Saturday, February 8, 2014

கசிந்த மனம்

பரமேச்வரனுக்குத்தான் எத்தனை எத்தனை பெருமைகள் ! அவனது பெருமைகளை அவனே அறியமாட்டான் என்கிறார் மாணிக்கவாசகர். அவன் எதைச் செய்தாலும் அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது. கங்கையையும் சந்திரனையும் ஏற்ற முடியில் வன்னி, எருக்கு, கொன்றை, ஊமத்தை ஆகியமலர்களைச் சூடிக்கொள்வதும் அழகுதான். இதற்கிடையில் சீறும் பாம்பையும் தரித்திருக்கிறான். அதுவும் அவனுக்கு ஆபரணமாகத்தான் திகழ்கிறது. அந்தச் செக்கச் சிவந்த மேனிக்கு வேறு நிறங்களும் அலங்காரமாகத்தான் அமைகின்றன. பால் போன்ற தூய வெண்ணீறு உத்தூளித்த மேனியனாகத் தோன்றுகிறான். கொடிய விஷத்தைக் கண்டத்தில் அடக்கியதால் அப்பகுதி நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது. இப்படி வண்ண வண்ண மேனியனாகவும் வண்ண மலைகளைச் சூடியவனாகவும், கங்கையும், பிறையும் பாம்பும் சூடிய செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியாகவும் திகழ்கிறான் பரமன்.

சிவபரம்பொருளின் பெருமைகள்  அளவிடமுடியாதவை. நாம் உய்ய வேண்டும் என்பதற்காகவே புராணங்களும் அருள் நூல்களும் சில பெருமைகளை நமக்கு உணர்த்துகின்றன. இந்த வகையில், தேவார திருவாசகங்கள் மூலம் நாம் அறியக்கூடிய செய்திகள் ஏராளம். கலயநல்லூர் என்ற தலத்தின் மீது அமைந்துள்ள சுந்தரர் தேவாரத்தை எடுத்துக்காட்டாக இங்கு கூறலாம். இத்தலம் கும்பகோணத்திற்கு அண்மையில் சாக்கோட்டை என்ற இடத்தில் இருக்கிறது. இப்பதிகத்தில் பாடல் தோறும் புராண வரலாறுகள் கூறப்பட்டுள்ளன.

ஈசனை அடையவேண்டி அம்பிகை தவம் செய்தது ,சலந்தரனை வெல்ல வேண்டித் தன் கண்மலரால் சிவபிரானைப் பூசித்துத் திருமாலானவர் சக்கரம் பெற்றது, மண்ணி  ஆற்றங்கரையில் மணலால் சிவலிங்கம் நிறுவிப் பசுக்களின் பாலால் அபிஷேகித்துப் பூஜை செய்த பாலன் மீது அவனது தந்தை வெகுண்டு பால் குடத்தை உதைக்கவே, அவரது கால்களை வெட்டி வீழ்த்திய பாலனுக்கு இறைவன் காட்சி அளித்துச் சண்டீச  பதம் தந்து அருளியது, உமாதேவியார் விளையாட்டாக இறைவனது கண்களை மூடியதால் உலகங்கள் யாவும் இருளவே, மூன்றாவது கண்ணைப் படைத்து ஒளிதந்து அருளியது, தேவர்களுக்காக முப்புரங்களை எரித்தது, தன்னை மதியாத தக்ஷனது யாகத்தைச் சிதைத்து, தேவர்களைத் தண்டித்தது, கயிலையை எடுத்த இராவணனைக் காலால் அழுத்தியது, மாலயனும் காண்பரிய நீண்ட தீச்சுடராய் நின்றது, காமனை நெற்றிக் கண்ணால் எரித்தது, முருகனைத் தோற்றுவித்து அசுரர்களை அழித்துத் தேவர்களைக் காத்தது, பிரமன் வழிபட்டது ஆகிய புராண வரலாறுகளை இப்பதிகத்தில் எடுத்துக் காட்டுகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இறைவன் எல்லாமாகி நிற்பவன் என்பதைக் கூறுமிடத்து,

“ நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி
  நிற்பனவும் நடப்பனவாம் நின்மலன் ஊர் ...”

என்பார் சுந்தரர். பெருமானது பெருமைகளைப் போலவே, அவன் உறையும் தலமும் பெருமை உடையது என்றும் காட்டுவார் அவர். அங்குள்ள சோலைகளில் குயில்கள் கூவுகின்றன. அழகிய மயில்கள் குதூகலித்து ஆடுகின்றன. வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. பசுங்கிளிகள் கிரீச்சிடுவதை, “ சொல் துதிக்க” என்று சொல்வது அழகிய வருணனை. இப்படிப்பட்ட தலத்தில் வசிப்போரும் பெருமை உடையவர்களாகத்தானே இருக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் அமிர்தகலச நாதரைத் தொழுது , தோத்திரம் சொல்லி, நெக்குருகி நின்று கசிந்த மனத்தவர்களாகத் திகழ்கிறார்களாம் அத்தலத்து அன்பர்கள். இப்படிச் சொல்லும் தேனினும் இனிய தேவாரத்தை இப்போது காண்போம்:

மால் அயனும் காண்பரிய மால் எரியாய் நிமிர்ந்தோன்
வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் ; மொய்த்து எழுந்த
வேலை விடம் உண்ட மணிகண்டன் விடை ஊரும்   
விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில்
சோலை மலி குயில் கூவக் கோல மயில் ஆலச்
சுரும்பொடு வண்டு இசை முரலப் பசுங்கிளி சொல் துதிக்கக்
காலையிலும் மாலையிலும் கடவுள் அடிபணிந்து
கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே .


இத்தலத்து இறைவரைத் தரிசித்து, இப்பாடலைப் பாடிக் கொண்டிருக்கும்போது, குயிலும்,மயிலும்,கிளியும் குலாவிய ஊர் இப்படி நிசப்தமாக இருக்கிறதே என்று ஏங்கியபோது மதிலை ஒட்டிய மரங்களிளிலிருந்து கிளிகள் எழுப்பிய ஓசை கேட்டவுடன் சிலிர்ப்பு ஏற்பட்டது. ஆம்! கிளிகள் இன்னமும் சொல் துதித்துக் கொண்டுதான் இருக்கின்றன. நாம் தான் கசிந்த மனத்தவர்களாக இல்லை.             

