Tuesday, April 14, 2015

திருப்புகலூர்க் காட்சிகள்

திருப்புகலூர் கோயிலும் அகழியும் 
திருப்புகலூர் என்பது தேவார மூவர்களாலும் பாடல் பெற்ற தலம். மயிலாடுதுறையிலிருந்து சன்னாநல்லூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் வழியில் உள்ளது. இங்குதான் அப்பர் சுவாமிகள் சித்தரை சதயத்தன்று சிவ முக்தி அடைந்தார். இங்கு  அக்னி பகவான் பூஜித்ததால் சுவாமி அக்னீஸ்வரர் எனப்படுகிறார். இந்த சன்னதியைத் தவிரவும் மற்றோர் சிவசன்னதி இக் கோயிலுக்குள் உண்டு. அங்கு சுவாமிக்கு வர்த்தமாநீசுவரர் என்று பெயர் வழங்கப்படுகிறது. இம்மூர்த்தியின் மீதும் சம்பந்தர் அருளிய பதிகம் இருக்கிறது. இந்த வர்த்தமாநீசுவர சுவாமியை நாள்தோறும் பல்வேறு மலர்களாலும் மாலைகளாலும் ஆராதித்து வந்தவர் முருக நாயனார் என்பவர். இவரும் அறுபத்து மூவருள் ஒருவர்.

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருப்புகலூருக்கு வந்தபோது அவர்கள் முருக நாயனாரது இல்லத்தில் தங்கியிருந்ததாகப் பெரிய புராணம் கூறும். அவர்களது வருகையைப் பற்றிக் கேள்வியுற்றவுடன் ,  அருகிலுள்ள திருச்சாத்த மங்கை என்ற தலத்தில் வசித்து வந்த திருநீல நக்க நாயனாரும், திருச்செங்காட்டங்குடியில் வசித்த சிறுத்தொண்ட நாயனாரும் திருப்புகலூரை வந்தடைந்து அவர்களை வணங்கி அளவளாவி மகிழ்ந்தனர். சம்பந்தருடன் யாத்திரையில் கூட வரும் திருநீலகண்டப் பாணனாரும், அவரது மனைவியாரான மதங்க சூடாமணியாரும் அப்போது உடன் இருந்தனர். இவ்வாறு, பல நாயன்மார்கள் சந்தித்த தலமாக விளங்குகிறது திருப்புகலூர்.

மலர் கொண்டு மகாதேவனை முருக நாயனார் அர்ச்சித்த சிறப்பைக் காட்ட வந்த சேக்கிழார் பெருமான், அந்த ஊரின் இயற்கை வருணனையை நயம் பட எடுத்துரைக்கும் பாங்கு அறிந்து மகிழத் தக்கது. அது சோலைகளும் பொய்கைகளும் சூழ்ந்த வளம்மிக்க ஊராக இன்றும் காட்சி அளிக்கிறது. கோயிலைச் சுற்றிலும் அகழி இருக்கிறது. அங்கு களங்கமில்லாதவைகளாகக் காட்சி அளிப்பவைகளுள்  நல்லவர்களது மனமும் ஒன்று. களங்கம் உடைய சந்திரன் , அரவு (பாம்பு) வந்து சூழும் போது மேலும் களங்கமாகத் தோற்றம் அளிப்பான் அல்லவா? ஆனால் இங்கோ வெள்ளை வெளேரென்று காட்சி அளிக்கிறானாம். அது தூய வெண்ணீற்றை நினைவு படுத்துவது போல் இருக்கிறதாம். வெண்ணீறு களங்கம் இல்லாதது. " சுத்தமதாவது நீறு " என்று  ஞான சம்பந்தரும்  பாடுவார்.    " பால் வெள்ளை நீறு" என்றும் சொல்வார்கள். அந்த ஒளியில் அங்கு இரவும் பகல் போல் தோற்றமளிக்கிறதாம். அது மட்டுமல்ல. பூக்களில் மகரந்தம் உண்ட வண்டுகளும் களங்கமற்றவை என்கிறார் சேக்கிழார் பெருமான்.

கதிரவன் உதயம் ஆனவுடன் பொய்கைகளில் இருக்கும் தாமரை மொட்டுக்கள் மலரும். அப்போது அவற்றோடு ஒட்டிக் கொண்டிருந்த தண்ணீர் விடுபட்டாலும் ஈரத்தன்மை சிறிது நேரம் இருக்கும். மலரும் மகிழ்ச்சியில் அவை ஆனந்தக் கண்ணீர் அரும்புவதுபோல் இருக்கும் தானே ! ஆனால் அதைக்காட்டிலும் கண்ணீர் வடிப்பன எவை தெரியுமா ? தேவாதிதேவனாகிய சிவபெருமானின் புகழ் பாடும் அமுத கானங்களை ( பாடல்களை ) க் கேட்டு நெக்குருகும் பக்தர்களது முகமாகிய தாமரைகளின் கண்களே.அவற்றில்  இருந்து பெருகும் ஆனந்த நீர் அரும்பும் என்கிறது பெரிய புராணம்.

வண்டு பாடப் புனல் தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன

கொண்ட வாச முகை அவிழ்ந்த குளிர் பங்கயங்களே அல்ல;                                                                                                  
அண்டர் பெருமான் திருப்பாட்டின் அமுதம் பெருகச் செவி மடுக்கும்                    

 தொண்டர் வதன பங்கயமும் துளித்த கண்ணீர் அரும்புமால்.                                                                                                              
என்பது அந்த நயம் மிக்க பாடல்.

பொய்கையில் மலரும் தாமரையும் நீர் துளிக்கும். தொண்டர்களின் முகமாகிய தாமரையும் பெருமான் புகழ் கேட்ட ஆனந்தத்தில் கண்ணீர்  பெருக்கும். திருப்புகலூரிலோ  பங்கயங்கள் நீர் அரும்பாமல், தொண்டர் முகத்
தாமரைகளே கண்ணீர் பெருக்குவன என்பது மிக்க நயம் வாய்ந்தது.

