Thursday, August 27, 2020

மறவாது கல் எறிந்த சாக்கியர்

 


உலகம் தோன்றிய காலம் தொட்டே உயிர் வாழ்வதற்குத் தேவைப்பட்டது உணவே ஆகும். இன்றளவும் மனிதனைத் தவிர ஏனைய உயிர்களுக்கு அதுவே அடிப்படைத் தேவை ஆகிறது. பறவைகளும் விலங்குகளும் தங்களது பாதுகாப்புக்காகக் கூடுகளை ஆங்காங்கே அமைத்துக் கொள்வதுபோல் மனிதனும் பின்பற்றினான். ஆனால் மனிதன் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. உடுக்க உடையையும் வசிக்கக் கூரை உள்ள வீட்டையும் ஏற்படுத்திக் கொண்டான்.எவ்வாறாயினும் உணவும் உறக்கமும் இன்றியமையாதனவாகப் போய் விட்டன.   

ஒரு காலத்தில் காட்டுவாசிகளாக வாழ்ந்த போது மனிதன் உணவைத் தேடும்படி இருந்தது. கிடைத்த காய்களையும் கனிகளையும் புசித்துப்  பசியைப் போக்கிக் கொண்டான். நாளடைவில் தானே பயிரிட்டு அத்தேவையைப் பூர்த்தி செய்து கொண்டான். அப்படியும் இயற்கையின் ஒத்துழைப்பு விவசாயத்திற்கு இன்றளவும் தேவைப்படுகிறது. இப்போதோ தேவைக்கு அதிகமாகவே புசித்து வருகிறான்.உணவையும் சேமித்து வருகிறான். இருந்த இடத்திலிருந்தே உணவைத் தருவித்துக் கொள்கிறான். இதற்கிடையில் பசித்தோருக்கு அன்ன தானமும் செய்கிறான். 

 மாணிக்க வாசகரோ , " உண்டு உடுத்து இருப்பதானேன் " என்று பாடுகிறார். மானுட வாழ்க்கை என்பது  உண்பதிலும் உடுப்பதிலும் கேளிக்கைகளில் ஈடுபடுவதும் முழுக் கவனத்தைச் செலுத்துகிறது என்பதால் மகான்கள்,                   " வேண்டேன் மானுட வாழ்க்கை" என்று பாடினர். இவ்வாறு ஆக்கைக்கே இரை தேடுவதில் காலம் கழிவதால் மானுடப் பிறப்பை அவர்கள் விரும்பவில்லை. வட மாநிலத்தில் வசித்து வரும் ஒரு இல்லத்தரசியார் தனது வேண்டுதல் நிறைவேறுதல் பொருட்டுப் பல்லாண்டுகளாகப் பழங்களையும் பாலையும் உண்டு வருகிறார் என்ற செய்தி அண்மையில் வெளியாகியது. 

தேவ லோகத்தில் நிலையே வேறு.அவர்கள் கண் இமைக்கமாட்டார்கள். நிலத்தில் பாதம் தோய நடக்க மாட்டார்கள். சுயம்வரத்தில் வந்த தேவர்களுக்கு இவ்வாறு காணப்பட்டதால் தோற்றம் ஒன்றானாலும், கண் இமைத்தலானும் கால்கள் காசினியில் தோய்தலாலும் உண்மையான நளனை எளிதே கண்டறிந்து மாலையிட்டாள் தமயந்தி என்று நளவெண்பா மூலம் நாம் அறிகிறோம். இப்படிப்பட்ட நிலை இறைவனது உண்மை அடியார்களுக்கும் கிடைக்கும். மீண்டும் பிறவாது சிவலோகத்தே என்றும் இருக்கலாம். மீண்டும் பிறந்து அரிசிச் சோற்றை வேளா வேளைக்குத் தேடும் நிலை ஏற்படாது. 

நாம் உண்ணும் உணவு இறைவனது அருட் கொடை என்ற எண்ணம் முதலில் ஏற்பட வேண்டும். " பயிர் காட்டும் புயலானும்" என்றும் " பாரதனில் பயிர் ஆனான் காண் " என்றும்  திருமுறைத் தொடர்கள் இதையே காட்டுகின்றன. இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக உண்பதற்கு முன்பாகப் பெருமானுக்கு மலரிட்டு அர்ச்சித்து விட்டு, நைவேத்தியம் செய்ய வேண்டும் என்ற நியமம் பூண்டு வாழ்ந்தனர் நமது முன்னோர். கிராமங்களில் வாழும் பலர் இன்றைக்கும் உச்சிக் கால மணியின்  ஒலி அருகிலுள்ள ஆலயத்தில் எழுப்பப் படுவதைக் கேட்ட பிறகே தமது இல்லங்களில் உணவு உண்பதை மேற்கொள்ளுகின்றனர். அவ்வாறு செய்யாதோருக்கு விளையும் தீமைகளை அப்பர் பெருமான் , " உண்பதன் முன் மலரிட்டு உண்ணாராகில்  "                             " பிறப்பதற்கே  தொழிலாகி இறக்கின்றாரே" என்பார். 

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் சாக்கிய நாயனார் என்பவர் புத்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சிவபெருமான் பால் ஈர்க்கப்பட்டுப் பெருமானை மலரிட்டு வழிபட்டு வந்தார். ஒருநாள் மலர்கள் கிடைக்காமல் போகவே, அருகாமையில் இருந்த கற்களைக் கொணர்ந்து அவற்றைக்  கொண்டு வழிபட்டார். இச்செயலை நியமமாகவே கொண்டு உறுதியுடன் கல்லெறிந்து வழிபட்ட பின்னரே உண்பது என்று பேரன்பு கொண்டு ஒழுகினார். இதனைச் சேக்கிழார் பெருமான், " உறுதி வரச்  சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து " என்கிறார். 

காஞ்சிக்கு அருகிலுள்ள திருச் சங்கமங்கையில் வாழ்ந்து இவ்வாறு கல்லெறிந்து அளவற்ற அன்போடு நாயனார் வாழ்ந்து வரும் வேளையில் ,           " பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் " என்ற உறுதியோடு நின்றார் என்கிறது பெரிய புராணம். " சிவ நன்னெறியே பொருள் ஆவது " என்ற உணர்வு கொண்டார் சாக்கியர். இந்த ஞானம் அவருக்கு " சிவன் அருளாலே உணர்ந்து அறிந்த" தாகத் தெய்வத் சேக்கிழார் காட்டுவார். மேலும் " அன்பினால் மறவாமை தலை நிற்பார் " என்று புராணம் கூறுவதால் இந்நிலையிலிருந்து அவர் ஒருபோதும் விலகியது இல்லை என்பது தெளிவாகிறது. கல் இருந்ததையும் மனம் பதைப்போடு தான் செய்தார் எனக் காட்டுகிறது பெரிய புராணம். " கல் கண்டு அதனைப் பதைப்போடும் எறிந்தார் " என்பதைக் காண்க. அதனை இறைவன் மலர்களாகவே மனமுவந்து ஏற்றான் என்பதை, இளம் புதல்வர்கள் இகழ்ந்த செயல் செய்தாலும் பெற்றோர்கள் மகிழ்ச்சியோடு ஏற்பதுபோல " நீள் சடையார் தாம் மகிழ்வார் " என்று பக்திச்  சுவையோடு வருணிக்கிறார் சேக்கிழார் பெருமான். இவ்வளவுக்கும் புத்த பிட்சுக்களுக்கான துவர் ஆடையைத் தவிர்க்காமல் இதனைச் செய்து வந்தாராம். மற்றவர்கள் அதனைக் கல் என்றாலும் சிவபிரான் அதனை மலராகக் கொண்டான் என்பதை, " அல்லாதார் கல் என்பார் ; அரனார்க்கு அஃது அலர் ஆமால்  " என்ற உயரிய வரிகள் இதனைத் தெரிவிக்கின்றன. 

