Wednesday, December 9, 2020

பாதமே துணை

 

                                                       பாதமே துணை             

                                                                           சிவபாதசேகரன்


                                                                                              மாணிக்கவாசகர் 


நாம் யாரைச் சார்ந்து வாழ்கிறோமோ அவர்களது பழக்க வழக்கங்கள் நம்மை வந்தடைகின்றன. உலகில் நல்லவர்களாக வாழ, நல்லவர்களின் துணையும் வழிகாட்டுதல்களும் தேவைப் படுகின்றன. குடும்பத்திலுள்ள நற்பண்புகளிலிருந்து துவங்கி வெளியில் பழகும் வரை நல்ல பழக்கம் ஏற்பட இது வகை செய்கிறது. அது இல்லாதவனைப் “பழக்க தோஷம்” உள்ளவனாக அடையாளப்  படுத்துகிறோம். ஆணவம்.கன்மம்,மாயை ஆகியவற்றின் வசப்படும் உயிர்கள் தாமே உயர்கதி அடைய சக்தியற்ற தன்மையால் இறைவனது கருணையால் மட்டுமே உய்யப்பெறுகின்றன. பாசத்தோடு கட்டுண்ட பசுக்களாகிய உயிர்கள் பதியின் துணையினால் உய்யப்பெறுவதை சித்தாந்த நூல்கள் விரிவாகக் கூறுகின்றன.

உலகைப் படைக்கும்போதே உயிர்களின் பக்குவத்திற்கேற்றபடி கருணை பாலிப்பதால் தனிப் பெருந்துணையாக இறைவன் விளங்குவதை ,              “ எனக்கு ஆர் துணை நீ அலதே “ என்ற திருமுறை வாக்கால் அறிகிறோம். உயிர்களுக்கு உருவத்தைத் தந்த ஈசனே அவற்றின் அங்கங்கள் யாவும் அவனை வணங்கிப் போற்றுவதற்காக அமைத்து,  உய்யும் வழியைக் காட்டியுள்ளான். தானும் ஓர் உருவெடுத்து முன்வந்தருளி சிவனுக்கும் சீவனுக்கும் உள்ள சம்பந்தத்தை உணர்த்துகிறான். சீவன் சிவனை அடையாளம் கண்டவுடன் சிவ சம்பந்தமாகி, பழக்கமும் அவ்வுயிர்க்கு  ஏற்பட்டுவிடுகிறது. சிவ புண்ணியத்தை ஈட்டிய உயிர்களுக்கு இப்பழக்கம் பணி செய்வதன் மூலம் சித்திக்கிறது. சித்த மலம் அறுபட்டுச்  சிவமாகிறது. இதற்கு எதுவாக அமையும் முதற்கட்ட வழிபாடே உருவ வழிபாடு.

உருவ வழிபாட்டில் முதலிடம் பெறுவது, அவ்வுருவத்தின் பாதமே கதி என்று பணி செய்வதாகும். “ திருவடிக்கு ஆம் பவமே அருளு கண்டாய் “ என்பது திருவாசகம். பாதாதி கேசமாகத் திருவுவைப் பெரியோர் வணங்குவர். திருவடிகளைக் காண்பதை  ருத்ர பாத தரிசனம் என்று திருவாரூரில் அழைப்பார்கள். “ எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே “ என்பார் அப்பர் சுவாமிகள். ஆலயங்களில் அர்ச்சனைகளும் அப்பொன்னடிக்கே செய்யப்படுகின்றன. பிரார்த்தனையும் பொன்னடிக்குச் செய்யப்படுவதை, “ பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் “ என்ற அப்பர் வாக்கால் அறிகிறோம்.

தீக்ஷா கிரமங்களில் திருவடி தீக்ஷை முக்கியத்துவம் வாய்ந்தது. இறைவனே குருவாக எழுந்தருளித் திருவடியைச் சிரத்தின் மீது வைத்தருளுவது அருளாளர்களுக்கே வாய்க்கும். சுந்தரர் துயின்று கொண்டு இருந்தபோது இறைவன் அவரது முடியில்  திருப்பாதத்தைச் சூட்டி அருளியதும், நல்லூரில் நாவுக்கரசருக்குத் திருவடி சூட்டியதும், பெரிய புராணம் நமக்கு அறிவிக்கும் செய்திகளாகும்.  “ திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் “ என்ற அப்பரது தேவார வாக்கு இதற்கு அகச் சான்றாக அமைகிறது. வைணவக் கோயில்களில் சடாரி சார்த்தப்படுவது போலவே நல்லூரிலும் சேவார்த்திகளின் சிரத்தில் திருப் பாதம் சார்த்தப்படுகிறது. 

இன்னம்பர்,திருவையாறு ஆகிய தலங்களில் அப்பர் பெருமான் அருளிய பதிகங்கள் பலவற்றுள் திருவடியைப் பாடல் தோறும்  போற்றுவதாக அமைந்துள்ளன. திருவதிகை வீரட்டத்துப் பதிகங்களில் ஒன்று திருவடித் திருத்தாண்டகம் என்பதாகும். அதில் ஒவ்வொரு வரியிலும் அப்பரடிகள்  சிவ பெருமானின் திருவடிகளைப் போற்றுவதாக உள்ளது அறிந்து இன்புறத்தக்கது. அதில் ஒரு பாடலை இங்குக் காணலாம்:

“அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி

அருமறையான் சென்னிக்கு அணியாம் அடி

சரவணத்தான் கை தொழுது சாரும் அடி

சார்ந்தார்கட்கு எல்லாம் சரணாம் அடி

பரவுவார் பாவம் பறைக்கும் அடி

பதினெண் கணங்களும் பாடும் அடி

திரைவிரவு தென் கெடில நாடன் அடி

திரு வீரட்டானத்து எஞ் செல்வன் அடி. “

{ அரவணையான்- பாம்பணையில் துயிலும் திருமால்; அருமறையான்- பிரமன்; சென்னி-சிரம்; சரவணத்தான்-முருகன்; சார்ந்தார்கட்கு – தன்னைச் சரண் என்று சார்ந்தவர்களை; பரவுவார்-துதிப்பவர்கள்; கெடில நாடன் – கெடில நதி அருகே கோயில் கொண்டுள்ள திருவதிகைப் பதி }

இப்பதிகத்தில் இறைவனது திருவடி, காலனைக் காய்ந்தது, அரக்கனான இராவணனின் ஆற்றலை அழித்தது, கணக்கு வழக்கைக் கடந்தது, அழகு எழுத முடியாத அருட் சேவடி, உரு என்று உணரப்படாத அடி, உரையால் உணரப்படாத அடி, மந்திரமும் தந்திரமும் ஆய அடி, மருந்தாய்ப் பிணி தீர்க்க வல்ல அடி என்றெல்லாம் திருவடியைப் பலவாறு போற்றுகின்றார் தாண்டக வேந்தராகிய அப்பர் பெருமான்.  

திருவடிகளே ஆதியும் அந்தமும் ஆவன.அவையே பல்லுயிர்களின் தோற்றத்திற்கும், போகத்திற்கும், மறைவுக்கும் கார்ணமாவன. திருமாலும் பிரமனும் காணாத அத்  திருவடிகளே நம்மை ஆட்கொண்டு அருளுவன. இவை அனைத்தையும் ஒரே பாடலில் தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்க வழங்குகிறது மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடல். அப்பாடலின் மற்றுமோர் அழகாவது அத்திருவடிகளின்  வருணனையே. அதனைப் , பாதமலர், செந்தளிர்கள்,பொற்பாதம், பூங்கழல்கள், இணை அடிகள், புண்டரீகம் ஆகிய சொற்களால் சொற்பதம் கடந்த தொல்லோனுக்குச்  சொன்மாலை அணிவித்து அகமகிழ்கிறார் மாணிக்கவாசகர்:

“போற்றி அருளுக நின் ஆதியாம் பாத மலர்

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணை அடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றி யாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். “

“ கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன் “ என்ற அப்பர் வாக்கும் இங்கு சிந்தித்தற்குரியது.

Wednesday, December 2, 2020

சைவத்திலும் "இராமாநுஜர்கள்" உண்டு


 தமிழ் மொழியை முன்னிறுத்திக் கொண்டு பின்னால் இருந்து குளிர் காயும் கயவர் கூட்டம் பெருகி விட்டது. இக்கூட்டத்தினர்  அப்படி ஒன்றும் தமிழ் மீது ஆறாக்  காதல் கொண்டவர்கள் அல்லர். தமிழின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்கள். ஏமாந்து போகிறவர்கள் இருக்கும் வரை இவர்களது பிழைப்பு கொடி கட்டிப் பறக்கும். ஏழேழு தலைமுறைக்கும் இவ்வகையில் பணம் சம்பாதித்தும் இவர்களுக்குப்  பண வெறி அடங்கவில்லை. இதில் பலிகடா ஆக்கப்படுவது தமிழ் மொழியும் அதைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும் ஆவர்.