இத் தெய்வத்தமிழைப் படிக்கும் நமக்கும் ஆனந்த நீர் அருவி கண்களிலிருந்து பெருகவேண்டும். அத்துணைச் சிறப்பு வாய்ந்தது தெய்வச் சேக்கிழாரது வாக்கு. 

Saturday, March 28, 2015

வினை நீக்கமும் இறை உணர்தலும்

" நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் " என்பது, திருநல்லூர் என்ற சிவ ஸ்தலத்தின் மீது திருநாவுக்கரசு நாயனார் அருளிய திருப்பதிகம் ஒன்றின் துவக்கம். இது, நினைதல்  உருகுதல் , நைதல் ஆகிய மூன்று நிலைகளைக் குறிப்பது. முதல் கட்டமாக இறைவனைப்பற்றிய நினைப்பு வர வேண்டும். அதன் பின்னர் அவனை எண்ணி எண்ணி உருக வேண்டும். மூன்றாவதாக, உருகி உருகி மனம் நைந்து குழைய வேண்டும். இது எல்லோருக்கும் சாத்தியமா என்று கேட்டால் இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.

ஒரு ஆப்த நண்பர்  " எனக்கு ஆழ்ந்த பக்தி ஏற்படுவதில்லை " என்றார். அவர் நாத்திகர் அல்ல. கோயில்களுக்குக் குடும்பத்துடன் செல்பவர் தான். ஆனால் அவரது ஆன்மீகப்பயணம் அதோடு முடிந்து விடும். நாம் ஏதாவது ஆன்மீக சிந்தனைகளைச் சொன்னால் கேட்கும் குணமும் அவருக்கு உண்டு. அதற்கு அடுத்தபடிக்குச் செல்ல முடியாமல் அத்துடன் நின்று விடுவார்.

நினைப்பு என்பது சிந்தையில் எற்படுவது.இறை சிந்தனையோ தானாகவே         ஏற்படுவதில்லை  .வீட்டில் உள்ளவர்களோ ,பிறரோ  சொல்லிக்கொடுத்து வருவதில்லை. அவர்களால் சொல்லத்தான் முடியுமே தவிர சிந்தையைத் திருத்தி ஆள முடியாது. ஆன்மீக ஈடுபாடு உள்ள ஒரு குடும்பத்திற்குள்  எல்லோருக்கும் ஒரே அளவிற்குத் தெய்வ சிந்தனை இருப்பதில்லை. ஒரு சிலர் அதில் நாட்டம் இல்லாமலே போய் விடுவதும் உண்டு.

 தெய்வத்தைக் காட்ட முடியுமா என்று கேட்பவர்களுக்கு விடையாக, " அவரவர்கள் உணரத்தான் முடியும் " என்று சமாதானம் சொல்கிறார்கள். அவ்வாறு உணருவது என்பது எல்லோருக்கும் சாத்தியமா? நூலறிவால் உணர முடியுமா? நூலின் பொருளை வரிக்கு வரி உரை நூல்களின் துணை கொண்டு படிப்பதால் அறிய முடியுமா? முற்றோதுதல் செய்தால் உணர முடியுமா? அப்படியே செய்தாலும் இன்னும் எத்தனை மணித்துளிக்கு நிறைவு பெறும் என்றுதானே மனம் கணக்குப் போடுகிறது! பாடலின் கருத்தையே ஏற்க முனையாத மனம் எவ்வாறு அதன் உண்மைப் பொருளாக விளங்கும் இறைவனை உணரப்போகிறது?  அப்படி உணரத்துவங்கிவிட்டால் சிவப் பிரகாச சுவாமிகள் சொல்வது போல் கண்கள் நீர் பெருக்கி, மேற்கொண்டு படிக்க முடியாமல் தடை செய்யும் அல்லவா? இந்நிலை ஏற்படாதவரை நினைப்பதோ, உருகுவதோ நைவதோ எங்ஙனம் சாத்தியம் ஆகும் ?

நம்மால் உயரிய நிலையை எட்ட முடியாதபோது நம் சிந்தை எவ்வாறு திருத்தம் பெறும்? இதற்கு விடையாகத் திருவாசகம், " சிந்தையைத் திருத்தி ஆண்ட சிவலோகா " என்பதால் இறைவனது துணையும் அருளும் இல்லாமல் சிந்தை திருத்தம் பெறாது என்பது வெளிப்படை. இதற்குத் தடையாக இருப்பது அவரவர்களது வினை. யாராக இருந்தாலும் அவரவர் செய்த நல்வினை- தீவினைப் பயனை அனுபவித்தே தீர வேண்டும். " அவ்வினைக்கு இவ்வினையாம் " " முந்திச் செய்வினை இம்மைக் கண் நலிய " என்ற தேவார வரிகள் இதையே காட்டுகின்றன.

வினை முழுவதும் நீங்கியவர்களுக்குத் தான் இறையருள் கிட்டுமா எனக் கேட்கலாம். பல்பிறவி எடுத்து, ஓரளவு வினை எஞ்சி நிற்பவர்கள் பால் இரக்கம் ஏற்பட்டு, அவர்களது சிந்தையைத் தாயைக் காட்டிலும் தயை உடைய பரமன் திருக்கண் நோக்கம் செய்கிறான். ஆன்மீக வாதிகளின் முதல் படி இதுவே. அந்தப் பேரருளைத் தந்த இறைவனை மீண்டும் நினைக்காமல் நம் மனம் அதோடு நின்று விடுகிறது. எதை  எதையோ சிந்திக்கத் தொடங்கி விடுகிறது. ஆழ்ந்த பக்தி ஏற்படாததன் முதற் காரணம் இதுதான்.

