Tuesday, October 28, 2014

"அடியேற்கு முன்னின்று அருள்"

தமிழிலும்,வடமொழியிலும் பல கடவுளர்கள் மீது கவசம் பாடப்பெற்றிருப்பது பலரும் அறிந்ததொன்றாகும். இவை கவசம் போல இருந்து,ஓதுபவர்களை இன்னல்களிலிருந்து காப்பாற்றுவன. தமிழ்மொழியில் உள்ள விநாயகர் கவசம்,கந்த சஷ்டி கவசம்,ஷண்முக கவசம்,சிவ கவசம் ஆகிய நூல்கள் அன்பர்களால் பாராயணம் செய்து வரப்படும் நூல்களுள் சிலவாகும்.

செந்திலாண்டவனின் பெருங்கருணையினால் ஊமைத்தன்மை நீங்கப்பெற்ற குமரகுருபர சுவாமிகள் அப்பெருமான் மீது பாடிய கந்தர் கலி வெண்பா என்ற நூல் 122 கண்ணிகளால் ஆன அற்புதமான தோத்திரம். இதனை அனுதினமும் பாராயணம் செய்யும் அடியார்கள் பலர். இதில் சிவபெருமானின் பரத்துவமும், கந்தப்பெருமானின் தோற்றமும் , சூர பதுமாதிகளைப் போரிட்டு வென்றமையும் கூறுவதோடு,சைவ சித்தாந்தக் கருத்துக்களையும் நிரம்ப அமைத்திருக்கிறார் அடிகள். செங்கமலப் பிரமனும்,பழ மறையும் இன்னமும் காண மாட்டா பரஞ்சுடராய் ஒளிரும் பரமசிவம் , அனாதியாகவும், ஐந்தொழிற்கும் அப்புறத்தனாகவும்,எவ்வுயிர்க்கும் தஞ்சம் அளிக்கும் தனிப்பெரும் கடவுளாகவும் ,உயிர்கள் மேல் வைத்த தயாவினால் மலபரிபாகம் வரும் காலத்தில்,குருபரனாகி, ஆணவ மலத்தை நீக்கி ,மெய்ஞ்ஞானக் கண் காட்டி, ஆட்கொண்டருளும் தன்னிகரற்ற கருணையைப் பரவுகிறார் குமரகுருபர அடிகள்.

ஆறு தாமரை மலர்கள் மீது மட்டுமா எழுந்தருளினான் கந்தன்? அடியார்களின் மனமாகிய தாமரையிலும்  எழுந்தருளி இருக்கிறான் அல்லவா?  "அன்பர் அகத் தாமரையின் மீதிருக்கும்  தெய்வ விளக்கொளியே " என்று பாடுகிறார் குமரகுருபரர். அப்பெருமான் ஐந்தொழிற்கும் நீங்காத பேருருவாய் நிற்பவன். ஐந்தொழிலையும் நடத்துபவன். அட்டமூர்த்தியாகவும் விளங்குபவன். மெய்ஞானத்தைத் தரும் அட்ட யோகத் தவமெனப் பொலிபவன். செந்தூரில் கருணை வெள்ளம் என வீற்றிருப்பவன். பானுகோபன்,சிங்கமுகன் ஆகியோரை வென்று வாகை சூடியவன். சூரனைத் தடிந்த சுடர் வேலவன். தேவர் சிறை மீட்ட தேவதேவன்.மறைமுடிவாகிய சைவக் கொழுந்தும், தவக்கடலும் அவனே. தெய்வக்களிற்றையும், வள்ளிக்கொடியையும் மணந்து ஆறு  திருப்பதிகளைப் படைவீடுகளாகக் கொண்டவன். ஆறெழுத்தும் சிந்திப்பவர் சிந்தையில் குடி கொள்பவன்.  இவ்வாறு கந்தன் கருணையைப் பரவுகிறது கலிவெண்பா.
 
நூலின் நிறைவில் காணப்படுவது கந்தவேளிடம் செய்யப்படும் பிரார்த்தனை. நமக்குப் பகையாகி  நிற்கும் பலகோடிபிறவிகளிலிருந்தும், பலகோடி துன்பங்களிலிருந்தும் , பலப்பல பிணிகளிலிருந்தும் செய்வினை, பாம்பு, பிசாசு,பூதங்கள், தீ,நீர், ஆயதங்கள் , கொடிய விஷம், துஷ்ட மிருகங்கள், முதலியவற்றால் வரும் தீங்கிலிருந்தும் காப்பாற்றவேண்டி, பச்சை மயிலேறி, பன்னிருதோளனாய், ஈராறு அருள் விழி காட்டி, இடுக்கண் எல்லாவற்றையும் பொடியாக்கி, வேண்டும் வரம் யாவும் தந்தருளி, உள்ளத்தே உல்லாசமாக வீற்றிருந்து பழுத்த தமிழ்ப்புலமையை  அருளி, இம்மை,மறுமையில் காத்தருளி, பழைய அடியாருடன் கூட்டிப் பரபோகம் துய்ப்பித்து பூங்கமலக் கால் காட்டி ஆட்கொண்டு அடியேனுக்கு முன் நின்று அருள்வாயாக என்று வேண்டுகின்றார் குமர குருபர சுவாமிகள்.

இந்நூலை அவசியம் ஒவ்வொருவரும் தினந்தோறும் பன்னிரு திருமுறை- திருப்புகழ்  பாராயணத்தோடு ஓதிவரின், சிவனருளையும் குகனருளையும் ஒருசேரப் பெறுவது திண்ணம். அவசர கதியில் இயங்கும் இவ்வுலகில் நேரமின்மை காரணமாகக் கூறப்படும் போது ,இந்நூலில் கவசமாக அமைந்துள்ள  கடைசி 12 கண்ணிகளையாவது ஓத வேண்டும். எனினும் முழுவதும் ஓதுதலே சிறப்பு.

   '' பூங்கமலக் கால் காட்டி ஆட்கொண்டு அடியேற்கு முன்னின்று அருள். " 

Saturday, October 11, 2014

உபாயம் செய்யும் உமை அன்னை

" ஸதாசிவ பதிவ்ரதை" யான பரமேச்வரியை ,  " சிவஞான ப்ரதாயினி" யாகத் துதிக்கிறது லலிதா சஹஸ்ர நாமம்.  சிவனருளே சக்தியாவதை சைவ சித்தாந்தமும் எடுத்துரைக்கிறது. பாலுக்காக சீர்காழி ஆலயக்கரையில் அழுத குழந்தைக்குப் பாலோடு சிவஞானத்து இன்னமுதத்தையும் சேர்த்து ஊட்டினாள் அம்பிகை என்று பெரியபுராணத்தால் அறிகிறோம். அதனால் சிவஞானசம்பந்தர் என்று பெயர் பெற்றது அக்குழந்தை.அதேபோல மூக கவிக்கு அருளியவுடன்  " முக பஞ்ச சதி " என்ற அற்புதமான தோத்திரங்கள் உருவாயின. அறிவு விளக்கம் பெறாத ஒருவன் திருவானைக்காவில் வாயிற்படியருகே உட்கார்ந்திருந்தபோது அவனை வாயைத் திறக்குமாறு கூறி, தனது தாம்பூலத்தை அகிலாண்டநாயகி வாயில்  உமிழ்ந்தவுடன், அவன் கலைகள் யாவும் சித்திக்கப்பெற்றுக் கவி காளமேகம் ஆயினான் என்று பெரியோர் கூறுவர் .

இப்போது திருமூலரது வாக்கைக் கேட்போம்: " தஞ்சம் என்று எண்ணித் தன் சேவடி போற்றுவார்க்கு இன்சொல் அளிக்கும் இறைவி"  என்பது திருமந்திரம்.  அவ்வாறு போற்றுபவர்களுக்குப் பவமாகிய துன்பம் நீங்கும் என்பதை, " பணிமின், பணிந்தபின் வெய்ய பவம் இனி மேவகிலாவே"  என்கிறார். "பவ நாசினி' என்று லலிதா சஹஸ்ர நாமமும் இவ்வாறே அம்பிகையைத் துதிக்கும்.

இவ்வாறு வினை கடிந்த மனோன்மனி நங்கை ,நம் தலைமீது மலர்ப்பாதம் வைத்து ஆண்டருளி, சிவஞானத்தை அருளுவதை, " மேலைச் சிவத்தை வெளிப்படுத்தாளே " என்று அருளினார் திருமூல நாயனார்.

உலகியலில் பார்த்தால் , தனது குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, அதனைப் பார் த்துப் பார்த்து மகிழ்வது   அன்னையின் இயல்பு. கண் விழித்தபிறகு, அதனை அரவணைத்துக் கொஞ்சி மகிழ்வது வழக்கம். ஆனால் தூக்கத்தைக் கலைக்கத் தயங்குவாள். ஆனால் அகிலங்களுக்கெல்லாம்  அன்னையாகிய சிவசக்தி என்ன செய்கிறாளாம் தெரியுமா? உறங்கும் அவ்வுயிரைத் தன்  வளைக் கரத்தால் கழுத்தோடு எடுத்து அணைத்து , தனது வாயிலிருந்து சிவஞானத் தாம்பூலத்தை வாயிலே உமிழ்ந்து, ," உறங்கியது போதும். " என்று அருளிச் செய்கிறாளாம். இது உயர்ந்த "உபாயம் " ஆகிறது என்கிறார் திருமூலர்.  இதைத்தான் மாணிக்கவாசகரும்,திருவெம்பாவையில், " கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" என்றார். இப்போது நாம் அவ்வுயரிய திருமந்திரப்பாடலை நோக்குவோம்:

உறங்கும் அளவில் மனோன்மனி வந்து
கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு
உறங்கலையா என்று உபாயம் செய்தாளே.

இப்பாடலில் வரும் " உறங்கலையா" என்பதை உறங்கவில்லையா என்று பொருள் கொள்ளக் கூடாது. ஏனென்றால் ஏற்கனவே உறக்கத்தில் இருப்பவனை ஒருவரும் அவ்வாறு கேட்க மாட்டார்கள். ஆகவே அச்சொல்லை " உறங்கல் ஐயா " என்று பிரித்துப் பொருள் காண வேண்டும். உறங்கல் என்றால் உறங்காதே என்று பொருள்படும். இவ்வாறு நம்மை உய்யக்கொண்டு அஞ்சேல் என்று அபயம் அளித்து, சிவ  நெறி  காட்டுகிறாள் அம்பிகை.