தமிழ் மொழி தொன்மையானது என்று இன்று மார் தட்டிக் கொள்வதற்கு மூல காரணமாகவும் ஆதாரமாகவும் விளங்குவன இதிலுள்ள பழம் பெரும் இலக்கியங்கள் என்பதை மறக்கலாகாது. இல்லாவிட்டால் மண்ணைத் தோண்டும் போது கிடைக்கும் பாண்டங்களை மட்டும் பார்த்துக் கொண்டு பண்டைத் தமிழர் நாகரீகம் என்று வேண்டுமானால்  சொல்லிக் கொள்ள  முடியும். அழிந்தவை போக எஞ்சிய இலக்கியங்களை ஊர் ஊராகச் சென்று மீட்டெடுத்து அச்சிலேற்றிக் காப்பாற்றிக் கொடுத்தவருக்குக் கூட நன்றி செலுத்தாத அளவுக்கு சாதி ரீதியில் மக்களைப்  பிரித்துப் பணம் கண்டவர்கள் தங்களைத்  தமிழ்க் காவலர்கள்  என்று கூறிக் கொள்வதையும் அதை நம்பும் மக்களையும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

தமிழை முறையாகக் கற்காதவர்களும் , அரை குறையாகப்  படித்தவர்களும் மக்களது அறியாமையைப் பயன் படுத்தி ஏமாற்றுகிறார்கள். இதில் மயங்கிய மக்களோ அவர்களை அறிஞர்கள் என்று போற்றுவதும் சிலை வைப்பதும் பட்டங்களைக் கொடுப்பதுமாகத் தம்மைத் தாமே மேலும் ஏமாற்றிக் கொள்கிறார்கள். ழகரமும், லகர ளகரங்களும் பேசத்  தெரியாததோடு மெல்லினத்திற்கும் வல்லினத்திற்கும் வேறுபாடு அறியாதவர்கள் அந்த அறியாமையைச் சுவரொட்டிகள் மூலம் வெளிப்படுத்துவது நகைப்புக்கு உரியது. 

ஆன்மீக உலகிற்கு வெளியில் அநேகம் நடக்கக் கூடும். அது பற்றி விமர்சிப்பது நமக்கு நோக்கம் அல்ல. அதே நேரத்தில் தமிழ் அறிஞன் என்றும் சொற்பொழிவாளர் என்றும் சொல்லிக் கொண்டு சமயத்தைப் பிளவு படுத்துவதும் மக்களுக்குள் காழ்ப்பு உணர்ச்சிக்கு வித்திட்டு பணம் சம்பாதிப்பவனைக் கண்டிக்காமல் இருப்பது நியாயமாகாது. குற்றமும் ஆகும். அதைக் கடந்து விடுவது அன்னையை இழித்துப் பேசியவனைக் கடந்து போவதற்குச் சமம். 

வழக்கம் போலத்  தன்னை மேதாவியாக நினைத்துக் கொண்டும், தமிழ்க்  காவலன் போல எண்ணிக் கொண்டும் பிறரை இழித்து வருபனை மக்கள் நன்கறிவர். கண்டித்தும் வருகின்றனர். இருப்பினும் இவனுக்குத் துணை போகிறவர்களும் உண்டு. மக்களின் மந்தமான சமய அறிவு இவர்களுக்கு சாதகமாகி விடுகிறது.    சமய நாட்டம் என்பது ஓரளவு இரத்தத்தில் ஊறி இருக்கவேண்டும். சமய நூல்களைக் கற்காவிடினும் வேடராகவே இருந்து முக்தி பெற்ற  கண்ணப்பரை விடவா சிறந்த எடுத்துக்காட்டைக் கூற முடியும் ? 

சமீப காலமாகவே நாத்திகர்களும் தமக்கு வேண்டுமென்றால் இராமானுஜரை அரவணைத்துக் கொள்வதைப் பார்க்கிறோம். நோக்கம் நிறைவேறிவிட்டால் அவரை விலக்கவும் தயங்குவதில்லை. இடத்திற்கு ஏற்பப் பேசுவதில் வல்லவர்கள் அவர்கள். மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். சமயச் சொற்பொழிவு செய்பவருமா இரட்டை வேடம் போட வேண்டும் ? அதுவும் தமிழின் பெயரில். பெரிய சீர்திருத்தம் செய்ய வந்தவரைப் போலப்  பேசி மக்கள் மனத்தில் நஞ்சைத் தூவுவதும் ஒரு பிழைப்பா ? 

சைவத்தில் இராமாநுஜரைப் போல எவரும் இல்லையாம். திருஞான சம்பந்தர்,திருநாவுக்கரசர் ஆகியோர் செய்த குல நல்லிணக்கம் பற்றி இவர் படித்ததில்லை போலும் !  பாணர் குலத்தில் உதித்த திருநீலகண்ட யாழ்ப்பாணரை, சம்பந்தப்பெருமான், தான் செல்லுமிடங்களுக்கெல்லாம் கூட அழைத்துச் சென்றதோடல்லாமல் பேதம் பாராமல் அக்னி ஹோத்ரம் செய்யும் இடத்திலும் கூடவே அமர்த்திக்கொண்டார் என்று பெரிய புராணம் கூறும். குலம் பாராது துன்பப்படுபவர்களின் துயரங்களை ஞான சம்பந்தர்  தீர்த்து அருளியதை  இவர் அறியாதது வியப்பினும் வியப்பு. எல்லாவற்றுக்கும் மேலாகத் தனது திருமணம் காண வந்திருந்த அனைவருக்கும் சிவலோக முக்தி வழங்கும் முன்பு நமசிவாயத் திருப் பதிகத்தை அனைவரும் கேட்கும்படி அருளியது, வந்தவர்கள் அனைவருக்கும் பாகுபாடன்றி பஞ்சாக்ஷர மகா  மந்திர உபதேசம் செய்த கருணையேயாகும். இராமானுஜர் திருக் கோஷ்டியூரில் அங்கிருந்தவர்களுக்கு நாராயண மந்திரம் உபதேசம் செய்ததை மட்டும் அறிந்தவர்கள் சம்பந்தரது கருணையை அறியாதது ஏன் ? 

திருநாவுக்கரசரை முன்னர் பார்த்திராத அப்பூதி அடிகள் என்னும் அந்தணர் அவர்பால் பக்தி பூண்டு தான் செய்யும் தரும காரியங்களுக்கெல்லாம் அப்பரின் நாமம் சூட்டிய வரலாறு அடியார்கள் சாதிப் பிரிவுகளைக் கடந்து நிற்பதற்கு வழி காட்டியதாக இவருக்குத் தோன்றவில்லையா ? முதலில் இவர் பெரிய புராணம் படித்து விட்டுப் பிறகு சொற்பொழிவு ஆற்ற வர வேண்டும். 

கோயில்கள் என்பவை அடியார்கள் தரிசிக்க ஏற்பட்டவையே ஆகும். வேதங்களால் வழிபடப்பெற்று மூடப் பெற்றிருந்த வேதாரண்யம் கோயிலை அப்பரும் சம்பந்தரும் தங்கள் தமிழ் மாலைகளால் மூடவும் திறக்கவும் செய்தனர் என்றால் வேதத்தையும் ஆகமங்களையும் அருளிய இறைவன் நாளும் தமிழிசை கேட்கும் விருப்போடு இருவரையும் பாடச்  செய்தான் என்று கொள்ள வேண்டுமே தவிர, தமிழ் உயர்ந்ததா அல்லது வடமொழி வேதம் உயர்ந்ததா என்று சர்ச்சை செய்வதை உண்மைச் சைவர்கள் ஒருபோதும் விரும்பார்.  

ஆழ்வாருக்காகச் சொன்னவண்ணம் செய்த பெருமாள் பாம்பணையைச்  சுருட்டிக் கொண்டு கோயிலை விட்டுப் போய் விட்டதால் வேதத்தையும் ஆகமங்களையும் விடத்  தமிழையே விரும்பினார் என்று சிண்டு முடியத்  தெரியும் இவருக்கு அதன் தத்துவம் அறியாமல் போனதோடு அவ்வண்ணமே பிறருக்கும் தவறாகவே எடுத்துரைப்பது கண்டிக்கத்தக்கது. ஊருக்கு ஊர் சுவாமிக்குத் தேர் வேண்டாம் என்றும் உண்டியலில் பணம் போடச் சொல்லி  பெருமாள் கேட்டாரா என்றும்  பேசியவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் !

தமிழே உன்னால் வாழ்ந்தேன் என்று சொல்லி விடுவது எளிது. தமிழைச் சரிவரக்  கற்காமலேயே, தமிழைப்போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பீற்றிக் கொள்வது அதை விட எளிது. இன்று தமிழ் மொழியிலுள்ள இலக்கியப்  படைப்புக்கள் அதிக அளவில் சமயத்தைச் சார்ந்தே இருப்பதை மக்களிடம் சேர்க்காதது யார் குற்றம் ? இந்தப் பொறுப்பை ஏற்காமல் பணம் ஈட்டுவதற்காக மக்களை பிரிப்பது மட்டுமே தெரிந்தவர்களின் நாடகம் என்றாவது மக்களுக்குத் தெரிய வரும். அவ்வாறு நடைபெற்றால் மக்கள் இப்படிப் பட்டவர்களை ஒதுக்கித் தள்ளுவார்கள் என்பது நிச்சயம்.


அப்பர் பெருமானின் ஒரு பாடலை இங்கே  நினைவ கூர்ந்து இப்பதிவை நிறைவு செய்வோமாக:


" சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து வான் ஆளத் தருவரேனும் 

 மங்குவார் அவர் செல்வம் மதிப்போமல்லோம் மாதேவர்க்கே காந்தர் அல்லார் ஆகில் 

 அங்கமெல்லாம் அழுகு  தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் 

 கங்கைவார்சடைக் கரந்தார்க்கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே. "

சங்க பதும நிதிகளைத் தந்து வானுலகையே ஆளத் தந்தாலும் அவர்களது செல்வத்தை மதிக்க மாட்டோம். அதே சமயம், உடல் அழுகித் தொழு நோயால் அவதியுறும் ஒருவன் கங்கையை சடையில் வைத்த சிவபெருமானுக்கு அன்பன் என்றால் அவனே நான் வணங்கும் கடவுள் என்கிறார் அப்பரடிகள்.