திருப்பெருந்துறையில் தனக்குத் தரிசனம் தந்த இறைவனை மீண்டும் காண வேண்டி மாணிக்க வாசகர் விண்ணப்பம் செய்கிறார். அவனை எண்ணி எண்ணிக்  கரையவில்லையே, உருகவில்லையே, அவன் புகழ் பாட வில்லையே, பாடி ஆடிக் கூத்து ஆட வில்லையே, பன் மலர்களை  அவனடிக்கு அர்ப்பணிக்க வில்லையே, அவனது நாமம் சொல்வோரும் கசிந்து உருகுவோரும்  எத்தனையோ அடியார் இருக்கும் போது தன்னை ஆட்கொண்ட பெருங்கருணையை எண்ணி,நையாமல் , விழி நீர் பெருக்காமல் மரக் கண் உடையவனாகியும், சிவநாமங்களைக் கேளாத இரும்பு போன்ற செவியனாயும் அலறும் எனக்கு அருள் செய்தமைக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் "  என அகம் குழைந்து பாடுகிறார்.

புராணங்களையும் பிற அற நூல்களையும்  படிப்பது என்பது நல்ல அடித்தளம் எற்படுத்துவது போன்றது. பள்ளங்களைச் சமன் செய்து மண்ணாலும் கல்லாலும் நிரப்புவது போன்றது. ஆனால் அதுவே, பயணம் செய்வதற்கு ஏற்றதாகி விடாது அல்லவா? அதற்கு மேல் செம்மண், ஜல்லி, தார் போன்ற பொருள்களை இட்டு ஏற்றதாகச் செய்வது போல நாமும் முதல் கட்டத்திலேயே நின்று விடக்கூடாது. மணி வாசகர் சொல்வது போல் நாம் அரிய வாய்ப்பை நழுவ விடலாகாது. பின்னால் பார்த்துக்கொள்வோம் என்று தாமதித்தால் அந்த அருள் மீண்டும் கிடைக்குமா என்று சொல்ல முடியாது  அவனது பாத மலர்களை விடாது பற்றினால், அடுத்த இரு நிலைகளும் வினை நீக்கம் பெற்றுப் பிறவா நிலைக்குக் கொண்டு  சென்று விடும்.அதனால் தான் இம்மூன்று நிலைகளையும் குறிப்பிட்ட நாவுக்கரசர், " நில்லாமே தீ வினைகள் நீங்க வைத்தார் " என்று அடுத்த வரியில் விளக்கமாக அருளிச் செய்கிறார்.

உணர்ந்து ஓதுதல் என்பது பாட்டின் பொருளை உணர்ந்து ஓதுதல் அன்று. பாட்டின் பேரின்பப்  பொருளாகிய பரமனை உணர்ந்து பாடுதலே ஆகும். " ஓதி யாரும் அறிவார் இல்லை " " யார் உன்னை அறியகிற்பாரே "  " இவர் தன்மை அறிவார் ஆர் " " சான்று காட்டுதற்கு அரியானை "  "இன்ன தன்மையன் என்று அறி வொண்ணா எம்மான் " முதலிய திருமுறை வரிகள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. எல்லா உலகத்து உயிர்களுக்கும் இது பொருந்தும். சந்திர சேகரனும் கங்காதரனுமாகிய சிவ பரஞ்சுடரின் குஞ்சித பாத மலர்களை இடையறாது நினைந்து ,உருகி, நைவதே முழுவதுமாக மலநீக்கம் பெற்றுச்  சிவானந்தம் பெற ஒரே வழி. : "நையாத மனத்தினனை நைவிப்பான்  " என்று திருவிசைப்பாவும் இந்த சைவ சித்தாந்த சாரத்தையே காட்டுகிறது.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவுலாவிய நீர் மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.                                                                                                        
   ,                                                                              - பெரிய புராணம் 

Tuesday, March 10, 2015

முக்கண்ணனே முழு முதற் கடவுள்

உலக வாழ்க்கையில் எப்பொழுதும் இளமையும்,செல்வமும்,இன்பமும் நீங்காது இருக்கவேண்டும் என்பது நடக்க முடியாதது என்றாலும் இவை அனைத்தும் நிரந்தரமானவை என்ற  நினைப்பு மட்டும் அகல மறுக்கிறது. இது மாயை மட்டுமல்ல. விந்தையும் கூட! உடலை வாழ் நாள் முழுவதும் பயனில்லாமல் செய்து, நினைக்கவும் கொடியதான இளமை நீக்கம் பெற்று, மூப்பு தொடருகிறது. அதைவிடக் கொடியது திடீரென்று மரணம் சம்பவிப்பது. இதைக் கருதாமல், எனது என்ற எண்ணத்தில் மிதக்கிறோம். இவ்வாழ்க்கையில் என்ன செய்தோம் என்றோ , என்ன செய்யப்போகிறோம் என்றோ ஒரு கணமாவது சிந்திக்கிறோமா? இதைத்தான் பட்டினத்து அடிகள்,
" செய்தன சிலவே செய்வன சிலவே செய்யா நிற்பன  சிலவே
  அவற்றிடை  நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே 
   ஒன்றிலும் படாதன சிலவே " 
என்று மிகத் தெளிவாகக் கோயில் நான் மணி மாலை என்ற பிரபந்தத்தில் குறிப்பிடுகிறார். இது பதினோராந் திருமுறையில் காணப்படும் நூல். இதில் , " அருள் சுரந்து அளிக்கும் அற்புதக் கூத்தன்" என்று நடராஜப் பெருமானை வருணிக்கிறார் அடிகள். இவரால்  "  தெய்வ  வேதியர்  தில்லை மூதூர் ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும் கடவுள் "  என்று பெருமான் புகழ் பேசப் படுகிறது.

