Friday, November 22, 2019

இல்லறமும் துறவறமும்

ஸன்னியாசம் அல்லது துறவறம் என்பதை மனிதனுக்கான நான்கு வரையறைகளுள் ஒன்றாக  வகுத்துக் காட்டினர் நம் பெரியவர்கள். மற்ற மூன்றாவன: பிரம்மச்சர்யம், க்ரஹஸ்தம், வானப்ப்ரஸ்தம் என்பனவாம். கல்வி கற்பதற்கு மட்டுமே அமைந்த பருவம் பிரம்மச்சர்யம் ஆகும். மணம் செய்து கொண்டு, பிரம்மச்சாரிகளுக்கும், ஸந்நியாசிகளுக்கும் ,பிற ஏழை எளியவர்களுக்கும் உணவிடுதல்,  க்ரஹஸ்தாச்ரமத்தில் உள்ள தம்பதியரின் கடமை. ஐம்பது வயது ஆனபிறகு , அத்தம்பதிகள், ஊரின் புறத்தே இருந்து கொண்டு வாழ்க்கையை நடத்துதல் வானப்ரஸ்தம் எனப்படும். அதற்குப்பிறகு இல்லறத்தையும் துறந்து வாழ்வதைத் துறவறம் என்பார்கள். இதனை மணம் செய்து கொள்ளாதவர்களும் நேரிடையாக ஏற்பதுண்டு.

துறவு ஏற்பதும் அறத்தைச் சார்ந்ததாகவே இருக்கவேண்டும் என்பதாலோ என்னவோ அதைத் துறவறம் என்று அழகாகப் பெயரிட்டுள்ளார்கள். இந்த விவேக நிலையை ஏற்றவர்கள் எப்போதும் ஈச்வர த்யானமும் , பூஜையும் , ஆத்மவிசாரமும், பிறர்க்குத் தர்ம உபதேசமும் செய்து கொண்டு இருப்பர். ஒரே இடத்தில் நிலைத்து இராமல், பலவிடங்களுக்கும் கால்நடையாகவே சென்று அங்குள்ள மக்களை நல்வழிப்படுத்துவர். யோகிகளுக்கெல்லாம் பரமயோகியாக விளங்கும் தக்ஷிணாமூர்த்தி , மௌன குருவாக இருந்ததுபோல, அதிகமாகப் பேசாமல்,  பக்தர்களிடம் தெய்வ நம்பிக்கையும் , தர்மத்தில் ஈடுபாடும் விளைவிக்கும் சம்பாஷனை மட்டுமே மேற்கொண்டவர்களாக சந்நியாசிகள்  காணப்பட வேண்டும். 

மண் ஓட்டையும் செம்பொன்னையும் ஒரே மாதிரி பாவிக்கும் பக்குவம் இவர்களிடம் காணப்பட வேண்டும். தனக்கென்று எந்த வசதியையும் எதிர்பார்க்காமல் துறவறத்தின் நோக்கம் ஒன்றையே கருத்தில் கொள்ள வேண்டும். எல்லோரையும் சமமாக நோக்கவேண்டும். வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர்களாக இருந்துவிட்டால், உலகமே இவர்களை வணங்கும். உலகம் இவர்களிடம் சில குணாதசியங்களைக்  குறைந்த பட்சமாக எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஏனென்றால் இவர்கள் பிறருக்கு வழி காட்டவும், தான் முத்தி அடையவும் துறவு மேற்கொண்டவர்களாயிற்றே! எனவேதான் இவர்களது நியமங்கள் கடுமையாகக் காணப்படும்.  

காரில் நேராகக் கோயில் வாயிலில்வந்து இறங்குவதைப் பிறர் போல இவர்களும் மேற்கொள்வதை மக்கள் விரும்புவதில்லை. சாதாரண மனிதர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்கிறார்கள். பண்டைக்கால குருமார்கள் கால்நடையாகவே நாடு முழுதும் பயணம் மேற்கொண்டார்கள். அவ்வளவு ஏன், நாம் செய்த புண்ணியத்தால் அதுபோலவே இறுதிவரை இருந்த காஞ்சி முனிவரைத் தரிசித்திருக்கிறோமே ! சந்நியாசம் மேற்கொண்டவர்களுக்கு அடையாளம் காவி உடை மட்டுமல்ல. விபூதி- ருத்ராக்ஷம் தரிப்பதும்கூடத்தான். பூஜைக் காலங்களில் மட்டும் ருத்ராக்ஷம் அணிந்தால் போதாது. எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் ருத்ராக்ஷம் கண்டிப்பாக அணிந்து கொண்டு  வர வேண்டும்.  தவ ஒழுக்கம் என்பது சில மகான்களிடம் ஏராளமாகக் காணப்படும். அவர்களது முகத்தில் தவத்தின் வலிமை ஜொலிக்கக் காணலாம். 

சதாசிவப் பிரம்மேந்திரர் போன்ற மகான்கள், மனித சஞ்சாரம் இல்லாத இடங்களிலேயே தவ சீலர்களாக இருந்தது போல இன்றும் எங்கோ ஒரு கோடியில் அத்தகையவர்கள் இருக்கக்கூடும்.
சிலர் நினைக்கலாம், தவச்சீலர்களுக்கு மட்டுமே இறை அருள் எளிதில் கிட்டும் என்று.மற்றவர்கள் உலகியலில் சிக்கி இறைவனை அதிகமாக நினைக்காதது ஒன்றே இவ்வாறு நினைக்கத் தூண்டுகிறது. உண்மையில் பார்த்தால் ஏனையோரும் பக்தி செலுத்தினால் இறையருளைக் கண்டிப்பாகப் பெற முடியும். இப்படி வழி காட்டுகிறார் ஞான சம்பந்தர் தனது திருவாரூர்ப் பதிகத்தில்:

“  பிறவியால் வருவன கேடுள ஆதலால் நாளும்

   துறவியார்க்கல்லது துன்பம் நீங்காதெனத் தூங்கினாயே

   மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்தநீர் மல்கு சென்னி

   அறவன் ஆரூர்  தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் 
   
                                                                                                    நெஞ்சே”

ஏ நெஞ்சமே, பிறந்து விட்டாலே துன்பங்கள் நம்மைத் தொடர்கின்றன. துறவிகள் மட்டுமே துன்பமில்லாமல் இருக்கமுடியும் என்று ஒதுங்கி விட்டாயே! ஆனால் இப்போது நீ நல்ல வழியை நாடி விட்டாய். கங்கை தாங்கிய சடையுடைய திருவாரூர்ப் பெருமானைத் தொழுதுவிட்டால் அத்துன்பவினைகள் நமக்கும் நீங்குவது எளிதே ஆகும் என உணர்வாயாக. என்ன நேருமோ என்று அஞ்சி மயங்க வேண்டாம். இறைவனைத் தொழுது நாமும் உய்யலாம்  என்று இப்பாடல் மூலம் நமக்கு அடைக்கலம் அளிக்கிறார் சண்பை ஞான சம்பந்தர்.

