளன்று அறுவை சிகிச்சை செய்யவிருக்கும் மருத்துவர் அப்பெண்ணைப் பார்க்க அறைக்கு வந்தார். அப்பெண்ணோ அவரிடம் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு கேள்வி கேட்டாள். “ நாளை நீங்கள் என்னுடைய இருதயத்தைத் திறந்து பார்க்கும் போது என்ன பார்த்தீர்கள் என்று எனக்குச் சொல்வீர்களா” என்றாள். “ எதற்காக அம்மா இப்படிக் கேட்கிறாய்” என்றார் அந்த மருத்துவர். “ என்னுடைய உயிர் சினேகிதி சொன்னது ஞாபகம் வந்தது அதான் கேட்டேன் “ என்றாள்.   அவள்  சொன்னது இதுதான்: “அனுமன் , தனது  மார்பைத் திறந்து அதற்குள் சீதா தேவியும் இராமபிரானும் இருப்பதைக் காட்டுவதாகப்  படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். அதேபோலத்தான்  நம் ஒவ்வொருவருடைய மனத்திற்குள்ளும் நாம் வழிபடும் கடவுள் இருப்பார் “  என்று சொன்னாளாம். கள்ளம் கபடம் அறியாத இக்குழந்தைக்கு அவளது  சிந்தையை விட்டு நீங்காமல் தோழியின் வார்த்தைகள் பதிந்து விட்டதால் மருத்துவரிடம் இப்படிக் கேட்டாள். “ எனக்குத் தெரிந்த கடவுள் என்னைப் பெற்றெடுத்த தாயும் தந்தையுமே ஆவார்கள். என் இதய தெய்வமாகிய அவர்களை நீங்கள் என்னுடைய இருதயத்தைத் திறக்கும்போது பார்ப்பீர்களா டாக்டர் ? “ என்றாள். சுற்றிலும் நின்று கொண்டிருந்த அனைவரது நெஞ்சையும் இக்கேள்வி பிழிந்தெடுத்து விட்டது. அந்தப் பிஞ்சு நெஞ்சுக்குள் தான் எப்படிப்பட்ட நம்பிக்கை !  “ பார்ப்பேன் அம்மா. நாளைக்கு உனக்கு நினைவு திரும்பியதும் கண்டிப்பாக உன்னிடம் வந்து சொல்வேன் “ என்று தன் கண்களில் எழும்பிய நீரை அடக்கிக் கொண்டு பதில் சொன்னார் அம்மருத்துவர்.     

நாமோ வயதாக ஆக , நமது கேள்விக்கான பதில்களை விஞ்ஞான பூர்வமாக எதிர் பார்க்கிறோம். பதில் கிடைக்காமல் போனால் அவற்றை மூட நம்பிக்கை என்று பெயரிட்டு ஒதுக்கி விடுகிறோம். இதயத்திற்குள் கடவுள் இருப்பதாவது என்று சிரித்தபடியே நமது மேதா விலாசத்தைப் பறை சாற்றிக் கொள்கிறோம். காலம் காலமாக விஞ்ஞானத்தால் விளக்க இயலாதவற்றை நமது முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள் என்று யாராவது விளக்கம் தர வேண்டியிருக்கிறது.

முதலில் மனம் என்பது இருதயமா அல்லது தகவல்களைச் சேகரிக்கும் மூளையா என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே காலம் தள்ளுகிறோம். மதி என்பதற்கு மூளையைச் சுட்டிக் காட்டுகிறோம். ஒருவன் புத்திசாலி என்றால்  மனத்தாலா அல்லது மதியாலா என்ற கேள்வி எழுகிறது.

“ என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்று சிவபுராணம் சொல்லும்போது  நெஞ்சகம் என்பதற்கு இதயம்/மனம்  என்றே பொருள் கொள்கிறோம்.  இதை நாவுக்கரசரும் “ மனத்தகத்தான் “ என்றார். சிந்திப்பது என்று வந்து விட்டால் அது மூளைக்கே உரியது என்கின்றோம். “ சிந்தனை நின்தனக்கு ஆக்கி” என்பது திருவாசகம். இதயமாகட்டும் அல்லது மூளையாகட்டும், அவை யாவும் எலும்பும் நரம்பும் உதிரமும் சதையும் தானே! “ மூளை எப்படி உருவாகிறது என்பதை , “ கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்றாகி” எனக் காட்டுகிறது அப்பர் தேவாரம்.

“ நினைவார் தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும்” இறைவனைக் காண வேண்டில், சிந்தை முற்றிலும் சிவமாகவேண்டும். “ என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனியவாறே “ என்றார் சுந்தரர். மனம் அடிமையாகிவிட்டால்  காயம் கோயில் ஆகி விடுகிறது. மனத்தகத்தே உறையும் பரம்பொருள் உச்சியிலும் அமர்கிறான். இதைத்தான் அப்பரும், “ மனத்தகத்தான், தலைமேலான் “ என்று அருளினார்.