புலையனையும் தெய்வமென ஏற்கும் நிலையைச் சைவம் காட்டவில்லையா ? வைணவம் காட்டியது வெளிச்சத்திற்கு வந்தது போல் சைவத்தின் அருமை பெருமைகளைக் வெளிப்படுத்தாதது யாருடைய குற்றம்? பூனை  கண்களை மூடிக் கொண்டால் உலகமே இருண்டது என்று நினைத்ததாம் !. அதே மனநிலைதான் சமயச் சொற்பொழிவாற்றியும் தெளிவு பெறாத சிலரது  பரிதாப நிலை ! 


 

Wednesday, November 18, 2020

திருவிளையாடற் புராண வருணனைகள்

 

           திருவிளையாடற் புராண வருணனைகள்

                                         சிவபாதசேகரன்


அங்கயற்கண்ணி மணாளனாகிய சோமசுந்தரக் கடவுள் அடியவர் பொருட்டாக ஆற்றிய திருவிளையாடல்களைப் பரஞ்சோதி முனிவர் வடமொழியினின்றும் அழகு தமிழில் அமைத்து வழங்கியுள்ளார். புராணம் என்பது பழமையைக் குறிப்பது. கயிலையில் சிவபெருமான் உமாதேவிக்கு அருளியதை  உடன் இருந்து கேட்ட முருகவேள், பெருமானது திருவிளையாடல்களை  அகத்திய முனிவர்க்கு உரைத்தருளியதாக இந்நூல் கூறும். இதனைக் கற்போருக்குப்  பக்திச் சுவையும்  இலக்கியச் சுவையும் வழங்கிப் பரவசப்படுத்தி, ஆலவாய் அண்ணலது அலகில் கருணைக்கு ஆற்றுப்படுத்துவது இப்புராணம்.

“ பாண்டி நாடே பழம்பதி யாகவும் “ என்பார் மாணிக்க வாசகர். அப்பாண்டி நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் பலவற்றுள் வைகை நதியும் தாமிர பரணி ( பொருநை  ) நதியும் குறிப்பிடத்தக்கவை. இப்புராணம் , பொருநை நதியின் வளத்தையும், பெருமையையும் ஒருங்கே அழகுற வருணிக்கிறது.

பொருநையை ஒரு ஆறாக மட்டும் நோக்காமல் ஒரு பெண்ணாகவே உருவகிக்கும் ஆசிரியரது திறம் வியந்து பாராட்டுதற்குரியது.பொதிய மலையாகிய மலை மடந்தை, பொருநையாகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தது போல் இருக்கிறதாம் அம்மலையிலிருந்து உற்பத்தியாகும் தாமிர பரணி ஆறு. அந்த ஆறாகிய குழந்தை தவழ்ந்து வரும்போது,  உழவர்கள் எழுப்பும் ஒலியைக் கேட்ட வண்ணம் வளர்ந்து வருகையில் அவர்கள் பயிரிட்ட மாந்தளிர்கள் போன்ற நிறம் உடையவளாகவும், கூந்தற்பனை மடலைப் போன்ற கூந்தலை உடையவளாகவும் மங்கை உருவாகி அருகிலுள்ள சோலைகளிலிருந்து விழும் மலர்களை அணிந்து, அடித்து வரப்படும் சந்தனம், அகில்,கஸ்தூரி ஆகியவற்றைப் பூசி, நிறைவாகத்  மணாளனாகிய கடலை அடைகிறது என்பது வருணனை.

ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்கள் உள்ளன. ஆற்றில் அடித்து வரப்படும் சந்தனம் போன்ற திரவியங்களைக் கரைகளில்   ஒதுக்கி  , சிவபிரானுக்கு அபிஷேகம் செய்யும் பக்தர்களைப் போன்று அந்நதி விளங்குகிறதாம். இரு மருங்கிலும் வயல்களை வளப்பம் செய்து உணவிடுவது, சிவ பெருமானுக்குத் தாருகாவன முனி பத்தினிகள் அன்னமிட்டது போலத் தோன்றுகிறதாம்.

சில இடங்களில் ஆறு கலங்கி ஓடும் . சில இடங்களில் தெளிவாக ஓடும். அது எப்படி இருக்கிறது என்பதை ஆசிரியர் விளக்குவதைக் காண்போம். சிவபெருமானே எங்கும் நீக்கமற நின்ற முழுமுதற்கடவுள் என்றும், முக்தி அடைவதற்கு விபூதி முதலிய சாதனங்களே துணையாவான என்றும், வேதம் முதலிய கலைகளைக் கற்று அவ்வழி நிற்பதே நன்னெறி என்பதை  அறிந்தும் தெளிவு பெறாமல் சிந்தை கலங்கியவர்களைப் போலத்           தாமிரபணி சில இடங்களில் கலங்கி ஓடுகிறாள். பின்னர், சைவ நெறி பற்றிய அறிவு விளக்கம் பெற்ற பெரியோர்களது சிந்தையைப் போலத் தெளிந்து ஓடுகிறாள் பொருநை .      

மற்றுமோர் வருனனையையைப் பார்ப்போம். வானளாவி நிற்கும் பொதியமலை சிவபெருமானை நினைவூட்டுகிறது. அது மட்டுமல்ல. அந்தப் பெருமான் யானையை உரித்துப் போர்த்தான் அல்லவா ?        பொதிகையைச் சூழ்ந்துள்ள கரிய மேகங்கள் அந்த யானையின் தோலைப் போல இருக்கிறன . மேகத்தின் மழைத்துளிகள், அந்த யானை  உதிர்த்த இரத்தத்தையும் வானத்தில் வளைந்து காணப்படும் இந்திரவில், குருதி படிந்த யானைத் தந்தத்தையும் ஒத்து விளங்குகிறது.

பாண்டிய நாட்டின் சிறப்பைக் கூறும்போது ஒரு அழகிய வருணனை இருக்கக் காண்கிறோம். உலகம் திருமாலின் வடிவம் என  விளங்குகிறது. அவரது உந்தியில் விளங்கும் தாமரை போன்றது பாண்டிய நாடு. அம்மலரில் வீற்றிருக்கும் நான்முகனைப் போன்றவர் பொதியையில் வாழும் அகத்திய முனிவர். பிரமனிடம் வெளிப்பட்ட வேதத்தைப் போன்றது, அகத்தியர் போற்றி வளர்த்த தமிழ். அப்பொதிகையில் விளைந்த தென்றல் காற்றை நுகரவும்,  பைந்தமிழ்ப் பாடல்களை செவி மடுக்கவும் சிவபெருமான் விரும்பினான் போலும் ! முன்பு பாணினிக்கு சம்ஸ்க்ருத வ்யாகரணத்தை அருளிச் செய்த சிவபரம்பொருள், பொதிகையில் அகத்தியருக்குத் தமிழ் இலக்கணத்தை அறிவுறுத்தினான்.

இறைவன் ஒருவன் இல்லை என்னும்  நாத்திகர்களின் நாவை அறுக்கும் வாள் போன்ற வேதத்தை முழுதுமாக ஓதி, தெளிந்த மனத்தராய் , முத்தீ வளர்க்கும் மறையவர்களது இல்லங்களில் பலாசக்  கோலை ஏந்தும் மறைச் சிறுவர்கள் மறை பயில்வதை உடனிருந்து கேட்கும் கிளிகள் அம்மறைகளைத் தாங்களும் கூறுமாம். அக்கிளிகள் வேற்றிடங்களுக்குச் சென்று இரை  தேடும் போதும் அம்மறைகளை ஓதுவதால் அங்கிருக்கும் நாகணவாய்ப் பறவைகளும் அவற்றைக் கற்று, அவற்றை வானுலகிலுள்ள கிளிகளுக்கும் கற்பிக்குமாம். இப்படிச் செல்கிறது வருணனை.

அணி என்பதற்குச் சூட்டிக்கொள்வது, அலங்காரம் செய்வது என்று பொருள்கள் கூறப்படுகின்றன. பொதுவாகச் சொன்னால் அணிந்து கொள்ளும் அனைத்துமே அணி என்றாலும் ஆபரணங்களுக்கும், மாலை,உத்தரியம் ஆகியவற்றுக்கும் இது அதிகமாகவே பொருந்தும்.  அதே சமயத்தில் இறைவனுக்கும் தமிழ் மொழிக்கும் சார்த்தப்படும் பாமாலைகளையும் அணியாகவே கொள்கிறோம். தே + ஆரம் என்பது தேவாரம் ஆகி, சிவபிரானுக்குச் சார்த்தப்படும் பாமாலையாகிய அணிகலன் ஆயிற்று.  தொண்ணூற்று ஆறு வகைப் பிரபந்தங்களைப்  புலவர் பெருமக்கள் தமிழன்னைக்கு அணிகலன்களாக  அணிவித்தனர். தமிழ் இலக்கணம் பயில்வோர் மகிழும் வகையில் ,  கற்பனைக் களஞ்சியங்களாகத் திகழ்ந்த ஆன்றோர்கள் , உவமையணி, தற்குறிப்பேற்ற அணி ஆகிய நயம் மிக்க பகுதிகளைத்  தமிழ் கூறு நல்லுலகிற்கு வழங்கியுள்ளனர்.