ஆடல் வல்லானது அற்புதக் கூத்தை பட்டினத்தடிகள் வருணிப்பது இந்நூலின் மிக அழகான பகுதி.அது அதிசயிக்க வல்லதாக உள்ளது என வியப்பார் பட்டினத்துப் பிள்ளையார். " ஏவரும் காண ஆடுதி அது எனக்கு அதிசயம் விளைக்கும் "  என்பது அவ்வருணனை. ஐம்புலன்களால் ஆட்பட்ட அடியேனையும் ஒரு பொருளாக நயந்து தனது நெஞ்சத்தில் நின்ற கருணையை எண்ணி எண்ணி நெகிழும்போது, அந்த ஆடற் கோலத்தை நமக்கும் காட்டுகிறார் அடிகள்:
" தழைந்த நின் சடையும் செய்ய வாயும் 
மையமர் கண்டமும் நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்
 எடுத்த பாதமும் தடுத்த செங்கையும் புள்ளி ஆடையும்
 ஒள்ளிதின் விளங்க நாடகம் ஆடுதி நம்ப.."  என்ற வருணனை சிதம்பரேசனை நமக்கு முன்னே கொணர்ந்து காட்டுவதுபோல் இருக்கிறது.

மக்கள் வணங்கும் தெய்வங்கள் பலவாகும். கொடிய நஞ்சை உண்டும் சாவா மூவாச் சிங்கமெனத் திகழும் தேவாதி தேவனை, மகாதேவனைத் தொழாமல் மாளும் பிறரைத் தெய்வமாகச் சிலர் வணங்குகிறார்களே என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். மாந்தர்கள் அனைவரும் தங்களது  வைப்பாகக் கருதப்பட வேண்டியவன் சிவபெருமான். மறையோர்கள் தமதுஒரே கதி என நாள் தோறும் வழிபடப்பட வேண்டியவனும் அவனே என்பதை  இங்கு அவர் உணர்த்துகிறார். ஆதியும் அந்தமும் இல்லாத அவனை, " ஆக்கம் அளவு இறுதி இல்லாய் " என்கிறது திருவாசகம். பிறவாப் பெருமை வாய்ந்த கடவுளே பெரிய, உயர்ந்த, முழுமுதற்கடவுள். இக்கருத்தை  இளங்கோவடிகளும்              " பிறவா யாக்கைப் பெரியோன் " என்ற தொடரால் அறிவிக்கிறார். ஏனைய தெய்வங்கள்  பிறக்கும் இறக்கும் . " ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே" என்று அப்பர் பெருமான் அருளியதும் காண்க. ஆகவே பெருமான் ஆலாலம் உண்டிராவிட்டால் பிரமன்,மால் உள்ளிட்ட தேவர்கள் வீடுவர் என்று மாணிக்க வாசகரும் அருளியது இங்கு ஒப்பு நோக்கற்குரியது. நடராஜப் பெருமானின் பாத மலர்களை மாலவன்  காணமுடியவில்லை. முடிதேடிச் சென்ற பிரமனாலும் இயலவில்லை. இப்படி ஒப்புயர்வற்ற கடவுளை வணங்காது, கடல் விடமானது ,  யாவரையும் அழிப்பதற்காக எழுந்த அன்றே  மறைந்திருக்கக் கூடிய  தேவர்களைத் தெய்வமென வணங்குகின்றனரே எனப் பட்டினத்தடிகள் கோயில் நான் மணி மாலையில் அருளிச் செய்கிறார்:
வாழ்வாகவும் தங்கள் வைப்பாகவும் மறையோர் வணங்க  

ஆள்வாய் திருத்தில்லை அம்பலத்தாய் உன்னை அன்றி ஒன்றைத்                 

 தாழ்வார் அறியாச் சடுல நஞ்சு உண்டிலையாகில் அன்றே                                   

 மாள்வார் சிலரை அன்றோ தெய்வமாக வணங்குவதே.    
என்பது அவ்வினிய பாடல்.

Tuesday, February 10, 2015

மன்னி நிலாவிய மைந்தன்

தமிழ் மொழியானது தற்காலத்தில் ஏராளமான சொற்களை வழக்கொழிந்து நிற்கிறது. எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கையும்  பெருகி வருகிறது.இந்த நிலை நீடித்தால் என்ன  ஆகும் என்று கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை. பழந்தமிழ் நூல்களைக் கற்பார் இல்லாது போனால் நாளடைவில் எஞ்சியுள்ள சொற்களையும் மெதுவாக இழக்கும் அபாயம் நேரிடும். விஞ்ஞானப் பாடங்களுக்குத் தமிழில் பெயர் சூட்டும் ஆர்வம் உள்ளவர்கள் பழங்காலந்தொட்டே பழக்கத்தில் இருந்த சொற்களை ஏன் கைவிடுகிரார்களோ தெரியவில்லை.

நிலாவுதல் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இச்சொல்லுக்கு , உறைதல், விளங்குதல், பொலிதல், மேவுதல்,நீங்காது இடமாகக் கொள்ளல்,திகழ்தல்  என்று பல பொருள்கள் உண்டு. திருஞான சம்பந்தர் திருமருகல் என்ற தலத்தின் மீது பாடிய பதிகத்தில், " மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்" எனப் பாடுகிறார். இதேபோல், திருநெல்லிக்கா என்ற தலத்திலும்," நெல்லிக்காவுள் நிலாயவனே" என்பார்.  "  பெரும்பற்றப்புலியூர் சீர் நிலவிய திருநடம் " என்பது திருவிசைப்பா.

