Saturday, December 29, 2018

ஈசன் அடியார்க்கு அரியது இல்லை

பரமேசுவரனுக்கு வாகனமாக அமைவது தூய வெள்ளை நிறக் காளை. இதற்கு ஏறு  என்றும் மற்றொரு பெயர் உண்டு. இறைவன் ஏறுவதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது என்பதும் பொருத்தமே. " தூ வெள்ளை ஏற்றான் தன்னை " என்பது அப்பர் தேவாரம். அதனை  விடை என்ற வேறு ஒரு சொல்லும் குறிக்கும். "  விடையின் மேல் வருவானை " என்பது சுந்தரர் வாக்கு.  இவ்வாறு ரிஷபாரூடனாக வரும் பரம்பொருளை ," விடையவன் " என்றும் வழங்குவார்கள். தூய வெள்ளை நிற விடையை வாகனமாகக் கொண்ட இறையவனை நம் மனத்தில் இருத்த வேண்டும் என்றால் அதற்கேற்றபடி நமது மனமும் தூய்மையாக இருக்க வேண்டும். ஏனெனில், அம்மனமே பெருமானது கோயிலாக ஆகி விடுவதால் தான்.  அப்படிப்பட்ட தொண்டர்களது தூய மனத்தையே இறைவன் விரும்பி ஏற்கிறான். வஞ்சம் நிறைந்த  நெஞ்சத்தைப் புறக்கணிக்கிறான். எனவேதான், திருநாவுக்கரசர், " விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் " என்று நெகிழ்ந்து பாடுகிறார்.

உள்ளத்தைப் பெருங்கோயிலாக அர்ப்பணித்துவிட்ட அடியார்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. துன்பங்கள் அவர்களைப பாதிப்பதில்லை. பார்க்கப்போனால், உண்மை அடியார்கள், இன்பத்தையும்,துன்பத்தையும் ஒன்றாகவே நோக்கும் பக்குவம் பெற்று விடுகின்றனர். துன்பங்களுக்கெல்லாம் காரணமான பாவ வினைகளிலிருந்து விடுதலை பெற்று விடுகின்றனர். " இன்றோர் இடையூறு  எனக்கு உண்டோ " என்பார் மாணிக்க வாசகர். ஆகவே, உள்ளத் துயரங்களும், உடற் பிணி காரணமாக வரும் துக்கங்களும் அவர்களைப் பாதிப்பதில்லை. இதைத்தான் ஞான சம்பந்தரும்,   " அச்சம் இலர், பாவம் இலர்,  கேடும் இலர் அடியார்; நிச்சம் உறு  நோயும் இலர் " என்று பாடுகின்றார். இதே கருத்தை, அப்பர் பெருமானும், " இனி நமக்கு இங்கு அடையா அவலம்; அரு வினைகள் சாரா "  என அருளிச் செய்கிறார். 

இனி  , அடியார்கள்  எவ்வித அச்சத்தாலும் துன்புறுவதில்லை என்பதை சம்பந்தப் பெருமான்        " அச்சம் இலர் " என்றார். அச்சமாவது பல்வேறு காரணங்களால் ஏற்பட்டாலும், எம பயம் என்பது தாங்க முடியாதது மட்டுமல்லாமல், தவிர்க்க முடியாததும் கூட. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இறுதிக் கட்டத்தில் அதனை சந்திக்க வேண்டி இருக்கிறது. இருந்தாலும் சிவனடியார்களைக் காலன் அணுக மாட்டான் . அவனைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. எனவே ,                               " நமனை அஞ்சோம் " என்றார் நாவுக்கரசர் . 

தாமரையில் வீற்றிருக்கும் பிரமனை ஒத்தவர்கள் வாழும் அடியார்கள் நிறைந்திருக்கும் திருப்பாதிரிப்புலியூரில்  தோன்றாத் துணையாக அந்த அடியார்களை எப்பொழுதும் காக்கும்     பேரருள் இருக்கும் போது அந்த ஈசனையே கதி எனக் கொண்ட அடியார்க்கு அடியானாக இருப்பவர்களுக்கு அரிய செயல் எதுவும் இல்லை. எல்லாமே எளிதாக கை கூடும் என்பதாம். இவ்வாறு அடியார்க்கு அடியானாக விளங்குபவர்க்கு எதுவும் எளிதே கை கூடுவதை, 

" புடையார் கமலத்து அயன் போல்பவர்  பாதிரிப்புலியூர்  
உடையான் அடியார் அடிஅடியோங்கட்கு அரியது உண்டே ? "  என்பார் இப்பாடலில். 

இந்த அற்புதமான பாடல் முழுவதுமாக இப்போது அனுபவிப்போம் :

" விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான்  இனி நமக்கு 
                                                                                                                                        இங்கு 

அடையா அவலம்; அரு வினை சாரா; நமனை அஞ்சோம் 

புடையார் கமலத்து அயன் போல்பவர்  பாதிரிப்புலியூர் 

உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே ?  "  


தனது அடியார்களுக்கு எல்லாவற்றையும் முன்னவனே முன் நின்று முடித்து வைப்பான் என்பது கருத்து. 

தோன்றாத்துணையே துணை என்பதை  அப்போது நன்றாகவே உணர முடியும். 

No comments:

Post a Comment