Thursday, October 4, 2018

அஞ்சுவது யாதொன்றும் இல்லை

சாணக்கியர் காலம் தொட்டே கல்வி கேள்விகளில் நிபுணர்களும் துறவியர்களும் அரசாங்கத்தைச் சார்ந்து வாழவில்லை. அரசாங்கமே அவர்களை நாடி அவர்களது அறிவுரைகளின்படி அரசாட்சி செய்தது.  வேதாரண்யத்தில் தங்கியிருந்த திருஞான சம்பந்தரை நாடிச் சென்று பாண்டியநாட்டிற்கு வருகை தந்து சைவத்தை மீண்டும் புனருத்தாரணம் செய்ய வேண்டி அழைப்பு விடுத்தார் பாண்டிமாதேவி. சமணத்  துறவியர் பேச்சைக் கேட்டுப் பலவகையாலும் ராஜ தண்டனைக்குத்  திருநாவுக்கரசரை ஆளாக்கிய  பல்லவ மன்னன், தனது பிழைக்கு வருந்தி மீண்டும் சைவனாகிக் குணபர வீசுவரம் என்ற சிவாலயத்தை எழுப்பினான். பாண்டி நாட்டு யாத்திரை செய்த சுந்தரர் பெருமானுடன் மூவேந்தர்களும் கூடவே நின்று திருப்பரங்குன்றத்தைத் தரிசித்தனர். எனவே தவத்தாலும் கல்வி அறிவாலும் மேம்பட்டவர்கள் அரசனிடம் சென்று புகழ்ந்து பேசுவதையோ, பாடுவதையோ,பாராட்டுவதையோ  செய்வதில்லை. செல்வந்தரை நாடிப் " பாரியே  என்று  பாடினும் "  கொடுப்பார் இல்லாததால் இறைவனை மட்டுமே பாடியதோடு  மற்றவர்களையும் அவ்வணமே இருக்குமாறு அருளாளர்கள் உபதேசித்தனர். 

தற்காலத்தில் யாது காரணத்தாலோ நரர்களைப் புகழ்ந்து பேசுவதும் அவர்கள் மீது கவிதை எழுதுவதும் வழக்கமாகி விட்டது.  மொழிக்கும், மக்களுக்கும், சமயத்திற்கும் , தினை  அளவு உதவியைத் தக்க நேரத்தில் செய்தாலும் நன்றி பாராட்டத்தான் வேண்டும். சந்தேகமே இல்லை. அதற்காக சமயத்திற்கோ,மொழிக்கோ சொல்லும்படியாக எதையும் செய்யாதவர்களையும் , இன்னும் சொல்லப்போனால், அவற்றிற்குப் பாதகம் விளைவித்தவர்களையும் புகழ்ந்து கவிதை பாடுவதை என்னென்பது ? அதிலும் இக்கவிதைகள் திருமடங்களின் சஞ்சிகைகளில் வெளிவருவதற்கு என்ன நோக்கம் இருக்க முடியும்? 

ஒருக்கால் பதவியாலும், பண பலத்தாலும் பிரபலம் ஆனவர்களைப் புகழ்ந்தால் பிற்காலத்தில் ஏதோ வகையில் பயன் படலாம் என்றோ அல்லது அவர்களால் தீங்கு வந்து விடக் கூடாது என்ற பயத்தாலும் இவ்வாறு செயற்கையாகப் புகழக் கூடும்.  சமயம் அரசாங்கத்தை நாடுவதால் இவ்விதமே நிகழும் . இதில் ஐயமில்லை. அரசாங்கம் சமயத்தை நாடுவதானால், சமயத் தலைவர்கள் தவ வலிமையையும், ஒழுக்கமும் நிறைந்தவர்களாக இருத்தல் அவசியம். ஓடும் செம்பொன்னும் ஒன்றே என நோக்குபவர்களாக இருக்க வேண்டும். விலை மதிப்பற்ற மணிகள் தனக்கு முன்னே கிடந்தாலும் அப்பர் பெருமான் அவற்றை விரும்பாது அகழியில் எறிந்தார் அல்லவா? அதுபோன்ற மாசற்ற துறவிகளைத் தேடி அரசாங்கம் தானாகவே  வரும். துறவிகளும் அவர்களது திருமடமும் அரசுக்குப் பணிய வேண்டிய அவசியம் அப்போது ஏற்படாது.

சங்க வெண் குழை அணிந்த சங்கரனுக்கு மீளா ஆட்பட்டு அவனது சேவடிகளை அபயமாக அடைந்தவர்கள் வேறு எவருக்கும் குடியாக மாட்டார்கள். துன்பம் என்பதை அறிய மாட்டார்கள். அவர்களுக்கு எந்நாளும் இன்பமே. பிணி என்பதையோ நரக வேதனையையோ  அறிய மாட்டார்கள். பிறரைப் பணிய மாட்டார்கள். ( " மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே " என்றார் சுந்தரரும். ) இக் கருத்தை நமக்கு உபதேசிக்கிறார் திருநாவுக்கரசர். 

நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் 
நரகத்தில் இடர்ப் படோம் நடலை இல்லோம் 
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோமல்லோம் 
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை 
தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மையான சங்கரன் 
நற் சங்க வெண் குழையோர் காதிற் 
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் 
கொய் மலர்ச் சேவடி இணையே குறுகினோமே "