எடுத்துக்காட்டாகத் திருவிளையாடற் புராணத்தில் இடம்பெறும் தற்குறிப்பேற்ற அணியை இங்கு எண்ணலாம்.

மலயத்துவஜனது வேள்வியில் எழுந்தருளிய தடாதகைப் பிராட்டியார் , எல்லா மன்னர்களையும் திக் விஜயம் செய்து வெற்றி கொண்டபின் நிறைவாகக் கயிலைக்கு எழுந்தருளினார். தன்னை விட்டு நீங்கிய பார்வதி தேவியார் மீண்டும் வருவதைக் கண்ட கயிலை மலையானது ஆனந்தக் கண்ணீர் விட்டதாம். அந்த ஆனந்தக் கண்ணீர் அருவி போல் பெருகி ,        அன்னையே வா “ என்பது போல் அங்குள்ள அருவிகள் ஒலியை  எழுப்பினவாம். அவ்வெள்ளியங்குன்றில் தோன்றிய ஒளியானது புன்முறுவல் போல் விளங்கிப் பிராட்டியை இன்முகத்தோடுத்  தழுவி எதிர்கொள்வது போல இருந்ததாம். இயல்பாக நடைபெறும் செயல்களும் நிகழ்வுகளும் இத்தகைய வருணனைகளால் புலவரது உள்ளக் குறிப்பால் ஏற்றம்  பெற்றுத் தற்குறிப்பேற்ற அணியாக ஆகி விடுகின்றன. மலையிலிருந்து அருவிகள் வீழ்வதும், ஓசை எழுப்புவதும், கதிரவன் ஒளியில் மலை ஒளிர்வதும் இயல்பாக நடப்பனவாகும். இவை யாவும் அன்னையை வரவேற்பது போன்று உள்ளது என்று பரஞ்சோதி முனிவர் தற்குறிப்பை ஏற்றி அணியாக்கிய பாடலைக் கண்டு இன்புறுவோமாக:

“ வானார் கயிலை மலையான் மகள் தன்னை நீத்துப்

போனாள் வந்தாள் என்று அருவிக் கட்புலனுக்கு அந்நீர்

ஆனா ஒலியால் “ அ(ன்)னை வா “ என்றழைத்துத் தன தேசு

தானாம் நகையால் தழிஇ எதிர் ஏற்பச் சென்றாள்.”

தனது வெண்ணகை (போன்ற) ஒளியால் அன்னையைத் தழுவி அம்மலை வரவேற்றது என்பதைத் தழிஇ என்று அளபெடையாக அமைத்துள்ளதும் கற்போர்க்கு விருந்தாவதாம்.    

Wednesday, October 28, 2020

             சோற்றுத்துறை சென்று அடைவோமே                                                  

                                                      சிவபாதசேகரன்


                                                                                 திருச்சோற்றுத்துறை சிவாலயம் 

“ சோழ நாடு சோறுடைத்து” என்பார்கள். இங்கு சோறு என்பது உண்ணும் உணவை மட்டும் குறிப்பதன்று. மோக்ஷம் என்றும் பொருள் தரும். சண்டிகேசுவரரின் செயல் உலகரீதியில் நோக்கினால் பாதகமானாலும் அதுவே அவருக்கு மோக்ஷமாகிய சிவபதத்தைக் கொடுத்தருளிற்று. எனவே,இதனைக் குறிப்பிட்ட மாணிக்கவாசகர், “ பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்” என்கிறார். தனதடி வழிபடுவோர்க்கு ஞானமும் வீடுபேறும் தருபவன் பரமேசுவரன். இப்பிறவியில் உயிர் வாழத் தேவையான சோற்றையும் அளித்தருளுகிறான். பசித்திருந்த அப்பருக்கும் சுந்தரருக்கும் பொதி சோறு கொண்டு வந்து பசி தீர்த்தான் என்று பெரிய புராணத்தால் அறிகிறோம்.

சோழ நாடு ஒரு புண்ணிய பூமி. சிவராஜதானியும் கூட.  மூவர் தேவாரம் பெற்ற 274 தலங்களுள் 190 தலங்கள் சோழநாட்டில் உள்ளன. அவை ஞானத்தையும் மோக்ஷத்தையும் ஒரு சேரத் தரவல்ல மகிமை உடையவை. சோழ அரசனைப் புனல் நாடன் என்றும் பொன்னி நாடன் என்றும் கூறுவது மரபு. தனது  நாட்டு மக்களுக்கு என்றும் குறைவுபடாத வகையில் நெல்லை விளைவித்தும் சிவஞான முக்தியையும் தரும் ஒப்பற்ற கடவுளுக்கு நன்றி செலுத்தும் முகமாக சோழ நாடெங்கிலும் சிவாலயங்களை எழுப்பியும் திருப்பணி செய்தும் சோழ மன்னர்கள் மகத்தான தொண்டாற்றினார்.

பரம ஞானிகளோ உண்டு உடுத்து இருப்பதை விரும்பார். “ உண்டு உடுத்து இருப்பதானேன் போரேறே” என்பது திருவாசகம். மீண்டும் ஒரு பிறவி ஏற்பட்டு நெல் சோற்றை உண்டு உடலைக் காப்பதே கடனாகக் கொள்வதை அவர்கள் விரும்பவில்லை. அவ்வாறு அவர்களைப் பிறவியிலிருந்து காத்து, நெற் சோறு  உண்ணாமே காக்க வல்ல காவலனைப் பாடும்போது, சாக்கிய நாயனாரது சரிதையையும் உடன் மொழிவார் அப்பர் பெருமான். கல்லை எறிந்து வழிபடும் சாக்கியரை விசும்பு ஆள வைத்த சிறப்பைக் கூறுமிடத்தில்,

“ கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உண்ணும் சாக்கியனார்

நெல்லினால் சோறு உண்ணாமே நீள்  விசும்பு ஆள வைத்தார் “

 என்பார்.

“அன்னாநாம் பதயே நமோநமோ ‘ என்கிறது ஸ்ரீ ருத்ரம். அன்னத்தைத் தந்தருளுவதால் அதற்குத் தலைவனான சிவபெருமானுக்குப் பலமுறை நமஸ்காரம் என்று வெளிப்படையாகப் பொருள் கூறலாம். அப்பெருமான் அன்னத்திற்குப் பதியாக மட்டுமல்லாது அன்ன வடிவினனாகவே இருக்கிறான் . அவன் தந்த கொடையை அவனுக்கே அறிவித்து அதனையே சிவப்ரசாதமாக நாம் கொள்கிறோம். எவ்வளவோ நைவேத்தியங்கள் இருப்பினும் இதை மஹா நைவைத்தியம் என்கிறோம். அதிலுள்ள ஒவ்வொரு பருக்கையும் ஓர் சிவலிங்கமே. அதனை நினைப்பூட்டும் வகையில் பழங்காலந்தொட்டு சிவாலயங்களில் ஐப்பசி மாதப் பௌர்ணமியில் சிவலிங்கப் பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. தில்லையில் ஸ்படிக லிங்க மூர்த்திக்குத் தினமும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

திருவையாற்றின் சப்த ஸ்தான தலங்களில் திருச் சோற்றுத்துறையும் ஒன்று. சித்திரை மாதத்தில் ஐயாறப்பர் இங்கு எழுந்தருளும்போது வந்தோர் அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்படுகிறது. பஞ்ச காலத்தில் ஒரு ரிஷியானவர் இங்கு ஆசிரமம் அமைத்துக் கொண்டு, இத்தலத்து இறைவனது அருளால் வந்திருந்த அனைவருக்கும் பசியாற்றி வந்தார் என்பது தல வரலாறு. எனவே சுவாமிக்கு ஒதனவநேச்வரர் என்றும் அம்பிகைக்கு அன்னபூரணி என்றும் பெயர்கள் இன்றும்  வழங்கப்படுகின்றன.  ஓதனம் என்றால் உணவைக் குறிக்கும் .


சிவ பக்தனான அருளாளன் என்ற அந்தணன் தன் மனைவியுடன் இங்கு வந்தபோது சுவாமி அவர்களுக்கு எடுக்க எடுக்கக் குறையாமல் அன்னம் வழங்கும் அக்ஷய பாத்திரம் ஒன்றைத் தந்தருளியதாகத் தல வரலாறு மூலம் அறிகிறோம். காவிரிக் கரையில் உள்ள இந்த அற்புதமான தலத்தை மூவரும் தேவாரம் பாடியுள்ளார்கள். சப்த ஸ்தானங்களில் மூவர் பதிகங்களும் கிடைக்கும் தலங்கள் திருவையாறும் திருச்சோற்றுத்துறையும் மட்டுமே. திருவையாறு மற்றும் தஞ்சாவூர் அன்பர்கள் அடிக்கடி இங்கு சென்று வழிபடலாம். டாக்டர் உ.வே.சா. அவர்களின் ஆசிரியப்பிரானான திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய ப்ரபந்தம் ஒன்றில், நாம் தினந்தோறும் உணவு உண்ணுகையில் சோற்றுத்துறையை நினைவு கொள்ள வேண்டும் என்று உபதேசிக்கிறார். எனவே உண்பதன் முன்னர் , அந்த  உணவை ஒதனவநேசுவரரும் அன்னபூரணியும் தந்தருளியதாக எண்ண வேண்டும் என்பது பெறப்படும்.

