Sunday, July 19, 2020

சடைமுடி அழகன்



திருஞான சம்பந்தர் 
எண் சாண் உடலுக்கு சிரசே ( தலையே ) பிரதானம் என்பார்கள். மனித உடலில் பல பாகங்கள் இருந்தபோதிலும் ஐம்புலன்களான மெய்  வாய்,கண் ,மூக்கு,  செவி ஆகியவற்றுள் மெய்யைச் சேர்க்காவிடில் எஞ்சிய நான்கும் தலையைச் சேர்ந்தவைகளே. அதனால் அங்கமாலை பாட வந்த அப்பர் பெருமானும், எடுத்த எடுப்பிலேயே, " தலையே நீ வணங்காய் " எனப் பாடி அருளுகின்றார். பின்னர் அதன் பாகங்களாக, கண்,செவி,மூக்கு,வாய் என ஒவ்வொன்றாகக் குறிப்பிடுகிறார். மெய் என்பதை , ஆக்கை என்கிறார் அவர். இவ்வாறு மனித உடலைக் கேசாதி பாதமாகக் குறிப்பிடுவது ஒரு மரபு போல  தெய்வங்களைப் பாதாதி கேசமாகவும் பாடுவதும்  மரபு. கண்கள்இரண்டும்  பெருமான் கழல்களைக் கண்டு களிப்பதற்காகவே ஏற்பட்டவை என்பது திருவாசகம் நமக்கு காட்டும் நல்லுபதேசம்.

ஒரு முகம் அழகாகத் தோற்றம் அளிக்க வேண்டுமானால், கண்களும், மூக்கும் வாயும் அழகாக அமையப்பெற்று இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் அது மட்டும் போதுமா? அழகிய முடி ஆடவர்க்கும், நீண்ட கருங்  கூந்தல் பெண்டிர்க்கும் இருந்தால் அழகுக்கு அழகைச் சேர்க்கும் என்பதில் மாற்றுக்  கருத்து இருக்க முடியுமா ? 

சிவபெருமான் ஞான மயமானவன். அந்த ஞான பரமேசுவரனுக்கு ஞானத்தின் அடையாளமாக இருப்பது சடை முடி ஆகும். சிவ ஞானப் பாலமுதம் பருகப்பெற்றதால் சீர்காழிப் பிள்ளையார் " திருஞான சம்பந்தர் ஆயினார் " என்று பெரிய புராணம் கூறுகிறது. தான் பெற்ற  ஞானத்தை உலகோருக்கு அறிவிக்க வேண்டிய கருத்துடன் ஞானத்தின் அடையாளமான திருச் சடையைத்  தனது பாடல்களில் ஏராளமான இடங்களில் அழகுற  எடுத்துரைக்கக் காணலாம். அவற்றுள் ஒரு சிலவற்றையேனும் இங்கு நோக்கி மகிழ்வோமாக.

அந்த ஞான மயமான சடைக்குத்தான் அக்குழந்தையின்  வாக்கில் எத்தனை வருணனைகள் ! நீண்ட சடையாதலால் " நீள்  சடை " என்றும், நிமிர்ந்து விளங்குவதால் " நிமிர் சடை "  என்றும், பின்னால் தொங்கவிடப்படுவதால்,     " தாழ் சடை " என்றும், செந்நிறம் கொண்டு விளங்குவதால், " செஞ்சடை " என்றும் , இயல்பாகவே மலர்களைப்போல் வாசனை கொண்டு விளங்குவதால் ( " வாச மலர் எல்லாம் ஆனாய் நீயே"- அப்பர் தேவாரம்)             " கமழ் சடை " என்றும் மென்மையாக இருப்பதால் " மென் சடை " என்றும் அழகு தமிழால் பாடுகின்றார்.

இனி, அச் சடையில் குடி கொண்டு இருப்பவை யாவை என்னுமிடத்து, முதலாவதாக நினைவுக்கு வருவது இளம்பிறை என்பதால் ( " சடையும் பிறையும்" - சம். தேவா- திருக்கோலக்கா) சூரியனின் ஒளியால் ஒளி பெறும் சந்திரன், சுயம்பிரகாசனாகிய சந்திர சேகரனிடம் தஞ்சம் அடைந்தவுடன் மூன்றாம் பிறைச் சந்திரனாகத் தங்குகிறான்.  அப்பரும் இதனை, " வார் சடை மேல் திளைக்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே" எனப் பாடுவார். அச்  சடையில் தங்கியதால் சந்திரனுக்கும் ஞானம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் இறைவனுக்குச்  சந்திரனின் வரவால்  அழகு கூடுவதில்லை. மாறாகப் " பித்தா பிறை சூடி " என்று அருளாளர் வாக்கில் இறைவனைப் பாடும்போது சந்திரனின்  பெயரும் அதில் நிலைக்கும் பேறு கிட்டி விடுகிறது.

