Sunday, July 19, 2020

சடைமுடி அழகன்



திருஞான சம்பந்தர் 
எண் சாண் உடலுக்கு சிரசே ( தலையே ) பிரதானம் என்பார்கள். மனித உடலில் பல பாகங்கள் இருந்தபோதிலும் ஐம்புலன்களான மெய்  வாய்,கண் ,மூக்கு,  செவி ஆகியவற்றுள் மெய்யைச் சேர்க்காவிடில் எஞ்சிய நான்கும் தலையைச் சேர்ந்தவைகளே. அதனால் அங்கமாலை பாட வந்த அப்பர் பெருமானும், எடுத்த எடுப்பிலேயே, " தலையே நீ வணங்காய் " எனப் பாடி அருளுகின்றார். பின்னர் அதன் பாகங்களாக, கண்,செவி,மூக்கு,வாய் என ஒவ்வொன்றாகக் குறிப்பிடுகிறார். மெய் என்பதை , ஆக்கை என்கிறார் அவர். இவ்வாறு மனித உடலைக் கேசாதி பாதமாகக் குறிப்பிடுவது ஒரு மரபு போல  தெய்வங்களைப் பாதாதி கேசமாகவும் பாடுவதும்  மரபு. கண்கள்இரண்டும்  பெருமான் கழல்களைக் கண்டு களிப்பதற்காகவே ஏற்பட்டவை என்பது திருவாசகம் நமக்கு காட்டும் நல்லுபதேசம்.

ஒரு முகம் அழகாகத் தோற்றம் அளிக்க வேண்டுமானால், கண்களும், மூக்கும் வாயும் அழகாக அமையப்பெற்று இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் அது மட்டும் போதுமா? அழகிய முடி ஆடவர்க்கும், நீண்ட கருங்  கூந்தல் பெண்டிர்க்கும் இருந்தால் அழகுக்கு அழகைச் சேர்க்கும் என்பதில் மாற்றுக்  கருத்து இருக்க முடியுமா ? 

சிவபெருமான் ஞான மயமானவன். அந்த ஞான பரமேசுவரனுக்கு ஞானத்தின் அடையாளமாக இருப்பது சடை முடி ஆகும். சிவ ஞானப் பாலமுதம் பருகப்பெற்றதால் சீர்காழிப் பிள்ளையார் " திருஞான சம்பந்தர் ஆயினார் " என்று பெரிய புராணம் கூறுகிறது. தான் பெற்ற  ஞானத்தை உலகோருக்கு அறிவிக்க வேண்டிய கருத்துடன் ஞானத்தின் அடையாளமான திருச் சடையைத்  தனது பாடல்களில் ஏராளமான இடங்களில் அழகுற  எடுத்துரைக்கக் காணலாம். அவற்றுள் ஒரு சிலவற்றையேனும் இங்கு நோக்கி மகிழ்வோமாக.

அந்த ஞான மயமான சடைக்குத்தான் அக்குழந்தையின்  வாக்கில் எத்தனை வருணனைகள் ! நீண்ட சடையாதலால் " நீள்  சடை " என்றும், நிமிர்ந்து விளங்குவதால் " நிமிர் சடை "  என்றும், பின்னால் தொங்கவிடப்படுவதால்,     " தாழ் சடை " என்றும், செந்நிறம் கொண்டு விளங்குவதால், " செஞ்சடை " என்றும் , இயல்பாகவே மலர்களைப்போல் வாசனை கொண்டு விளங்குவதால் ( " வாச மலர் எல்லாம் ஆனாய் நீயே"- அப்பர் தேவாரம்)             " கமழ் சடை " என்றும் மென்மையாக இருப்பதால் " மென் சடை " என்றும் அழகு தமிழால் பாடுகின்றார்.

