Wednesday, December 9, 2020

பாதமே துணை

 

                                                       பாதமே துணை             

                                                                           சிவபாதசேகரன்


                                                                                              மாணிக்கவாசகர் 


நாம் யாரைச் சார்ந்து வாழ்கிறோமோ அவர்களது பழக்க வழக்கங்கள் நம்மை வந்தடைகின்றன. உலகில் நல்லவர்களாக வாழ, நல்லவர்களின் துணையும் வழிகாட்டுதல்களும் தேவைப் படுகின்றன. குடும்பத்திலுள்ள நற்பண்புகளிலிருந்து துவங்கி வெளியில் பழகும் வரை நல்ல பழக்கம் ஏற்பட இது வகை செய்கிறது. அது இல்லாதவனைப் “பழக்க தோஷம்” உள்ளவனாக அடையாளப்  படுத்துகிறோம். ஆணவம்.கன்மம்,மாயை ஆகியவற்றின் வசப்படும் உயிர்கள் தாமே உயர்கதி அடைய சக்தியற்ற தன்மையால் இறைவனது கருணையால் மட்டுமே உய்யப்பெறுகின்றன. பாசத்தோடு கட்டுண்ட பசுக்களாகிய உயிர்கள் பதியின் துணையினால் உய்யப்பெறுவதை சித்தாந்த நூல்கள் விரிவாகக் கூறுகின்றன.

உலகைப் படைக்கும்போதே உயிர்களின் பக்குவத்திற்கேற்றபடி கருணை பாலிப்பதால் தனிப் பெருந்துணையாக இறைவன் விளங்குவதை ,              “ எனக்கு ஆர் துணை நீ அலதே “ என்ற திருமுறை வாக்கால் அறிகிறோம். உயிர்களுக்கு உருவத்தைத் தந்த ஈசனே அவற்றின் அங்கங்கள் யாவும் அவனை வணங்கிப் போற்றுவதற்காக அமைத்து,  உய்யும் வழியைக் காட்டியுள்ளான். தானும் ஓர் உருவெடுத்து முன்வந்தருளி சிவனுக்கும் சீவனுக்கும் உள்ள சம்பந்தத்தை உணர்த்துகிறான். சீவன் சிவனை அடையாளம் கண்டவுடன் சிவ சம்பந்தமாகி, பழக்கமும் அவ்வுயிர்க்கு  ஏற்பட்டுவிடுகிறது. சிவ புண்ணியத்தை ஈட்டிய உயிர்களுக்கு இப்பழக்கம் பணி செய்வதன் மூலம் சித்திக்கிறது. சித்த மலம் அறுபட்டுச்  சிவமாகிறது. இதற்கு எதுவாக அமையும் முதற்கட்ட வழிபாடே உருவ வழிபாடு.

உருவ வழிபாட்டில் முதலிடம் பெறுவது, அவ்வுருவத்தின் பாதமே கதி என்று பணி செய்வதாகும். “ திருவடிக்கு ஆம் பவமே அருளு கண்டாய் “ என்பது திருவாசகம். பாதாதி கேசமாகத் திருவுவைப் பெரியோர் வணங்குவர். திருவடிகளைக் காண்பதை  ருத்ர பாத தரிசனம் என்று திருவாரூரில் அழைப்பார்கள். “ எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே “ என்பார் அப்பர் சுவாமிகள். ஆலயங்களில் அர்ச்சனைகளும் அப்பொன்னடிக்கே செய்யப்படுகின்றன. பிரார்த்தனையும் பொன்னடிக்குச் செய்யப்படுவதை, “ பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் “ என்ற அப்பர் வாக்கால் அறிகிறோம்.