இதிலிருந்து,  உண்மையாகவே துறவறம் பூண்டு, இறைவனை மட்டுமே நாடி இருப்போர்க்கு உய்வு கிடைக்கும் என்பதும், இல்லறத்தாரும் இறைவனை ஒருமுகத்தோடு நெக்குருகி நாள்தோறும் வழிபட்டால் உய்யலாம் என்பதும் ஒரு சேர அறியப்படுகிறது.  

Saturday, October 26, 2019

நடுநிலை ஆன்மீகவாதிகள்



கடவுள் உண்டு எனும் மனிதர்களை ஆன்மீகவாதிகள் என்றும் இல்லை என்பவர்களை நாத்திகர்கள் என்றும் பொதுப்படையாகச் சொல்கிறோம். ஆனால் இவ்விரண்டுக்கும் இடையில் மதில் மேல் பூனையாக இருப்பவர்களை எந்தப்பெயரிட்டு அழைப்பது என்று தெரியவில்லை. அவர்கள் தேவைப்பட்டால் கடவுளை நினைப்பார்கள். மற்ற நேரங்களில் கடவுளைப்பற்றிய சிந்தனையே இல்லாதவர்கள் அவர்கள். ஏறத்தாழ நாத்திக வாழ்க்கை மேற்கொண்ட இந்த நடுநிலையாளர்களால் சமயத்திற்கு நன்மை எதுவும் ஏற்படப்போவதில்லை. ஒரு பிடிப்பும் இல்லாத இவர்களால் சமயத்திற்கு ஏற்படும் அவப்பெயர்கள் கொஞ்சநஞ்சமல்ல.

சுயநலவாதிகளான நடுநிலைவாதிகள் பெயரளவிற்கே ஆன்மீகவாதிகள். தானும் தன் குடும்பமும் நன்றாக வாழ மட்டுமே பிரார்த்தனை செய்யும் இவர்களால் ஒருபோதும் சமயம் வளர்ச்சியோ, பலமோ, பாதுகாப்போ  அடையப்போவதில்லை. இவர்களில் சிலர் சுயலாபத்திற்காகச்  சமயத்திற்கு எதிராகப் பேசுவதும் உண்டு. சமயத்தையும் சமயக் கடவுளர்களையும் பிறர் இழிவுபடுத்தினாலும் நமக்கேன் என்று இருப்பவர்களே இன்று எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றனர். 

அப்படியானால் ஆன்மீகவாதிகள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று கேட்கலாம். அப்பர் சுவாமிகள் தில்லையில் பாடியது நினைவு கொள்ளத்தக்கது.
“ ஊனில் ஆவி உயிர்க்கும் போதெல்லாம் நான் நிலாவி இருப்பன் என் நாதனை “ என்றார் அவர். இந்த ஊனுடம்புக்குள் துடிப்பு இருந்தால் தான் அந்த ஜீவன் உயிரோடு இருப்பதாகக் கூறுகிறோம். அத்துடிப்பே உயிர் இருப்பதை உறுதி செய்கிறது. அத்துடிப்பு நிற்கும் வரை மறவாது இறைவனை வழிபடுபவரே ஆன்மீகவாதிகள் என்ற உயரிய கருத்தை இதன் மூலம் கற்கிறோம். இதையே ஞானசம்பந்தரும்,
“ ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி “ என்று யோகமார்க்கத்தையும் ஞான மார்க்கத்தையும் ஒருங்கே காட்டுகின்றார்.

என்னால் எதுவும் செய்வதற்கில்லை, கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் என்று மருத்துவர் சொன்னால் கொள்கையாவது ஒன்றாவது என்று கடவுளை வேண்டிக்கொள்ளும் நாத்திக வாதிக்கும்,நடுநிலை ஆத்திகருக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு அவர்கள் தரும் விளக்கம் என்ன தெரியுமா? இறை நம்பிக்கை என்பது செய்கைகளால் விளக்கப்பட வேண்டியதில்லை என்றும், மனத்தளவில் இருந்தாலே போதுமானது என்றும் தத்துவம் பேச ஆரம்பித்து விடுகின்றனர். இதை அவர்கள் ஒன்றும் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. நமது குருநாதர்கள், இறைவனை, “ மனத்தகத்தான், தலைமேலான், வாக்கினுள்ளான் “ என்று அழகாக நமக்குக் காட்டி அருளியுள்ளார்கள்.

கண்ணால் கண்டாலோ ,அல்லது ஆன்மீக அனுபவம் பெற்றாலோ நம்பிக்கையும் பக்தியும் அதிகரிக்கிறது என்றாலும் இவற்றைப் பெறுவதற்கு நமக்குத் தகுதி இருக்க வேண்டுமே! தகுதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இந்த நடுநிலையாளர்களுக்கு ஏற்படுவதில்லையே.
இவர்களுக்குக்  கடவுளைக் காண வேண்டும் என்றும்,பிறவாத நிலை ஏற்பட வேண்டும் என்றும் எண்ணமே ஏற்படாதபோது அதனை அனுபவித்த அருளாளர்களது சொந்த அனுபவத்தையாவது அவர்கள் வாயிலாகவே அறிந்து கொள்ளலாமே. இந்த வகையில் அவர்களது அருள் நூல்கள் நமக்குப் பெரிதும் துணை செய்கின்றன. தாம் பெற்ற அனுபவத்தை அவர்கள் பகிர்வதோடு நாமும் உய்யவேண்டும் என்ற பெரும் கருணையோடு இவ்வாறு அருளியுள்ளார்கள் என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது.