இனி, அடுத்ததாக, " மன்னுதல் " என்ற சொல்லைப் பார்ப்போம். இதற்கும் " நிலாவுதல் " என்ற சொல்லுக்கும் ஒரே பொருள் என்றுகூடக் கூறலாம். வாழ்த்துக் கூறும்போதும் இச் சொல் பயன் பட்டது. எடுத்துக் காட்டாக, சிவபெருமானுக்குத் திருப்பல்லாண்டு கூறும்போது, " மன்னுக தில்லை "  என்றே துவங்குகிறது. இறைவன் , அடியாரது சிந்தையைக் கோயிலாகக் கொண்டவன் என்பதைக்  குறிப்பிடுகையில், சிந்தையில் மன்னி நின்றான் என்று கூறக் காண்கிறோம்.

சிவ பரம்பொருள் ஒன்றே குறைவற்றும்,மலமற்றும் ,பிறவியற்றும் ஊழிதோறும் விளங்குவது. பசுக்களாகிய நாம் குறைவுடையவர்கள் தான். பசுபதியாகிய பரமன் ஒருவனே நிறைவானவன். அடியார்களும் எதாவது வகையில் குற்றம் புரியக் கூடும் என்பதால், "  குறையுடையார் குற்றம் ஓராய் "  என்று இறைவனிடம் நமக்காக வேண்டுகிறார் ஞானசம்பந்தர். முழுமுதற்கடவுள் ஆனதால், ஈறு இல்லாமலும், குற்றமற்ற அமுதாகவும் , சுடர்க் கொழுந்தாகவும்  பெருமான் மன்னுவதைத் திருவாசகமும் காட்டுகிறது.

" குறைவிலா நிறைவே; கோதிலா அமுதே; ஈறிலாக் கொழும் சுடர்க் குன்றே." என்பன அவ்வரிகள்

இறைவனை அகில உலகங்களுக்கும் அரசனாகவும், தேவர் உலகிற்கு மகா தேவனாகவும்,தேவர்  சிங்கமாகவும் கூறுதல் மரபு. இவ்வாறு விண்ணாளும் தேவர்க்கும் மேலாய வேதியனாகவும், மண்ணாளும் மன்னவர்க்கும் மாண்பாகவும்  நிற்கும்  பரம்பொருளை, வேதவுருவனாகவும் , வேதத்தின் மெய்ப்பொருளாகவும் மாணிக்கவாசகப் பெருமான் கூறுகையில்,
" மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்து என் மனத்திடை மன்னிய மன்னே." என்கிறார். இப்படிக் கூறுகையில் மன்னுதல் என்ற சொல் பயன் படுத்தப்படுவதைக் காணலாம்.

இறைவனே நம் மனத்தைக் கோவிலாகக் கொண்டுவிட்ட பிறகு அவனிடம் இனிமேலும் வேண்டுவதற்கு என்ன இருக்கிறது? அத்திருவருள் அமுதாகிய சிவானந்தத் தேன் , தடுப்பாகிய அணை எதுவும் இல்லாமல் சீறிப் பாய்வதைப் போல் சிந்தையில் பாய்ந்துவிட்ட பிறகும், எதைக் கேட்க முடியும்? சிந்தையைத் திருத்தி ஆண்ட சிவலோகன் , தனது  மனத்தில் மன்னி நிலாவிய மைந்தனாகத் திகழ்வதை , குருநாதர் வாக்கால் கேட்பதே பேரின்பம் அல்லவா?

 குறைவிலா நிறைவே; கோதிலா அமுதே; ஈறிலாக் கொழுஞ்  சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்து என் மனத்திடை மன்னிய மன்னே.
சிறைபெறா நீர் போல் சிந்தைவாய்ப் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே
இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே.
(இரத்தல் :- யாசித்தல் / வேண்டுதல்)

Wednesday, January 14, 2015

ஆகுதிப் புகை போகி

ஸ்ரீ கௌரி மாயூர நாதர் ஆலயம் 
சில பூங்காக்களில் தகவல் பலகை வைத்திருப்பார்கள். அதன் மூலம்  பயனுள்ள செய்திகளை  மக்களுக்குத் தெரிவிப்பார்கள். அவற்றுள் மூலிகைகள் பற்றிய விவரமும், எளிய உடற்பயிற்சிகள் பற்றிய பயனுள்ள குறிப்பும் , பழமொழிகளும் அடங்கும். நடை பயிற்சிக்காக வருவோரது கவனத்தை இப்படி ஈர்ப்பது பாராட்ட வேண்டியதுதான். ஆனால் நேற்று ஒரு பூங்காவில் இருந்த தகவல் பலகை அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் தருவதாக இருந்தது. போகி அன்று பிராணாயமம் செய்ய வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்தது. ஆண்டு முழுவதும் பிராணாயாமம் செய்யாதவர்களுக்கு இது அதிர்ச்சியைத் தரப்போவதில்லை. அதில் ஈடுபட்டு , அதனை நித்தியக்  கடமையாக இன்னமும் சிலர் செய்து வருகிறார்கள் அல்லவா? அவர்களுக்கு இது அதிர்ச்சித் தகவலாகவே இருக்கும். காரணம் அப்பலகையில் சொல்லப்படாவிட்டாலும், ஓரளவு அவர்களது கணிப்பை ஊகிக்க முடிகிறது.