இனி, அச் சடையில் குடி கொண்டு இருப்பவை யாவை என்னுமிடத்து, முதலாவதாக நினைவுக்கு வருவது இளம்பிறை என்பதால் ( " சடையும் பிறையும்" - சம். தேவா- திருக்கோலக்கா) சூரியனின் ஒளியால் ஒளி பெறும் சந்திரன், சுயம்பிரகாசனாகிய சந்திர சேகரனிடம் தஞ்சம் அடைந்தவுடன் மூன்றாம் பிறைச் சந்திரனாகத் தங்குகிறான்.  அப்பரும் இதனை, " வார் சடை மேல் திளைக்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே" எனப் பாடுவார். அச்  சடையில் தங்கியதால் சந்திரனுக்கும் ஞானம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் இறைவனுக்குச்  சந்திரனின் வரவால்  அழகு கூடுவதில்லை. மாறாகப் " பித்தா பிறை சூடி " என்று அருளாளர் வாக்கில் இறைவனைப் பாடும்போது சந்திரனின்  பெயரும் அதில் நிலைக்கும் பேறு கிட்டி விடுகிறது.

அடுத்தபடியாக நமது நினைவில் திகழ்வது கங்கை அப்புனிதமான சடையில் இடம் கொண்டிருப்பது.ஆகும்.  " கங்கை வார் சடையாய் " என்று முழங்குகின்றன திருமுறைகள், கங்காதராய நம: என்ற அர்ச்சனை ஒலியும் கேட்கிறது. பகீரதன் தவம் செய்து கங்கையை நிலவுலகத்தில் பாயுமாறு வேண்டி நிற்க, கங்கை ஆயிரம் முகத்தாளாகிக் கடுமையான வேகத்துடன் பாய்தலால் மண்ணுலகம் மாய்ந்து விடும் அபாயம் ஏற்படவே , ஈசன் தனது சடையை விரித்து அதில் கங்கையை அடக்கியதாக வரலாறு. அதனை சம்பந்தப்பெருமான் கூறும் அழகைப் பாருங்கள். அக்கடுமையான வெள்ளம் சடையில் பாய்ந்த போதும், அதனால்  அச்சடை முடியை அசைக்கக்கூட முடிய வில்லையாம். " கடுத்துவரும் கங்கை தன்னைக் கமழ் சடை ஒன்று ஆடாமே  தடுத்தவர் " என்று பாடுவதால் அதனை அறியலாம்.
 " விரி சடை வெள்ளம் தரித்தான் " என்பது அவரது மற்றொரு  பாடல் தரும் செய்தி.

பிறையையும் கங்கையையும் ஏற்ற கடவுள் மேலும் சிலவற்றை அச் சடையில் ஏற்றதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அச்சடையை அலங்கரிக்கும் மலர்களோ மானுடர்கள் சூட விரும்பாதவை. ஊமத்தை மலரையும், வெள்எருக்கையும் கொன்றையையும் யாரே விரும்புவர்? மணம் மிக்க மலர்களை உலகோருக்கு அருட் கொடையாக அளித்து விட்டுத் தனக்கு மணமற்ற மலர்களை ஏற்கும் தன்மையால் தியாகராஜன் ஆகிறான் அதே சமயம் வாசமில்லா மலர்கள் பெற்ற பேறு  தான் என்னே !  வன்னியும்,மத்தமும்,கூவிளமும் கொன்றையும் சூடியை எத்தனையோ பாடல்கள் நமக்கு காட்டுகின்றன. ஆத்தியும் கொன்றையும் சூடிய சடைமுடிக் கடவுளை நினைந்து, ஆத்தி சூடி என்றும், கொன்றை வேந்தன் என்றும் நூல்களின் பெயர்கள் அப்பெருமையைப் பறை சாற்றுகின்றன.

இதோடு நில்லாமல், பாம்பும், பிரமனது நகு தலையும் அச் சடையில் திகழ்கின்றன. ஒரே வரியில்,  இவை யாவும் திகழ்வதை ஞான சம்பந்தர்,             " அரவும்  அலை புனலும் இள மதியும் நகு தலையும் " என வருணிப்பது  மகிழத்தக்கதொன்றாகும். இவை யாவும் இறைவனுக்கு அழகே ஆகும் என்று திருச்சோற்றுத்துறைத் திருப்பதிகத்தில் திருநாவுக்கரசர் அருளுகின்றார்.

எடுத்துக்காட்டாக அது திருப்பதிகத்தில் அமைந்துள்ள ஒரு பாடலை நினைந்து நிறைவு பெறுவோமாக.