இவ்வாறு மனமும் மதியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மதியாவது மூளையையும், சிந்தனையையும் மட்டுமே குறிக்காமல் சந்திரனையும் குறிக்கும். மதி சேகரன் என்று அம்புலியைச் சூடிய சிவபெருமான் குறிக்கப்படுவதால் இதனை அறியலாம். ஜாதகத்தில் சந்திரன் பாதகமாக அமைந்திருந்தால் மனநலம் குன்றியவர்களாக இருப்பார்கள் என்று ஒரு பிரசங்கமே செய்துவிடுவார்கள் சோதிட வல்லுனர்கள்.

“ நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் “ என்றபடியால் அந்த மனமாவது இதயத்தைக் குறிப்பதா அல்லது மதியைக் குறிப்பதா என்று கேட்கலாம். சிவாகமம் இரண்டையும் போற்றுகிறது. கும்பாபிஷேக யாக சாலை பூஜையில் ,தனது மார்பிலும் சிரத்திலும் ஆசாரியர் மலர்  தூவித் தியானிப்தைப் பார்க்கிறோம். இறைவன் வீற்றிருக்கும் மார்பிற்குத் தரப்படும் மரியாதை , அதன் மீது சூட்டப்பெறும் ருத்ராக்ஷ மாலை என்றால் அதுவும் கொள்ளத்தக்கதே. சிரோவடமாலை என்பது தனது சிரத்தைச் சுற்றி அணிந்து கொள்ளும் ருத்ராக்ஷ மாலை. இதுவும் அத்தகையதே.

கடலில் மனமாகிய  தோணியைக் கொண்டு நாம் கடக்க முயலுகிறோம். அதற்கேற்றபடி நமது மதி (சிந்தனை) ஒரு துடுப்பை ( கோலை ) நமக்குத் தருகிறது . அதில் உள்ள சரக்கோ சினம் என்பது. அப்போது இடைப்பட்ட  ஒரு பாறையில்  இந்தத் தோணி மோதி விட்டால் யாரே துணையாக வருவர்? இறைவனைப் பற்றிய சிந்தனையாவது அப்போது வர வேண்டும். அப்படிப்பட்ட உணர்வும் இறைவன் தந்தே வர வேண்டும். அதனைத் தனக்கு வரமாக அளிக்க வேண்டும் என்று திருவொற்றியூர்ப் பெருமானைப் பாடுகின்றார் திருநாவுக்கரசர்.   

“ மனமெனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றிச்

சினமெனும் சரக்கை ஏற்றிச் செறி கடல் ஓடும்போது

மனன் எனும் பாறை தாக்கி மறியும் போது அறிய ஒண்ணாது

உனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.”   

மனத்தாலோ மதியாலோ வழிபட்டாலும் இறைவனது கருணை ஒன்றை மட்டுமே நாம்  துணையாகப் பெற வேண்டும் . இச் சித்தாந்தக் கருத்தைக் குறிப்பதாக மேற்கண்ட பாடல் அமைகிறது . அவ்வழிபாடும் அவனருளாலே நிகழ்வதாகும். “ சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி” என்று ஔவையும் விநாயகர் அகவலில் விளக்கியமை காண்க.   

2 comments:

  1. சரோவடம் பற்றி நல்ல குறிப்பு.
    அப்பர் ஸ்வாமிகளின் திருவொற்றியூர் தேவாரம்:- மனன் எதை் குறிக்கிறது - ஆணவ மலமா? மதி- உறுதியாக, ஊன்றி, அழுத்தமாக வழி நடத்த வேண்டும். மனம் ஒரு கொள்கலம் போல. கவிழ்வது கடலில் புயல் மழை வந்தால் தோணியும், வாழ்க்கையில் இன்னல்கள் வந்தால் மனமும். உலக வாழ்க்கையாகிய கடலில் பயணிக்கும் போது நாம் சினம் எனும் சரக்கை ஏன் பற்றுகிறோம். புயலில் மூழ்காமல் இருக்க சரக்கைத் தூக்கி வீசலாமே. நல்வினை, தூய எண்ணங்கள், செயல்கள் என்ற நேர்மறை சரக்கு இருந்தால் புயல் எனும் எதிர்மறையும் ஒதுங்கிவிடுமோ?

    ReplyDelete
  2. I just pumped upon your valuable thoughts on Saiva Thirumuraigal and Nayanmars. It will be immensely useful to the seekers of Saiva Siddhanta as you rightly mentioned. Your religious discourses will be remembered by those who are in pursuit of Salvation in the path laid down by Nalvars.

    ReplyDelete