தீக்ஷா கிரமங்களில் திருவடி தீக்ஷை முக்கியத்துவம் வாய்ந்தது. இறைவனே குருவாக எழுந்தருளித் திருவடியைச் சிரத்தின் மீது வைத்தருளுவது அருளாளர்களுக்கே வாய்க்கும். சுந்தரர் துயின்று கொண்டு இருந்தபோது இறைவன் அவரது முடியில்  திருப்பாதத்தைச் சூட்டி அருளியதும், நல்லூரில் நாவுக்கரசருக்குத் திருவடி சூட்டியதும், பெரிய புராணம் நமக்கு அறிவிக்கும் செய்திகளாகும்.  “ திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் “ என்ற அப்பரது தேவார வாக்கு இதற்கு அகச் சான்றாக அமைகிறது. வைணவக் கோயில்களில் சடாரி சார்த்தப்படுவது போலவே நல்லூரிலும் சேவார்த்திகளின் சிரத்தில் திருப் பாதம் சார்த்தப்படுகிறது. 

இன்னம்பர்,திருவையாறு ஆகிய தலங்களில் அப்பர் பெருமான் அருளிய பதிகங்கள் பலவற்றுள் திருவடியைப் பாடல் தோறும்  போற்றுவதாக அமைந்துள்ளன. திருவதிகை வீரட்டத்துப் பதிகங்களில் ஒன்று திருவடித் திருத்தாண்டகம் என்பதாகும். அதில் ஒவ்வொரு வரியிலும் அப்பரடிகள்  சிவ பெருமானின் திருவடிகளைப் போற்றுவதாக உள்ளது அறிந்து இன்புறத்தக்கது. அதில் ஒரு பாடலை இங்குக் காணலாம்:

“அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி

அருமறையான் சென்னிக்கு அணியாம் அடி

சரவணத்தான் கை தொழுது சாரும் அடி

சார்ந்தார்கட்கு எல்லாம் சரணாம் அடி

பரவுவார் பாவம் பறைக்கும் அடி

பதினெண் கணங்களும் பாடும் அடி

திரைவிரவு தென் கெடில நாடன் அடி

திரு வீரட்டானத்து எஞ் செல்வன் அடி. “

{ அரவணையான்- பாம்பணையில் துயிலும் திருமால்; அருமறையான்- பிரமன்; சென்னி-சிரம்; சரவணத்தான்-முருகன்; சார்ந்தார்கட்கு – தன்னைச் சரண் என்று சார்ந்தவர்களை; பரவுவார்-துதிப்பவர்கள்; கெடில நாடன் – கெடில நதி அருகே கோயில் கொண்டுள்ள திருவதிகைப் பதி }

இப்பதிகத்தில் இறைவனது திருவடி, காலனைக் காய்ந்தது, அரக்கனான இராவணனின் ஆற்றலை அழித்தது, கணக்கு வழக்கைக் கடந்தது, அழகு எழுத முடியாத அருட் சேவடி, உரு என்று உணரப்படாத அடி, உரையால் உணரப்படாத அடி, மந்திரமும் தந்திரமும் ஆய அடி, மருந்தாய்ப் பிணி தீர்க்க வல்ல அடி என்றெல்லாம் திருவடியைப் பலவாறு போற்றுகின்றார் தாண்டக வேந்தராகிய அப்பர் பெருமான்.  

திருவடிகளே ஆதியும் அந்தமும் ஆவன.அவையே பல்லுயிர்களின் தோற்றத்திற்கும், போகத்திற்கும், மறைவுக்கும் கார்ணமாவன. திருமாலும் பிரமனும் காணாத அத்  திருவடிகளே நம்மை ஆட்கொண்டு அருளுவன. இவை அனைத்தையும் ஒரே பாடலில் தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்க வழங்குகிறது மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடல். அப்பாடலின் மற்றுமோர் அழகாவது அத்திருவடிகளின்  வருணனையே. அதனைப் , பாதமலர், செந்தளிர்கள்,பொற்பாதம், பூங்கழல்கள், இணை அடிகள், புண்டரீகம் ஆகிய சொற்களால் சொற்பதம் கடந்த தொல்லோனுக்குச்  சொன்மாலை அணிவித்து அகமகிழ்கிறார் மாணிக்கவாசகர்:

“போற்றி அருளுக நின் ஆதியாம் பாத மலர்

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணை அடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றி யாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். “

“ கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன் “ என்ற அப்பர் வாக்கும் இங்கு சிந்தித்தற்குரியது.