சைவசமயாச்சார்யர்கள் நால்வருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் இந்நிலவுலகில் வாழ்ந்தது பதினெட்டே ஆண்டுகள் தான். இக்குறுகிய காலத்தில் சைவம் தழைக்க அவர் ஆற்றிய பணிகளை இன்றளவும் சைவ சமயம் நினைவு கூர்கிறது. இறைவன் தனக்கிட்ட பணிகளைச் செவ்வனே செய்து முடித்த பின்னர் இனியும் இந்நிலவுலக வாழ்க்கையை நீக்கி இறைவனை அடைய வேண்டும் என்று விழைந்த சுந்தரர், திருவஞ்சைக்களத்து இறைவனாரிடம் விண்ணப்பிக்கவே, அவரது வேண்டுகோளை ஏற்ற பரமன்  அவரைக் கயிலைக்கு அழைத்து வர ஐராவதம் என்ற வெள்ளை யானையை அனுப்பினார். அந்த யானையின் மீது ஏறிக் கயிலைக்குச் செல்கையில் தன்னைத் தேவர்கள் எதிர்கொண்டதையும்  பரமன் தனக்காகப் பரம கருணையோடு அனுப்பிவைத்த யானையின் மீதேறிச் செல்வதையும் அப்பொழுதே ஒரு பதிகமாக அருளிச் செய்தார் சுந்தரர். அப்பதிகத்தில் இடம்பெறும் ஒரு பாடல் உலகத்தவர்களுக்கு உபதேசிக்கும் வகையுள் அமைந்துள்ளது இன்புறத்தக்கது. அதாவது, யாரொருவர் இவ்வுலகில் பிறந்து சிவபெருமானை இடைவிடாது வழிபடுகிறாரோ அவர்கள் பொன்னுலகாகிய சிவலோகத்தை அடைவர் என்பதை இன்று அடியேன் கண்டுகொண்டேன் என்று அகச் சான்றாக அறிவிக்கிறார் நாவலூர் வள்ளல். எனவே இந்நிகழ்ச்சியைப்பற்றி அறிந்தபின்னராவது,  குரு வாக்கியத்தைச் சிரத்தின் மீது கொண்டு பின்பற்றவேண்டியது நமது கடமை அல்லவா ?

“ மண்ணுலகில் பிறந்து நும்மை

 வாழ்த்தும் வழியடியார்

 பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் 

இன்று கண்டொழிந்தேன்

 விண்ணுலகத்தவர்கள்  விரும்ப 

 வெள்ளை யானையின் மேல்

 என்னுடல் காட்டுவித்தான் 

நொடித்தான் மலை உத்தமனே.

என்பது அவ்வுயரிய பாடல்.

வாழையடி வாழையாகச் சிவபெருமானுக்கே மீளா அடிமை பூண்டொழுகும் அன்பர்களைப் பிறவிப் பெருங்கடலிலின்றும் கரை ஏற்றித் தன்னடிக்கே புகவைக்கும் இறைவனது கருணைத்திறம் இப்பாடலால் வெளிப்படுகிறது. அத்துடன், ஐந்தொழில்கள் ஆற்றும் இறைவன், அழித்தல் தொழிலால் உயிர்களை மீண்டும் மீண்டும் பிறவாமல் இளைப்பாறச் செய்யும் ஒப்பற்ற கருணையும் செய்வதால் அத்தொழிலை நொடித்தல் என்கிறோம். அதனைச் செய்யும் பெருமானை நொடித்தான் என்றும், அவன் நீங்காது உறையும் கயிலைமலையை ஊழிக்காலத்திற்கப்பாலும் திகழும் நொடித்தான் மலை என்றும் சுந்தரர் தேவாரம் போற்றுகிறது.      

Friday, August 30, 2019

ஏன் இந்த நாடகம் ?

பரமேசுவரன் கருணையே வடிவானவன். அதனால்தான் அவனைப் பெரிய புராணம், “ கருணையே வடிவம் ஆகி “ என்று போற்றுகிறது. தன்னைச் சரணாக அடைந்த தனது அடியார்கள் வேண்டிய அனைத்தையும் வழங்கும் வள்ளலாக இருந்தாலும் தன்னிடம் எதுவுமே இல்லாதவனாக அத்தனையையும் வழங்கிவிடுவதால் தியாகராஜன் என்று அப்பெருமானை அடியார்கள் நெக்குருகிப் போற்றுகின்றார்கள்.

ஏழை அடியார்கள் மனம் உருகி அர்ப்பணிக்கும் அபிஷேக ஜலத்தையும், வில்வம்,தும்பை,கொன்றை ,ஊமத்தை போன்றவற்றையும் உவகையோடு ஏற்கும் பரமன் உன்மத்த வேடம் கொண்டு பேயாடு காட்டில் கீதம் உமை பாட இரவில் ஆடுகின்றான். இப்படி எதுவும் இல்லாதவன் போல் ஏன் நாடகம் ஆடவேண்டும் என்று பக்தர்கள் அவனுக்காக நெஞ்சம் பதைபதைத்து உருகுகிறார்கள். ஆனால் அவனுக்கோ இவை யாவும் திருவிளையாடல் போலும் !

சங்கநிதியும் பத்ம நிதியும் கொண்ட குபேரன் சிவபிரானுக்கு உற்ற தோழன். அடியார்களுக்காகப் பரியும்  இறைவனது கண்ணசைவு கண்டு செல்வத்தை வாரி வழங்கத் தயாராக இருக்கிறான். பெருமானின் திருவுள்ளக் குறிப்பறிந்து அன்னபூரணி தேவி, அடியார்களுக்கு எடுக்க எடுக்கக் குறையாத அன்னம் அளிக்கக் காத்திருக்கிறாள். நவக்கிரகங்கள் பெருமானது ஆணைக்காகக் காத்திருக்கின்றன. அவனை வணங்காத தேவர்கள் இல்லை. 

ஆனால் அவனோ எல்லோருக்கும் மேற்பட்டவன் ஆதலால் சேர்ந்து அறியாக் கையன். இத்தனை பெருமைகள் இருந்தும் ஏதும் இல்லாததுபோல் ஸ்திரமாக இருப்பது விசித்திரம் தான்!
பரமேசுவர பத்தினியாகிய அம்பிகை காஞ்சியில் அரும் தவம் செய்தாள். முப்பத்திரண்டு அறங்கள் செய்தாள். பசிப்பிணியே இல்லை என்னும்படியாக  அறம் செய்ததால் தர்ம சம்வர்தனி ஆனாள். உலகத்து உயிர்கள்பால் அவள்  கொண்ட கருணை ஈடற்றது. ஆகவேதான் ஸர்வ ஜனரக்ஷகி என்றும் ஸர்வ லோக ஜனனி என்றும் அக்கற்பகவல்லிக்குப் பெயர்கள் வந்தன.