அன்னாபிஷேகம் செய்த அன்னத்தை நீர் வாழ் உயிரினங்களுக்கும் அளிப்பது வழக்கம். எல்லா உயிர்களுக்கும் இறைவன் படியளக்கிறான் என்ற தத்துவம் இதன் மூலம் அறியப்படுகிறது.

இந்த ஆண்டு அன்னாபிஷேகத்தை வரும் வெள்ளியன்று(30.10.2020) அன்று செய்வதா அல்லது (31.10.2020)சனிக்கிழமையன்று செய்வதா என்று சிலரிடையே குழப்பம் இருப்பதாக அறிகிறோம். பௌர்ணமியும் அசுவினி நக்ஷத்திரமும் அன்றையதினத்தில் ( அபிஷேகம் செய்கையில்) இருக்க வேண்டும் என்பது பொதுவான விதி. இவ்வாண்டில் வெள்ளியன்று பௌர்ணமி மாலை ஏழு மணி அளவில் வருவதால் அதற்கு முன்பாக , அதாவது சதுர்த்தசி இருக்கும்போதே செய்வதா என்பது கேள்வி. ஆனால் ஏழு மணிக்கு மேல் திதி ,நக்ஷத்திரம் இரண்டும் இருந்தாலும் அபிஷேகத்தை ஏழு மணிக்கு ஆரம்பித்தால் நிறைவடைய சுமார் ஒன்பது மணி ஆகி விடும். அதற்குப் பிறகு அலங்காரத்தைக் கலைத்து விட்டு அபிஷேகம் செய்து அர்த்த ஜாமம் செய்தால் வெகு நேரமாகி விடும்.  

 ஆனால் சனிக் கிழமை மாலை சுமார் ஏழு மணி வரை அசுவினி, பௌர்ணமி ஆகிய இரண்டும் இருப்பதால், அன்னாபிஷேகத்தை மதியம் மூன்று அல்லது நான்கு மணிக்கு ஆரம்பித்தால் மாலை ஆறு மணிக்கு பக்தர்கள் தீபாராதனையைத் தரிசிக்க எதுவாக இருக்கும் என்பது சிலரது அபிப்பிராயம். கங்கை கொண்ட சோழபுரத்திலும் சனியன்றே நடைபெறுவதாக அறிகிறோம். கற்றறிந்த பெரியோர்கள் சிவாகமம் கூறுவதை ஒட்டித் தங்கள் அபிப்பிராயத்தை அனைவருக்கும் அறியத் செய்வது நல்லது.

நிறைவாக ஒரு வார்த்தை. நடராஜர் அபிஷேகம் என்பது சிதம்பரத்தை ஒட்டி நடைபெறுவதுபோல் அன்னாபிஷேகம் என்பது திருச்சோற்றுத் துறையை முன்னோடியாக வைத்து நடைமுறைப் படுத்தலாம். ஒரே பஞ்சாங்கத்தில் இரு தினங்களும் அன்னாபிஷேகம் என்பது போன்ற செய்திகளால் குழப்பம் விளையாமல் இருக்கும். இவ்வாண்டு, திருச்சோற்றுத்துறையில் வரும் சனிக்கிழமை பகலில் அன்னாபிஷேகம் நடைபெற்று,மாலையில் தீபாராதனைகள் நடைபெறுவதாக அறிகிறோம்.  “ அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே” என்று அம்மையப்பரின் இத்தலத்தைச் சென்று வழிபட்டு உய்வோம் என்று ஞானசம்பந்தர் நமக்கு உய்யும் நெறி காட்டியுள்ளார்.

தீய வினைகளைச் செய்ததன்  பலனாக நோய்களால் துன்புறுகிறோம். அக் கொடிய நோய்களால் தாக்கப்பட்டு மனத்தாலும் உடலாலும் தளர்ச்சியடையும் போதாவது இறைவனது நினைவு வர வேண்டும். வேதமும் கலைகளும் பிற தோத்திரங்களும் இளமையிலிருந்தே கல்லாமலே காலம் கழிந்து விட்டபடியால் இப்போதாவது அவனை அபயமாகச் சரணடைய வேண்டும். கற்பகக் கொழுந்தான அக்கடவுள் சந்திரனுக்கு மட்டுமல்லாது நமக்கும் அடைக்கலம் அளித்து அபயம் தர வல்லவன். உற்றார் எவரையும் இல்லாமல் தானே எல்லாவற்றுக்கும் மூல காரணனாய் ஆகி, அனைத்துக் கலைகளுக்கும் பிறப்பிடம் ஆகி, உலகோரால் வழிபடப்பெறும் சோற்றுத்துறையில் எழுந்தருளியுள்ள ஒளி  மயமான பரசிவத்தைப் பணிந்து அவனுக்குப் பணி செய்து அவனது தாளில் அபயம் அடைவதே நாம் உய்யும் வழி என்று அப்பர் சுவாமிகள் இத்தலத்தில் அருளிய திருத்தாண்டகப்பாடல் ஒன்றை இங்கு தருகின்றோம்:

முற்றாத பால் மதியம் சூடினானே

முளைத்தெழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே

உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே

உலகு ஓம்பும் ஒண்சுடரே ஓதும் வேதம்

கற்றானே எல்லாக் கலை ஞானமும் கல்லாதேன்

தீவினை நோய் கண்டுபோகச் செற்றானே

திருச்சோற்றுத்துறை உளானே திகழொளியே

சிவனே உன்  அபயம் நானே.

என்ற பாடலை உணர்ந்து மனமுருகிப் பாடி உலக நன்மைக்காக வேண்டுவோமாக.

Sunday, October 18, 2020

மனமும் மதியும்

 

                                                        மனமும் மதியும்  

                                                                          சிவபாதசேகரன்

திருவொற்றியூர் ஆலய கோபுரம் 

உணர்ச்சிமயமான ஒரு நிகழ்ச்சியைப் பற்றி அண்மையில் படிக்க நேர்ந்தது. சுமார் பத்து வயது பெண் குழந்தையாக இருக்கலாம். அந்தப் பெண்ணை  இருதய அறுவை சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். மறுநாளன்று அறுவை சிகிச்சை செய்யவிருக்கும் மருத்துவர் அப்பெண்ணைப் பார்க்க அறைக்கு வந்தார். அப்பெண்ணோ அவரிடம் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு கேள்வி கேட்டாள். “ நாளை நீங்கள் என்னுடைய இருதயத்தைத் திறந்து பார்க்கும் போது என்ன பார்த்தீர்கள் என்று எனக்குச் சொல்வீர்களா” என்றாள். “ எதற்காக அம்மா இப்படிக் கேட்கிறாய்” என்றார் அந்த மருத்துவர். “ என்னுடைய உயிர் சினேகிதி சொன்னது ஞாபகம் வந்தது அதான் கேட்டேன் “ என்றாள்.   அவள்  சொன்னது இதுதான்: “அனுமன் , தனது  மார்பைத் திறந்து அதற்குள் சீதா தேவியும் இராமபிரானும் இருப்பதைக் காட்டுவதாகப்  படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். அதேபோலத்தான்  நம் ஒவ்வொருவருடைய மனத்திற்குள்ளும் நாம் வழிபடும் கடவுள் இருப்பார் “  என்று சொன்னாளாம். கள்ளம் கபடம் அறியாத இக்குழந்தைக்கு அவளது  சிந்தையை விட்டு நீங்காமல் தோழியின் வார்த்தைகள் பதிந்து விட்டதால் மருத்துவரிடம் இப்படிக் கேட்டாள். “ எனக்குத் தெரிந்த கடவுள் என்னைப் பெற்றெடுத்த தாயும் தந்தையுமே ஆவார்கள். என் இதய தெய்வமாகிய அவர்களை நீங்கள் என்னுடைய இருதயத்தைத் திறக்கும்போது பார்ப்பீர்களா டாக்டர் ? “ என்றாள். சுற்றிலும் நின்று கொண்டிருந்த அனைவரது நெஞ்சையும் இக்கேள்வி பிழிந்தெடுத்து விட்டது. அந்தப் பிஞ்சு நெஞ்சுக்குள் தான் எப்படிப்பட்ட நம்பிக்கை !  “ பார்ப்பேன் அம்மா. நாளைக்கு உனக்கு நினைவு திரும்பியதும் கண்டிப்பாக உன்னிடம் வந்து சொல்வேன் “ என்று தன் கண்களில் எழும்பிய நீரை அடக்கிக் கொண்டு பதில் சொன்னார் அம்மருத்துவர்.     

நாமோ வயதாக ஆக , நமது கேள்விக்கான பதில்களை விஞ்ஞான பூர்வமாக எதிர் பார்க்கிறோம். பதில் கிடைக்காமல் போனால் அவற்றை மூட நம்பிக்கை என்று பெயரிட்டு ஒதுக்கி விடுகிறோம். இதயத்திற்குள் கடவுள் இருப்பதாவது என்று சிரித்தபடியே நமது மேதா விலாசத்தைப் பறை சாற்றிக் கொள்கிறோம். காலம் காலமாக விஞ்ஞானத்தால் விளக்க இயலாதவற்றை நமது முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள் என்று யாராவது விளக்கம் தர வேண்டியிருக்கிறது.

முதலில் மனம் என்பது இருதயமா அல்லது தகவல்களைச் சேகரிக்கும் மூளையா என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே காலம் தள்ளுகிறோம். மதி என்பதற்கு மூளையைச் சுட்டிக் காட்டுகிறோம். ஒருவன் புத்திசாலி என்றால்  மனத்தாலா அல்லது மதியாலா என்ற கேள்வி எழுகிறது.