Wednesday, December 2, 2020

சைவத்திலும் "இராமாநுஜர்கள்" உண்டு


 தமிழ் மொழியை முன்னிறுத்திக் கொண்டு பின்னால் இருந்து குளிர் காயும் கயவர் கூட்டம் பெருகி விட்டது. இக்கூட்டத்தினர்  அப்படி ஒன்றும் தமிழ் மீது ஆறாக்  காதல் கொண்டவர்கள் அல்லர். தமிழின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்கள். ஏமாந்து போகிறவர்கள் இருக்கும் வரை இவர்களது பிழைப்பு கொடி கட்டிப் பறக்கும். ஏழேழு தலைமுறைக்கும் இவ்வகையில் பணம் சம்பாதித்தும் இவர்களுக்குப்  பண வெறி அடங்கவில்லை. இதில் பலிகடா ஆக்கப்படுவது தமிழ் மொழியும் அதைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும் ஆவர்.

தமிழ் மொழி தொன்மையானது என்று இன்று மார் தட்டிக் கொள்வதற்கு மூல காரணமாகவும் ஆதாரமாகவும் விளங்குவன இதிலுள்ள பழம் பெரும் இலக்கியங்கள் என்பதை மறக்கலாகாது. இல்லாவிட்டால் மண்ணைத் தோண்டும் போது கிடைக்கும் பாண்டங்களை மட்டும் பார்த்துக் கொண்டு பண்டைத் தமிழர் நாகரீகம் என்று வேண்டுமானால்  சொல்லிக் கொள்ள  முடியும். அழிந்தவை போக எஞ்சிய இலக்கியங்களை ஊர் ஊராகச் சென்று மீட்டெடுத்து அச்சிலேற்றிக் காப்பாற்றிக் கொடுத்தவருக்குக் கூட நன்றி செலுத்தாத அளவுக்கு சாதி ரீதியில் மக்களைப்  பிரித்துப் பணம் கண்டவர்கள் தங்களைத்  தமிழ்க் காவலர்கள்  என்று கூறிக் கொள்வதையும் அதை நம்பும் மக்களையும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

தமிழை முறையாகக் கற்காதவர்களும் , அரை குறையாகப்  படித்தவர்களும் மக்களது அறியாமையைப் பயன் படுத்தி ஏமாற்றுகிறார்கள். இதில் மயங்கிய மக்களோ அவர்களை அறிஞர்கள் என்று போற்றுவதும் சிலை வைப்பதும் பட்டங்களைக் கொடுப்பதுமாகத் தம்மைத் தாமே மேலும் ஏமாற்றிக் கொள்கிறார்கள். ழகரமும், லகர ளகரங்களும் பேசத்  தெரியாததோடு மெல்லினத்திற்கும் வல்லினத்திற்கும் வேறுபாடு அறியாதவர்கள் அந்த அறியாமையைச் சுவரொட்டிகள் மூலம் வெளிப்படுத்துவது நகைப்புக்கு உரியது. 

ஆன்மீக உலகிற்கு வெளியில் அநேகம் நடக்கக் கூடும். அது பற்றி விமர்சிப்பது நமக்கு நோக்கம் அல்ல. அதே நேரத்தில் தமிழ் அறிஞன் என்றும் சொற்பொழிவாளர் என்றும் சொல்லிக் கொண்டு சமயத்தைப் பிளவு படுத்துவதும் மக்களுக்குள் காழ்ப்பு உணர்ச்சிக்கு வித்திட்டு பணம் சம்பாதிப்பவனைக் கண்டிக்காமல் இருப்பது நியாயமாகாது. குற்றமும் ஆகும். அதைக் கடந்து விடுவது அன்னையை இழித்துப் பேசியவனைக் கடந்து போவதற்குச் சமம். 