பஞ்சாரண்ய க்ஷேத்ரங்களுள் ஒன்றான ஆலங்குடிக்குத் திருஞானசம்பந்தர் எழுந்தருளுகிறார். பூளைச் செடியை ஸ்தல விருக்ஷமாகக் கொண்டபடியால் அத்தலம் திரு இரும்பூளை எனப்பட்டது. இத்தலத்தின் மீது அமைந்துள்ள பதிகம் பல கேள்விகளை அடியார்களை நோக்கிக் கேட்பதாக அமைந்துள்ளது. ஆகவே இதனை வினாவுரை என்பார்கள். ஞானமே வடிவான ஞானசம்பந்தப்பெருமான் சிவபக்திச் செல்வர்களான அவ்வூர் அடியார்களைப் பார்த்து இறைவனது பெருமைகளைக் கூறி வியந்தவர்போல் வினவுகிறார். இதேபோல் திருக்கண்டியூரிலும் அடியார்களை நோக்கி வினவும்போது, “ வினவினேன் அறியாமையில் உரை செய்ம்மின் “ எனப்பாடுவார். இப்படிப் பாடுவதால் அவர் அறியாதவர் ஆகார். சிவ கீர்த்திகளை அடியார்கள் வாயிலாகக் கேட்பதும் இன்பம் தர வல்லது என்பதால் அவ்வாறு வினவினார்.

இப்போது திருஇரும்பூளைப் பதிகப் பாடல் ஒன்றை சிந்திப்போம்.

 “ நச்சித் தொழுவீர்காள் நமக்கு இது சொல்லீர்
  கச்சிப்பொலி காமக்கொடியுடன் கூடி
  இச்சித்து இரும்பூளை இடம் கொண்ட ஈசன்
  உச்சித்தலையில் பலிகொண்டு உழல் ஊணே . “

நச்சுதல் என்பது என்றும் எப்போதும் மறவாது தொழுதலைக் குறிப்பது.
“  இச்சையாகி மலர்கள் தூவி இரவோடு பகலும் தம்மை
   நச்சுவார்க்கு இனியர்போலும் நாக ஈச்சரவனாரே .” என்பது அப்பர் சுவாமிகள் வாக்கு திருக்குறள் உரையாசிரியர்களுள் ஒருவர், நச்சினார்க்கு இனியர் என்பதும் இங்கு நினைவு கொள்ளத் தக்கது. 

எனவே நச்சித் தொழும் அடியார்களது பணியையும் சம்பந்தர் இங்கு அமைத்துப் பாடுகின்றார். அப்படிப்பட்ட அடியார்களே பெருமானது பெருமைகளையும்,கருணையையும் இரவு பகலாக நினைந்து கண்ணீர்வார உருகுவார்கள்.

  இனி, “ கச்சிப் போலி காமகொடி” என்றதைப் பார்க்கும்போது மனம்     ஆனந்த வெள்ளத்தில் திளைக்கிறது. காஞ்சி என்பது கச்சி என்றும் வழங்கப் படும். கச்சி ஏகம்பன் என்கிறோம் அல்லவா! காம கோட்டத்தில் அரும் தவம் இயற்றும் அம்பிகை அன்னபூரணியாக அனைத்து உயிர்களுக்கும் பசிப்பிணியைப் போக்கும்போது இறைவனோ ஏதும் இல்லாதவன்போல் நாடகம் ஆடி தாருகாவனத்தில் பிரம கபாலத்தில் பிக்ஷை எடுக்கச் செல்வானேன் என்பதை கருத்தில் கொண்டு நமது ஆசார்ய மூர்த்திகள் வினவுகின்றார்.

இதே கருத்தை சுந்தரரும், “ தையலாள் உலகு உய்ய வைத்த காரிரும்பொழில் கச்சி மூதூர்க் காமக் கோட்டம் உண்டாக நீர் போய் ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே “ என்று பாடுகிறார்.

ஏதும் இல்லாதவன் போல் இறைவன் நாடகம் ஆடுவதையும்,  ஏதும் அறியாதவர்போல ஞானத்தின் திருவுருவாகிய திருஞானசம்பந்தர் வினவுவதையும்  பார்க்கும்போது இவ்விரு நாடகங்களையும் கண்டு குதூகலிக்கும் நாம் அன்றோ பாக்கியசாலிகள் என்று நினைக்கத் தோன்றுகிறது. 

Friday, July 26, 2019

ஆசையும் பேராசையும்

மாணிக்க வாசக சுவாமிகள் 

ஆசைக்கும் பேராசைக்கும் வித்தியாசம் உண்டு என்று தெரியாதவர்கள் இருக்க முடியாது. நியாயமான ஆசைகளையும்  கோரிக்கைகளையும் இறையருள் முன்னின்று நிறைவேற்றி வைக்கிறது. ஆசைப் பத்து என்ற ஒரு பகுதி திருவாசகத்தில் இருப்பதை அதனைக் கற்றவர்கள் அறிவர். அதில் மாணிக்க வாசகர் தனது ஆசைகளாகக் குறிப்பிடுவனவற்றை நோக்கும்போதுதான் நாம் எத்தனை கீழ் நிலையில் இருக்கிறோம் என்பது தெளிவாகிறது.

தன்னை இங்கே வா என்று பெருமான் அழைக்கவேண்டும் என்பது அவரது ஆசை. பிறவியாகிய இருளைத் துறந்து, பேரொளியாகிய பிரானிடத்துச் செல்ல வேண்டும் என்ற அவரது வேட்கை இங்கு வெளிப்படுகிறது. அடுத்ததாக அப்பெருமானை நேரில் காண வேண்டும் என்ற ஆசை. இன்னும் எத்தனை நாள் அவனைப் பிரிந்து, இந்த எலும்பும், நரம்பும் கொண்ட உடலை மூடியுள்ள தோலைப் பேணுவது? எனவே இறைவனே இதிலிருந்து விடுபடுத்தித் தன்னிடம் கூவிக்கொள்ள வல்லவன் என்கிறார் குருநாதர்.

ஆறுதலாகத் தன்னிடம் கருணை கூர்ந்து முகத்தை நோக்கித் திருவருள் வைக்கவேண்டும் என ஆசைப்படுகிறார் அடிகள். இரத்தமும் சீயும் உடைய உடலை ஈக்கள் மொய்க்கும் நிலையிலும் காத்து ஆட்கொள்ளும் குருமணி யாகத் திகழ்பவன் ஈசன் ஒருவனே என்பதால் இத்தகைய ஆசையை முன் வைக்கிறார் அடிகள்.