சிவத்தொண்டுக்குப் பலன் கிட்டும் காலம் ஒரு நாள் வந்தது. நாயனாரது பெருமையை உலகோர் அறியும்படி இறைவன் ஒரு திருவிளையாடல் செய்தான். அன்றையதினம் நாயனாருக்கு கண் அயர்ச்சி மேலிடச் செய்தான். இந்தக் கட்டத்தில் தான் பெரிய புராணத்தை நாம் ஊன்றிப் படிக்க வேண்டும்.  அங்கு ஒருநாள் அருளாலே அயர்ந்து உண்ணப் புகுகின்றார் " என்பதைச் சிலர் கல் எறிந்து இறைவனை வழிபடும் முன்பாகவே உணவு உண்டார் என்று தவறாகப் பொருள் கொள்வதைப்  பார்க்கிறோம். உண்ணப் புகுதல் என்பது உண்டு விட்டதைக் குறிக்காது. அதற்கான ஏற்பாடுகளுடன் அதற்கு ஆயத்தமாதல் என்பதே பொருள். அந்த அயர்ச்சியும் அருள் காரணமாக இறைவன் தந்தருளியதேயாம். 

இந்த அயர்ச்சியும் சில நிமிடங்களே நீடித்திருக்கக் கூடும். நியமத்தின்  பயனாக அந்நிலையிலிருந்து மீண்டெழுந்த நாயனார், " எங்கள் பிரான் தன்னை எறியாது அயர்ந்தேன் யான் "  என்கிறாரே தவிர, உண்டேன் என்று சொல்லவில்லை. அத்துடன் நில்லாது, உடன் எழுந்து, " பொங்கிய காதலுடன் மிக விரைந்து புறப்பட்டு " சிவலிங்கப் பிரான் முன்படைந்து கல்லினால் எறிந்து வழிபட்டார். 

இன்னும் ஒன்றையும் நாம் கூர்ந்து நோக்க வேண்டும். உண்ட பின்னர் வழிபாடு  செய்யலாம் என்று இராமல் , முன் வினையால் ஏற்பட்டதே உண்டி என்பதால் அதனை ஏற்காது ஒழிந்து, தான் அயர்ந்து விட்டதால் நியமம் தவறியதோ என்று  வேட்கை மிகுந்தபடி, பெருமானிடம் ஓடி வந்தாராம். இதனையும் சேக்கிழார் வாக்கிலேயே அறிவது உத்தமம்:

" கொண்டதொரு கல்லெடுத்துக் குறி கூடும் வகை எறிய

உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடிவரும் வேட்கையோடும் 

கண்டருளும் கண்ணுதலார் கருணைபொழி திருநோக்கால் 

தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவியோடும் தோன்றினார்."   

தன்னை நோக்கி ஆர்வத்துடன் ஓடி வரும் சாக்கிய நாயனாருக்கு முன்பு சிவபெருமான் உமாதேவியுடன் விடை மேல் எழுந்தருளி அவரைச் சிவலோகத்தே இருத்தினான். அவரது அன்பை ஈசனைத் தவிர யாரால் அறிய முடியும் என்று கூறி, சாக்கிய நாயனார் புராணத்தை நிறைவு செய்கிறார் தொண்டர் சீர் பரவ வந்த தெய்வச்  சேக்கிழார்.

" கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உண்ணும் சாக்கியனார் 

  நெல்லினால் சோறு உண்ணாமே நீள் விசும்பு ஆள வைத்தார் "

 என வரும் அப்பர் பெருமானது குறுக்கை வீரட்டப் பதிக வரிகள் ஒப்பு நோக்கற்குரியன.

.( பிற்குறிப்பு: சரிவர பொருள் கொள்ளாமல் நாயனார் கல்லெறியாமல் உணவு உண்டார் என்று விக்கிப்பீடியாவில் பின்வருமாறு வெளியிட்டிருப்பதை நமது முகநூல் அன்பர் சுட்டிக் காட்டியதன் பயனாக எழுந்ததே இக்கட்டுரை. அவருக்கு நமது நன்றிகளை உரித்தாக்குகிறோம்: தவறு திருத்தப்பட வேண்டும் என்றும் எண்ணுகிறோம்:

" One day he forgot to do his austerities and started consuming food. " ) 

 " மறவாது  கல் எறிந்த சாக்கியர்க்கும் அடியேன்" - சுந்தரர் தேவாரம் 



 



 


 