வழக்கம் போலத்  தன்னை மேதாவியாக நினைத்துக் கொண்டும், தமிழ்க்  காவலன் போல எண்ணிக் கொண்டும் பிறரை இழித்து வருபனை மக்கள் நன்கறிவர். கண்டித்தும் வருகின்றனர். இருப்பினும் இவனுக்குத் துணை போகிறவர்களும் உண்டு. மக்களின் மந்தமான சமய அறிவு இவர்களுக்கு சாதகமாகி விடுகிறது.    சமய நாட்டம் என்பது ஓரளவு இரத்தத்தில் ஊறி இருக்கவேண்டும். சமய நூல்களைக் கற்காவிடினும் வேடராகவே இருந்து முக்தி பெற்ற  கண்ணப்பரை விடவா சிறந்த எடுத்துக்காட்டைக் கூற முடியும் ? 

சமீப காலமாகவே நாத்திகர்களும் தமக்கு வேண்டுமென்றால் இராமானுஜரை அரவணைத்துக் கொள்வதைப் பார்க்கிறோம். நோக்கம் நிறைவேறிவிட்டால் அவரை விலக்கவும் தயங்குவதில்லை. இடத்திற்கு ஏற்பப் பேசுவதில் வல்லவர்கள் அவர்கள். மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். சமயச் சொற்பொழிவு செய்பவருமா இரட்டை வேடம் போட வேண்டும் ? அதுவும் தமிழின் பெயரில். பெரிய சீர்திருத்தம் செய்ய வந்தவரைப் போலப்  பேசி மக்கள் மனத்தில் நஞ்சைத் தூவுவதும் ஒரு பிழைப்பா ? 

சைவத்தில் இராமாநுஜரைப் போல எவரும் இல்லையாம். திருஞான சம்பந்தர்,திருநாவுக்கரசர் ஆகியோர் செய்த குல நல்லிணக்கம் பற்றி இவர் படித்ததில்லை போலும் !  பாணர் குலத்தில் உதித்த திருநீலகண்ட யாழ்ப்பாணரை, சம்பந்தப்பெருமான், தான் செல்லுமிடங்களுக்கெல்லாம் கூட அழைத்துச் சென்றதோடல்லாமல் பேதம் பாராமல் அக்னி ஹோத்ரம் செய்யும் இடத்திலும் கூடவே அமர்த்திக்கொண்டார் என்று பெரிய புராணம் கூறும். குலம் பாராது துன்பப்படுபவர்களின் துயரங்களை ஞான சம்பந்தர்  தீர்த்து அருளியதை  இவர் அறியாதது வியப்பினும் வியப்பு. எல்லாவற்றுக்கும் மேலாகத் தனது திருமணம் காண வந்திருந்த அனைவருக்கும் சிவலோக முக்தி வழங்கும் முன்பு நமசிவாயத் திருப் பதிகத்தை அனைவரும் கேட்கும்படி அருளியது, வந்தவர்கள் அனைவருக்கும் பாகுபாடன்றி பஞ்சாக்ஷர மகா  மந்திர உபதேசம் செய்த கருணையேயாகும். இராமானுஜர் திருக் கோஷ்டியூரில் அங்கிருந்தவர்களுக்கு நாராயண மந்திரம் உபதேசம் செய்ததை மட்டும் அறிந்தவர்கள் சம்பந்தரது கருணையை அறியாதது ஏன் ? 

திருநாவுக்கரசரை முன்னர் பார்த்திராத அப்பூதி அடிகள் என்னும் அந்தணர் அவர்பால் பக்தி பூண்டு தான் செய்யும் தரும காரியங்களுக்கெல்லாம் அப்பரின் நாமம் சூட்டிய வரலாறு அடியார்கள் சாதிப் பிரிவுகளைக் கடந்து நிற்பதற்கு வழி காட்டியதாக இவருக்குத் தோன்றவில்லையா ? முதலில் இவர் பெரிய புராணம் படித்து விட்டுப் பிறகு சொற்பொழிவு ஆற்ற வர வேண்டும். 