அத்தகைய அருளைப் பெறுவதற்குத் தான் உரியவனாக ஆக வேண்டுமே என்ற எண்ணம் தலைஒங்குவதால் அவனை நினைந்து உள்ளம் உருகும் நிலை தனக்கு ஏற்பட வேண்டும் என்கிறார்.
தன்னைத் தேடி வந்து திருப்பெருந்துறையில் ஆட்கொண்ட வள்ளல் உலகத்தவர்களிடம் “ இவன் என் அடியான், எனக்கு அளியவன் “ என்று சொல்ல வேண்டும் என்பது இவரது மற்றுமோர் ஆசை. இவன் இரக்கப்படத் தக்கவன் என்று உனது திருவாயால் சொல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

அடுத்தபடியாக இறைவனது திருமுகத்தில் எழும் குறுநகையைக் காண ஆசை. “ கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் “ என்றார் அப்பர் அடிகள். உலகத்தே தோன்றி அடியார்களை ஆட்கொள்ளும் கடவுளின்  முகத்தில் எழும் ஒளியை நோக்கி, அதோடு அம்முறுவலையும் காண வேண்டியது கண் பெற்றதன் பயன் அல்லவா ?

நேரில் எழுந்தருளிய இறைவனைப் போற்ற வேண்டுமே. அவனது ஆயிரம் நாமங்களாலும் போற்றிப் பரவ ஆசைப் படுகிறார் மாணிக்க வாசகர். அப்போது மனம் லயிக்க வேண்டியது இன்றியமையாதது. கையால் அவனைத் தொழுது, அவனது கழற் சேவடிகளைத் தழுவிக்கொண்டு,தலை மீது அவற்றை வைத்துக் கொண்டு, ‘ எம் பெருமான்,ஐயா..” என்றெல்லாம் வாயார அழைத்து , தீ சேர்ந்த மெழுகைப் போல உருக வேண்டும் என்று ஆசைப் படுகிறார் மணி வாசகப்பெருமான்.

இறைவனது பேரருளால் சிவலோகம் கிடைத்து விட்டால் அங்கே இருக்கும் பழைய அடியார்களது கூட்டத்தைத் தரிசிக்க வேண்டும் என்பது மற்றுமொரு ஆசை. கதியற்றவனாகக் கதறும் அடியேனை “ அஞ்சேல் “ என்று அருள வேண்டும் என்ற ஆசையுடன் திருவாசகத்தில் ஆசைப்பத்து நிறைவு பெறுகிறது.

ஆனால் நாமோ மேற்கூறிய எந்த ஆசையும் இல்லாமல் பணமும்,புகழுமே இருந்தால் போதும் என்று போலி வாழ்க்கை வாழ்கிறோம். ஒருவனுக்குப் பொருள் வேண்டியதுதான். வேண்டாம் என்று சொல்ல வேண்டிய துறவிகள் சிலரே அவ்வலையில் அகப்படும்போது நாம் எம்மாத்திரம் ! ஆனால் அந்த ஆசை அளவு மீறிப் போகாத வண்ணம் நமக்குத் திருவருள் துணை தேவைப்படுகிறது.

கண்ணால் காண்பதை எல்லாம் நாமே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம், பேராசையில் கொண்டு விட்டு விடுகிறது. பேராசைப் பட்டுத்  தங்களது வாழ்வின் அந்திம காலம் நெருங்கும்போதும் கூடப் பலருக்கு உள்ளத் தெளிவு பிறப்பதில்லை. ஈட்டிய செல்வம் கூட வராது என்று தெரிந்தும், இறுதி நாள் வரை பேராசை நீங்குவதில்லை.

உடலைப் பேராசைக்கு இருப்பிடமான பிண்டம் என்கிறார் மாணிக்கவாசக சுவாமிகள். “ வைத்த நிதி, பெண்டிர்,மக்கள், குலம்,கல்வி என்னும் பித்த உலகு” என்று கூறி, அப்பிண்டம் அறுவதற்குக் காரணமாகத் தனது தலை மீது இணையார் திருவடிகளைப் பெருமான் வைத்தவுடன் பந்தங்கள் யாவும் நீங்கப் பெற்று உய்ந்ததாகக் கூறுகிறார். கடல் நஞ்சை உண்டு உலகங்கள் யாவற்றையும் காப்பாற்றிய கபாலியான பரமேசுவரன் முப்புரங்களை எரித்து அசுரரிடமிருந்து அனைவரையும் காப்பாற்றியவன். அப்படிப்பட்ட பரம்பொருள் அடியேனையும் ஓர் பொருளாகக் கொண்டு,வேதிய வடிவில் திருப்பெருந்துறையில் எழுந்தருளித் தூய்மை செய்த கருணையை நினைந்து பூக்களைக் கொய்வோமாக என்ற பொருளில் அமைந்த அப்பாடல் இதோ:

பேராசையாம் இந்தப்பிண்டம் அறப் பெருந்துறையான்
சீரார் திருவடி என் தலை மேல் வைத்த பிரான்
காரார் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி
போரார் புரம்பாடிப் பூவல்லி கொய்யாமோ.         
       

Friday, March 22, 2019

தில்லைப் பொது நடம்

நேற்று வந்த தொலைபேசி எண் புதியதாக இருந்தது. சொல்லப்போனால் அது வெளிநாட்டு நம்பரும் கூட !  பேசியவர் ஒரு பெண்மணி.  தமிழ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். வெளிநாட்டில் குடியேறிப் பல ஆண்டுகள் ஆகிறதாம். எடுத்த எடுப்பில் அவர் கேட்ட கேள்வி என்னை வியக்க வைத்தது.  " ஆதியாய்  நடுவுமாகி "  என்று தொடங்கும் பாடல் எதில் வருகிறது; எந்த ராகத்தில் அதைப் பாட வேண்டும் என்று கேட்டார். தன்னுடைய  குழந்தைகளுக்கும்  தெய்வீகப் பாடல்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவராக அவர் இருக்கிறார். 

வீட்டில் தமிழ் பேசுகிறீர்களா என்று கேட்டேன்.  அதற்கு அவர்  "  தமிழில் மட்டும்தான்  பேசுவோம். கம்ப்யூட்டர்  என்று சொல்வதையும் தவிர்த்துக்  கணினி  என்றே  சொல்கிறோம் .     உங்களுடைய வலைப் பதிவுகளைப் படித்து வருகிறேன்.  மேற்சொன்ன பாடல் பற்றிய ஐயம் வந்ததால் தங்களது தொலைபேசி எண்ணைக் கண்டறிந்து  இப்போது பேசுகிறேன் " என்றார். தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே இல்லாமல் காலத்தைக் கழிக்கும் நம்மவர்களைப்  பார்த்து அலுத்துப் போன நிலையில் இப்படியும் ஒருவர் உலகின் ஒரு மூலையில் இருப்பது  ஆறுதலாக இருந்தது. 