“ என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்று சிவபுராணம் சொல்லும்போது  நெஞ்சகம் என்பதற்கு இதயம்/மனம்  என்றே பொருள் கொள்கிறோம்.  இதை நாவுக்கரசரும் “ மனத்தகத்தான் “ என்றார். சிந்திப்பது என்று வந்து விட்டால் அது மூளைக்கே உரியது என்கின்றோம். “ சிந்தனை நின்தனக்கு ஆக்கி” என்பது திருவாசகம். இதயமாகட்டும் அல்லது மூளையாகட்டும், அவை யாவும் எலும்பும் நரம்பும் உதிரமும் சதையும் தானே! “ மூளை எப்படி உருவாகிறது என்பதை , “ கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்றாகி” எனக் காட்டுகிறது அப்பர் தேவாரம்.

“ நினைவார் தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும்” இறைவனைக் காண வேண்டில், சிந்தை முற்றிலும் சிவமாகவேண்டும். “ என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனியவாறே “ என்றார் சுந்தரர். மனம் அடிமையாகிவிட்டால்  காயம் கோயில் ஆகி விடுகிறது. மனத்தகத்தே உறையும் பரம்பொருள் உச்சியிலும் அமர்கிறான். இதைத்தான் அப்பரும், “ மனத்தகத்தான், தலைமேலான் “ என்று அருளினார்.

இவ்வாறு மனமும் மதியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மதியாவது மூளையையும், சிந்தனையையும் மட்டுமே குறிக்காமல் சந்திரனையும் குறிக்கும். மதி சேகரன் என்று அம்புலியைச் சூடிய சிவபெருமான் குறிக்கப்படுவதால் இதனை அறியலாம். ஜாதகத்தில் சந்திரன் பாதகமாக அமைந்திருந்தால் மனநலம் குன்றியவர்களாக இருப்பார்கள் என்று ஒரு பிரசங்கமே செய்துவிடுவார்கள் சோதிட வல்லுனர்கள்.

“ நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் “ என்றபடியால் அந்த மனமாவது இதயத்தைக் குறிப்பதா அல்லது மதியைக் குறிப்பதா என்று கேட்கலாம். சிவாகமம் இரண்டையும் போற்றுகிறது. கும்பாபிஷேக யாக சாலை பூஜையில் ,தனது மார்பிலும் சிரத்திலும் ஆசாரியர் மலர்  தூவித் தியானிப்தைப் பார்க்கிறோம். இறைவன் வீற்றிருக்கும் மார்பிற்குத் தரப்படும் மரியாதை , அதன் மீது சூட்டப்பெறும் ருத்ராக்ஷ மாலை என்றால் அதுவும் கொள்ளத்தக்கதே. சிரோவடமாலை என்பது தனது சிரத்தைச் சுற்றி அணிந்து கொள்ளும் ருத்ராக்ஷ மாலை. இதுவும் அத்தகையதே.

கடலில் மனமாகிய  தோணியைக் கொண்டு நாம் கடக்க முயலுகிறோம். அதற்கேற்றபடி நமது மதி (சிந்தனை) ஒரு துடுப்பை ( கோலை ) நமக்குத் தருகிறது . அதில் உள்ள சரக்கோ சினம் என்பது. அப்போது இடைப்பட்ட  ஒரு பாறையில்  இந்தத் தோணி மோதி விட்டால் யாரே துணையாக வருவர்? இறைவனைப் பற்றிய சிந்தனையாவது அப்போது வர வேண்டும். அப்படிப்பட்ட உணர்வும் இறைவன் தந்தே வர வேண்டும். அதனைத் தனக்கு வரமாக அளிக்க வேண்டும் என்று திருவொற்றியூர்ப் பெருமானைப் பாடுகின்றார் திருநாவுக்கரசர்.   

“ மனமெனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றிச்

சினமெனும் சரக்கை ஏற்றிச் செறி கடல் ஓடும்போது

மனன் எனும் பாறை தாக்கி மறியும் போது அறிய ஒண்ணாது

உனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.”   

மனத்தாலோ மதியாலோ வழிபட்டாலும் இறைவனது கருணை ஒன்றை மட்டுமே நாம்  துணையாகப் பெற வேண்டும் . இச் சித்தாந்தக் கருத்தைக் குறிப்பதாக மேற்கண்ட பாடல் அமைகிறது . அவ்வழிபாடும் அவனருளாலே நிகழ்வதாகும். “ சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி” என்று ஔவையும் விநாயகர் அகவலில் விளக்கியமை காண்க.   

Saturday, September 12, 2020

பல பொருட் சொற்கள்


ஒரே பொருளைத் தருவதுபோலத் தோன்றினாலும் உண்மையில் பல பொருட்களைத் தரும் சொற்கள் தமிழில் இருக்கக் காணலாம். நாம் அடிக்கடிப்  பயன்படுத்தும் சொற்கள் பலவற்றுள், வேட்கை,ஆசை, அவா,பாசம்,அன்பு, நேசம், காதல் போன்றவை ஒரே பொருளைக் குறிப்பது போலத்  தோன்றினாலும் இடத்திற்கேற்ப வேறு வேறு பொருள் கொள்ளத்  தக்கவை ஆகும். 

ஏதேனும் ஒன்றைத் தனக்கு உரியதாக அடைய வேண்டும் என்ற எண்ணம் இதயத்தில் ஏற்படும்போது எழுவது வேட்கை. அதில் சுய நலம் ஓங்கி நிற்கும். சாதாரண ஒரு பொருளை வாங்குவது,கைப்பற்றுவது முதலாக நாடு பிடிப்பது வரையில் வேட்கை ஏற்படுகிறது. வேண்டுவதற்கும் வேட்கைக்கும் வித்தியாசம் உண்டு. தானும் பிறரும் உய்ய வேண்டும் என்று அருளாளர்கள் வேண்டுவது வேட்கை ஆகாது. அவர்கள், " வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம்,வேண்டேன் விண்ணும் மண்ணும் " என்ற கொள்கை உடையவர்கள். இறைவனே கருணை புரிந்து எதனை அளித்தாலும், அளிக்காவிட்டாலும் அவ்விரண்டையும் சமமாகப் பாவிப்பவர்கள். நமக்கு வேண்டுவதை இறைவன் நாம் சொல்லாமலே அறிவான் என்பதால், " வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்  அதுவும் உந்தன் விருப்பன்றே "  என்று இருந்து விடுவார்கள்.  பாமரர்கள் மட்டுமல்லாது தேவர்களும் தனக்கே அனைத்தும் வேண்டும் என்ற வேட்கை உடையவர்கள். " இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்" என்பதே அவ்வேட்கை. 

வேட்கை மேலிடுவதால் ஏற்படுவது ஆசை. இங்கும் அருளாளர்கள் எவ்வாறு ஆசைப்பட்டார்கள் என்று முதலில் நோக்குவோம். திருவாசகத்தில் ஆசைப் பத்து என்ற ஒரு பதிகம் அமைந்துள்ளது.மாணிக்க வாசகர் ஆசைப்பட்டதெல்லாம் இறைவனைக் காண வேண்டும் , அவனது பவளத் திருவாயால் அஞ்சேல் என்று சொல்ல வேண்டும் , அவனது ஆயிரம் பெயர்களால் போற்றித் துதிக்க வேண்டும் என்பதே.அவரது உள்ளக் கிடக்கையைக் கீழ்வரும் அவரது பாடலால் அறியலாம்: 

" கையால் தொழுது உன் கழற்சேவடிகள் 

கழுமத்  தழுவிக் கொண்டு 

எய்யாது என்றன் தலைமேல் வைத்து 

எம்பெருமான் பெருமான் என்று 

ஐயா என்றன் வாயால் அரற்றி 

அழல் சேர் மெழுகு ஒப்ப 

ஐயாற்று அரசே ஆசைப்பட்டேன் 

கண்டாய் அம்மானே "  

என்பதால் இறைவன் பால் கொண்ட ஆசை அன்பு மீதூர , உள்ளம் அனலில் பட்ட மெழுகு போல் உருக மனம் நைந்து , வாய் அவனது நாமங்களைக் கூறி அரற்றுவதில் முடிகிறது. 

இத்தனை அன்புடைய தொண்டருக்கு இறைவன் இரங்காமல் இருப்பானா ? ஞானசம்பந்தர் அழகாகப் பாடுகின்றார் , " ஆசை தீரக் கொடுப்பார் " என்று. 

ஆனால் நாம் எதற்கெல்லாம் ஆசைப் படுகிறோம் என்பது நமக்கே தெரியும். விளக்கம் தேவை இல்லை. 