" வண்டணை கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவும்

  கொண்டணைந்து ஏறும் முடியுடையான் குரை சேர் கழற்கே

  தொண்டணைந்து ஆடிய சோற்றுத்துறை யுறைவார்சடை மேல்

  வெண்டலை மாலையன்றோ எம்பிரானுக்கு அழகியதே.

ஈசனின் பாகத்தவளான உமையம்மையும் ஜடாமகுட வல்லியாகத்

 திகழ்வதும் நமது சிந்தைக்கு விருந்தாகத்  திகழ்வதாகும்.








 




Monday, July 13, 2020

தமிழ்ச் சொல்லும் பொருளும்




நம்மில் பலருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை. ஆங்கிலச் சொற்கள் பலவற்றுக்கு நேரான தமிழ்ச் சொல் இல்லை என்ற எண்ணம். இதையே நாமும் திரும்பிச் சொல்ல முடியும். தமிழில் உள்ள சொற்கள் பலவற்றுக்கு ஆங்கிலத்தில் நேரான சொற்கள் உண்டா என்று. சில வார்த்தைகளும் அப்படித்தான். உதாரணமாக, நீங்கள் உங்கள் தந்தைக்கு எத்தனையாவது மகன் என்பதை ஆங்கிலத்தில் சொல்லக் சொன்னால் தடுமாறுவர். சில சமயங்களில் நமக்குத் தெரியவில்லை என்றால் பழியை மொழியின் மீது போடுவோம்.

முதலில் தமிழ்ச் சொற்களைப்  பிரித்து வாசிப்பதிலேயே நமக்கு அடிக்கடித் தடுமாற்றம் வந்து விடுகிறது. சிலர் தேவை இல்லாதபோதும் எளிதாகப் புரிய வைப்பதாக நினைத்து மொழியைப் பிளந்து காட்டுகிறார்கள். இப்போது வெளியிடப்படும் சமய நூல்கள் பலவும் இந்த கதிக்கு ஆளாகின்றன. தேவை அற்ற இடங்களில் அபத்தமாகப் பிரித்துப் புத்தகம் வெளியிடுகிறார்கள். எதுகை, மோனை ஆகியவற்றோடு பாடப்பெற்ற பாடல்கள் இவ்வாறு சந்தி பிரிக்கத் தெரியாதவர்களால் சித்திரவதைக்கு உள்ளாகிறன.

அண்மைக்  காலத்தில் அச்சாகி வெளியிடப்பட்ட திருவாசகப் பிரதி ஒன்றைப்  பார்க்கையில் மேற்கண்ட கருத்து வலுப்பெற்றது. படிப்பவர்கள் அப்படி ஒன்றும் தமிழறிவு சுத்தமாக இல்லாதவர்கள் அல்ல என்பதை இப்பதிப்பாளர்கள் உணர வேண்டும். தாளிணை என்பதை வேண்டுமானால் தாள் இணை என்று பிரித்துக் கொள்ளட்டும். அருளியவாறு என்ற சொல் கூடத்  தெரியாதவர்களா நூலைப் படிக்கப் போகிறார்கள் ? எவ்வாறு பிரித்து அச்சிட்டிருக்கிறார்கள் தெரியுமா ? "அருளிய ஆறு "  என்று. எளிதில் விளங்க  வைப்பதாக நினைத்துக் கொண்டு  குழப்பி விடுகிறார்கள்.. ஆறு என்பது எந்த ஆற்றைக் குறிக்கிறது என்று ஒருவர் கேட்பார். அதற்கு ஒருவர் கங்கை என்றும் மற்றொருவர் காவிரி என்றும் உரை எழுதத் துவங்குவார். " ஐயன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் " என்று மணிவாசகர் பாடியுள்ளதை         " அருளிய ஆறு ஆர் பெறுவார் " என்று வெளியிட்டிருப்பது தற்காலத் தமிழ் அறிவு எவ்வாறு உள்ளது என்பதற்கு உதாரணமாக உள்ளது.