இந்த உரையாடல் என்னைச் சிந்திக்க வைத்தது.  நமது கலாசாரம்,பண்பாடு ஆகியவற்றில் ஈடுபாடு உடையவர்கள் அநேகமாக வெளி நாடுகளுக்குச் சென்று விட்டார்களோ என்று நினைக்கத் தோன்றியது.  மீதம் உள்ளவர்கள்  சமயப் பற்று இல்லாதவர்களாகவும் , திரைப்படம்,அரசியல் , கேளிக்கைகள் ஆகியவற்றில் நேரத்தைச் செலவழிப்பவர்களாகவும்  இருக்கக் காண்கிறோம்.  பிரம்மாண்டமான ஆலயங்களைக் கட்டிய அரசர்கள் ஏற்படுத்தி வைத்த நிபந்தங்களைத் தமதாக்கிக் கொள்ளத் துணிந்து விட்ட சமுதாயத்தை என்ன சொல்வது ?  
அற நிலையங்களைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லிவிட்டுக் கொள்ளையடிக்கும் கும்பல்களைத்தான் நாம் பார்க்கிறோம். கோயில் சொத்துக்கள் சூறையாடப்படுவதை  சட்டத்தின் துணை கொண்டு நியாயமாக்கி விடுவார்களோ என்று அஞ்ச வேண்டி இருக்கிறது. யார் சொத்தை யாருக்குப் பட்டா போடுவது ? கொஞ்சம் கூட மன சாட்சியே இல்லையா ? 

இப்போது அந்த வெளிநாட்டுப் பெண்மணி குறிப்பிட்ட பாடலைக் காண்போம்  இப்பாடல் சேக்கிழார் அருளிய பெரிய புராணத்தில் தில்லை வாழ் அந்தணர் புராணத்தில் முதல் பாடலாக வருவது. இத் திருமுறைக்குப் பண்  அடைவு இல்லாததால்  நிறைவாகப் பாடும் பாடலாக இருக்கும் பட்சத்தில் ,  மத்யமாவதி  அல்லது சுருட்டி ராகத்தில் பாடுகிறார்கள். 

இந்த அற்புதமான பாடல் இறைவன்  ஏகனாகி,அநேகனாகி, பேதங்கள் அத்தனையும் ஆகிப் பேதம் இல்லாப் பெருமையனாக விளங்குவதை எடுத்துரைக்கிறது. இறைவனது ஆற்றலுக்கு அளவு ஏது ?  யார் அறிவார் எங்கள்  அண்ணல் அகலமும் நீளமும்  என்றபடி, அடி முடி காணாமல் நின்ற தத்துவன் அளவருக்க ஒண்ணாதவனாகப்  பிரம விஷ்ணுக்களுக்கே அரிய பெருமானாக  விளங்குவதால்  ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவுமாகி  என்றார்  சேக்கிழார் பெருமான்.

சோதி  மயமான அவன்  நமது உணர்வோடு ஒன்றித் தோன்றும்போது  நனியனாகி விடுகிறான்.  தோன்றிய பொருள்கள் யாவும் அவனது வடிவாகவே ஆகி விடுகின்றன. இப்படி அன்பருக்கு அன்பனாக விளங்குகிறான்.  அவனோ, ஆணல்லன், பெண்ணல்லன்,அலியும் அல்லன் என்றபடி சக்தியோடு இணைந்தும்,தனித்தும்  இருக்கும் பேராற்றல் உடையவன். ஐந்து தொழில்களையும் இயற்றும் அப்பெருமான்  அதனைத் தனது ஆனந்த நடனத் திருவுருவில் உணர்த்துகிறான். நமக்குப் போதிக்கிறான்.  தில்லைச் சிற்றம்பலம் ஆகிய பொதுவினில் நடம் புரியும்  பூங்கழல்களை  நாம் வந்திப்போமாக என்று , அரு மறைகளின் உச்சியில் இருந்து  கற்பனைக்கும் எட்டாதவனாகக் கருணையே உருவமாக நடமாடும்   நடராஜ மூர்த்தியினது அந்த அற்புதக் கோலத்தைத்   தெய்வச் சேக்கிழார்  முதல் பாடலாக  அமைத்தருளியுள்ளார். 

ஆதியாய் நடுவும் ஆகி  அளவிலா அளவும் ஆகிச் 

சோதியாய் உணர்வும் ஆகித்  தோன்றிய  பொருளும் ஆகிப் 

பேதியா  ஏகம் ஆகி ப்  பெண்ணுமாய்  ஆணும் ஆகிப்  

போதியா நிற்கும் தில்லைப்  பொது நடம்  போற்றி போற்றி.     

Friday, February 22, 2019

சிரித்து அருள் செய்தார்

சிரித்த முகம் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே 
சிரிப்பு என்பது இறைவனால் மனித  குலத்திற்கு அளிக்கப்பட்ட வரம்.  Laughing bird  என்ற பறவை இனமும்  சிரிக்கிறதாமே என  நினைக்கலாம்.  உண்மைதான்! ஆனால் அவை சிரிக்கும்போது முகத்தில் பெரிய மாற்றங்களைக் காண முடிவதில்லை. வேண்டுமானால்  you tube  ல்  அவை சிரிப்பதைப் பாருங்கள்.  மனிதன் சிரிக்கும்போதோ முகத்தில் உள்ள ஒவ்வொரு சதையும் அசைவது போலத் தோற்றம் அளிக்கிறது. பல்வேறு முக பாவங்களில் சிரிப்பும் ஒன்று அல்லவா !  

சிரித்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். சிலரைக் குறிப்பிடும்போது அவர்கள் சிரித்த முகத்தோடு பெரும்பாலும் காட்சி அளிப்பதாகக் கூறக் கேட்டிருப்பீர்கள். சிலருக்கோ  சிரிக்கவே தெரியாது. எள்ளும் கொள்ளும் வெடிக்கும் !  எப்போதும் முகத்தை உர்ரென்று  வைத்துக் கொண்டிருக்கிறார் என்பார்கள் பார்ப்பவர்கள். சிடு மூஞ்சி என்ற பட்டமும் கொடுத்து அவரைக் கௌரவிக்கிறார்கள் ! 

சிரிப்பில் தான் எத்தனை வகை !!  புன் சிரிப்பு,  மென் சிரிப்பு, குமிண் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம். அகத்தில் உள்ளதை  முகத்தில் தெரிந்து கொள்ளச் சிரிப்பும் ஒருவகையில் உதவுகிறது. 