ஆசை என்பது அன்பில் நம்மை செலுத்துவதாக இருக்க வேண்டும். அன்பே பக்திக்கு அடிப்படையாக அமைவது. அந்த அன்பும் இறைவன் தந்ததாகவே இருத்தல் சிறப்பு. அவ்வன்பு மாறாததாகவும் இனியதாகவும் தூய்மையாகவும் இருத்தல் அவசியம். அன்பின் வடிவமாகக் கண்ணப்ப நாயனார் திகழ்ந்தார் என்று பெரிய புராணம் கூறும். காரைக்கால் அம்மையும், " இறவாத இன்ப அன்பு " வேண்டினார் என்பார் சேக்கிழார் பெருமான். அப்படிப்பட்ட மேலான அன்பைத்  தனக்கு அருள வேண்டும் என்று பெருமானைத் துதிக்கிறார் மணிவாசகர்:

" மெய்யன்பை உடையாய் பெற நான் வேண்டுமே" என்பது பிரார்த்தனைப் பத்தில் வரும் அழகிய வரி. அத்தகைய அன்பே சிவானந்தம் பெறுவதற்கு வித்தாகிறது. அதன் விளைவை அவர் மட்டுமே கூற இயலும்:

" உள் உருகிப் பெருகி நெக்கு ஆடிஆடி ஆனந்தம் அதுவேயாக அருள்"  என்பது அவ்வுயரிய பிரார்த்தனை. அப்போதுதான் அன்பும் சிவமும் வேறல்ல என்ற ஞானம் பிறக்கிறது. அந்த ஞானம் கிட்டியவர்களது நிலையைத் திருமூலர்           " அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே  " என்பார். இல்வாழ்வுக்கும் அன்பும் அறனும் இன்றியமையாதது என்று திருக்குறளாலும் அறிகிறோம். அன்பு மேலிட்ட அற  வழியில் அமைந்த வாழ்க்கையே பண்பையும்  உயர்ந்த பயனையும் தர  வல்லது என்பது என்பது வள்ளுவர் வாக்கு. அன்புடைமை என்ற ஒரு அதிகாரத்தையே நமக்கு அருளியுள்ளார் தெய்வப்புலவர்.     அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்  சொல் ஆகிய நான்கையும் தவிர்க்க வேண்டும் என்பதே அவர் காட்டிய நன்னெறி. 

பாசமாவது நம்மை உலகியலில் சிக்க வைப்பது. அது மனிதர்கள் மீதோ, பறவை மற்றும் விலங்கினங்களின் மீதோ இருக்கக் கூடியது. அதிலிருந்து விடுபடமுடியாமல் வாழ்க்கை முழுதும் செலவாகிப் பயனற்றுப் போய், அப்பாசமே  மீண்டும் ஒரு பிறவிக்கு நம்மை ஆயத்தம் செய்கிறது. சைவ சித்தாந்திகள், பதி, பசு, பாசம் என்ற முப்பொருள் உண்மையை வலியுறுத்துவார்கள் . பசுக்களாகிய நம்மைப்  பதியாகிய பரம்பொருளிடம்  நாடவிடாமல் தடுப்பது பாசமே ஆகும். அதனைக் கடக்கும் ஆற்றலையும் பெருமானே தந்தருள வேண்டும். இதனைப், " பாசமான களைவார் " என்று சம்பந்தரும், " பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே  " என்று சிவபுராணத்தில் வரும் சிவபுராண வரியும் உணர்த்துவது காண்க. 

பாசத்தால் உலகியலோடு பந்தம் ஏற்படுகிறது. அதுவே முத்தி நிலை அடைவதற்குத் தடையாக இருப்பது. திருஞானசம்பந்தர், தனது அவதாரத்தை நிறைவு செய்யும் தருவாயில் அருளிச் செய்த நமசிவாயத் திருப்பதிகத்தின் முடிவில்  ,  " ஞானசம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லாரெல்லாம் பந்த பாசம் அறுக்க வல்லார்களே " என்பதால் பந்தம் அறுந்தாலன்றி முத்தி நிலை கிட்டாது என்பது வலியுறுத்தப்பட்டது. 

நேசக் கரம் நீட்டுவதும் பயன் பெற்றவர்களது தற்காலிக மகிழ்ச்சிக்கே. பயன் பெற்றபின்னர் நேசத்திற்கு மோசம் வந்து விடுகிறது. நேசித்தவரை மறப்பதால் அந்த நற்செய்கை பயனற்றுப் போய் விடுகிறது. இது உற்றார் உறவினருக்கும் பொருந்தும்.  உதவி பெறும் போது காட்டும் முகமலர்ச்சி , பின்னாளில் முழுவதுமாக இற்றுப் போய் விடுகிறது. 

எஞ்சியுள்ள காதல் என்னும் சொல் பேரின்பப்பொருளுக்கே உரியது. இந்நாளில் ஆசை/அன்பு என்று பொருள் தருவதாகத் தவறாகப் பொருள் கொண்டு அதனைச் சிற்றின்பத்தைக் குறிக்கும் சொல்லாகக் கொள்வோர் அதன் அருமை தெரியாதவர்கள். 

ஒருவன் எவ்வளவுதான் , எத்தனை ஆண்டுகள் தான் ஆசைப்பட முடியும் ? ஆசைக்கும் ஒரு அளவு வேண்டும் அல்லவா? அற்பசுகத்தைக் காமம் என்றும் காதல் என்றும் நினைப்பவர்கள் அதன் மறு எல்லையைப் பற்றி எப்போதாவது சிந்திப்பதுண்டா? அந்த எல்லைக்குப் பெயர்தான் காம கோடி என்பது. அப்போது காமம் அழிந்து இறைவன் பால் காதல் ஏற்படுகிறது. அதன் விளைவாக உள்ளம் கசிகின்றது. நம்மை அறியாமலேயே கண்கள் தாரை தாரையாக நீரைப் பொழிகின்றன. நாத்  தழு தழுக்க அவன் நாமங்களை ஓத முற்படுகிறது. சிவஞானம் சித்திக்கிறது. நன்னெறியும் வாய்க்கிறது. இவ்வளவும் அடைய வேண்டுமானால் உலகப் பற்றுக்கள் முழுதும் நீங்கிப் பாச வேர் முற்றிலும் அறுமாறு உள் ஒளி பெருக்கப் பெற்று, உலப்பிலாத ஆனந்தம் பெறுமாறு  அவனது ஐந்தெழுத்தை மறவாது ஆயுள் முழுதும் உச்சரித்தால் நம்மை மெய் நெறியில் ஆட்படுத்தி நிறைவாகத் தனது  கழல் தந்தருளுவான் என்பதே அருளாளர்கள் உபதேசம்.

பாரோர் விண்ணோர் பரவி ஏத்தும் பரனே பரஞ்சோதீ 

வாராய் வாரா உலகம் தந்து வந்து ஆட்கொள்வானே 

பேராயிரமும் பரவித்திரிந்து எம்பெருமான் என ஏத்த 

ஆரா அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே 

என்ற திருவாசகம் , ஆசை அன்பாக மாறுவதையும் அதுவே ஈசன் பால் நீங்காத காதலாவதையும் நமக்குக்  காட்டி, அந்நிலையை இறையருளே  நமக்குத் தந்தருள வேண்டும் என்பதையும், அதற்கு நம்மை ஆயத்தப்படுத்தவேண்டி, பெருமானின் பல்லாயிரம் நாமங்களையும் ஓத வேண்டும் என்பதையும் அருமையாக உணர்த்துகிறது.  




 

 

 

Thursday, August 27, 2020

மறவாது கல் எறிந்த சாக்கியர்

 


உலகம் தோன்றிய காலம் தொட்டே உயிர் வாழ்வதற்குத் தேவைப்பட்டது உணவே ஆகும். இன்றளவும் மனிதனைத் தவிர ஏனைய உயிர்களுக்கு அதுவே அடிப்படைத் தேவை ஆகிறது. பறவைகளும் விலங்குகளும் தங்களது பாதுகாப்புக்காகக் கூடுகளை ஆங்காங்கே அமைத்துக் கொள்வதுபோல் மனிதனும் பின்பற்றினான். ஆனால் மனிதன் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. உடுக்க உடையையும் வசிக்கக் கூரை உள்ள வீட்டையும் ஏற்படுத்திக் கொண்டான்.எவ்வாறாயினும் உணவும் உறக்கமும் இன்றியமையாதனவாகப் போய் விட்டன.   

ஒரு காலத்தில் காட்டுவாசிகளாக வாழ்ந்த போது மனிதன் உணவைத் தேடும்படி இருந்தது. கிடைத்த காய்களையும் கனிகளையும் புசித்துப்  பசியைப் போக்கிக் கொண்டான். நாளடைவில் தானே பயிரிட்டு அத்தேவையைப் பூர்த்தி செய்து கொண்டான். அப்படியும் இயற்கையின் ஒத்துழைப்பு விவசாயத்திற்கு இன்றளவும் தேவைப்படுகிறது. இப்போதோ தேவைக்கு அதிகமாகவே புசித்து வருகிறான்.உணவையும் சேமித்து வருகிறான். இருந்த இடத்திலிருந்தே உணவைத் தருவித்துக் கொள்கிறான். இதற்கிடையில் பசித்தோருக்கு அன்ன தானமும் செய்கிறான். 

 மாணிக்க வாசகரோ , " உண்டு உடுத்து இருப்பதானேன் " என்று பாடுகிறார். மானுட வாழ்க்கை என்பது  உண்பதிலும் உடுப்பதிலும் கேளிக்கைகளில் ஈடுபடுவதும் முழுக் கவனத்தைச் செலுத்துகிறது என்பதால் மகான்கள்,                   " வேண்டேன் மானுட வாழ்க்கை" என்று பாடினர். இவ்வாறு ஆக்கைக்கே இரை தேடுவதில் காலம் கழிவதால் மானுடப் பிறப்பை அவர்கள் விரும்பவில்லை. வட மாநிலத்தில் வசித்து வரும் ஒரு இல்லத்தரசியார் தனது வேண்டுதல் நிறைவேறுதல் பொருட்டுப் பல்லாண்டுகளாகப் பழங்களையும் பாலையும் உண்டு வருகிறார் என்ற செய்தி அண்மையில் வெளியாகியது. 