பல்லாண்டுகள் முன்னர் திருவாசக முற்றோதுதல் ஒன்று நடைபெற்றது. அதைக் காணச்சென்றிருந்தேன் . ஓதுவா மூர்த்திகள் ஒரு பாடலில் வரும் சொல் ஒன்றைப் பிரித்துப் பாடியபோது குழுமியிருந்தோர் அனைவரும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. " போனகமாக நஞ்சுண்டல் பாடி " என்பதை நஞ்சு உண்டல் பாடி என்று பிரித்துப் பாடியிருக்கலாம். ஆனால் அவரோ, " நம் சுண்டல் பாடி " என்று பாடினார். சிரிக்காமல் என்ன செய்வது !!

நிலைமை இவ்வாறு இருக்கும்போது, தமிழில் நேரான சொல் இல்லை என்ற கருத்தைக் கூற முன்வருவது பரிதாபம்.

குழு வேறு . கூட்டம் வேறு. கூட்டம் கூட்டமாகத் தொடர்ந்து வந்தபடி இருப்பது வேறு.  இதனை ஆங்கிலத்தில் முறையே group , crowd , swarm என்று ஓரளவு பொருள் காணலாம். swarm என்பதற்குக்  கூட்டம் கூட்டமாகத் தொடர்ந்து வருதலைக் குறிப்பதாகப் பொருள் காண்கிறோம். swarm of bees என்ற சொல்லாட்சி பிரபலமானது.  அதனைத் தமிழில் சுருக்கமாகக்  குறிப்பிட  முடியுமா என்று யோசிக்கலாம். பசுக்கூட்டத்தை ஆநிரைகள் என்று வழங்கப்படுவதை அறிவோம். கூட்டம் கூட்டமாகத் திரண்டு படைகள் போல் வருவதை எப்படிக் குறிப்பது? திருவாசகம் வழி காட்டுவதைப் பார்ப்போம்.

திருப்பள்ளியெழுச்சியில் ஒரு பாடல். உதயற்காலத்தில் கீழ்த்திசையில் அருணோதயம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சூரியோதயமும் நடைபெறுகிறது.இருள் அகல்கிறது. சிவபெருமானின் மலர்த் திருமுகம் போன்ற சிவந்த நிறத்தில் கதிரவன் உலகம் உய்ய வெளிப்படுகிறான். பெருமானது வலது கண்ணே ஆதித்தன் அல்லவா ? உயிர்கள் உய்யும்  பொருட்டாக மட்டுமல்லாமல், தாவரங்களும் மகிழ்ச்சியுற அவ்வாறு எழுகிறான். தாமரை மலர்ந்து பகலவனை வரவேற்கிறது. அம்மலரைக் கண்டு அதனிடம்  தேன் பருக வரும் ஆறு கால் வண்டினங்கள்  குதூகலிக்கின்றன. வைகறைக்காலத்தில் திருப்பெருந்துறை உறை  சிவபெருமானை அருள் நிதி தர வரும் ஆனந்த மலையாகப் பரவி அலைகடலாக அன்புடன் அழைத்துப் பள்ளியெழுந்தருளுமாறு துதிக்கிறார் மாணிக்க வாசகப் பெருமான்.

ஆறு கால்களை உடைய வண்டுகள் கூட்டம் கூட்டமாக வந்து மலர்களை மொய்ப்பதைத் திரள் திரளாக வருவன என்பார் வாதவூரர்.எனவே அவற்றை, " திரள் நிரை  அறுபதம் முரல்வன " எனப்பாடியருளுகிறார்.

அப்பாடல் முழுதும் வருமாறு:

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்

அகன்றது ; உதயம் நின்  மலர்த்திருமுகத்தின்

கருணையின் சூரியன் எழ எழ நயனக்

கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்

திரள் நிரை  அறுபதம் முரல்வன இவையோர்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே

அருள்நிதி தரவரும் ஆனந்தமலையே

அலைகடலே  பள்ளி யெழுந்தருளாயே .


திரள் என்பது திரண்டு நின்ற தன்மையைக் குறிப்பதாகும். ஞானமே திரண்டு ஏக உருவில் நிற்பதால் அண்ணாமலையானை, " ஞானத் திரளாய் நின்ற பெருமான் "  என்று திருஞானசம்பந்தர் பாடியருளியது இங்கு நினைவு கூறத்தக்கது. 
.