உதடு விலகாமல் சிரிப்பவர்களும், மிகவும் லேசாக முறுவலி ப்பவர்களும், இடி சத்தம் போல் சிரிப்பவர்களும்  உண்டு. எப்படி ஆனாலும் பற்கள் தெரியச்  சிரித்தால்  அதுவும் ஒருவகையில் அழகு தான். அதற்கு அழகிய பற்கள் வேண்டுமே!  சிலருக்குப் பற்கள் வரிசையாக இராது. சிலர் வாயைத்திறந்தால் காவி நிறமோ மஞ்சள் நிறமோ பிரகாசிக்கும். மற்றும் சிலர் வெற்றிலையை  மென்ற வாயோடு சிவந்த பற்களைக் காட்டுவார்கள். 

பற்கள் கோணாமல் இருப்பதோடு வெண்மையாக இருந்தால் அது சிரிப்புக்கே அழகு சேர்க்கும். வெண்பற்களை  முத்தொடு ஒப்பிடுவது வழக்கம். சிரித்தால் முத்து உதிர்ந்து விடுமா என்ன என்று சிரிக்கவே தெரியாதவர்களைப் பற்றிக் கூறுவதைக் கேட்டிருப்பீர்களே ! 

திருவெம்பாவையில்  ஒரு பெண் மற்றொருத்தியை விளிக்கும்போது, " முத்தன்ன  வெண்ணகையாய் "  என்கிறாள். அது இருக்கட்டும். சாதாரண பெண் சிரிக்கும்போதே இந்த வருணனை பெறுகிறாளே , உலக நாயகியாகிய உமாதேவியே சிரிக்கும்போது எப்படி இருக்கும் என்று அருளாளர்கள் பாடும்போது அந்தக்  காட்சியை நினைந்து மனம் உருகுகிறோம்.   " முத்திலங்கு முறுவல் உமை " என்று அப்புன்னகையை வருணிக்கிறார் சம்பந்தர். " தவள வெண்ணகையாள் என்று திருப்பாலைத்துறை என்ற தலத்தில் அம்பிகை அழைக்கப்படுகிறாள் . 

சிரித்தல் என்ற சொல்லை நகுதல் என்று  குறிப்பிடுவார் திருவள்ளுவர்.  இன்பம் வரும்போது நகைப்பது பெரிதல்ல. நம்மை நோக்கி வரும் துன்பம் கண்டும் அஞ்சாமல் நகைக்க வேண்டும் என்பார்  வள்ளுவர். " இடுக்கண்  வருங்கால் நகுக " என்பது அப்பொய்யா மொழி.  இது நடக்கக் கூடியதா என்றே நாம் நினைப்போம். ஆனால் இறைவனே அச்செயலை முதன் முதலாக செய்து காட்டி நமக்கு வழி வகுத்திருக்கிறான் என்று சொல்லத் தோன்றுகிறது. 

தாருகாவன முனிவர்கள் ஆபிசார வேள்வி செய்து அதிலிருந்து எழுந்த கஜாசுரன் என்னப்படும் யானையை  சிவபெருமான் மீது ஏவினார்கள். உலகே நடுங்கும் வண்ணம் சீறிப் பாய்ந்து வந்த அந்த யானையை உரித்து, அதன் தோலைத் தன்  மேனியின் மீது பெருமான் போர்த்திக் கொண்டான் என்பது வரலாறு.  கஜ சம்ஹாரத்தை நேரில் கண்டு கொண்டிருந்த உமாதேவி  அச்சத்தால் நடுங்கினாளாம் . அப்படி அஞ்சும்போது, அச்சம் தீர்க்கும் முகமாக யானையை அடக்கி,தனது பற்கள் தெரியும் படியாகச் சிரித்தவாறே அதனை உரித்துப் போர்த்துக் கொண்டு அனைவருக்கும் அருள்  செய்த வீரச் செயலை அப்பர் பெருமான் திருச் சேறை என்ற தலத்தில் பாடி அருளுவதைப் பாருங்கள்: 

விரித்த பல்  ; கதிர்கொள் சூலம்  ;  வெடிபடு தமருகம் ; கை 

தரித்ததோர்  கோல கால பைரவனாகி ,  வேழம் 

உரித்து, உமை அஞ்சக் கண்டு  ஒண்  திருமணி வாய்  விள்ளச் 

சிரித்து அருள் செய்தார்  சேறைச் செந்நெறிச்  செல்வனாரே. 

என்ற பாடலில் , கஜாரியாக வந்த பரமேசுவரனது தோற்றம்  சிறப்பாகக்  காட்டப்பெறுகிறது. பற்கள் விரியச் சிரித்தவாறே  சூலமும், தமருகமும் கைகளில் ஏந்தியவராக பைரவத் தோற்றத்துடன் எழுந்தருளும் பெருமான் , யானையின் வாய்க்குள்ளே அணுவாக உள்ளே சென்றவுடன் உலகை இருள் சூழ்கிறது. சூரிய சந்திரர்கள் சிவ பெருமானது திருக்கண்களாதலால்,  யானைக்குள் இமைப்பொழுதளவில் பெருமான் மறைந்ததால் உலகம் யாவும் இருண்டன. அதனைக் கண்டுதான் உமாதேவி அஞ்சி நின்றாளாம். மறுகணமே யானையை உரித்துப் போர்த்திக்கொண்டு அதன் மத்தகத்தின் மீது வலது பாதத்தை ஊன்றிய வண்ணம் பெருமான் வீர நடனம் புரிந்து சிரித்த முகத்தோடு அனைவருக்கும் அருள் செய்தான். மீண்டும் ஒளி பெற்றதால் அனைவரும் சிவானந்தம் பெற்று உய்ந்தனர். அந்தப்புன்னகை உலகம் யாவற்றையும்  இன்னமும் உய்விக்கிறது. 

Sunday, January 13, 2019

எல்லாமே முடிந்துபோய் விட்டதா ?

மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தை சிவபெருமான் எழுதியது 
தெய்வமே மதுரையில் எழுந்தருளிச்  சங்கப் புலவராக வீற்றிருந்தபடியாலும், இடைக்காடர் என்ற புலவரது பிணக்குத் தீர்க்க அவரோடு வைகைக் கரைக்குச் சென்றபடியாலும், நாளும் தமிழ் கேட்கும் இச்சையால் திருஞானசம்பந்தருக்கும்  நாவுக்கரசருக்கும் நித்தல் படிக்காசு அளித்ததாலும் திருவாசகத்தைத் தானே தனது திருக்கரங்களால் எழுதியபடியாலும், தொண்டர்களது  பெருமையைப் பாடுவதற்காகச் சேக்கிழார் பெருமானுக்கு உலகெலாம் என்று அடி எடுத்துத் தந்ததாலும் ,இன்ன பிறவற்றாலும் இம் மொழியைத் தெய்வத் தமிழ் எனக் கூறுவது சாலப் பொருத்தமே . 