தேவ லோகத்தில் நிலையே வேறு.அவர்கள் கண் இமைக்கமாட்டார்கள். நிலத்தில் பாதம் தோய நடக்க மாட்டார்கள். சுயம்வரத்தில் வந்த தேவர்களுக்கு இவ்வாறு காணப்பட்டதால் தோற்றம் ஒன்றானாலும், கண் இமைத்தலானும் கால்கள் காசினியில் தோய்தலாலும் உண்மையான நளனை எளிதே கண்டறிந்து மாலையிட்டாள் தமயந்தி என்று நளவெண்பா மூலம் நாம் அறிகிறோம். இப்படிப்பட்ட நிலை இறைவனது உண்மை அடியார்களுக்கும் கிடைக்கும். மீண்டும் பிறவாது சிவலோகத்தே என்றும் இருக்கலாம். மீண்டும் பிறந்து அரிசிச் சோற்றை வேளா வேளைக்குத் தேடும் நிலை ஏற்படாது. 

நாம் உண்ணும் உணவு இறைவனது அருட் கொடை என்ற எண்ணம் முதலில் ஏற்பட வேண்டும். " பயிர் காட்டும் புயலானும்" என்றும் " பாரதனில் பயிர் ஆனான் காண் " என்றும்  திருமுறைத் தொடர்கள் இதையே காட்டுகின்றன. இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக உண்பதற்கு முன்பாகப் பெருமானுக்கு மலரிட்டு அர்ச்சித்து விட்டு, நைவேத்தியம் செய்ய வேண்டும் என்ற நியமம் பூண்டு வாழ்ந்தனர் நமது முன்னோர். கிராமங்களில் வாழும் பலர் இன்றைக்கும் உச்சிக் கால மணியின்  ஒலி அருகிலுள்ள ஆலயத்தில் எழுப்பப் படுவதைக் கேட்ட பிறகே தமது இல்லங்களில் உணவு உண்பதை மேற்கொள்ளுகின்றனர். அவ்வாறு செய்யாதோருக்கு விளையும் தீமைகளை அப்பர் பெருமான் , " உண்பதன் முன் மலரிட்டு உண்ணாராகில்  "                             " பிறப்பதற்கே  தொழிலாகி இறக்கின்றாரே" என்பார். 

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் சாக்கிய நாயனார் என்பவர் புத்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சிவபெருமான் பால் ஈர்க்கப்பட்டுப் பெருமானை மலரிட்டு வழிபட்டு வந்தார். ஒருநாள் மலர்கள் கிடைக்காமல் போகவே, அருகாமையில் இருந்த கற்களைக் கொணர்ந்து அவற்றைக்  கொண்டு வழிபட்டார். இச்செயலை நியமமாகவே கொண்டு உறுதியுடன் கல்லெறிந்து வழிபட்ட பின்னரே உண்பது என்று பேரன்பு கொண்டு ஒழுகினார். இதனைச் சேக்கிழார் பெருமான், " உறுதி வரச்  சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து " என்கிறார். 

காஞ்சிக்கு அருகிலுள்ள திருச் சங்கமங்கையில் வாழ்ந்து இவ்வாறு கல்லெறிந்து அளவற்ற அன்போடு நாயனார் வாழ்ந்து வரும் வேளையில் ,           " பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் " என்ற உறுதியோடு நின்றார் என்கிறது பெரிய புராணம். " சிவ நன்னெறியே பொருள் ஆவது " என்ற உணர்வு கொண்டார் சாக்கியர். இந்த ஞானம் அவருக்கு " சிவன் அருளாலே உணர்ந்து அறிந்த" தாகத் தெய்வத் சேக்கிழார் காட்டுவார். மேலும் " அன்பினால் மறவாமை தலை நிற்பார் " என்று புராணம் கூறுவதால் இந்நிலையிலிருந்து அவர் ஒருபோதும் விலகியது இல்லை என்பது தெளிவாகிறது. கல் இருந்ததையும் மனம் பதைப்போடு தான் செய்தார் எனக் காட்டுகிறது பெரிய புராணம். " கல் கண்டு அதனைப் பதைப்போடும் எறிந்தார் " என்பதைக் காண்க. அதனை இறைவன் மலர்களாகவே மனமுவந்து ஏற்றான் என்பதை, இளம் புதல்வர்கள் இகழ்ந்த செயல் செய்தாலும் பெற்றோர்கள் மகிழ்ச்சியோடு ஏற்பதுபோல " நீள் சடையார் தாம் மகிழ்வார் " என்று பக்திச்  சுவையோடு வருணிக்கிறார் சேக்கிழார் பெருமான். இவ்வளவுக்கும் புத்த பிட்சுக்களுக்கான துவர் ஆடையைத் தவிர்க்காமல் இதனைச் செய்து வந்தாராம். மற்றவர்கள் அதனைக் கல் என்றாலும் சிவபிரான் அதனை மலராகக் கொண்டான் என்பதை, " அல்லாதார் கல் என்பார் ; அரனார்க்கு அஃது அலர் ஆமால்  " என்ற உயரிய வரிகள் இதனைத் தெரிவிக்கின்றன. 

சிவத்தொண்டுக்குப் பலன் கிட்டும் காலம் ஒரு நாள் வந்தது. நாயனாரது பெருமையை உலகோர் அறியும்படி இறைவன் ஒரு திருவிளையாடல் செய்தான். அன்றையதினம் நாயனாருக்கு கண் அயர்ச்சி மேலிடச் செய்தான். இந்தக் கட்டத்தில் தான் பெரிய புராணத்தை நாம் ஊன்றிப் படிக்க வேண்டும்.  அங்கு ஒருநாள் அருளாலே அயர்ந்து உண்ணப் புகுகின்றார் " என்பதைச் சிலர் கல் எறிந்து இறைவனை வழிபடும் முன்பாகவே உணவு உண்டார் என்று தவறாகப் பொருள் கொள்வதைப்  பார்க்கிறோம். உண்ணப் புகுதல் என்பது உண்டு விட்டதைக் குறிக்காது. அதற்கான ஏற்பாடுகளுடன் அதற்கு ஆயத்தமாதல் என்பதே பொருள். அந்த அயர்ச்சியும் அருள் காரணமாக இறைவன் தந்தருளியதேயாம். 

இந்த அயர்ச்சியும் சில நிமிடங்களே நீடித்திருக்கக் கூடும். நியமத்தின்  பயனாக அந்நிலையிலிருந்து மீண்டெழுந்த நாயனார், " எங்கள் பிரான் தன்னை எறியாது அயர்ந்தேன் யான் "  என்கிறாரே தவிர, உண்டேன் என்று சொல்லவில்லை. அத்துடன் நில்லாது, உடன் எழுந்து, " பொங்கிய காதலுடன் மிக விரைந்து புறப்பட்டு " சிவலிங்கப் பிரான் முன்படைந்து கல்லினால் எறிந்து வழிபட்டார். 

இன்னும் ஒன்றையும் நாம் கூர்ந்து நோக்க வேண்டும். உண்ட பின்னர் வழிபாடு  செய்யலாம் என்று இராமல் , முன் வினையால் ஏற்பட்டதே உண்டி என்பதால் அதனை ஏற்காது ஒழிந்து, தான் அயர்ந்து விட்டதால் நியமம் தவறியதோ என்று  வேட்கை மிகுந்தபடி, பெருமானிடம் ஓடி வந்தாராம். இதனையும் சேக்கிழார் வாக்கிலேயே அறிவது உத்தமம்:

" கொண்டதொரு கல்லெடுத்துக் குறி கூடும் வகை எறிய

உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடிவரும் வேட்கையோடும் 

கண்டருளும் கண்ணுதலார் கருணைபொழி திருநோக்கால் 

தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவியோடும் தோன்றினார்."   

தன்னை நோக்கி ஆர்வத்துடன் ஓடி வரும் சாக்கிய நாயனாருக்கு முன்பு சிவபெருமான் உமாதேவியுடன் விடை மேல் எழுந்தருளி அவரைச் சிவலோகத்தே இருத்தினான். அவரது அன்பை ஈசனைத் தவிர யாரால் அறிய முடியும் என்று கூறி, சாக்கிய நாயனார் புராணத்தை நிறைவு செய்கிறார் தொண்டர் சீர் பரவ வந்த தெய்வச்  சேக்கிழார்.

" கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உண்ணும் சாக்கியனார் 

  நெல்லினால் சோறு உண்ணாமே நீள் விசும்பு ஆள வைத்தார் "

 என வரும் அப்பர் பெருமானது குறுக்கை வீரட்டப் பதிக வரிகள் ஒப்பு நோக்கற்குரியன.

.( பிற்குறிப்பு: சரிவர பொருள் கொள்ளாமல் நாயனார் கல்லெறியாமல் உணவு உண்டார் என்று விக்கிப்பீடியாவில் பின்வருமாறு வெளியிட்டிருப்பதை நமது முகநூல் அன்பர் சுட்டிக் காட்டியதன் பயனாக எழுந்ததே இக்கட்டுரை. அவருக்கு நமது நன்றிகளை உரித்தாக்குகிறோம்: தவறு திருத்தப்பட வேண்டும் என்றும் எண்ணுகிறோம்:

" One day he forgot to do his austerities and started consuming food. " ) 

 " மறவாது  கல் எறிந்த சாக்கியர்க்கும் அடியேன்" - சுந்தரர் தேவாரம்