Monday, August 24, 2020

ஊரும் பேரும்


 விதையிலிருந்து செடி முளைத்ததா அல்லது செடியிலிருந்து விதை முளைத்ததா என்பதுபோன்ற  சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஊரின் பெயரையே தமது பெயராகக் கொண்டவர்கள் இன்றும் பலர் இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் இப்போதோ அது தலைகீழாக மாறி, நாட்டுத் தலைவர்கள்,கட்சித் தலைவர்கள் முதலியோரது  பெயர்களைக் கொண்டு ஊர்ப் பெயர்களும்,தெருப் பெயர்களும் சூட்டப்படுவதைப்  பார்க்கிறோம். முன்பெல்லாம் ஊர்ப்பெயர்கள் பெரும்பாலும் காரணப்பெயர்களாகவே இருந்தன. அக்காரணம் தோன்றுவதற்கு முன்பு என்ன பெயரால் அப்பகுதி வழங்கப்பட்டது என்பது யாருக்குமே தெரியாது. 

உதாரணங்களாகச் சிலவற்றைப்பார்ப்போம். உமையம்மை மயிலுருவில் பூஜை செய்த ஊர்களாக மயிலாப்பூர்,மயிலாடுதுறை ஆகிய ஊர்களின் பெயர்கள்  வழங்கப்படுகின்றன. அவ்வாறு பூஜித்தது எந்த யுகத்திலோ  ---, யாமறியோம். அதற்கு முன்னர் அவை எப்பெயர்களால் வழங்கப்பட்டிருக்கக் கூடும் என்பது நமது அறிவுக்கு அப்பாற்பட்டது. 

தமிழில் அமைந்துள்ள தலபுராணங்களில் தலச் சிறப்பு என்ற பகுதி இருப்பது சமய அன்பர்கள் அறிந்ததே. அப்பகுதியில் தலத்தின் பெயர்களும் அவற்றின் பெயர்க்காரணங்களும் , அப்பெயர்களை உச்சரிப்பதால் பெறும் பயன்களும், அங்கு செய்யப்படும் தானச்  சிறப்பும், வசிப்போர் பெறும் பேறும் விரித்துக் கூறப்பெறும். 

மதுரை மாநகருக்குஉரிய பலபெயர்களுள் ஆலவாய் என்பதும் ஒன்று. திருவிளையாடற் புராணத்தின் மூன்று காண்டங்களாவன மதுரைக் காண்டம்,கூடற்  காண்டம்,ஆலவாய்க் காண்டம் என்பதாம். அவற்றுள் , மதுரைக் காண்டத்திலுள்ள தலச் சிறப்பில் வரும் பாடல் ஒன்றில் , திருவாலவாய் என்ற பெயரைச் சொல்லக் கேட்டால் அறம் பெறுவர் என்றும்,அப்பெயரை நினைத்த மாத்திரத்தில் செல்வம் பெறுவர் என்றும், கூறப்பட்டுள்ளது:

" திருவாலவாய் என்று கேட்டவரே அறம் பெறுவர் 

செல்வம் ஓங்கும் 

திருவாலவாய் என்று நினைத்தவரே  பொருள் அடைவர் "

என்பது அவ்வினிய பகுதி. 

திருஞானசம்பந்தர் மதுரையில் பாண்டியனது அரசவைக்குச் சென்றபோது, மன்னன் அவரிடம் எந்த ஊரிலிருந்து வந்துள்ளீர்கள் எனக் கேட்டவுடன், தனது ஊரின் பன்னிரண்டு பெயர்களையும் அமைத்துப் பதிகங்கள் பாடினார் என்று பெரிய புராணம் காட்டும். எடுத்துக்காட்டாக அவற்றுள் ஒரு பதிகத்தின் முதற்பாடலைக் காண்போம்: 

" பிரமனூர்(1) வேணுபுரம்(2)புகலி(3)வெங்குரு(4)ப் பெருநீர்த் தோணி 

புர(5) மன்னு பூந்தராய் (6) பொன்னஞ் சிரபுரம் (7) புறவம்(8) சண்பை(9)

அரன் மன்னு  தண் காழி(10) கொச்சைவயம் (11) உள்ளிட்டங் காதியாய 

பரமனூர் பன்னிரண்டாய் நின்ற திருக்கழுமல(12) நாம் பரவுமூரே"  

இப்பாடலில் பன்னிரண்டு பெயர்களும் வருவது போலவே அப்பதிகத்தின் பிற பாடல்களிலும் அப்பெயர்கள் சக்கரம் போன்று சுழன்று வருவது சிந்தையை மகிழ்விப்பதாம். இவை யாவும் காரணப் பெயர்களே. 