வேதம் பாடும் வாயால் தமிழில் பாடுக என்று சுந்தரருக்குக் கட்டளை இட்ட படியால் இரு மொழிகளும் இறைவனுக்கு இரு கண்கள் போல் விளங்குவன  . "  ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் " என்ற அப்பர் மொழி இதனை உறுதி செய்யும். 

தமிழ் மொழியே இறைவனது வடிவம் எனக் கொள்ள வேண்டும். சொல்லும் அதன் பொருளுமாய் விளங்குபவர்கள் உமா மகேசுவரர்கள். இம்மொழியைப் பேசும்போதும் எழுதும்போதும் இந்த எண்ணம் நம்மில் இருக்க வேண்டும். தமிழ் கேட்க வேண்டி வைகை மண் சுமந்து பாண்டியனது கோலால் மொத்துண்டு புண் சுமந்த பொன் மேனிப் புண்ணியனை நினையாது இம் மொழியைத் தனக்கு ஏற்றபடி எல்லாம்  மாற்றுபவர்களை என்னவென்று சொல்வது ? 

மொழியை சீர்திருத்தம் செய்கிறேன் என்கிறார்கள்.  வழக்கில் இல்லாத எழுத்துக்களை ஒதுக்கவும் நீக்கவும்,மாற்றவும் இவர்கள் தயங்குவதில்லை. ஆயுத எழுத்து அறவே பயன் படுத்தப்படுவதில்லை. ஔ  காரம்  இவர்களுக்கு வேப்பங்காய்.  அவ் என்றே எழுதுவர்.  ஐ  காரத்திற்கும் இதே நிலை ! அய்  என்றே எழுதுவார்கள் !  இதேபோல்  ண கரத்திலும் லகரத்திலும் மனம் போனபடி மாற்றங்கள். பாவம். பள்ளிக் குழந்தைகள் !!  போதாக்குறைக்கு  மை க்கும்  ஆபத்து வந்து விட்டது.  ம ய்  என்று எழுதிக் கொள்வோரும் உளர்.  இப்படியே போனால்  மை என்ற எழுத்தே காணாமல் போய் விடக்கூடும். இம்மாற்றங்களைச் செய்பவர்கள் தமிழைக் கசடறக் கற்ற அறிஞர் பெருமக்களா ? இல்லையே !  தமிழே மூச்சும் பேச்சுமாக இருந்தவர்கள் செய்யாததை இவர்கள் சுயநலத்துக்காகச்  செய்கிறார்கள் என்று  எவருமே குரல் எழுப்பவில்லையே  !! 

ஆங்கிலத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இங்கிலாந்து மக்கள் எழுதும் போதும் அமெரிக்கர்கள் எழுதும் போதும் இம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில வார்த்தைகளில் வரும் எழுத்துக்களைக் (Spelling)குறைத் தார்களே தவிர அந்த எழுத்துக்களை மொழியிலிருந்தே எடுத்து விடவில்லை. உதாரணமாக, centre என்று இங்கிலாந்திலும் center என்று அமெரிக்காவிலும் எழுதப்படுகிறது. அதே போல Sulphur என்று  இங்கிலாந்து  மக்களும், Sulfur என்று அமெரிக்கரும்  எழுதுவர்.  அவ்வளவுதான். ஒரேயடியாக எழுத்துக்களையே மொழியை விட்டு நீக்கி விடவில்லை. 

சைவ உலகிலோ நூலின் பெயரையே மாற்றி வருகின்றனர். திருஞானசம்பந்தர் தேவாரத்தைத் திருக்கடைக் காப்பு என்றும், சுந்தரர் தேவாரத்தைத் திருப்பாட்டு என்றும் மாற்றுகின்றனர். கேட்டால் அப்படித்தான் செய்வோம் என்கிறார் ஒரு பதிப்பாளர் இறுமாப்புடன். பெரிய புராணத்தை ஊன்றிக் கற்போருக்கு உண்மை விளங்கும். ஞான சம்பந்தர் தனது பதிகம் தோறும் பதிகப்பலன் கூறுவது வழக்கம். அவ்வாறு பலன் கூறும் கடைசிப் பாடலைக் காப்பாக அமைத்ததை " திருக்கடைக்காப்பு சாத்தி "   என்றே  தெய்வச் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுவார். மேலும் பல ஆதாரங்களைச் சுட்டிக் காட்டலாம். விரிக்கில் பெருகும் என எண்ணி  அன்பர்களது சிந்தைக்கே விடுகிறோம்.  திருமுறைக் காவலர், சித்தாந்த வித்தகர் என்றெல்லாம் பட்டம் பெற்றவர்களும், அப்பட்டங்களை வழங்கியவர்களும்  மௌனிகளாக இருப்பது  ஏன்  ?   கருத்து சுதந்திரம் சமய உலகத்தையும் விட்டு வைக்கவில்லை !  இமயங்கள் என்று சொல்லும்படித் திகழ்ந்த அறிஞர்களும் மடாதிபதிகளும் தற்போது இல்லை என்றே கொள்ள வேண்டி இருக்கிறது. 

மேற்படி ஆதங்கம்  தமிழ் கூறும் நல்லுலகில் கேட்காவிட்டாலும்  தமிழ் கேட்ட திருச் செவிகளை  நிச்சயமாகச் சென்று அடையும்  என்ற உறுதிப்பாட்டோடு ,  நாம் இன்றைய வழக்கில் பயன் படுத்தாமல் ஒதுக்கி விட்ட எத்தனையோ எழுத்துக்களில் ஒன்றான ஞி  என்ற எழுத்தை  சொல் வேந்தராகிய அப்பர் பெருமான் லாவகமாகக் கையாளும் பாடலைக் கீழே தந்து நிறைவு செய்வோமாக: 

செய்ஞ்ஞின்ற  நீல மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன் 
மைஞ்ஞின்ற  ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க 
நெய்ஞ்ஞின்று எரியும் விளக்கு ஒத்த  நீல மணி மிடற்றான் 
கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக்  கண் கொண்டு காண்பது என்னே 

என்ன எழுதினாலும்  பயன் விளையப் போவதில்லை    நான் என்ற ஆணவ மலமே  இந்நாளில் மேலோங்குவதால் எல்லாமே முடிந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.