Monday, January 13, 2014

திருவடிப்பெருமை

திருவெம்பாவையின் நிறைவுப்பாடல் சிவபெருமானது திருவடிகளைப் போற்றுவதாக மட்டுமே அமைந்துள்ளது. அப்பாத மலர்களே ஆதியும் அந்தமும் ஆவன. அவையே ஐந்தொழில்களுக்கும் ஆதாரமாக விளங்குவன. அத்திருவடிகளைப் பாதமலர் என்றும், செந்தளிர்கள் என்றும் பொற்பாதம் என்றும் பூங்கழல்கள் என்றும் இணையடிகள் என்றும் புண்டரீகம் என்றும் பொன்மலர்கள் என்றும்  போற்றித் துதிக்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்.

இறைவனது திருவடிகளைத் தாமரையாக உருவகிப்பது வழக்கம். இறைவனோ பவளம்போன்றும் செம்பொன் போன்றும் ஒளிருபவன். தாமரையானது கதிரவனைக் கண்டால்தான் மலரும். ஆனால் இப்பாத தாமரையோ எப்போதும் என்றென்றும் மலர்ந்து விளங்குவது. ஆயிரம் தாமரைகள் சேர்ந்தது போல ஒளி வீசுவது. மணமும் வீசுவது. ஆம்! இயற்கையாகவே அவை மணம் வீசுபவை.எல்லா வகை மலர்களுக்கும்  மணம் கொடுப்பவனும்,மலரெனவே நிற்பவனும் அவனே. அதைத்தான் அப்பரும்,   “வாச மலர் எல்லாம் ஆனாய் நீயே” என்றும் ,” நறு மலராய் நாறு மலர்ச் சேவடி” என்றும் அருளினார். பெருமானது பாத மலர்களை மட்டும் தாமரையாக உருவகிப்பதில் திருப்தி அடையாத மணிவாசகர் , அவனது திருவுருவம் முழுவதுமே தாமரை போன்றது. அதிலும் தாமரைக் காடு போன்றது என்கிறார்.  “செந்தாமரைக்காடு அனைய மேனித் தனிச்சுடரே” என்பது திருவாசகம்.

திருநாவுக்கரசரது தேவாரத்திருப்பதிகங்களில் திருவடிச் சிறப்பைப் பேசுபவனவாகத் திருவதிகை, திரு இன்னம்பர், திருவையாறு,திருமாற்பேறு ஆகிய தலங்களின் மீது பாடல்கள் அமைந்துள்ளன. அவை அனைத்தும் ஒப்பற்ற பாடல்கள். நெஞ்சத்தை நெகிழ வைப்பவை. நித்திய பாராயணத்திற்கு உரியவை. அப்பேசற்கு அரிய திருவடிகளிடம் நம்மை ஆட்படுத்துபவை
.
பாம்பணையில் துயிலும் மாலும், நான்முகனும் சிந்திப்பரிய திருவடிகள் அவை. வராக வடிவெடுத்துப் பலகாலம் அகழ்ந்து சென்றும் சிவஜோதியின் பாதமலர்களைக்  காணமாட்டாமல் திருவாரூர்த் தியாகேசப்பெருமானைத் தியானித்தவாறே தமது மார்பில் அவனது அஜபா நடனத்தை ஏற்றுக் களிப்பவர் திருமால். அதோடு அமையாது, அம்மலரடிகளைச் சிந்தித்துப் போற்றுவதை, நாவுக்கரசர்,   “அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி” என்கிறார். போற்றுதல், வணங்குதல் , வழிபடுதல் போன்ற தொடர்களைக் காட்டிலும் சிறந்தது “அரற்றுதல்” என்ற இச்சொல் ஓலமிட்டு அலறுகிறானாம் திருமால். இப்படிச் சொல்கிறார் மாணிக்க வாசகர்: “மாலும ஓலமிட்டு அலறும் அம்மலர்க்கே மரக்கணேனையும் வந்திடப்பணியாய்”.என்பது அவரது வாக்கு.

அத்திருவடிகள் அண்மையில் உள்ளவை அல்ல. அதே சமயம் தூரத்தே உள்ளனவும் அல்ல. “சேயாய் நணியானே என்று சிவபுராணம் கூறுவதுபோல், அப்பரும், “ அணியனவும் சேயனவும் அல்லா அடி” என்றார். அவற்றை எப்படி வருணிப்பது? எவ்வாறு அளக்கத்தான் முடியும்? அவை ” சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து” நிற்பதோடு, “கணக்கு வழக்கைக் கடந்து” நிற்பவை அல்லவா? ஆகவே, “ அரை மாத்திரையில் அடங்கும் அடி என்ற அப்பர் பெருமான் “ அகலம்  அளக்கிற்பார் இல்லா அடி” என்று அருளினார்.  அப்படிப்பட்ட பாத கமலங்கள் அடியார்களுக்கு அமுதமாக விளங்குபவை. மருந்தாகிப் பிணி தீர்க்க வல்லவை. மந்திரமும் தந்திரமும் ஆனவை. பற்றுக்களை விட்டவர்க்கும் வேறு பற்றுக்கோடு இல்லாதவர்களுக்கும் ஒரே கதி என நிற்பவை. நிந்தனை செய்பவர்களது பொய் உரைகள் சென்று சேராதவை. தன்னைச் சரணம் என்று சார்ந்த மார்க்கண்டேயனைக் காப்பதற்காகக் காலனையும் உதைத்தவை.

அப்படியானால் அச்சேவடிகள் யார்க்கு எளியவை ? அப்பர் இதற்கும் விடை அருளுவார். “ சீலத்தராகித் தொடர்ந்து விடாத தொண்டர்க்கு அணியன” என்பதே அது. அத்தொண்டர்கள் பெறும் பேறு எத்தகையது தெரியுமா? உண்மைத் தொண்டர் வேண்டும் பிறவாமை ஆகிய வரத்தைக் கொடுப்பதேயாகும். இதைத்தான் குருநாதர், “ ஏழேழ் பிறப்பும் அறுத்தன” என்று ஐயாறப்பரின் திருவடிப்பெருமையைப் பேசுகிறார். அதோடு மட்டும் அல்ல. தன்னைப் போற்றும் குருடனையும் பாழ் நரகக் குழியிலிருந்து கை கொடுத்து ஏற்றி உய்விக்கும் பரம கருணாமூர்த்தியாகப் பெருமான் விளங்குவதை,

“குருடரும் தம்மைப் பரவக் கொடு நரகக் குழி நின்று
அருள் தரு கை கொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே.”
என்பன இவ்வினிய அடிகள்..

அடியார்களது அர்ச்சனைகள் சென்றடையும் இடம் பெருமானது பாதங்கள் அல்லவா? அப்பாதங்கள், போலிகளது அர்ச்சனைகளையும் கூடத்தான் ஏற்றுக்கொள்கின்றன. அது, அவன் அனைவரையும் மன்னித்து ஏற்கும் பெரும்கருணையை உணர்த்துவதாக உள்ளது. உற்றார் யாரும் இல்லாதவர்க்கும்  உறுதுணையாக இருப்பதும், அற்றார்களுக்கு அரும் பொருளாவதும் சிவபிரானது பாதங்களே என்று அப்பர் சுவாமிகள் நமக்கு உபதேசிக்கிறார். துயரம் வந்து நம்மை வெய்யில் சுடுவதுபோன்று சூழ்ந்துகொண்டால் , நிழலாக வந்து நம்மைக் காப்பன அத்திருவடிகளே. இப்படி எல்லாப்பொருளாக இருந்து திகழும் ஐயாறன் அடித்தலத்தை அப்பரது திருவாக்கால் இங்கே காணலாம்:

இப்பாடல், இறைவனே எல்லாமாகி நிற்பதை அறிவித்து அவனது திருவடிகளே எல்லாவற்றிக்கும் பிறப்பிடம் ஆவதை,

ஓதிய ஞானமும் ஞானப்பொருளும் ஒலி சிறந்த
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும்
சோதி அம்சுடர் ஞாயிறும் ஒப்பன தூ மதியோடு
ஆதியும் அந்தமும் ஆன ஐயாறன் அடித்தலமே.

என்று போற்றுகின்றார் திருநாவுக்கரசர்.  
    

இத்தனைச் சிறப்பு வாய்ந்த திருவடிகள் தன் சிரத்தில் எழுந்தருளவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார் அப்பரடிகள். வேண்டுவார் வேண்டுவதே ஈயும் வள்ளலான சிவ பெருமான் அவரைத் திருநல்லூருக்கு வரவழைத்துத் தன் பாதமலர் சூட்டினான். உவகை மேலிட்ட நாவுக்கரசு சுவாமிகள், “திருவடி என் தலைமேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே” எனப் பாடுகிறார். கனவிலும் இந்தப்பேற்றை அடையத் தவம் செய்யாத நாம், நல்லூர் சென்று அக்கோவிலில் நம் சிரத்தில் சார்த்தப்பெறும் திருவடிகளைச் சூடவாவது தவம் செய்ய வேண்டாமா?  

Thursday, December 19, 2013

பாதமலர்

மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தைத் தனது திருக்கரத்தால் எழுதிவைத்துக்கொண்ட நடராஜப் பெருமானை  , அதிலுள்ள 51 தலைப்புக்களில் "திருவெம்பாவை" யில் அமைந்த பாடல்கள்   பெரிதும் கவர்ந்தன  போலும். அதனால் தானோ என்னவோ " பாவை பாடிய வாயால் கோவை பாடுக" என்று மணிவாசகருக்குக் கட்டளை இட்டான் பரமன் . " பாவை" என்றது இங்கு திருவெம்பாவையைக் குறிக்கும். அப்படியானால் நாமும் அம்   மணிவாசகத்தின் பெருமையை உணர்ந்து அப்பாடல்களை ஒதிவந்தால், சிவனருளை எளிதாகப் பெறலாம் அல்லவா?

எடுத்துக் காட்டாக ஒரு திருவெம்பாவைப் பாடலை இங்கு சிந்திப்போமாக. பரமேச்வரனது பாத கமலங்கள் திருமாலும் பன்றி வடிவில் அகழ்ந்து சென்றும் காண முடியாதவை. சொல்லால் வருணிக்க முடியாதவை. " எங்கள் பெருமான் பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக்கு அப்பால் "  என்று மற்றோரிடத்தில் குருநாதர் கூறுவது நினைவுக்கு வருகிறது. அவனது திருமுடியை பிரமனும் காண முடியவில்லை. ஆகவே, "மாலறியா நான்முகனும் காணா மலை" என்றார் . 'வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடி தேடி இன்னமும் துதிக்கின்றார் எழில் மறை அவற்றாலே..." என்கிறது திருவிசைப்பாவும். எல்லாப் பொருளின் முடிவும் ஆகி நிற்கும் பரம்பொருளுக்கு என்ன வடிவம் சொல்வது? அம்பிகையை இடப்பால் கொண்டவன் என்பதா? ஈருருவும் ஓர் உருவாய் இருக்கும் அர்த்த நாரீச்வர வடிவத்தைப் "பேதை ஒருபால்" என்றார்.

அதே சமயத்தில்  பல்வேறு வடிவும் எடுக்க வல்ல பரமனை எப்படி ஒரே வடிவம் கொண்டவனாகக் கூற முடியும்? அதனால் , " திருமேனி ஒன்றல்லன்" என்பதே அடுத்த வருணனை. விண்ணுலகும் மண்ணுலகும் துதிக்கும் இறைவனை வேதங்களாலும் துதிக்க முடியவில்லை என்றால் அவனது பெருமையை யாரால் பேச முடியும்? "ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்" என்றார். இப்படி "ஆராலும் காண்டற்கு அரியான்" அடியார்க்கு மட்டும் எளியவனாவது அவனது பெரும் கருணையைக் காட்டுகிறது. இப்படி " விண்ணுக்கு ஒரு மருந்து" எனவும் "வேத விழுப்பொருள் " எனவும் இருக்கும் பரம்பொருள் தனது அடியார்களுக்குத் தோழனாகவும் ஆகிறான். சுந்தரர் பெருமானுக்குத்            "தோழனுமாய்",  "வன் தொண்டன்   என்பதோர்  வாழ்வு"ம் தந்த பெருமானை     " ஒரு தோழன்" என்றார்  மாணிக்க வாசகப்பெருமான். அடியார்களுக்கு நடுவில் இறைவனே இருப்பதால், " தொண்டர் உளன்" என்றார். இதே கருத்தை, " ... அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் , அடியேன் உன்  அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்.. " என்று பாடுகிறார்.

எல்லா இடங்களிலும் நீக்கமற நிற்பவனை ஒரு ஊரைச் சேர்ந்தவன் என்று குறிப்பிடுவதும் முடியாத காரியம்தான்! ஆகவே, " ஏது அவன் ஊர்? " என்பார்.     " ஒற்றியூரேல் உம்மது அன்று .. " என்ற சுந்தரரின் வாக்கும் நினையத்தக்கது. அதேபோல் அவனை எந்தப் பெயருக்கு உரியவனாக ஆக்கமுடியும்? இப்படி ஊரும் பேரும் கடந்த கடவுள் அல்லவா அவன்? ஆனால் நாமோ அவனைப் பல பெயர்களால் துதிக்கிறோம். "பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மான்", என்று அப்பர்  சுவாமிகள்  பாடியது போல், மணிவாசகரும்,

" .... ஒருநாமம் ஓருருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ."  எனப்பாடுகிறார். உருவமும் அருவமும் ஆகிய பெருமானுக்கு எந்த உருவத்தை மட்டும் சொல்லிக் குறிப்பிடமுடியும்?  இதையே காரைக்கால் அம்மையாரும், .. " நின் உருவம் ஏது? " என்று வினவுகிறார் .

இப்படிப்பட்ட பரம்பொருளுக்கு உற்றாரோ , உறவினர்களோ, அயலவர்களோ யார் இருக்கிறார்கள்?  " தாயும் இலி , தந்தை இலி , தான் தனியன்.." என்று கூறியுள்ள திருவாதவூரர் , " ஆர் உற்றார் ; ஆர் அயலார்?' என்கிறார். இருந்தாலும் அவன் அருள் வழங்கும் கோயில்களைச் சென்று வழிபடாமல் இருக்கலாமா? "கண்ணுக்கு இனியானை"க் கண்ணாரக் காண வேண்டாமா? அப்படிக் கண்டபின்னர் அவனைப் " பாடிக்,கசிந்து உள்ளம் நெக்கு உருக வேண்டாமா? சித்தம் அழகிய அடியார்கள் சிவபெருமானைத் துதிக்கக் கண்ட பிறகும் , " சிவனே சிவனே என்று ஓலமிடுவதைக் கண்டும் ,அவமே காலத்தைப் போக்கலாமா? அவனோ நம்மைத் தலை அளித்து ஆட்கொள்பவன். விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப் பாதத்தையும் அடியார்களுக்குத் தந்து அருள்பவன். ஊழி முதல்வனாய் நிற்பவன். பிறவித் துயர் கெடும்படி அருள் செய்பவன்.உலகங்களை எல்லாம் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடுபவன்.  எங்கும் இல்லாததோர் இன்பம் நம் பால் வரும்படி அருள் செய்யவல்ல கருணாமூர்த்தி. அப்புண்ணியமூர்த்தியின் பூங்கழல்களே ஆதியும்,அந்தமும், தோற்றமும், போகமும், ஈறும் ஆகி நிற்பவை. மாலும்  நான்முகனும் காணாத அப்பாதமலர்களை நாமும் பரவி, மார்கழி நீர் ஆடுவோம் என்கிறது குரு வாசகம்.

பூதங்கள் தோறும் நிற்கும் பராபரனைக் கீதங்கள் பாடியும் ஆடியும் வழிபட வேண்டும். சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து பாடவேண்டும்." ... நின்னையே பாடி நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு ஆட வேண்டும் நான் .. " என்று தனக்காகப் பாடுவதுபோல் நமக்கு உபதேசிக்கிறார் மாணிக்க வாசகப் பெருமான். நம் கண்கள் அவன் கழல் கண்டு களிக்க வேண்டும். அவன் கழலை வாழ்த்த வைத்த திருவருளை நினைந்து நினைந்து உருக வேண்டும். அப்படி உருகுவதால் ஏற்படும் பலனையும் அடிகளே கூறுவார்: ..." தன் அடியார் குற்றங்கள் நீக்கிக் குணங் கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான்... " என்பார்.

இத்தனை அருமை-பெருமைகளை நமக்கு வாரி வழங்கும் திருவெம்பாவையின் ஒரு பாடல் இதோ:

" பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
பேதை ஒருபால் திரு மேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன் தன் கோயில் பிணாப் பிள்ளைகாள்
ஏது அவன் ஊர் ; ஏது அவன் பேர் ; ஆர் உற்றார் ; ஆர் அயலார்
ஏது அவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
  

Friday, October 25, 2013

ஏறு ஏற்ற ஈசன்

ரிஷபம் என்பதற்குத் தமிழில் காளை என்றும் , விடை  என்றும், ஏறு என்றும் பலப்பல சொற்கள் உண்டு. அதனை வாகனமாகக் கொள்வதால் பெருமானுக்குக் "காளையார்" என்றும், விடையவன்  என்றும், ஏற்றன்  என்றும் பெயர்கள் வந்தன. ரிஷப வாகனத்தில் ஈசுவரன் ஏறுவதால் அந்த வாகனம் ஏறு எனப்பட்டது. இதையே மாணிக்கவாசகரும்  "ஏறுடை ஈசன் " என்றார் .  இவ்வாறு ஏற்றின் மீது ஏறி வரும் பெருமானை  ஏற்றார்  என்று குறிப்பதோடு மட்டுமல்ல. யாராவது ஒரு பொருளை ஏற்றுக்கொள்பவரையும் ஏற்றார் என்றுதானே சொல்வது வழக்கம்! அப்படியானால் அதை சுவாமிக்கும் பொருத்திப் பார்ப்பதில் தான் எத்தனை இன்பம்! ஏற்றின் மேல் ஏறி வரும் பெருமான் எதையெல்லாம் ஏற்றான் என்று குறிப்பிடுகிறார் அப்பர் பெருமான் ஒரு அழகிய பாடலில்.

 உலகையே அழித்துவிடும் வேகத்தில் வந்த கங்கையைத் தன் சடை முடியில் ஏற்றான். அதனால் கங்காதரன் ஆனான். கங்கை தங்கிய செஞ்சடையில், பலரது சாபத்தையும் பெற்று அடைக்கலம் வேண்டி வந்த சந்திரனை ஏற்று சந்திரசேகரன் ஆனான். இக்கருணையை, " நீருலாம் சடைமுடிமேல் திங்கள் ஏற்றார் " என்றார்  அப்பர். திங்கள் என்றது சந்திரனை.

தாருகாவனத்து முனிவர்களின் அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவாகப் பிக்ஷாடனக்  கோலத்தில் எழுந்தருளி பிக்ஷை (பலி) ஏற்றான். அது கண்டு கோபம்  கொண்டு ஆபிசார  வேள்வி செய்து முனிவர்கள் ஏவி விட்ட நெருப்பைக் கரத்தில் ஏற்றான். முனி பத்தினிகளின் கற்பை ஏற்றான். " நெருப்பு ஏற்றார்  அங்கையில் நிறையும் ஏற்றார் " என்று வாகீசப் பெருமான் இந்நிகழ்ச்சியைக் காட்டுகிறார்

தாருகாவனம் முழுவதும் சென்று பலி ஏற்றதோடு முனிவர்கள் ஏவிய பாம்பை (அரவத்தை) ஆபரணமாகத் தன் மேனியில் ஏற்றான் . பன்னகாபரணன் ஆனான். இதனை அப்பர்  சுவாமிகள், " ஊரெலாம் பலி ஏற்றார்  அரவம் ஏற்றார் " எனக் குறிப்பிடுகிறார்.

இன்னும் எதையெல்லாம் ஏற்றான் தெரியுமா? அலைகடலிலிருந்து அனைவரையும் அழிப்பதற்காக எழுந்த ஆலகால விஷத்தை உண்டு , தனது கழுத்தில் நிலைபெறச் செய்து நீலகண்டன் ஆனான். இப்படி ஆலந்தான் உகந்துஅமுது செய்தபடியால் விஷத்தையும் ஏற்று அகில உலகையும் காத்து அருளிய செயலை, " ஒலி கடல் வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார் " என்றார். மிடறு என்பது கழுத்தைக் குறிப்பது.

தன்னை அடைய வேண்டித் தவம்  செய்த அம்பிகையை இடப்பாகத்தில் ஏற்றான் என்பதை, " வாருலா முலை  மடவாள் பாகம் ஏற்றார்." என்றும் ,  முனிவர்கள் ஏவிய மானையும் மழுவையும் தனது கரங்களில் ஏற்றான் என்பதை ,

" மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார்."  என்றும் அருளினார்  திருநாவுக்கரசர் .

எல்லாப் புகழும் இறைவனையே சேரும் என்பதை உணத்துவதாக, " பாருலாம் புகழ் ஏற்றார்." ஏற்றார்.

நிறைவாக இறைவன் ஏற்றின் மேல் ஏறி வருவதைக் குறிப்பிடுகையில், அந்த அழகிய மிரண்ட, உருண்டு திரண்ட கண்களை உடைய வெள்ளை விடையாகக் காட்டுகிறார் அப்பர் சுவாமிகள். "பைங்கண் ஏற்றார்  " என்பது அவ்வுயரிய வரிகள்.  பந்தணை  நல்லூரில் அருளிச் செய்த அத் தேவாரப் பாடலை இப்போது பார்ப்போம்:

    நீருலாம் சடைமுடிமேல் திங்கள் ஏற்றார்
            நெருப்பு ஏற்றார்  அங்கையில் நிறையும் ஏற்றார்
     ஊரெலாம் பலி ஏற்றார்  அரவம் ஏற்றார்
             ஒலி கடல் வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார்
    வாருலா முலை  மடவாள் பாகம் ஏற்றார்
             மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார்
    பாருலாம் புகழ் ஏற்றார்  பைங்கண் ஏற்றார்
             பலி ஏற்றார்  பந்தணை நல்லூராரே .
என்பது இவ்வினிய திருப்பாடல். 

Tuesday, October 1, 2013

நித்தம் பல கால் நினை

 தெய்வத் தமிழ் என்பதற்குப்  பல பொருள்கள் கொள்ள இடமுண்டு. தெய்வம்தந்த தமிழ் என்று கூடச் சொன்னாலும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் , சிவபெருமானே தமிழ்ச் சங்கப் புலவராக இருந்தபடியால் இம்மொழிக்கு அந்தப் பெருமை உண்டு. மேலும் அகத்திய முனிவரால் இலக்கணம் வகுக்கப்பெற்ற பெருமையும் இதற்கு உண்டு. நக்கீரருக்கே அகத்தியர் மூலமாக இலக்கணம் கற்பிக்கச் செய்தான் இறைவன்.

மதுரை சொக்கநாதர் தமிழ் விடு தூது என்று ஒரு பிரபந்தம் உண்டு. அதன் ஆசிரியர் இன்னார்  என்று தெரியவில்லை. தமிழையே தூது விடுவதாக அமைந்த அந்நூலில் தமிழ் மொழியின் பெருமைகள் ஏராளமாகப் பேசப்படுகின்றன. தெய்வம் தந்த மொழி என்பதாலோ என்னவோ, தமிழை, "அடிகளே " என்று ஆர்வம்  கூர அழைக்கிறார்  ஆசிரியர். மேலும், "பித்தா" என்றும். "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்  " என்றும் சுந்தரருக்கு  இறைவனே அடி எடுத்துக் கொடுத்ததால் அத்தேவாரத் தமிழ், தெய்வம் தந்த தமிழ் தானே! "உலகெலாம்" என்று சேக்கிழாருக்கு அடி எடுத்துக் கொடுத்தமையால், அப்பெரியபுராண ஆசிரியரான சேக்கிழாரை நாம் தெய்வச் சேக்கிழார் என்று அல்லவா போற்றுகின்றோம்!

தெய்வத்தைப் போற்றும் தமிழாக அது மிளிர்வது , அம்மொழியைத்தந்த இறைவனுக்குச் செய்யும் கைம்மாறாக அமைகிறது. தே + ஆரம்  என்று , தெய்வத்திற்குச் சூடும் மாலையாகவே  அத் தெய்வத் திருமுறை அமைந்துள்ளது. அது மட்டுமா? தெய்வத்தையே தூது போகச் சொன்னதும் அத் தெய்வத் தமிழுக்கே உள்ள தனிச் சிறப்பு. மறைக்  கதவைத் திறந்து மூடச் செய்தது, முதலை உண்ட பாலனை உயிர்ப்பித்தது போன்ற அற்புதங்களைச் செய்ததும் இத்  தமிழே !

தெய்வத்திடம் நம்மைச் சேர்க்கும் தமிழ் என்றும் பொருள் கொள்ளலாம். மிகவும் எளிய முறையில் இறை அருளைப் பெறவும் வகை செய்கிறது இத்தெய்வத் தமிழ். இறைவனை நினைவுபடுத்தி,அவனை மறக்காமலிருக்க நமக்கு  உறுதுணையாகவும் நிற்கிறது. அப்படிப்பட்ட ஒரு பாடலை இப்போது சிந்திக்கலாம்:

சிவத்தலங்களின் பெயர்களைச் சொன்னவுடனேயே அங்கு கோயில் கொண்டுள்ள இறைவனை  நினைக்கத் தூண்டுவதாக உள்ளது. அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பார்கள். எனவே அத்தலத்தை முதலாவதாக வைத்து, அத்துடன் மற்றும் சில தலங்களையும் நினைக்கும்படி நம்மை ஆற்றுப் படுத்துகிறது இப்பாடல்.  திருவாரூர் தியாகேசப்பெருமானது பூங் கோவிலை மறக்கவும் முடியுமா என்கிறார் சுந்தர மூர்த்தி சுவாமிகள். ஆறு நாட்கள் விழித்திருந்து ஒப்பில்லாத அன்புடன் காவலாக நின்ற கண்ணப்பருக்கு அருளிய காளத்தி நாதனையும் நினைக்க வேண்டும்.தன்னைத்  தரிசித்த மாத்திரத்திலேயே முக்தி அளிக்கும் அம்பலவாணனையும் அவனது கோவில் அழகையும், அக்  கோயிலின் தனிச் சிறப்பு வாய்ந்த மணியின் ஓங்கார ஓசையையும், அடியார்கள் ஆனந்தக் கண்ணீர் பெருகும்படி , ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளும் பெருமானையும்  எவ்விதம் மறக்க முடியும்? திருவானைக்காவில் சிற்றுயிர்க்கும    இர ங்கியருளிய  கருணாமூர்த்தியை நினைக்க வேண்டாமா? அதுவும் அனுதினமும் நினைக்க வேண்டும். ஒரு முறை அல்ல. பலமுறையும் நினைக்க வேண்டும்.

இதோ அப்பாடல்:

                " அண்ணாமலையரையும் ஆரூர்த் தியாகரையும்
                   கண்ணான  காளத்தி நாதரையும்  -- ஒண்ணான
                   சிற்றம்பலவரையும் தென்னானைக்காவரையும்
                   நித்தம் பல கால் நினை. "

Saturday, September 21, 2013

அருளமுதம்

தமிழை முன்னிலைப்படுத்துவது எப்படி என்று கருத்தரங்கம் வைக்கிறார்கள். அதற்கு முன் தமிழ் எதில் வாழ்கிறது என்று சிந்திப்பது நல்லது. தமிழ் வெறும் பேச்சு மொழியாக இருந்தால் போதுமா? எழுதப்படிக்கத் தெரியாத எத்தனையோ இளந்தமிழர்களுக்குத் தமிழின் அருமையை  எப்படித் தெரிவிப்பது? பள்ளிப் படிப்பிலிருந்து வேற்று மொழியைக் கற்றுக் கொண்டு, தமிழை அறவே ஒதுக்க முற்படும் காலம் இது. பேசும் போதும் பிற மொழியில் பேசினால்தான் கெளரவம் என நினைப்பவர் பலர்! எட்டாம் வகுப்பு வரை தாய் மொழி ஒரு பாடமாகக் கண்டிப்பாக அனைவரும் கற்க வேண்டும் என்று அண்டை மாநிலத்தில் செயல் படும் போது, தமிழ்நாட்டில் அம்முறையைச் செயல் படுத்தலாம் அல்லவா? தமிழைத் தாய்மொழியாக அல்லாதவர்களுக்குச் சற்று சிரமாக இருக்கும் என்பதை ஒப்புக் கொள்கிறோம். தமிழைத் தமிழனே உதாசீனம் செய்யும்போது தமிழைக் காக்க இதைத் தவிர வேறு வழி இல்லை.

தமிழைக் கற்கும் மாணவர்களுக்கோ அதன் அருமை தெரிவிக்கப்படுகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். நேற்று வந்தவர்கள் எழுதிய கவிதைகள்,கட்டுரைகள் புதிய சிந்தனை என்ற பெயரில் புகுத்தப்படுகின்றன. பெயர்  அளவிற்குப் பழந்தமிழ்ப் பாடல்கள் பாட திட்டத்தில்  இருந்த போதிலும், புரட்சி, சீர்திருத்தம் என்ற போர்வையில் அமையும் பாடங்களே அதிகம். அவற்றையெல்லாம் பற்றி சிந்திக்கும் பருவத்தில் இல்லாத மாணவர்களுக்கு அவை வலுக்  கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன.

முன்பெல்லாம் பாடத்திட்டம் என்பது , நீதிகளைப் புகட்டும் விதத்தில் அமைந்திருந்தது. திருக்குறள்,நாலடியார், நீதிநெறி விளக்கம், ஆத்திசூடி,கொன்றைவேந்தன்  போன்ற நீதி நூல்கள்  கற்பிக்கப்பட்டு வந்தன. ஆசிரியர்களும் அவற்றின்  நயத்தையும், சொல்ல வந்த கருத்தையும் திறம்பட  மாணவர்களுக்கு விளக்கி வந்தார்கள். இப்போதைய பாட திட்டத்தில் எதை நயம்பட விளக்குவது?

பெரிய புராணத்தில் ஒரு பாடலை இங்கு பார்ப்போம். திருஞான சம்பந்தர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தன் தந்தையுடன் சீர்காழி ஆலயக் குளக் கரைக்கு வந்தார். தந்தை நீரில் மூழ்கி ஜபம் செய்து கொண்டிருந்தார். பசிமேலிட்ட அக்குழந்தை, தோணியப்பரின் விமானத்தை நோக்கி " அம்மே, அப்பா" என்று அழுதது. அகில உலகங்களுக்கும் அம்மையப்பர்  இவரே என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. அக்குழந்தையின் அழுகையையையும், பசியையும்  தீர்த்தருள வேண்டிக் கயிலை நாதனாகிய கருணாமூர்த்தி, உமாதேவியாரை  நோக்கி, அக்குழந்தையின் பசி தீருமாறு பாலூட்டியருளுவாயாக என  அருளிச் செய்தார். உமையம்மையும்  திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் ஏந்தி, அக்குழந்தையின் கண்ணீரைத் துடைத்து, அப்பாலில் சிவஞானத்தையும் சேர்த்துக் குழைத்து ஊட்டியருளினாள்.  இந்நிகழ்ச்சியை சேக்கிழார் பெருமான் நமக்கு எவ்வளவு நயத்தோடு தெரிவிக்கிறார் பாருங்கள்:

இது அருள் மயமான நிகழ்ச்சி அல்லவா? எத்தனை இடங்களில் "அருள்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது பாருங்கள்:
பிரம தீர்த்தக் கரையில் புண்ணிய வடிவாய் நின்ற இக்குழந்தை நிற்கிறது எனச் சொல்லும்போது,
" புண்ணியக் கன்று அனையவர்தாம்  பொருமி அழுது அருளினார் ."  என்கிறார் சேக்கிழார்.
தோணிச் சிகரத்தை நோக்கி, " அம்மே அப்பா " என்று அழைத்து அழுதார் எனும்போது,
" அம்மே அப்பா என்றென்று  அழைத்தருளி  அழுதருள"  என்பார்.
இறைவனும் மலைவல்லியுடன் " அருள்புரிவான் "எழுந்தருளுகின்றான்.
அம்பிகையைப்பார்த்து இறைவன் சொல்லும் இடத்தில்,
" அரு மறையாள்  உடையவளை அளித்தருள அருள் செய்வார்." என்பது நயம்  மிக்கது.

இறைவனது அருட்  செயலை வருணிக்கையில், அவனது திருவுள்ளத்தின் பெருமையை நமக்கு உணர்த்துகின்றார்.  " அருட் கருணை எழுகின்ற திருவுள்ளத்து இறையவர்" என்பது அத்தொடர்.
கருணையே வடிவான அம்பிகையும், இவ்வாறு சிவபெருமான் அருளியவுடன் அக்குழந்தையிடம் சென்றடைந்தாள்  என்பதை, "கருணை திருவடிவான சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் " என  பக்திச் சுவைபட எடுத்துரைக்கிறார்.

அம்பிகை, திருமுலைப் பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து அக்குழந்தைக்கு அளிக்க முற்பட்டாள் என்பதை, " திருமுலைப் பால் வள்ளத்துக் கறந்து அருளி " என்கிறார்.

இங்கேதான் அந்த அற்புதமான பாடல் அமைந்திருக்கிறது:
நினைத்துப் பார்ப்பதற்குக் கூட அரியதான சிவஞானத்தை அப்பாலோடு அமுதமெனக் குழைத்துத் தந்ததை, " எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்து அருளி " என்ற தொடர் காட்டுகிறது.

இதனை உண்பாயாக என்று கூறிய உமையம்மையை அக்குழந்தை எதிர் நோக்குகிறது. அதன் கண்களில் பசியாலும் நீரில் மூழ்கச் சென்ற தந்தை திரும்பக் கால தாமதமானதாலும்  கண்ணீர் ததும்புகிறது. சாதாரணக் கண்களா அவை? அவற்றை எப்படி வருணிப்பது! மலர் போன்ற கண்கள் என்று உவமையாகக் கூறுவதைக் காட்டிலும், கண்ணாகிய மலர் என்று உருவகித்துச் சொல்வதே மிகவும் பொருத்தம் என்று தோன்றுகிறது.அம்பிகையே எழுந்தருளி அக்  கண் மலரைத் துடைப்பது  அருள்தானே! யாருக்கு அது கிடைக்கும்? இப்போது பாடலைப் பார்ப்போமா?

" உண் அடிசில் என ஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்
  கண் மலர் நீர்  துடைத்தருளிக் கையில் பொற்கிண்ணம் அளித்து "
என்றவர், அவ்வற்புதத்தை, மேலும்,
சம்பந்தராகிய அண்ணலை அங்கணன் ஆகிய சிவபெருமான் அழுகை தீர்த்து அருளினான்.என்றார்.
" அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள் புரிந்தார்." என்பது அப்பாடல் வரிகள்.

இவ்வாறு கை மலர்களால் கண் மலர்களைப் பிசைந்துகொண்டு "அம்மே அப்பா" என்று அழைத்தவுடன் அம்மையப்பர் முன்னின்றருளினார்  என்று சொல்லும் பாடல் எவ்வளவு நயம் மிக்கது , அருள் மயமானது என உணர்கிறோம்.

சம்பந்தப்பெருமானது திருவடிகளும் மலர் போன்றவை என்பதால், அவரது புராணத்தைத் துவங்கும்போது,சேக்கிழார் பெருமான், "திருஞான சம்பந்தர் பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்" என்பார். இவ்வாறு சேக்கிழார் அருளிய பாடலைப் படிக்கும்போது அமுதத் தமிழில் திளைத்து, அமுதகடேசனின் அருளைப் பெறுகிறோம்.

இறைவனை " அருட்பெருங்கடலே" என்று அழைக்கிறார் மாணிக்கவாசகர். அந்த அருளில் சிறிதாவது பெற நாம் தவம்  செய்தவர்களாக இருக்கவேண்டும். அந்த ஆனந்த மா கடலின் அருளில் ஒரு திவலையையாவது பருகப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட விதியில்லாத அடியேன் உன்னையே அடைக்கலமாக அடைந்துள்ளேன்.உன்  அருளமுதத்தைப் பருகும் விதியில்லாததால் விக்கினேன். அப்போது தேன் போன்ற உனது அருளமுதத்தைப் பருகத் தந்து அடியேனை உய்யக்கொள்வாயாக என நெக்குருகி வேண்டுகின்றார்.