இதே போன்று ஊர்களைக் கொண்டே அமைக்கப்பெற்றுள்ள முழுப் பதிகங்களைத் தேவார மூவரும் அருளிச் செய்துள்ளனர். 

தலப்பெயர்களை நாவால் உரைப்போர்க்குக் கிட்டும் பலன்களை நாவுக்கரசர் அருளியவாறு காண்போம்:

 " ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து 

அமர் உலகம் ஆளலாமே "  

" வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில் 

வல்வினைகள் தீர்ந்து வான் ஆளலாமே." 

நம் இல்லங்களிலும் ஊர்ப்பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டுகிறோம். சிதம்பரம் , அண்ணாமலை, பழநி, செந்தில்  திருப்பதி ஆகியவை சில எடுத்துக்காட்டுக்கள்.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எனது தாய் வழிப் பாட்டியார் சொல்லித் தந்ததை நினைவு கூறுகிறேன். இரவு படுக்கப்போகும் முன்பு சில நாமாக்களைச் சொல்லவேண்டும் என்பதே அது. 

அதாவது," சிவசிதம்பரம் அருணாசலம் மஹா லிங்கம் ஜோதிர் மயம்" என்பது.

அதனை ஒரு உபதேசமாகக் கருதி இன்றளவும் சொல்லி வருகிறேன். 

இவ்வாறு தலங்களின் பெயர்களைச் சொல்வதில் இன்னும் சில தலங்களையும் சேர்த்து சுமார் ஐந்து நிமிடங்களாவது உறங்கச் செல்லும் முன்பு தியானிக்க வேண்டும் என்ற பேராவல் உண்டாயிற்று.  அந்த எண்ணத்தின்  விளைவே  பின் வரும் சேர்க்கை. இருமொழிப் பயிற்சி இல்லாதவனின் அறியாமையைப் பொறுத்து பிழை இருப்பின் திருத்தி அருளுமாறு பெரியோர்களை வேண்டுகிறேன்  

                                                          ஜோதிர்மய ஸ்தோத்ரம் 

                                                                     சிவபாதசேகரன் 

" சிவசிதம்பரம் அருணாசலம் மஹா லிங்கம் ஜோதிர் மயம்"   

கும்பேசம் தாருகேசம் வீதி விடங்கம் ஜோதிர்மயம் 

விச்வேசம் ராமேசம் அமரேசம் ஜோதிர்மயம் 

ஹாலாஸ்யம் கச்சபேசம் பைரவேசம் ஜோதிர்மயம் 

கடம்பவனேசம் கபாலிம் பஞ்சநதம் ஜோதிர்மயம் 

மல்லிகார்ஜுனம் மதங்கேசம் மாத்ருபூதம் ஜோதிர்மயம் 

நாகேசம் நடனபுரீசம் முக்தீசம் ஜோதிர்மயம் 

பல்லவனீசம் பார்வதீசம் பக்ஷிதீர்த்தம் ஜோதிர்மயம் 

ஜடாயுபுரீசம் ஜம்புகேசம் ஜகதீசம் ஜோதிர்மயம் 

ஸ்வயம்புநாதம் ஸ்வயம்ப்ரகாசம் சுந்தரேசம் ஜோதிர்மயம் 

வதான்யேசம் வைத்யநாதம் வடாரண்யம் ஜோதிர்மயம் 

ஒருமுறை காஞ்சிப் பெரியவர்களிடம் துவாதச லிங்க க்ஷேத்ரங்களை மட்டுமே ஜோதிர்லிங்கம் என்கிறோமே என்று கேட்டதற்கு , " எல்லா லிங்க மூர்த்திகளுமே ஜோதிர்லிங்கங்களாகக் கருதப் பட வேண்டியவைகளே . ஏனென்றால் பிரம விஷ்ணுக்களிடையே அக்னி வடிவில் தோன்றி லிங்கோத்பவம் ஆனதால் அம்மூர்த்தம் ஜோதிர் லிங்கமாக எல்லா ஸ்தலங்களிலும் மூலஸ்தானமாக விளங்குகிறது என்று விளக்கம் தந்தார்கள். 