அடுத்தபடியாக நமது நினைவில் திகழ்வது கங்கை அப்புனிதமான சடையில் இடம் கொண்டிருப்பது.ஆகும்.  " கங்கை வார் சடையாய் " என்று முழங்குகின்றன திருமுறைகள், கங்காதராய நம: என்ற அர்ச்சனை ஒலியும் கேட்கிறது. பகீரதன் தவம் செய்து கங்கையை நிலவுலகத்தில் பாயுமாறு வேண்டி நிற்க, கங்கை ஆயிரம் முகத்தாளாகிக் கடுமையான வேகத்துடன் பாய்தலால் மண்ணுலகம் மாய்ந்து விடும் அபாயம் ஏற்படவே , ஈசன் தனது சடையை விரித்து அதில் கங்கையை அடக்கியதாக வரலாறு. அதனை சம்பந்தப்பெருமான் கூறும் அழகைப் பாருங்கள். அக்கடுமையான வெள்ளம் சடையில் பாய்ந்த போதும், அதனால்  அச்சடை முடியை அசைக்கக்கூட முடிய வில்லையாம். " கடுத்துவரும் கங்கை தன்னைக் கமழ் சடை ஒன்று ஆடாமே  தடுத்தவர் " என்று பாடுவதால் அதனை அறியலாம்.
 " விரி சடை வெள்ளம் தரித்தான் " என்பது அவரது மற்றொரு  பாடல் தரும் செய்தி.

பிறையையும் கங்கையையும் ஏற்ற கடவுள் மேலும் சிலவற்றை அச் சடையில் ஏற்றதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அச்சடையை அலங்கரிக்கும் மலர்களோ மானுடர்கள் சூட விரும்பாதவை. ஊமத்தை மலரையும், வெள்எருக்கையும் கொன்றையையும் யாரே விரும்புவர்? மணம் மிக்க மலர்களை உலகோருக்கு அருட் கொடையாக அளித்து விட்டுத் தனக்கு மணமற்ற மலர்களை ஏற்கும் தன்மையால் தியாகராஜன் ஆகிறான் அதே சமயம் வாசமில்லா மலர்கள் பெற்ற பேறு  தான் என்னே !  வன்னியும்,மத்தமும்,கூவிளமும் கொன்றையும் சூடியை எத்தனையோ பாடல்கள் நமக்கு காட்டுகின்றன. ஆத்தியும் கொன்றையும் சூடிய சடைமுடிக் கடவுளை நினைந்து, ஆத்தி சூடி என்றும், கொன்றை வேந்தன் என்றும் நூல்களின் பெயர்கள் அப்பெருமையைப் பறை சாற்றுகின்றன.

இதோடு நில்லாமல், பாம்பும், பிரமனது நகு தலையும் அச் சடையில் திகழ்கின்றன. ஒரே வரியில்,  இவை யாவும் திகழ்வதை ஞான சம்பந்தர்,             " அரவும்  அலை புனலும் இள மதியும் நகு தலையும் " என வருணிப்பது  மகிழத்தக்கதொன்றாகும். இவை யாவும் இறைவனுக்கு அழகே ஆகும் என்று திருச்சோற்றுத்துறைத் திருப்பதிகத்தில் திருநாவுக்கரசர் அருளுகின்றார்.

எடுத்துக்காட்டாக அது திருப்பதிகத்தில் அமைந்துள்ள ஒரு பாடலை நினைந்து நிறைவு பெறுவோமாக.

" வண்டணை கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவும்

  கொண்டணைந்து ஏறும் முடியுடையான் குரை சேர் கழற்கே

  தொண்டணைந்து ஆடிய சோற்றுத்துறை யுறைவார்சடை மேல்

  வெண்டலை மாலையன்றோ எம்பிரானுக்கு அழகியதே.

ஈசனின் பாகத்தவளான உமையம்மையும் ஜடாமகுட வல்லியாகத்

 திகழ்வதும் நமது சிந்தைக்கு விருந்தாகத்  திகழ்வதாகும்.








 




2 comments:

  1. கங்காப்ரவாஹேந்து ஜடாதராய...

    ReplyDelete
  2. விரிசடையான் விளக்கம் மிக மிக அற்புதம் ஐயா🙏

    ReplyDelete