Saturday, May 30, 2015

சிவஞான இன்னமுதம்

பிறப்பும் இறப்பும் இல்லாப் பெரியோன் என்று  இலக்கியங்களும் புராணங்களும் சிவபெருமானைத் துதிக்கின்றன. அதனால் தான் சுவாமியை முழுமுதல் கடவுள் என்கிறோம்.      " முழுதுமாய் வந்து " தன்  மனத்தில் குடிகொண்டவன் பெருமான் என்கிறார் மாணிக்கவாசகர்.  ஆனால் அடியவர்களுக்காக எந்தக் கோலமும் எவ்வுருவமும் ஏற்கின்றான் அவன். அந்தணனாய் வந்து ஆண்டுகொண்ட அப்பெருமானே, வேடனாகவும், தாயுமானவனாகவும், பன்றிகளுக்குப் பால் கொடுக்கும் தாய்ப் பன்றியாகவும் , மாலயனுக்கும் அறிய முடியாத தீப் பிழம்பாகவும்  தோன்றி அருள் செய்ததாகப் புராணங்கள் வாயிலாக அறிகிறோம். இப்படி எளியவனாகவும் அரியவனாகவும் விளங்கும் பரம்பொருளை , " யாவரும் அறிவரியாய் எமக்கு எளியாய் "  எனத்  திருவாசகம் போற்றுகிறது. இதையே அப்பரும், "  காண்டற்கு அரிய கடவுள் கண்டாய்; கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் " என்பார்.

சிந்தையில் உதித்த ஒரு எண்ணத்தை இங்கு பகிர்வோம். பால் கொடுத்தபின் குழந்தைக்கு அப்பால் புரை ஏறாதவாறு தாய்மார்கள் அக்குழந்தையின் முதுகில் தட்டுவதைப் பார்த்திருக்கிறோம். நாள் பூராகவும் இதுபோல் எத்தனை தட்டுக்களை அக்குழந்தை முதுகில் வாங்குமோ தெரியாது. மதுரையில்  வந்தி என்ற அடியாள் தந்த பிட்டைக் கூலியாக ஏற்று , மண் சுமந்தபிறகு அம்மண்ணைப் பெருக்கெடுத்து ஓடும் வைகைக் கரையில் கொட்டாமல் விளையாடிக் கொண்டிருந்த பெருமானைப் பாண்டியன் சினத்துடன் தன்  கைப் பிரம்பால் ஒரு தட்டுத் தட்டினான்.( அடித்தான் என்று எழுத மனம் வரவில்லை). எல்லா உலகமும் அவன் வடிவே ஆதலால் அப்படித் தட்டியது, எல்லா உலகத்து  உயிர்கள் மேலும் விழுந்தது. இப்படி ஒரு தட்டு தட்டியதற்கே அனைத்து உயிர்களும் அடி வாங்கியபோது, ஒரு தாயாரிடம் தோன்றி  பலமுறை முதுகில் தட்டு வாங்கினால் எல்லா உயிர்களும் பலமுறை அடிபடுமே என்ற பரம கருணையினால்  தானோ என்னவோ அவன் யாரிடத்தும் பிறக்கவில்லை போலத் தோன்றுகிறது. இது முழுவதும் கற்பனையாகத் தோன்றலாம். உண்மையைச் சொல்லப்போனால் ஆராய்ச்சி எதுவும் செய்யாமலிருக்கும் போது தினசரி தியானத்தின் பொழுது பெருமான் அறிவுறுத்தும் பலவற்றில் இதுவும் ஒன்று.

ஞானம் என்பது படிப்பதாலோ, கேட்பதாலோ அனுபவத்தாலோ வருவதைக் காட்டிலும் பெரும்பகுதி இறைவன் அருளால் கைவரப் பெறுவது என்பதை நாம் உணர வேண்டும். ஞானிகளில் ஒரு சிலரே இறைவனை ஓரளவாவது அறிவர் " ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்" என்பார் அப்பர் பெருமான்.  ஞானிகளுக்கே இந்நிலை என்றால் நம்மவர்கள் சிந்திப்பதோ ஆராய்வதோ எப்படி சாத்தியமாகும்?  ஞானத்திற்கெல்லாம் இருப்பிடமாகவும் ஞான மயமாகவும் திகழும் ஈசனோ எவரிடத்தும் அந்த ஞானத்தைக் கல்லாமலேயே பிறருக்கு உபதேசிப்பவன். " கலைஞானம் கல்லாமே கற்பித்தானை " என்பது தேவாரம்.

உலகம் உய்ய வேண்டி ஞானசம்பந்தக் குழந்தைக்குத் தனது இணைபிரியா ஜகன்மாதாவான  அம்பிகையின் மூலம் சிவஞானத்தைத் தந்து அருளினான். அதை, " சிவஞானத்து இன்னமுது" என்றார் சேக்கிழார். அப்போது அக்குழந்தைக்கு எல்லாக் கலை ஞானமும் ஓதாமலேயே வந்து அடைந்தது. அதனைப் பெரிய புராணம் விவரிப்பதை இங்கு காண்போம்:

மூன்று வயதுக் குழந்தை செய்த தவம் தான் என்ன? அக்குழந்தையின் தந்தையான சிவபாத இருதையர் செய்த தவம் அல்லவா சம்பந்தரைத் தோற்றுவித்தது? ஆனால் சேக்கிழார் இங்கு அக்குழந்தையைத் " தவ முதல்வர் " என்று வாயாரப் புகழ்கிறார். எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்கமுடியாத பேறு  அல்லவா இந்தப் பாலகனுக்குக் கிடைத்திருக்கிறது! அக்குழந்தை செய்த தவம் தான் என்ன என்று நமது அறிவுக்கு எட்டவில்லை அல்லவா? அதனால் தான் நாம் சொல்லிக் கொள்கிறோமே, ஆறு அறிவு என்று: அது வேறு; ஞானம் வேறு. ஞானிகளுக்கே விளங்காத ஒப்பற்ற தவம் அது. அதிலும் முதல்வராகத் திகழப் போகும் அச்சிறுவனை இதைக் காட்டிலும் வேறு எப்படி அழைப்பது?

பெற்ற ஞானமோ  சிவஞானம். ஆகவே பெயரும் சிவஞானசம்பந்தர் என்று ஆயிற்று. அந்த ஞானம் வந்தபின்னர் சிவனது திருவடிகளை மட்டுமே தியானிக்கும் ஞானம் மேலோங்கியதால் அதனை " சிவனடியே சிந்திக்கும் திருப் பெருகு சிவஞானம்" என்றார் தெய்வச் சேக்கிழார்  . அது கைவந்தவர்களுக்கு மீண்டும் பிறப்பு எது? பிறவி அறுக்கும் மருந்து ஆகிவிட்ட ஞானம் ஆனபடியால், அதனை, " பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் " என்றார். அந்த ஞானத்திற்கு ஒப்போ அதைவிட உயர்வோ கிடையாது என்பதை " உவமை இல்லாக் கலைஞானம்" என்றார். நம்மில் சிலர் கடவுளை உணர்ந்து விட முடியும் என்று பேசுகிறார்கள் அல்லவா?  ஆனால் உணர்வுக்கும் அரிய பொருளே என்று மணிவாசகர் கூறியதுபோல் உணர்வுக்குள் அடக்க முடியாத இறைவனை, " உணர்வரிய மெய்ஞ்ஞானம் " மட்டுமே அடையாளம் காட்டும். இவை அனைத்தையும் சீர்காழிக் குளக் கரையில் சிவஞானப் பால் உண்ட சம்பந்தப் பெருமான் பெற்றார் என்ற பெரிய புராண  வரிகள் இன்புறத்தக்கன.

சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவம் அதனை அற  மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமை இலாக் கலைஞானம்  உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர்  தாம் உணர்ந்தார் அந்நிலையில்

என்பன தெய்வச் சேக்கிழாரின் அற்புத வருணனை.

No comments:

Post a Comment