 



  


Saturday, August 15, 2020

பசுபதி யதன் மிசை வரு பசுபதி


                                                                                                                                                                    

                                                                 சிவபாதசேகரன் 


 பரமேசுவரனின் எத்தனையோ நாமங்களில் பசுபதி என்பதும் ஒன்றாகும். வேதத்தின் மையப்பகுதியாக விளங்கும் ஸ்ரீ ருத்ரத்தில் பசுபதயே என்ற மந்த்ரம் வருகிறது. கன  பாராயணம் செய்யும்போது ,"பசுபதயே ச ச பசுபதயே"  என்று வரும்போது மெய்  சிலிர்க்கும். கரூர், ஆவூர் , திருக்கொண்டீசுவரம் ஆகிய இடங்களில் மூலவருக்குப் பசுபதீசுவரர் என்ற பெயர் வழங்கப்படுவதைக் காணலாம். ஆவூர்க் கோயிலைப் பசுபதீச்சரம் என்று குறிப்பிடுகிறார் திரு ஞான சம்பந்தப் பெருமான். " ஆவூர்ப் பசுபதீச்சரம் பாடு நாவே " என்பது அவரது வாக்கு .

உயிர்கள் யாவும் பசுக்கள் எனக் குறிக்கப்படுவன. அவ்வுயிர்கள் யாவற்றையும் படைத்தும்,காத்தும்,அருளியும், தன்னிடமிருந்து மறைத்தும்,நிறைவாக இளைப்பாற்றியும் ஐந்தொழில்களைச் செய்து வருவதால் சிவபெருமான் அவற்றிற்குப் பதியாக ( தலைவனாக)க்  கொள்ளப்படுகிறான் .இதன் காரணமாகவே பெருமானுக்குப் பசுபதி என்ற பெயர் ஏற்பட்டது. நேபாளத்தில் உள்ள பசுபதிநாத்திலும் அப்பெயரே நிலவுகிறது. பசுபதித் திருவிருத்தம் என்ற பெயரில் ஒரு திருப்பதிகமே அருளிச் செய்துள்ளார் திருநாவுக்கரசு நாயனார்.  

உலகத்துயிர்களுக்குப் பொதுப் பெயராக பசு என்று வழங்கப்பட்டாலும் சிறப்பாக அது அனைத்துத் தேவர்களும் தங்கி அருள் புரியும் பசுவுக்கு மட்டும் உரியதாக உள்ளது. சிவபிரான் விரும்பி ஏற்கும்  பால் ,தயிர் , நெய், கோமயம், கோசலம் ஆகியவற்றைத் தருவதால் அப்பிராணியை மட்டுமே பசு என்று அழைக்கிறோம். " ஆன் ஐந்தும் ஆடினான் காண் " என்கிறது தேவாரம். பசு நெய்யை  ஏற்கும் பிரான் ஆவதால் நெய்யாடியப்பர் என்ற திரு நாமம் திருநெய்த்தானம் என்ற தலத்தில் வழங்கப்படுகிறது. சண்டேசுவரப் பெருமானால் ஆநிரைகள் பாலை அபிஷேகமாக ஏற்ற பெருமானுக்குப் பால் உகந்த நாதர் என்ற திருநாமம் திரு ஆப்பாடி என்ற தலத்தில் உள்ளது. பசு வடிவம் ஏற்று அம்பிகையே பாலால் அபிஷேகம் செய்த பல தலங்கள் வரிசையில் தனது கால் குளம்பு ( கோகுரம்) இடறியதால் பெருமான் வெளிப்பட்டு அருளிய திருக்கோழம்பமும் அவ்வடிவம் நீங்கப்பெற்ற ஆவடுதுறையும் குறிப்பிடத்தக்கவை. அங்கெல்லாம் முறையே கோகுரேசுவரர் என்றும், கோ முக்தீசுவரர் என்றும் என்றும் திருநாமங்கள் வழங்கப்படுகின்றன. 