பழையன கழித்தல் என்ற பெயரில் வீட்டில் இருக்கும் பழைய துணிகள், தேவையற்ற சாமான்கள் ஆகியவற்றை விடியற்காலையில் சிலர் எரிக்கிறார்கள் . அதனால் எங்கும் புகை மண்டலம் மூடி மூச்சுத் திணறலும் ஏற்படுவதுண்டு. ரப்பர்,பிளாஸ்டிக் ஆகியவற்றை எரிப்பதால் வெளியாகும் நச்சுப் புகையை சுவாசிப்பதால் உடலுக்குத் தீங்கு விளையக் கூடும் என்பது ஒரு பக்கம். பிராணாயாமம் செய்பவர்கள் இப்புகையை உள்ளுக்கு இழுத்து சில வினாடிகள் நிலை நிறுத்திப் பின்னர் வெளி விடுவதால் இவ்வாறு தகவல் எழுதி வைத்திருக்கலாம். மூச்சுப் பயிற்சியாக யோக அப்பியாசம் செய்பவர்கள் வேண்டுமானால் இவ்விதம் அதனைத் தவிர்க்க முடியும். அன்றாட கடமையாகக் கொண்டவர்கள் வெறும் மூச்சுப் பயிற்சியாக அதனை மேற்கொள்வதில்லை. அப்பொழுது மந்திர ஜபமும் மனத்தில் கூடவே செய்யப்படுகிறது. ஆகவே, மக்கள் நலம் வேண்டுவோர், முதலில் இவ்வாறு தேவையற்றவற்றை எரிப்பவர்களுக்குப் புரியுமாறு எடுத்துச் சொல்லி இத்தவறான செயலைத் தடுக்க முனைய வேண்டும்.

இப்பொழுது ஒரு கேள்வி எழக்கூடும். வேள்விப்புகையைப் பற்றியதே அது. இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்வதாக அமைந்த பாடலை நாம் சிந்திப்போமாக. இப்பாடல் மயிலாடுதுறை என்ற தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளியது.

முதலில் இத்தலத்துப் பெருமான் மீதான அடையாளம் சொல்லப்படுகிறது. வராக அவதாரம் எடுத்த திருமாலின் கொம்பினை மார்பில் பூண்டவன் .தாருகாவனத்து முனிவர்கள் தன்மீது ஏவிய பாம்பையும் ,புலியையும் அடக்கி அவற்றை முறையே அணிகலனாகவும்,உடையாகவும் ஏற்றவன். மூப்படையாதவன். பதினாறு வயது இளைஞனாக ,சதாசிவமூர்த்தம் கொண்டவன்.  பிரளய காலத்தில் பிரமனும்,மாலும்  தன்னோடு ஒடுங்குவதைக் காட்டும்படி,அவர்களது எலும்பை ஆபரணமாகக் கொண்டவன். இப்படித் துதிக்கிறார் சம்பந்தப்பெருமான்.

"ஏன எயிறு ,ஆடரவொடு , என்பு , வரி ஆமை , இவை பூண்டு இளைஞராய்க்
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனலாம் "    
( ஏனம்= பன்றி; அரவு= பாம்பு; வரி ஆமை= வரிகள் உள்ள ஓட்டை உடைய ஆமை.  கான = காட்டில் வாழும்; வரி நீடு உழுவை= வர்கள் உள்ள தோலுடைய புலி.  அதள்= புலித்    தோ லைக்  குறிப்பது ; காணி= இடம் .இங்கு இறைவன் விரும்பி உறையும் இத்தலத்தைக் குறிப்பது )

இத்தலத்து  வேதியர்கள் வேள்விகள் செய்வதால் புகை மேலெழும்புகிறது. அப்புகை இங்கேயே நின்று விடுவதில்லை. ஆகுதி செய்யப்படுவதால் மேலுலகத்தை நோக்கி எழும்புகிறது. அவ்வாறு சென்று தேவ லோகத்தில் உள்ள கற்பகச் சோலையைச் சென்று அடைகிறது.அங்குள்ள சோலைகளின் மீது அழுக்குப் படிவதுபோல அம்மரங்களை மூடுகிறது. இத்தகைய புகழ்மிக்க வேள்வியைச் செய்தவர்கள் " புகழ் வேதியர் "   என்று சம்பந்தரின் திருவாக்கால் சிறப்பிக்கப் படுகின்றனர்.
 
"ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி அழகார்
வானம் உறு சோலை மிசை மாசுபட மூசு மயிலாடுதுறையே. "

வேள்வியில் செய்யப்படும் புகைபோகி விண்ணுலகை அடைவதால் தேவர்கள் மகிழ்வுற்று மழையையும் பிற செல்வங்களையும் நமக்கு வழங்குகிறார்கள். அவ்வாறு செய்துவந்தால் கோரிய பலன் கிடைப்பதோடு எல்லா உயிர்களும் நன்மை பெறுகின்றன. குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகையோ மேலெழும்பாது நம்மையே சுற்றிவந்து தீங்கு விளைவிக்கிறது. தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் புகையை உயரமான புகைபோக்கியின்  மூலம் வெளியேற்றுகிறார்கள். அப்படியும் அது சுற்றுச் சூழலை மாசு படுத்துகிறது. ஆனால் ஆகுதியோ, " புகை போகி " யாக மாறி , தேவ லோகத்தை அடைகிறது. அதனால்தானோ என்னவோ பெரியோர்கள் மகர சங்கராந்திக்கு முதல் நாளைப் " போகி" ப் பண்டிகை என்று பெயரிட்டார்கள் போலத் தோன்றுகிறது. ஆனால் இப்பொழுதோ, அச்சொல்லில் வரும் " போ" என்பதை அழுத்தமாக (Bho) என்று ,  போகம் தருவது என்ற பொருளில் வழங்கப்படுகிறது. ஆனால் அதையே மென்மையாகப் ( Po ) "போ " என்று உச்சரித்தால் ஆகுதிப் புகை போகி விண்ணோரை மகிழச்செய்வதாகப் பொருள் தொனித்து,  இப்பண்டிகைக்கு மேலும் மேன்மை சேர்க்கிறது.   

