Friday, November 23, 2018

காழிநாதன் கழலிணைகள்

மனம் இரங்காவிட்டாலும்,உருகாவிட்டாலும் அதைக் கல் மனம் என்றும், இரும்பு மனம் என்றும் சொல்வதுண்டு/ ( இரும்பு மனத்தேனை " என்று தன்னை மாணிக்கவாசகப்பெருமான் குறிப்பது காண்க) அத்தகைய மனத்தில் ஈரம் இல்லை என்றால் அன்பு என்னும் பயிர் எவ்வாறு கிளைத்து எழ முடியும் ? அன்புதானே கடவுளிடம் நம்மைச் செலுத்தும் முதல் படி ! அவ்வாறு இருக்கும்போது கோவிலுக்குச் செல்வதோ,அதனை வலம் வருவதோ, இறைவனை வழிபட்டு அர்ச்சனைகள் செய்வதோ எப்படி சாத்தியமாகும்? ஒருவேளை அடியார்களுக்குப் பணிவிடை செய்திருந்தாலும் அன்பு பிறக்க வழி உண்டு. அந்தத் திசைக்கே செல்லாதவர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. பொய்யும்,சூதும் ,வஞ்சகமும் நிறைந்த உள்ளத்தைத் தூய்மை செய்வது அவ்வளவு எளிய காரியம் அல்ல.

நம்பியாண்டார் நம்பிகள் சொல்வதை இப்போது காண்போம்.  அன்பும், வழிபாடும், அர்ச்சனையும், வழிபாடும்,அர்ச்சனையும் செய்யாமலும், அடியாரிணக்கமில்லாமலும் பொய்ம்மையே பெருக்கி வாழும் இரும்பு மனத்தவனுக்குக்  கிடைத்த பேரருளை எப்படி வியப்பது என்றே தெரியவில்லை. அதுவும் எந்த விதமான முயற்சியும் செய்யாமல் வீணே காலத்தைக் கழிப்பேனுக்கு இரங்கித் தானே வந்து தயையைக் காட்டியருளிய அற்புதம் தான் என்னே  ?  அத்தகைய அற்புதம் எது தெரியுமா ?  சீர்காழியில் அவதரித்த திருஞான சம்பந்தரின் திருவடிகளே பிறவி என்னும் பொல்லாப் பெருங்கடலில் சிக்கிய அடியேனைக் காத்துக் கரைக்கே சேர்க்கவல்ல தோணி ஆயிற்று என்கிறார் அடிகள்.

ஒப்பற்ற குருநாதன் கிடைத்து விட்டால் , பொய்யனும் உய்யலாம் என்பதே இதன் கருத்து. உருகா மனமாகிய கல்லைக் கனிவித்துக் கழலடி காட்டுபவன் அக்குருநாதன் அல்லவா? அப்பெருந்தகை அவதரித்தருளிய ஊரே பிறர்க்கு வாரி வழங்கும் கரும்பு வயல்களும், நெல் வயல்களும் நிறைந்த ஊர். அம்மண்ணுக்கான பண்பு சம்பந்தப்பெருமானின் பண்ணுக்கு இருப்பதில் வியப்பேதும் இல்லை. இப்போது நம்பிகள் அருளிய அப்பாடலைக் காண்போம்:

அரும்பின அன்பில்லை அர்ச்சனை இல்லை ; அரன் நெறியே  
                                                                             
 விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி செய்கிலம்; 

                                                                                                           பொய்க்கமைந்த                                                                  
இரும்பன உள்ளத்தினேற்கு எங்ஙனே வந்து நேர் பட்டதால்?    

கரும்பன நீள் வயல் சூழ் காழி நாதன் கழலடியே. 

நம்பிகள் அருளிய இப்பாடல் அவரருளிய ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி என்ற பிரபந்தத்தில் { பதினோராம் திருமுறையில் }உள்ளது. 

No comments:

Post a Comment