Monday, October 23, 2017

சந்தத் தமிழ்

திருஞானசம்பந்தர்-சீர்காழி-இணையதளப் படம் 
திருஞானசம்பந்தரைப் போலவே தானும் சந்தத்தமிழ் பாடுமாறு அருளவேண்டும் என்று முருகப்பெருமானிடம் விண்ணப்பிக்கிறார் அருணகிரிநாதர். “ புமியதனில் ப்ரபுவான புகலியில் வித்தகர் போல அமிர்த கவித் தொடைபாட அடிமை தனக்கு அருள்வாயே” என்பது அவ்விண்ணப்பம். இங்கு “ புகலியில் வித்தகர் என்பது சம்பந்தரைக் குறிப்பது. புகலி என்பது சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களுள் ஒன்று. 

திருஞானசம்பந்தர் அருளிய ஞானப் பனுவல்கள் அனைத்தும் இயல்,இசை என்ற இரண்டும் விஞ்சுமளவில் அமைந்துள்ளதை வியக்காதவர் இலர். ஆனால் சம்பந்தரோ தனது வாக்கில் இருந்து பனுவல்களை வெளிப்படுத்துபவர் சிவபெருமானே என்பதை, “ எனது உரை தனது உரையாக”  எனப்பாடியதால் அறியலாம். மேலும், “ இயல் இசை எனும் பொருளின் திறமாம் “ என்று பாடியதால் அனைத்தும் சிவனருளே என்பதைத் தெளிவு படுத்தியுள்ளார் குருநாதர்.

சந்த அழகு ஒரு பக்கம் இருக்க, ஒரே எழுத்தைப் பாடலில் பல இடங்களில் வைத்து ஞானசம்பந்தப்பெருமான் பாடும்போது சிலிர்க்க வைப்பதாய் அமைந்துள்ளது. எடுத்துக் காட்டாக அவரது தேவூர்த் திருப்பதிகத்தை நோக்குவோம்:

முதல் பாடலிலேயே அழகுத் தமிழ் கொஞ்சுவதைக் காணலாம். இதில் டகரம் விரவி வருவதைப் பார்க்கலாம்.

காடு பயில் வீடு முடைஒடு கலன் மூடும் உடை 

  ஆடை புலித்தோல்  
                                        
தேடுபலி ஊண் அது உடை வேம் ; மிகு வேதியர் 
   
  திருந்து பதிதான்                                                       

நாகம் அது ஆ மஞ்ஞை பா அரி கோல்                      

  கை மறிப்ப நலமார்                                                

சேடு மிகு பேடை அன்னம் ஓடி மகிழ் மாம் மிடை                    

தேவூர் அதுவே.

திரண்ட பொருள்:
இறைவனுக்குக் காடே இருப்பிடமாவது. பிரமனது தலை ஓடே கையில் ஏந்தும் பாத்திரமாவது. புலித்தோலே ஆடையாக விளங்குவது. இப்படிப்பட்ட வேடம் பூண்ட பெருமான் அமரும் தேவூர் என்ற பதியில் மாடங்களும்,நாடக சாலைகளும், நான்மறை ஓதும் வேதியர்களின் இடங்களும்உள்ளன. சோலைகளைச் சார்ந்த இடங்களில் அன்னங்கள் ஓடி விளையாடுகின்றன. இப்படியாகப் பாடலில் வருணனை செல்கிறது. அதில் டகர எழுத்து எவ்வளவு நயமாகவும்,பொருள் சுவையை மிஞ்சுவதாகவும் அமைந்துள்ளது எனப் பாருங்கள்.மீண்டும் பாடலைப் படித்தால் இதன் அருமை விளங்கும்.

இதே பதிகத்தின் மற்றொரு பாடலில் ணகரம் விளையாடிவருவதைக் காணலாம்.

ண்ணம் முகில் அன்னஎழில் அண்ணலோடு சுண்ணம் 
  
    வண்ணம் மலர்மேல்                                               
ண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள் கண்ணவன்         

    நலங்கொள் பதிதான்                                                
ண்ண வனநுண்ணிடையின் எண்ணரிய அன்னநடை 

    இன்மொழியினார்                                                    
திண்ணவன மாளிகை செறிந்த இசை யாழ் மருவு                 
    
    தேவூர் அதுவே.  

மற்றோர் பாடலின் அழகும் அலாதியானது:

பொச்சம் அமர்பிச்சை பயில் அச்சமணும் எச்சமறு போதியருமாம்                                                                     மொச்சை பயில் இச்சை கடிபிச்சன் மிகு நச்சரவன்                      
மொச்ச நகர் தான்                                             

மைச்சில் முகில் வைச்ச பொழில் ......" 

என்று சகரத்தின் அழகை வெளிப்படுத்துவதாக உள்ளது. 
  
அருணகிரிக்கு அருளும் அழகன்-இணையதளப் படம் 
அருணகிரியாரது வேண்டுகோளும் நிறைவேறியது. பெருமான் மீது சந்தப்புகழ் பாடத் தொடங்கினார். விவரிக்கில் பெருகும் என்பதால் அவர்,   “ நாயக “ என்ற சொல்லைக் கொண்டு எப்படியெல்லாம் குமரவேளைத் துதிக்கிறார் என்பதை மட்டும் எடுத்துக் காட்டி நிறைவு செய்வோமாக.

“ .... குறிஞ்சி வாழும் மறவர் நாயக; ஆதிவிநாயகர் இளைய நாயக;          காவிரி வடி விநாயக ஆனை தன் நாயக; எங்கள் மானின் மகிழும் நாயக; தேவர்கள் நாயக;கவுரி நாயகனார் குரு நாயக வடிவதா மலை யாவையும் மேவிய பெருமாளே.” எனப் பாடுகின்றார்.

எவற்றைஎல்லாமோ வாயாரக் கொண்டாடி விருது வழங்கும் இந்நாளில் இது போன்ற அருளாளர்களது பாடல்கள்  கண்களுக்குத் தெரிவதில்லை.  கலியின் கொடுமையாகவும் இருக்கலாம். தமிழ் இதுபோன்ற தெய்வப் பனுவல்களில் மட்டுமே வாழ்கிறது என்பதை மட்டும் அறுதியிட்டுச் சொல்ல முடியும். அருமை உணர்ந்து ஓதுபவர்கள் பாக்கியசாலிகள்.

5 comments: