குபேரன் , சிவபெருமானின் நண்பன் என்று புராணங்கள் மூலமாக அறிகிறோம். குபேரனின் செல்வக் குவியல்களை சங்கநிதி , பதும நிதி என்று பெயரிட்டு அழைப்பார்கள். சில சிவாலயங்களில் பூத கணத் தோற்றத்துடன் இவை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள அணைக்குடி சிவாலயத்தின் நுழைவு வாயிலின் இரு புறமும் இவை காணப்படுகின்றன. சிவ பூஜையும் சிவாலய தரிசனமும் தொடர்ந்து செய்பவர்களுக்கு சிவனருளால் இவை கிடைக்கும் என்பதை இவை காட்டுகின்றன போலும் . "எத்திசைக் கனகமும் ,பைம்பொன் மாளிகையும் " கிடைக்கும் என்றுதானே திருமுறைகளும் சொல்கின்றன. "அளித்துப் பெரும் செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே" என்று அப்பர் சுவாமிகளும் பாடியிருக்கிறார்.இங்கே ஒரு கேள்வி எழுகிறது. தெய்வ பக்தி இல்லாதவர்களிடத்தும் செல்வம் புரள்கிறதே எனக் கேட்கலாம். முற்பிறவியில் செய்த நல்வினையின் பயனை அவர்கள் அனுபவிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், இப்பிறவியில் தெய்வ பக்தி இல்லாதவர்களாக இருக்கக் கூடும். அவர்களும் அவர்களது செல்வமும் மங்கக்கூடியவை. சிவனடியார்களாக இல்லாத அவர்கள் ஒருக்கால் தம்மிடம் இருக்கும் சங்கநிதியையும் பதும நிதியையும், தந்து, இவ்வுலகையும் வான் உலகத்தையும் ஆள்வதற்காகத் தந்தாலும் நான் அப்படிபட்டவரையும் அந்த நிதியையும் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டேன் என்கிறார் அப்பர் ஸ்வாமிகள்.
"சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து
தரணியோடு வான் ஆளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க்கே காந்தர் அல்லார் ஆகில்..."
அடுத்து வருவதுதான் ஒப்புயர்வற்ற கருத்து. ஒரு புலையன் இருப்பதாக வைத்துக்கொள்வோம். வடமொழியில் இவனை சண்டாளன் என்பார்கள். பசுவை உரித்துத் தின்னும் தொழிலை மேற்கொண்டதால் இவ்வாறு அழைக்கப்பட்டான். அவன் தனது அங்கம் எல்லாம் குறுகி ஒழுகக்கூடிய தொழு நோயால் பாதிக்கப் பட்டவனாக இருந்தாலும் கங்காதரனாகிய சிவபெருமானுக்கு பக்தனாக இருந்தால் அவனே நான் வணங்கும் கடவுள் என்கிறார் அப்பர் பெருமான்.
"அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும்
கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே."
"ஒருவன் சண்டாளனாக இருந்தாலும் "சிவ" என்ற நாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்பானேயானால் அவனோடு பேசு. அவனோடு வசி. அவனோடு சாப்பிடு." என்கிறது முண்டகோபனிஷத். அப்பரின் இத்திருத்தாண்டகமும் இதனை ஒட்டியே அமைந்திருக்கிறது. அடியார்க்கு அடியவன் ஆவதைக் காட்டும் இதுபோன்ற பாடலைத் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் காண்பது அரியதாகும்.