இவ்வாறு இருக்கும்போது அவன் ரிஷபாரூடனாக  வெள்ளை விடை ( ரிஷபம்) ஏறி வருகிறான் இதையே சம்பந்தரும் தனது முதல் பதிகத்தில் " விடை ஏறி " என்று பாடுகின்றார். காளையும் பசு வர்க்கத்தைச் சேர்ந்தது. பசுக்களை மேய்க்கும் போது பாலகனான விசார சருமர் ( இவரே பின்னர் சண்டீசர் ஆனார்) ஆனிரைகளைக் கண்டவுடன், அவற்றை " விடைதேவர் குலம் " என்றே கருதினார் என்று பெரிய புராணம் கூறும்.  பசுவின் பெருமையைக் கூற வந்த சேக்கிழார் பெருமான் , 

"தங்கும் அகில யோனிகட்கும் 

மேலாம் பெருமைத் தகைமையன 

பொங்கு புனித தீர்த்தங்கள் 

எல்லாம் என்றும் பொருந்துவன 

துங்க அமரர் திருமுனிவர் 

கணங்கள் சூழ்ந்து பிரியாத 

அங்கம் அனைத்தும் தம்முடைய 

அல்லவோ நல் ஆனினங்கள் " 

என்று விளக்கமாக அருளிச் செய்துள்ளார். 

ஒரே வரியில் ரிஷபத்தையும் பசுவையும் நினைவு படுத்தும் ஒரு அரிய சொல்லாட்சியைத் தேவாரப்  பனுவல்கள் காட்டுவது , மிக்க நயம் விளைவிக்குமாறும் , சிந்தைக்கு விருந்தாகவும்  இருப்பதைக் காணலாம்.

திருமறைக்காட்டில் தங்கிய காலத்தில் ஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் பலவற்றுள், " சிலைதனை" எனத்  துவங்கும் பதிகமும் ஒன்றாகும். அதில் ஒரு பாடலில் பெருமானை, " உயர் பசுபதியதன் மிசை வரு பசுபதி" எனக் குறிப்பிடுவது நயம் மிக்க பகுதியாம்.  

உலகியலில் நாம் பதி என்றால் பெண்ணின் மணாளனைக் குறிப்பதாகவே பொருள் கொள்கிறோம். தெய்வங்களையும் உமாபதி, லக்ஷ்மி பதி என்ற பெயர்களால் குறிப்பிடுகிறோம். ஆகவே  இங்குப்  பசுவின் பதியாவது காளை ஆவதைக் கருத வேண்டும். தெய்வத்தன்மை வாய்ந்த பசுவின் மணாளன் தெய்வமே பவனி வரும் காளையின் பதியாதல் காண்க. ஆகவேதான் இப்பாடலில் " பசுபதி அதன் மிசை வரு பசுபதி " என்று மிக அற்புதமாகக் காட்டுவார் நற்றமிழ் ஞானசம்பந்தர்   

இப்பொழுது முழுப் பாடலையும் நோக்குவோம்;

கதி மிகு களிறது  பிளிறிட 

உரிசெய்த அதிகுணன் உயர் பசு 

பதி அதன்மிசை வரு பசுபதி     

பலகலையவை முறைமுறை உணர் 

விதியறி தருநெறி யமர்முனி 

கணமொடு மிகுதவ முயல்தரும் 

அதிநிபுணர்கள் வழிபட வளர் 

மறைவனம் அமர்தரு பரமனே. 

யானையை உரித்துப் போர்த்தவனும்,விடையின் மேல் எழுந்தருளும் பசுபதியும் அதிகுணனும் ஆகிய பரமனின் இடமாவது, பல்வேறு கலைகளை முறையாகக்கற்றவர்களும், விதி வழி நின்று சிவநெறிப்படித்  தவம் செய்யும் முனிவர்களும் நிறைந்து விளங்கும் திருமறைக்காடு ஆகும் என்பது இப்பாடலின் திரண்ட கருத்தாகும். சகல புவனாதிபதியான பசுபதியைப் போற்றும் அருமையான பாடல் இது.