வழங்குகின்றாய்க்கு உன்  அருளார்  அமுதத்தை வாரிக் கொண்டு
விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என் விதி இன்மையால்
தழம் கருந்தேன் அன்ன தண்ணீர் பருகத் தந்து உய்யக் கொள்ளாய்
அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன்  அடைக்கலமே.
                                                                                            -- திருவாசகம்
  

Tuesday, August 20, 2013

நினைந்து உருகும் மனம்

இறைவனிடத்தில் அன்பு செலுத்துவதற்கும் , மனிதர்களிடமோ விலங்கினங்களிடமோ , அன்பு செலுத்துவதற்கும் என்ன வித்தியாசம் என்று சந்தேகம் ஏற்படுவது உண்டு. இவை இரண்டும் மனத்தளவில் ஏற்படுவன என்றாலும் இரண்டும் வேறுபாடு உடையன. இரண்டுக்கும் அடிப்படையானது அன்பு என்றாலும் , மனிதர்களிடத்துச் செலுத்தும் அன்பு, பஞ்சேந்திரியங்களின்   செயல் பாட்டாலே பெரும்பாலும் நிகழ்வது . தற்காலிக மன மகிழ்ச்சி அதனால் விளைகிறது. தாம் அன்பு செலுத்துபவர்  மன  மாற்றம் கொண்டால் அந்த அன்பு முறிவதோடு  மறக்கவும் துணிகின்றனர். இது, தான் நினைத்தது நடைபெறாததால் ஏற்பட்ட விரக்தியாகக் கூட இருக்கலாம். எனவே, நினைக்கத் தெரிந்த மனம் , மறக்கத் துணிகிறது.

இறைவனிடம் அன்பு செலுத்துவதால் மனம் கசிந்து உருகுகிறது. பக்தி மேலிடும் போது கண்ணீர்  பெருகுகிறது. இந்நிலையைத்தான் சம்பந்தர், "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி..." என்றார்.  நமக்கு அருள் செய்யாமல் இருக்க மாட்டான் என்று மனம் உறுதி கொள்கிறது.உன்னை மறந்தாலும் எனது நாக்கு நமசிவாய மந்திரத்தைச் சொல்லுவதை மறக்காது என்று நினைக்கிறது. மனத்திலும்,தலைமீதும்,வாக்கிலும் இறைவன் இருப்பதை மெல்ல உணருகிறது.

இறையன்பு, மெதுவாக வைராக்கியமாக மாறி, அன்பின் எல்லைக்கே சென்றுவிடுகிறது. "எழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன்,துடைக்கினும் போகேன்..." என்ற நிலை சாத்தியமாகிறது. மனித்தப் பிறவிக்கே உரிய தவறுகளைச் செய்தாலும், இறைவனது பாதங்களை அடைக்கலமாக  அடைந்துவிட்ட பிறகு, அத்தவறுகளை அவனே தண்டித்துத் திருத்துவான் என்ற எண்ணம் மேலோங்குகிறது. "நின் பணி பிழைக்கில் புளியம் விளாரால் மோதுவிப்பாய்" என்று தந்தையிடம் தனையன் மன்னிப்புக் கோருவதுபோலக் குழைந்து விண்ணப்பிக்கிறது.

ஒரு நாமமும் இல்லா இறைவனின் ஆயிரம் நாமங்களையும் ஓத விழையும் எண்ணமும் சித்திக்கிறது.அந்த நாமங்களை நாக்குத் தழும்பு ஏறும்  வண்ணம் பேசிப் பேசி அதுவே பிதற்றலாக மாறுகிறது. ஆரூரா,சங்கரா என்றென்றே அரற்றுகிறது. அப்படி வாழ்த்தும் போது  மனம் கசிந்து, வாய் குழறுகிறது. சொற்கள் வாயிலிருந்து வருவது நின்றுவிடுகிறது. இப்படிப் பல்காலமும் பெருமானைப் பாவித்து, அவன் சதாகாலமும் ஆனந்த தாண்டவம் புரியும் பொன்னம்பலத்தை நினைந்து நினைந்து நெக்குருகி நிற்கும் இந்த உயிர்க்கும் இரங்குவாயாக என்று வேண்டுகின்றார் மாணிக்க  வாசகர். அவ்வாறு இறைவன் இரங்கினால் அந்தக் கணமே கருணை மழை  பொழிந்து அருளி விடுவான்.  கலங்குகின்ற அடியேனின் கண்ணின் நீரைத் துடைத்து என்னை அப்பா அஞ்சேல் என்று அபயம் அளித்து,அடியார் கூட்டமும் காட்டி,நின் கழல் கீழ் வைப்பாய் என்று மனமுருகி வேண்டியவர் மணிவாசகர்.

நம் மனமோ கல்லைக் காட்டிலும் கடினமாக இருக்கிறது. உருகுவதற்கான வழியே அறியாமல் பல திசைகளிலும் அலை மோதுகிறது. இறைவனோ நம் மனக் கல்லைப் பிசைந்து, கனி ஆக்கித் தன் கருணை வெள்ளத்தில் நம்மைத் திளைக்க வைக்கத் தயாராக இருக்கிறான். நமது பழ வினை  அவனை நாடாது செய்கிறது. இந்நிலையில் மனம் உருகுவது எப்படி ? "திருவாசகத்திற்கு  உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே! அப்படியானால் நம் நெஞ்சக் கன  கல்லை நெகிழ்ந்து உருக வைக்கும் திருவாசகத்தை ஓதினால் அதை அடைந்து விடலாம் அல்லவா?அதன் பின்னர் உருகிய மனம் மேலும் நைய வேண்டும் . ஆயினும்,அதற்கும் அவன் அருள் தேவை.எனவேதான் , "நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்" என்கிறார் திருநாவுக்கரசர். அப்படிப்பட்ட மனத்தைத் தந்தருளுமாறு வேண்டிப் பின் வரும் திருவாசகப் பாடலை ஓதி நலம் பெறுவோம்.

நல்காது ஒழியான் நமக்கு என்று உன் நாமம் பிதற்றி நயன நீர்
மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தான் நினைந்து உருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம்பலம் என்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி அருளாய் என்னை உடையானே.