கோயில்கள் என்பவை அடியார்கள் தரிசிக்க ஏற்பட்டவையே ஆகும். வேதங்களால் வழிபடப்பெற்று மூடப் பெற்றிருந்த வேதாரண்யம் கோயிலை அப்பரும் சம்பந்தரும் தங்கள் தமிழ் மாலைகளால் மூடவும் திறக்கவும் செய்தனர் என்றால் வேதத்தையும் ஆகமங்களையும் அருளிய இறைவன் நாளும் தமிழிசை கேட்கும் விருப்போடு இருவரையும் பாடச்  செய்தான் என்று கொள்ள வேண்டுமே தவிர, தமிழ் உயர்ந்ததா அல்லது வடமொழி வேதம் உயர்ந்ததா என்று சர்ச்சை செய்வதை உண்மைச் சைவர்கள் ஒருபோதும் விரும்பார்.  

ஆழ்வாருக்காகச் சொன்னவண்ணம் செய்த பெருமாள் பாம்பணையைச்  சுருட்டிக் கொண்டு கோயிலை விட்டுப் போய் விட்டதால் வேதத்தையும் ஆகமங்களையும் விடத்  தமிழையே விரும்பினார் என்று சிண்டு முடியத்  தெரியும் இவருக்கு அதன் தத்துவம் அறியாமல் போனதோடு அவ்வண்ணமே பிறருக்கும் தவறாகவே எடுத்துரைப்பது கண்டிக்கத்தக்கது. ஊருக்கு ஊர் சுவாமிக்குத் தேர் வேண்டாம் என்றும் உண்டியலில் பணம் போடச் சொல்லி  பெருமாள் கேட்டாரா என்றும்  பேசியவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் !

தமிழே உன்னால் வாழ்ந்தேன் என்று சொல்லி விடுவது எளிது. தமிழைச் சரிவரக்  கற்காமலேயே, தமிழைப்போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பீற்றிக் கொள்வது அதை விட எளிது. இன்று தமிழ் மொழியிலுள்ள இலக்கியப்  படைப்புக்கள் அதிக அளவில் சமயத்தைச் சார்ந்தே இருப்பதை மக்களிடம் சேர்க்காதது யார் குற்றம் ? இந்தப் பொறுப்பை ஏற்காமல் பணம் ஈட்டுவதற்காக மக்களை பிரிப்பது மட்டுமே தெரிந்தவர்களின் நாடகம் என்றாவது மக்களுக்குத் தெரிய வரும். அவ்வாறு நடைபெற்றால் மக்கள் இப்படிப் பட்டவர்களை ஒதுக்கித் தள்ளுவார்கள் என்பது நிச்சயம்.


அப்பர் பெருமானின் ஒரு பாடலை இங்கே  நினைவ கூர்ந்து இப்பதிவை நிறைவு செய்வோமாக:


" சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து வான் ஆளத் தருவரேனும் 

 மங்குவார் அவர் செல்வம் மதிப்போமல்லோம் மாதேவர்க்கே காந்தர் அல்லார் ஆகில் 

 அங்கமெல்லாம் அழுகு  தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் 

 கங்கைவார்சடைக் கரந்தார்க்கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே. "

சங்க பதும நிதிகளைத் தந்து வானுலகையே ஆளத் தந்தாலும் அவர்களது செல்வத்தை மதிக்க மாட்டோம். அதே சமயம், உடல் அழுகித் தொழு நோயால் அவதியுறும் ஒருவன் கங்கையை சடையில் வைத்த சிவபெருமானுக்கு அன்பன் என்றால் அவனே நான் வணங்கும் கடவுள் என்கிறார் அப்பரடிகள்.

புலையனையும் தெய்வமென ஏற்கும் நிலையைச் சைவம் காட்டவில்லையா ? வைணவம் காட்டியது வெளிச்சத்திற்கு வந்தது போல் சைவத்தின் அருமை பெருமைகளைக் வெளிப்படுத்தாதது யாருடைய குற்றம்? பூனை  கண்களை மூடிக் கொண்டால் உலகமே இருண்டது என்று நினைத்ததாம் !. அதே மனநிலைதான் சமயச் சொற்பொழிவாற்றியும் தெளிவு பெறாத சிலரது  பரிதாப நிலை !