Friday, December 26, 2014

நஞ்சுண்ட தெய்வ நாயகன்

பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்துள்ள பிரபந்தங்களுள் ,பதினொன்றாம் திருமுறையில் உள்ள  " கோயில் நான்மணி மாலை "  என்பதும் ஒன்று. கோயில் என்பது சிதம்பரத்தைக் குறிக்கும். தில்லைச் சிற்றம்பலத்தே  நடம் புரியும் ஆனந்த சபேசனைப் பேசாத  நாட்கள் எல்லாம் பிறவாத நாட்களே என்பார் அப்பர் பெருமான். அவன் புகழை எப்படிப் பேசுவது? அது அளவிடமுடியாத, எவராலும் சொல்லமுடியாத புகழ் அல்லவா  என்றுகூடத் தோன்றும். அவனோ தோன்றாப் பெருமையன். வானோர்க்கும் அரியவன். மறைகளுக்கும் எட்டாதவன். அவன் புகழைப் பாடவோ பேசவோ புண்ணியம் வாய்ந்தவர்கள் உண்மை அடியார்கள் அல்லவா? அவர்கள் வாய் மூலமாவது ஒருசில புகழையாவது நாம் கேட்டு உய்யலாம். அது நமது பாவ வினைகளை ஓடச் செய்யும் சுலபமான வழிதானே! இதைத்தான் பட்டினத்தாரும், " வினை கெடக் கேட்பது நின் பெருங் கீர்த்தி"  என்றார்.

மனித உடல் அன்றாடும் பாவக் குப்பைகளை சேர்க்க வல்லது. இதற்குக் " குப்பாயம் " என்ற பெயர் திருவாசகத்தில் காணப்படுகிறது. ஒழுக்கமின்மை, பொய், சூது , கடும் பிணிகள் ஆகியவற்றை ஏற்றி வினையாகிய மீகாமன் , கலத்தைச்  செலுத்தும்போது, புலன்களாகிய சுறா மீன்கள் அதனைத் தாக்குகின்றன. பிறவியாகிய பெரும் கடலில் அதனைக் கொண்டு தள்ளத் துவங்குகின்றன. குடும்பம் என்ற நெடும் கல் விழுந்து அக்கலத்தின் கூம்பு முறிகிறது. உணர்வுகளாகிய பாய்மரம் கிழித்து எறியப்படுகிறது. கலமானது தலைகுப்புற விழ ஆயத்தமாகும்போது, " தெய்வ நாயகமே, தும்பை மாலையை விரும்பிச் சூடிய பன்னகாபரணா , தில்லை அம்பலவாணா , உனது அருளாகிய கயிற்றைப் பூட்டி , இக்கலம் கவிழாமல் காத்து அருள்வாயாக " என்று மனதாரப் பிரார்த்தனை செய்கிறார்  பட்டினத்து அடிகள்.

பெருமானது புகழ் எப்படிப்பட்டது? பட்டினத்தார் அருளுவதைக் கேட்போம்: "  எல்லா சராசரங்களும் உன்னிடத்துத் தோன்றி உன்னிடத்தில் அடங்குவன. ஆனால் நீயோ ஒன்றினும் அடங்காதவன். தோன்றும் பொருள் அனைத்திலும் நீயே நீக்கமற நிற்கின்றாய். நின்பால் எனக்கு அன்பு பெறுவதற்கு நீயே அருளல் வேண்டும். உன் அருட் செல்வம் கிடைத்துவிட்டால் வேறு எனக்கு என்ன வேண்டும்? நின் தெய்வக்கூத்தையும், எடுத்த பொற்பாதத்தையும் கண்ட கண்களுக்கு வேறு ஒரு பேறு  உளதோ? உன்னை நினைப்பதே சிறந்த தவம். { " தில்லை நகரில் செம்பொன் அம்பலம் மேவிய சிவனை நினைக்கும் தவம் சதுராவதே." }

எனினும் ,எளியேனது சிந்தையில் தேவரீர் தோற்றுவித்தபடி , " நான் முகனின் தந்தையாம் திருமாலுக்குச் சக்கரம் கொடுத்ததையும், குபேரனுக்குச் சங்கநிதியையும்,பதும நிதியையும் கொடுத்த வள்ளன்மையையும், மார்க்கண்டனுக்காகக் காலால் காலனைக் கடந்ததையும், உலகம் யாவற்றையும் ஆல நஞ்சு அழிக்க வந்தபோது, அதனை அமுதாக உண்டு காத்த கருணையையும் ஒருநொடியில் மூன்று புரங்களையும் எரித்த வீரத்தையும் , தாருகா வன முனிவர்கள் ஏவிய யானையைப் போர்த்த பெருமையையும் , பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்த திருவிளையாடலையும் , கயிலையை எடுத்த அரக்கனது ஆணவத்தை அடக்கி அவனுக்கு இரங்கியதையும், தாதையின் தாளைத்தடிந்த வேதியச் சிறுவனுக்கு அருளி, அவனுக்குச் சண்டீச பதம் தந்ததையும், சிறுத் தொண்டர் மனையில் உண்டு பேரருள் செய்ததையும்,வேதாரண்யத்தில் விளக்கைத் தூண்டிய எலியை அரசனாக்கிய கருணையையும், கங்கையும் பாம்பும் செஞ்சடையில் பகைதீருமாறு  ஒருசேர வைத்த பண்பையும் மலையான் மகளுக்குப் பாகம் ஈந்த பெருமையையும் , தில்லையில் " அம்பலத்து ஆடும் நாடகத்தையும்  "  போற்றுவதற்கு அடியேனுக்கு ஆற்றல் இல்லை . என்றாலும் ஆசையால் இவ்வாறு போற்ற எண்ணினேன். " என்கிறார் அடிகள்.

இத்தனை பெருமையும் ,கருணையும் வாய்ந்த ஒப்பற்ற கடவுளைத் தொழாது வேறு கடவுளர்களைத் தொழுவோரும் உளரே என்கிறார் அவர். அப்படிச் சொல்ல காரணம் இல்லாமல் இல்லை. ஆல நஞ்சு எழுந்தபோது எந்தத்தேவரும் அதனை எதிர்க்கவோ, பிறரைக் காக்கவோ முடியாதபோது, கயிலை நாயகனையே சரண் அடைந்தனர். அவ்வாறு நஞ்சுண்டு அவர்கள் காக்கப்பட்டிராவிட்டால் அப்போதே மாண்டிருப்பார்கள் அல்லவா? ஆகவே, கருணைக்கடலான நீல கண்டனைத் தொழுவதே நன்றியுடையவர்க்கு அடையாளம்.  மறைகளின் பிறப்பிடமாகவும், மறையோர்கள் தங்கள் கதி எனத் தொழப்படுவனுமான தில்லைக் கூத்தனை வணங்குவதே முறையாகும் என்று நம்மை எல்லாம் நல்வழிப்படுத்துவார்  பட்டினத்துப் பிள்ளையார்.

வாழ்வாகவும் தங்கள் வைப்பாகவும் மறையோர் வணங்க
ஆள்வாய் திருத்தில்லை அம்பலத்தாய் உன்னை அன்றி ஒன்றைத்
தாழ்வார் அறியாச் சடில நஞ்சுண்டிலை ஆகில் அன்றே
மாள்வர் சிலரையன்றோ  தெய்வமாக வணங்குவதே.
   

Saturday, December 13, 2014

மாணிக்க வாசகர் கண்ட அதிசயம்

உலகில் இறைவனைப்பற்றிய சிந்தனை இல்லாதவன் வறியவன் ஆகிறான். ஏழ்மையன் ஆகிறான். இந்த ஏழைமை எதனால் வருகிறது என்பதை இவ்வாறு நமக்கு மாணிக்க வாசகப் பெருமான் அழகாக விளக்குகிறார்.  நாமோ செல்வம் இல்லாதவன் மட்டுமே ஏழை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதனால்தான் ,திருஞான சம்பந்தரும் ,"செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே" என்று அருளினார். ஏழைமை என்பதற்கு அறியாமை என்று பொருள் கொள்வோரும் உளர். சிவபெருமானைப் பற்றிய எண்ணம் முதலில் அவன் அருளாலே நமக்கு ஏற்படவேண்டும். அதிலும் அவனது பஞ்சாக்ஷரத்தை எண்ணி எண்ணி அனுதினமும் ஜபம் செய்ய வேண்டும்.

வேதம் நான்கில் நடுநாயகமாய் , மெய்ப்பொருளாய், எல்லாத் தீங்கையும் நீக்கும் அரு மருந்தாய், பந்தபாசம் அறுக்க வல்லதாய், இயமன் தூதர்களையும் நெருங்க விடாமல் செய்வதாய் விளங்கும் சிவ பஞ்சாக்ஷரத்தை ஜபிக்க நமக்கு நல்வினைப்பயன் இருக்க வேண்டும். அத்தகைய பேறு தனக்கு இல்லையே என்று உருகுவார்  மணிவாசகர்.

" எண்ணிலேன் திருநாம அஞ்சு எழுத்தும்  என் ஏழைமை அதனாலே "  என்பது அவ்வுயர்ந்த வரிகள்

கலைகளைக் கற்பவர்கள் எல்லோரும் ஞானிகள் ஆகிவிட மாட்டார்கள். தாம் கற்ற அக்கலைகளை  சிவார்ப்பணமாகச் செய்வோரே உண்மை ஞானிகள்.
" கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே; கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே." என்பது அப்பர் வாக்கு.

ஆகவே கலைகளைக் கற்ற சிவ ஞானிகள் பால் அணுகினால் நமக்கும் அந்த ஞானிகளின்  அருள் கிடைக்கும்.  அதற்கு நாம் நல்வினை செய்திருக்க வேண்டும் அல்லவா? இதைத்தான்,

" நண்ணிலேன் கலை ஞானிகள்  தம்மொடு நல்வினை நயவாதே " என்ற திருவாசக வரிகள் இந்தக் கருத்தை நமக்கு அறிவிக்கின்றன.

உலகத்து உயிர்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் உழல்பவை. உலக வாழ்க்கை முடிந்ததும் மண்ணோடு மண்ணாக ஆகும் தன்மை உடையவை. மீண்டும் பிறவா நெறி  தர வல்ல கடவுளை சிந்திக்காமலும், கலைஞானிகளைச் சென்று அடையாமலும் வீணே காலத்தைக் கழிப்பவை.  கடவுள் அருள் இருந்தால் மட்டுமே கரை ஏறக்கூடியவை. நமக்கும் அந்த அருள் கிடைக்குமா என்று ஒவ்வொரு நாளும் ஏங்குவோருக்கு நிச்சயம் சிவனருள் கிட்டும். பிறவிப் பிணி தீரும். இப்படி ஒன்றுக்கும் பற்றாத நமக்கும் அருள் வழங்கத் தயாராக இருப்பது அவனது வற்றாத மாப்பெருங் கருணையை அல்லவா காட்டுகிறது! இதை விட அதிசயம் ஒன்று இருக்க முடியுமா?

கருணைக் கடலான கலாதரன் தன்னை ஆட்கொண்டதோடு, தனது உயர்ந்த பழைய அடியார் கூட்டத்தோடு சேர்த்து வைத்தது அதை விட அற்புதம் தானே என்று நெகிழ்கிறார் குருநாதர்.

" மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை
அண்ணல் ஆண்டு தன்  அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே."

என்ற திருவாசக வரிகள் கல் நெஞ்சையும் உருக்குவதாக உள்ளன.

முழுப்பாடல் இதோ:
" எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும்  என் ஏழைமை அதனாலே
நண்ணிலேன் கலை ஞானிகள்  தம்மொடு நல்வினை நயவாதே
மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை
அண்ணல்  ஆண்டு தன்  அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே."