Saturday, May 30, 2015

சிவஞான இன்னமுதம்

பிறப்பும் இறப்பும் இல்லாப் பெரியோன் என்று  இலக்கியங்களும் புராணங்களும் சிவபெருமானைத் துதிக்கின்றன. அதனால் தான் சுவாமியை முழுமுதல் கடவுள் என்கிறோம்.      " முழுதுமாய் வந்து " தன்  மனத்தில் குடிகொண்டவன் பெருமான் என்கிறார் மாணிக்கவாசகர்.  ஆனால் அடியவர்களுக்காக எந்தக் கோலமும் எவ்வுருவமும் ஏற்கின்றான் அவன். அந்தணனாய் வந்து ஆண்டுகொண்ட அப்பெருமானே, வேடனாகவும், தாயுமானவனாகவும், பன்றிகளுக்குப் பால் கொடுக்கும் தாய்ப் பன்றியாகவும் , மாலயனுக்கும் அறிய முடியாத தீப் பிழம்பாகவும்  தோன்றி அருள் செய்ததாகப் புராணங்கள் வாயிலாக அறிகிறோம். இப்படி எளியவனாகவும் அரியவனாகவும் விளங்கும் பரம்பொருளை , " யாவரும் அறிவரியாய் எமக்கு எளியாய் "  எனத்  திருவாசகம் போற்றுகிறது. இதையே அப்பரும், "  காண்டற்கு அரிய கடவுள் கண்டாய்; கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் " என்பார்.

சிந்தையில் உதித்த ஒரு எண்ணத்தை இங்கு பகிர்வோம். பால் கொடுத்தபின் குழந்தைக்கு அப்பால் புரை ஏறாதவாறு தாய்மார்கள் அக்குழந்தையின் முதுகில் தட்டுவதைப் பார்த்திருக்கிறோம். நாள் பூராகவும் இதுபோல் எத்தனை தட்டுக்களை அக்குழந்தை முதுகில் வாங்குமோ தெரியாது. மதுரையில்  வந்தி என்ற அடியாள் தந்த பிட்டைக் கூலியாக ஏற்று , மண் சுமந்தபிறகு அம்மண்ணைப் பெருக்கெடுத்து ஓடும் வைகைக் கரையில் கொட்டாமல் விளையாடிக் கொண்டிருந்த பெருமானைப் பாண்டியன் சினத்துடன் தன்  கைப் பிரம்பால் ஒரு தட்டுத் தட்டினான்.( அடித்தான் என்று எழுத மனம் வரவில்லை). எல்லா உலகமும் அவன் வடிவே ஆதலால் அப்படித் தட்டியது, எல்லா உலகத்து  உயிர்கள் மேலும் விழுந்தது. இப்படி ஒரு தட்டு தட்டியதற்கே அனைத்து உயிர்களும் அடி வாங்கியபோது, ஒரு தாயாரிடம் தோன்றி  பலமுறை முதுகில் தட்டு வாங்கினால் எல்லா உயிர்களும் பலமுறை அடிபடுமே என்ற பரம கருணையினால்  தானோ என்னவோ அவன் யாரிடத்தும் பிறக்கவில்லை போலத் தோன்றுகிறது. இது முழுவதும் கற்பனையாகத் தோன்றலாம். உண்மையைச் சொல்லப்போனால் ஆராய்ச்சி எதுவும் செய்யாமலிருக்கும் போது தினசரி தியானத்தின் பொழுது பெருமான் அறிவுறுத்தும் பலவற்றில் இதுவும் ஒன்று.

ஞானம் என்பது படிப்பதாலோ, கேட்பதாலோ அனுபவத்தாலோ வருவதைக் காட்டிலும் பெரும்பகுதி இறைவன் அருளால் கைவரப் பெறுவது என்பதை நாம் உணர வேண்டும். ஞானிகளில் ஒரு சிலரே இறைவனை ஓரளவாவது அறிவர் " ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்" என்பார் அப்பர் பெருமான்.  ஞானிகளுக்கே இந்நிலை என்றால் நம்மவர்கள் சிந்திப்பதோ ஆராய்வதோ எப்படி சாத்தியமாகும்?  ஞானத்திற்கெல்லாம் இருப்பிடமாகவும் ஞான மயமாகவும் திகழும் ஈசனோ எவரிடத்தும் அந்த ஞானத்தைக் கல்லாமலேயே பிறருக்கு உபதேசிப்பவன். " கலைஞானம் கல்லாமே கற்பித்தானை " என்பது தேவாரம்.

உலகம் உய்ய வேண்டி ஞானசம்பந்தக் குழந்தைக்குத் தனது இணைபிரியா ஜகன்மாதாவான  அம்பிகையின் மூலம் சிவஞானத்தைத் தந்து அருளினான். அதை, " சிவஞானத்து இன்னமுது" என்றார் சேக்கிழார். அப்போது அக்குழந்தைக்கு எல்லாக் கலை ஞானமும் ஓதாமலேயே வந்து அடைந்தது. அதனைப் பெரிய புராணம் விவரிப்பதை இங்கு காண்போம்:

மூன்று வயதுக் குழந்தை செய்த தவம் தான் என்ன? அக்குழந்தையின் தந்தையான சிவபாத இருதையர் செய்த தவம் அல்லவா சம்பந்தரைத் தோற்றுவித்தது? ஆனால் சேக்கிழார் இங்கு அக்குழந்தையைத் " தவ முதல்வர் " என்று வாயாரப் புகழ்கிறார். எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்கமுடியாத பேறு  அல்லவா இந்தப் பாலகனுக்குக் கிடைத்திருக்கிறது! அக்குழந்தை செய்த தவம் தான் என்ன என்று நமது அறிவுக்கு எட்டவில்லை அல்லவா? அதனால் தான் நாம் சொல்லிக் கொள்கிறோமே, ஆறு அறிவு என்று: அது வேறு; ஞானம் வேறு. ஞானிகளுக்கே விளங்காத ஒப்பற்ற தவம் அது. அதிலும் முதல்வராகத் திகழப் போகும் அச்சிறுவனை இதைக் காட்டிலும் வேறு எப்படி அழைப்பது?

பெற்ற ஞானமோ  சிவஞானம். ஆகவே பெயரும் சிவஞானசம்பந்தர் என்று ஆயிற்று. அந்த ஞானம் வந்தபின்னர் சிவனது திருவடிகளை மட்டுமே தியானிக்கும் ஞானம் மேலோங்கியதால் அதனை " சிவனடியே சிந்திக்கும் திருப் பெருகு சிவஞானம்" என்றார் தெய்வச் சேக்கிழார்  . அது கைவந்தவர்களுக்கு மீண்டும் பிறப்பு எது? பிறவி அறுக்கும் மருந்து ஆகிவிட்ட ஞானம் ஆனபடியால், அதனை, " பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் " என்றார். அந்த ஞானத்திற்கு ஒப்போ அதைவிட உயர்வோ கிடையாது என்பதை " உவமை இல்லாக் கலைஞானம்" என்றார். நம்மில் சிலர் கடவுளை உணர்ந்து விட முடியும் என்று பேசுகிறார்கள் அல்லவா?  ஆனால் உணர்வுக்கும் அரிய பொருளே என்று மணிவாசகர் கூறியதுபோல் உணர்வுக்குள் அடக்க முடியாத இறைவனை, " உணர்வரிய மெய்ஞ்ஞானம் " மட்டுமே அடையாளம் காட்டும். இவை அனைத்தையும் சீர்காழிக் குளக் கரையில் சிவஞானப் பால் உண்ட சம்பந்தப் பெருமான் பெற்றார் என்ற பெரிய புராண  வரிகள் இன்புறத்தக்கன.

சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவம் அதனை அற  மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமை இலாக் கலைஞானம்  உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர்  தாம் உணர்ந்தார் அந்நிலையில்

என்பன தெய்வச் சேக்கிழாரின் அற்புத வருணனை.

Wednesday, May 20, 2015

திருமுறைகளில் ஆர்வம் ஏற்படுத்துவது எப்படி ?

இந்தத் தலைமுறையைச்  சேர்ந்த ஒரு பையன் கேட்டான்," எனக்குத் தேவாரம்,திருவாசகம், திருமந்திரம் ஆகிய நூல்களைப் படிக்க ஆவலாக  இருக்கிறது. அதெல்லாம் எனக்குப் புரியுமா , அப்புத்தகங்களை வாங்கி வைத்துக் கொண்டு நானாகவே படித்துத் தெரிந்து கொள்ள முடியுமா" என்று அவன் கேட்டபோது அவனது ஆர்வத்தை விட அவனது நிர்மலமான சிந்தனையைப்  போற்றத் தோன்றியது.  இதுபோன்ற சந்தர்பங்களில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்துவதே முக்கியம். அதற்கான வழி  முறைகளை நாம் சிந்திக்க வேண்டும்.

ஒரு  செய்யுளைப்  பொருள் அறிந்து  படிக்கும்போது  அதன் சொற் சுவை , பொருட் சுவை புலப்படுவதால் இலக்கியத்தில் ஆர்வம் எற்படும். இவ்விரண்டு சுவைகளோடு பக்திச் சுவையையும் சேர்த்து வழங்குவன பக்தி இலக்கியங்கள். ஆகவே, இம்மூன்றும் ஒரே நேரத்தில் சென்று அடையும்படி தற்காலத்தவர்களுக்குக்  கற்பித்தால் அவர்கள் வரவேற்பார்கள்.

கற்பிக்கும் முறை எளிமையாக இருப்பது மிக மிக அவசியம். ஒவ்வொரு நூலுக்கும் ஓர் எளிமையான அறிமுகம் அவசியம். அதுவே,வாசகரைக்  கை பிடித்து நூல் முழுவதையும் காட்டுவதற்குத் துணையாக இருக்கும்.  எனவே புத்தகத்தில் காணப்படும் வரிசையில் படிப்பது எல்லா நூல்களுக்கும் பொருந்தாததுடன் தமிழறிவு சற்றுக் குறைந்தவர்களுக்குச்  சற்று அலுப்பு ஏற்படுத்த வகை செய்து  விடும்.  அப்புறம் அவர்கள் அந்நூலின் பக்கமே வரத் தயங்குவர். எனவே பள்ளிக்கூடங்களில் இவற்றில் மாணவர்களுக்கு நாட்டம் ஏற்படுத்தத் தவறிவிட்ட கல்விமுறையைக் குறை சொல்லிக் கொண்டு கையைக் கட்டியபடி உட்கார்ந்து இருப்பதை விட, மிகவும் எளிமையாகக் கற்பித்து ஆர்வம் ஏற்படுத்தும் முறையைக் கையாள வேண்டியிருக்கிறது.

சொல்லித்தரும் பாடலுக்குள் புகுவதன் முன் அதன் பொருளை எளிய முறையில் சொல்லிவிட்டு வரிக்கு வரி பொருள் சொல்வது ஒரு முறை. நிறைவாக முழுப் பாடலையும் சொல்லி விளக்குவது வழக்கம். இவ்வாறு காதால் கேட்கும்போதே, கேட்பவருக்கு அப்பாடல் எளிமையாகப் புரிவதோடு, அவ்வினிய வரிகள் ஆழமாகப் பதிந்து விடுகின்றன. அதோடு நின்றுவிடாமல், இதுபோன்ற எளிய பாடல்களை அந்த நூலில் தேடத் துவங்கி விடுவதும் இயல்பு. கடினமான பாடல்களை முதலிலேயே அறிமுகம் செய்து வைத்தால், இது நமக்கு ஒத்து வராது என்று விலகி விடுகின்றனர்.

சில பாடல்கள் முழுவதும் கடினமாகத் தோன்றலாம். ஓரளவு பொருள்  புரியும் பாடல்களும் உண்டு. நான்கு வரிகள் அமைந்த பாடல்களில் போதிய தமிழறிவு இல்லாதவர்கள் மூன்று வரிகளாவது புரியக் கூடிய  பாடல்களை முதலில் படிக்கத் தொடங்குவது எளிமையான வழி. அந்த வரிகளிலும் புராணச் செய்திகள் புதியதாகத் தோன்றக் கூடும். ஆகவே, வெளிப்படையாகப் பொருள் தரும் வரிகள் அப்படிப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்கும்.

எடுத்துக் காட்டாக ஒரு பாடலை இங்கு காண்போம்.   இது திருமூலர் அருளிய திருமந்திரத்தில் காணப்படுவது. அந்நூலில் உள்ள பல  பாடல்கள் சைவ நூல்களை பயின்றவர்களுக்குக்கூட முழுமையாக விளங்காமல் இருந்தாலும் , எளிமையாகப் புரியக்கூடிய பாடல்களும் இருப்பதால் அவற்றை முதலில் நுழை வாயிலாகக் கொண்டு பயிலுவதே சுலபமான வழி.அதன் மூலம் நூலில் ஆர்வம் ஏற்படுவதோடு, கடினமான பாடல்களும் ஓரளவு பொருள் விளங்க ஆரம்பிப்பதை அனுபவத்தால் அறியலாம்.

நாம் இப்போது சிந்திக்கும் பாடல் குருவின் மகிமையைக் குறிப்பது. சற்குருவை நேரில் காண்பதே நமக்குத் தெளிவைத் தந்து விடும் என்கிறார் திருமூலர். குருநாதர் நேரில் இல்லாதபோது அவரது நாமங்களே நமக்குத் துணையாக நின்று அத்தெளிவைத் தந்து விடும். குருநாதரது அருளுபதேசம் தெளிவைத் தரும்.  இவ்வளவு என்? குருநாதரைச்  சிந்தித்த மாத்திரத்திலேயே தெளிவு ஏற்பட்டு விடும் என்கிறது  இப்பாடல். குருவின் அருள் இருந்தால் இறைவனை எளிதில் அடையலாம். ஆகவே அஞ்ஞானம் தன்னை அகற்றும் ஞானமயமான    குருவைச்  சரண் அடைந்து தரிசனம் செய்வதும், அவரது திருவார்த்தையைக் கேட்பதும், அவரது திருநாமத்தை உச்சரிப்பதும், திருவுருவத்தைத் தரிசிப்பதும் தெளிவைத் தந்து விடும் என்பதை இப்பாடல் நமக்கு உணர்த்தி வழி காட்டுகிறது.

இப்பொழுது பாடலைக் காண்போம்:
                               தெளிவு குருவின் திருமேனி காண்டல்
                                தெளிவு குருவின் திருநாமம் செப்பல்  
                                தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
                                 தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
" குருவடிவாகிக் குவலயம் தன்னில் திருவடி வைத்துத் திறம் இது பொருள் என " என்று ஔவையின் விநாயகர் அகவலும் கூறுவதைக் காணும்போது, பக்குவம் வந்த உயிர்களுக்குக் குருவின் தரிசனமும்,உபதேசமும் கிடைப்பதை அறியலாம். எனவே,குருவருளும் திருவருளும் கிடைக்குமாறு நாம் பக்குவப்பட வேண்டியது அவசியமாகிறது. அதற்குத் துணையாகும் திருமுறைகளைப் பொருள் உணர்ந்து பாராயணம் செய்தால் இவ்விரண்டும் சித்திக்கும். 

Saturday, May 2, 2015

காஞ்சிப் பெரியவர்களும் தேவாரமும் - 3

தனது சிவிகையின் பின்னால்  வந்துகொண்டிருந்த  ஒதுவாமூர்த்திகளிடம்  விருத்தாசலம் எனப்படும் திருமுதுகுன்றத்தின் மீது பாடப்பெற்ற தேவாரப் பாடல் ஒன்றைக் காஞ்சிப் பெரியவர்கள்  பாடச் சொன்னபோது, பின்வரும் பாடலை  ஓதுவார் பாடியதாக அறிகிறோம். அப்பாடலை  அருளியவர் திருஞானசம்பந்தர்.

தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே
ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய்
ஓவா உவரி கொள்ள உயர்ந்தா யென்றேத்தி
மூவா முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றே.

எல்லாத்தேவர்களுக்கும் மேலான தேவன் பரமேச்வரன் ஆதலால் அவன் ஒருவனே தேவன் எனப்படுகிறான். " விண் ஆளும் தேவர்க்கும் மேலாய வேதியன் " என்று திருவாசகத்தில்  காண்கிறோம். ஆகவே மகாதேவன் எனப்படுகிறான். சிவாஷ்டோத்திரத்தில்  இரண்டு நாமாக்கள் , தேவாய நம:  மஹாதேவாய நம: என்று அடுத்தடுத்து வருவதைக் காணலாம்.  எல்லாத் தேவர்களுக்கும் எந்தையாகவும் விளங்குவதை, " எந்தை இவன் என்று இரவி முதலா  இறைஞ்சுவார் சிந்தையுள்ளே கோயிலாத் திகழ்வான் " என்று இதே பதிகத்தின் மற்றொரு பாடலில் வருகிறது. அதாவது சூரியன் முதலான தேவர்கள் சர்வேசுவரனைத் துதிக்கும்போது , அவர்களது சிந்தையைக் கோயில் எனக் கொண்டு விளங்குகிறான் என்பது கருத்து. எதனால் இப்படி அவனை உயர்ந்த தெய்வமாகத்  தேவர்கள் வழிபாடு செய்கிறார்கள் என்பதைத்  தெரிந்து கொள்ள வேண்டாமா?

சிவபெருமானை " ஆறு சமயங்களுக்கு ஒரு தலைவன்"  என்பார் சம்பந்தர் இதே தலத்தின் மீது பாடிய வேறோர் பதிகத்தில்.  இதையே அப்பர் பெருமானும், " தாமரையான் நான்முகனும்  தானே ஆகி, மிக்கது ஓர் தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலான் " என்று இத்தலத்தில் பாடியருளிய திருத்தாண்டகத்தில் போற்றுவதைக் காண்க.   தேவாசுரர்கள் மந்தர மலையை மத்தாகவும், வாசுகியை நாணாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் வெளிப்பட்டபோது எல்லாத் தேவர்களும் அதனை நெருங்கவே அஞ்சினர். " ஞாலம் உண்டானோடு நான்முகனும் நண்ணரிய "  ஆலாலம் அது என்கிறார் மாணிக்க வாசகர். எங்கு ஓடினாலும் தம்மை அவ்விடம் துரத்தக் கண்டு கயிலாய மலையை அடைந்து சரணடைந்தார்கள் தேவர்கள். அவர்களையும் எல்லா உலகங்களையும்  ஒப்பற்ற கருணையுடன்  அந்நஞ்சை அமுதமாக உண்டு காத்த கடவுள் ஆதலால் மகாதேவனாக , நீலகண்டப் பெருமான் எல்லா உலகங்களும் போற்றும் பெருங்கடவுளாகத் திகழ்கிறான். அனைவர்க்கும் அவன் ஒருவனே  பெரியவனானபடியால் தேவர்கள் அவனை வணங்கும்போது, " தேவா, சிறியோம் பிழையைப் பொறுப்பாய்  " என்கின்றனர்.  

நாம் அனைவரும் நாள் தோறும் பிழை செய்யும் சிறுமை உடையவர்கள். ஆகவே சிறியோம் என்று சொல்வது முற்றிலும் பொருத்தம். ஆனால் அடியவர்களின் பிழையை மன்னிப்பதே பெருமானின் குணம் என்பதை, " குற்றம் செய்யினும் குணம் எனக் கொள்ளும் கொள்கை " என்ற  சுந்தரர் வாக்கு இதைத் தெளிவு படுத்துகிறது. சுவாமிக்குக் " குற்றம் பொறுத்த நாதர் ( அபராத க்ஷமாபநேசுவரர் ) என்று கருப்பறியலூர் என்ற ஊரில் பெயர்வழங்கப்படுகிறது. " அம்பலத்து எம் பெரியோனே, சிறியேனை ஆட்கொண்ட பெய்  கழற்கீழ் விரையார்ந்த மலர் தூவேன் " என்று மாணிக்கவாசகப் பெருமான் அருளுவார்.

 ஆகவே, பிழை பொறுத்தலே பெரிய தெய்வத்திற்கு அடையாளம் என்பதை,      " பிழைத்தவை பொறுக்கை  எல்லாம் பெரியவர் கடமை " என்று அவரே மேலும் அருளுவதால் அறியலாம்.  மன்னித்து அருளும் குணம் , பெருமான் உயிர்கள்பால் வைத்த இரக்கத்தைக் காட்டுகிறது.  அடியார்களிடம் இக்கருணையை அதிகமாகக் காட்டுவதால்  " அருள் நிதி தர வரும் ஆனந்த மலை " என்று திருவாசகம் சுவாமியைப் போற்றுகிறது. கருணைக் கடலாக       ( " க்ருபா சமுத்ரமாக ")  அவரைப் போற்றும்போது, " அலைகடலே " என்று அழைக்கிறார் மணிவாசகர்.

திருமுதுகுன்றத்தில் தவம் செய்யும் முனிவர்கள் அரும்தவசிகள். தவ மேன்மையால் மூப்பு அடையாதவர்கள். எனவே, மூவா முனிவர் என்று சொல்லப்பட்டது. அவர்கள் முதுகுன்றப்பெருமானை வணங்கும்போது, அந்தத் தல மகிமையைக் கூறி வழிபடுகிறார்கள். ஊழிக் காலத்திலும் அலைகளை உடைய கடலால் இத்தலத்தை  எதுவும் செய்ய முடியவில்லை என்பது தல புராணம். பிரளயத்திலும் நீரில் மூழ்காமல் மிதந்த ஊர் என்பதை சம்பந்தரும், " செழு நிலத்தை மூட வந்த மூவாத முழங்கு ஒலி  நீர் கீழ் தாழ மேல் உயர்ந்த முது குன்றமே "  என்பார்.

இவ்வாறு எல்லோர்க்கும் பெரியோனாகவும் தேவர்களுக்குத் தேவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் திகழும் முழு முதற்கடவுளான பரமேசுவரனை  பக்திமலர் தூவி அடியார்கள் வழிபடுவதை சம்பந்தர் வாக்கால் அறிந்து இன்புறலாம்.

சிவனடியார்கள் சுவாமியை மலர்கள் கொண்டு அர்ச்சித்தும் ,அபிஷேகித்தும் "  சிவனே என்றும், வைத்த நிதியே என்றும் , மணியே என்றும் அவனைப் போற்றி ,  உடலை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் வருத்திக் கொண்டும் , சித்தம் நைந்து வழிபடுகிறார்கள் என்றும் இதே பதிகம் குறிப்பிடுகிறது.    
இவ்வளவு அற்புதமான பொருள் நிரம்பிய பொக்கிஷமாகத் திகழ்வது இத் தேவாரப் படல். அதனை அனுபவித்துப் பெருமான் அருளை நாமும் வேண்டுவோமாக. 

Sunday, April 26, 2015

காஞ்சிப் பெரியவர்களும் தேவாரமும் - 2

 காஞ்சி மாமுனிவர்,  சிவிகைக்குப் பின்னால் வந்த   ஒதுவாமூர்த்திகளைக்  காஞ்சி ஏகம்பம்,காஞ்சி மேல்தளி, விருத்தாசலம் ஆகிய தலங்களின் மீது அமைந்த தேவாரப் பாடல்களைப்  பாடச் சொல்லிக் கேட்டதில் முதலாவதாகக் கச்சி ஏகம்பத்தின் மீது பாடிய பாடலையும் அதன் பொருளையும் நம் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் பார்த்தோம். இனி, இரண்டாவதாகக் கச்சி மேற்றளி என்னும் தலத்தின் மீது அமைந்த பாடல் ஒன்றைக் காண்போம்.  

காஞ்சிபுரத்தின் மேற்குத் திசையில் அமைந்துள்ள தலம் மேற்றளி என்ற பாடல் பெற்ற தலம். இங்கு,சிவசாரூபம் பெற வேண்டித் திருமால் சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு. இங்கு தரிசிக்க வந்த ஞானசம்பந்தர் பதிகம் பாடியபோது அதைக் கேட்டுத் திருமால் உருகியதால் சுவாமிக்கு ஓத உருகீசர் என்ற பெயர் உண்டு. அதைத் தவிரவும் மேற்கு பார்த்த சிவ சன்னதியும் கோயிலுக்குள் இருக்கிறது.இத்தலம், அப்பராலும் சுந்தரராலும் பாடப்பெற்றது. சம்பந்தரின் திருப்பதிகம் கிடைக்கும் பேற்றை நாம்  பெறவில்லை. இக் கோயிலை நோக்கியவாறு சம்பந்தருக்கென்று தனிக் கோயில் இருக்கிறது.

காஞ்சிப் பெரியவரிடம் ஓதுவாமூர்த்திகள் பாடிய இத்தலப் பாடல் எது என்று தெரியாததால்,அத்தலப் பதிகத்திலிருந்து ஒரு பாடலின் பொருளையாவது உணர சிவபரம்பொருள் அருளுவானாக.

தருமமே வடிவெனக் கொண்டவனே செல்வன்  என்று அழைக்க முற்றிலும் தகுதியானவன். செல்வத்தை உடையவன் என்று பொருள் காண்பதை விட இவ்வாறு பொருள் காண முற்படுவது பொருத்தமாகவும் இருக்கிறது.  பொய்யிலியாகவும் மெய்யர்  மெய்யனாகவும் விளங்குவதே பெருமானது தனி சிறப்பு. " செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே " என்ற சம்பந்தர் வாக்கையும் நோக்கலாம். எனவே தருமமும் செல்வமும் பிரிக்க முடியாதவைகள் ஆகி விடுகின்றன. செல்வனது பாகம் பிரியா நாயகி செல்வி எனப்படுகிறாள். அவளை " அறப் பெரும் செல்வி " என்றுதானே நூல்கள் போற்றுகின்றன !  அவளே காஞ்சியில் கம்பை ஆற்று மணலால் மாவடியின் கீழ் லிங்கம் அமைத்து ஆகம வழியில் நின்று சிவபூஜை செய்கிறாள்.  சேக்கிழாரும் அவளைப்  " பெருந் தவக் கொழுந்து "  எனப்போற்றுவார். அப்படிப்பட்ட செல்வியைப் பாகமாகக் கொண்ட மேற்றளி ஈசனை அப்பர் பெருமான்

" செல்வியைப் பாகம் கொண்டார் "  என்று நமக்குக் காட்டுகின்றார்.
முருகனுக்குச் சேந்தன் என்ற பெயர் உண்டு. " சேந்தனைக் கந்தனை செங்கோட்டு வெற்பனை " என்று கந்தர் அலங்காரம் கந்தவேளின் பெயர்களை அழகாகக் காட்டுகிறது. " சேந்தர் தாதை " என்று முருகனின் தந்தையாகச் சிவபெருமானை வருணிக்கப்படுகிறது. இதையே அப்பரும், "சேந்தனை மகனாக் கொண்டார் "என்கிறார்.

கொன்றை,ஊமத்தை,தும்பை ஆத்தி,எருக்கு போன்ற மணமில்லாத மலர்களை ஏற்கும் பெருமான், அடியார்கள் அன்போடு நகம் தேயும்படி விடியலில் கொய்த  மணம் மிக்க மலர்களையும் ஏற்கிறான். மல்லிகையும் முல்லையும் அவற்றுள் சில . எனினும் அவன் கொன்றை சூடுவதில் விருப்பம் உள்ளவன். " கொன்றை நயந்தவனே " என்று பாடுகிறார் சுந்தர மூர்த்தி சுவாமிகள்.  திருநாவுக்கரசரும், " மல்லிகைக் கண்ணியோடு  மாமலர்க் கொன்றை சூடி " என்பதால் மல்லிகை மாலையையும் ,சரக் கொன்றையையும் பெருமான் அணிகிறான் என்பது கருத்து.

நாலந்தா,காஞ்சி போன்ற இடங்களில் பெரிய பல்கலைக் கழகங்கள் இருந்தன என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கடல் போன்றது கல்வி என்று சொன்னாலும், கல்விக் கடலைக் கரை இல்லாத ஒன்றாக வருணிப்பது நயம் மிக்கது. கடலின் ஆழத்தைக் கணிக்கலாம். கல்விக் கடலோ ஆழம் அறியப்படாதது. ஒவ்வொரு முறையும் புதுப்புது முத்துக்களையும், பவழங்களையும். அதுவரை  கண்டிராதவற்றையும் கிடைக்கச் செய்வது. உலகமாதாவான காமாக்ஷி தேவி அறம் புரியும் இத்தலம்  எல்லாக் கலைகளுக்கும் இருப்பிடமாகத் திகழ்வதில் வியப்பு ஏது?  " கல்வியைக் கரை இலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால் " என்ற வரி இதனைத் தெரிவிக்கிறது.

இரவில் காட்டில் ஆடுவதையும் பெருமான் விரும்புகிறான். " இரவாடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே " என்கிறார் நாவரசர்.  இரவு என்பதை " எல்லி " என்றும் குறிப்பதுண்டு.இவ்வாறு எல்லி  ஆட்டு உகந்த பிரான் செம்மேனியன். தீவண்ணன். ஆகவே ஆகவே துன்னிருள் அகன்று சோதி புலப்படுகிறது. அகஇருளையும் புற  இருளையும் நீக்க வல்ல பெருமான் அவ்வாறு ஆடுவதால் இரவும் விளக்கம் பெறுகிறது. எனவே, இப்பாடலில்  வரும்      " எல்லியை  விளங்க நின்றார் "   என்பது நோக்கி மகிழத்தக்கது. இப்போது பாடலை முழுவதுமாகக் காண்போம்:

 செல்வியைப் பாகங் கொண்டார்  சேந்தனை மகனாக் கொண்டார்                            
 மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக்                                                
 கல்வியைக் கரையி லாத  காஞ்சிமா நகர்தன் னுள்ளால்                                              
 எல்லியை விளங்க நின்றார் இலங்குமேற் றளிய னாரே.

கச்சி மேற்றளி என்னும் இத்தலம், காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியான பிள்ளையார் பாளையத்தில் உள்ளது.

Wednesday, April 22, 2015

காஞ்சிப் பெரியவர்களும் தேவாரமும் - I

காஞ்சி காமகோடிப்  பெரியவர்களுக்குத் தேவாரத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. ஒதுவாமூர்த்திகளோ அல்லது தேவாரத்தில் ஈடுபாடு உடையவர்களோ தரிசனத்திற்காகச் செல்லும்போதெல்லாம் அவர்களைக் கொண்டு தேவாரம் சொல்லச் சொல்லிக் கேட்பது வழக்கம். அதற்குப்  பிறகு அப்பாடலுக்குப் பெரியவர்கள் தரும் விளக்கத்தை வேறு எங்கும் காண இயலாது.சில சமயங்களில், தேவாரத்தில் இருந்து ஒரு வாக்கியத்தைக் கூறி அதை யார் பாடியது என்று கேட்பார்கள்.

திருவீழிமிழலை,சீர்காழி போன்ற தலப் பதிகங்களில் அவர்களுக்கு இருந்த ஈடுபாட்டைப் பல முறை அனுபவித்தும், கேட்டும் மகிழ்ந்ததுண்டு. ஒருமுறை, "திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கே  சேர்கின்றாரே" என்ற வரியைக் கூறி அது யார் பாடியது என்று கேட்டார்கள்.  இன்னொரு சமயம்,        " சந்தோக சாமம் ஓதும் வாயானை " என்ற பகுதியைக் குறிப்பிட்டுக் கேட்டார்கள்.  சுவாமிக்கு இளநீர் அபிஷேகம் பற்றிய குறிப்பு எங்கே வருகிறது தெரியுமா என்ற கேள்வி தொடர்ந்தது. இவை எல்லாம் அப்பர் சுவாமிகள் அருளிய திருவீழிமிழலைப் பதிகங்களில் காணப்படுபவை. அப்பர் சுவாமிகள் பாடிய திருத்தாண்டகப் பாடல்களைப்  பாடச் சொல்லி மிகவும் விரும்பிக்கேட்பதும் வழக்கம்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் திருவாலங்காட்டில் நடைபெற்ற நவராத்திரியின் போது தேவாரம் முழுவதும் பாராயணம் செய்யச் சொல்லி உத்தரவு ஆயிற்று. ஒன்பது தினங்களிலேயே முடிந்து விட்டதால் எஞ்சியுள்ள பத்தாவது தினத்தில் திருவாசகப் பாராயணமும் செய்யச் சொன்னார்கள். மூவர் தேவாரத்தையும் ஒரே புத்தகமாக இருநூறு ரூபாய்க்கு வெளியிட்டபோது, அதன் விலையை நூறு ரூபாய்க்கு ஒதுவாமூர்த்திகளுக்குக் கொடுக்கும்படி கருணை பாலித்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்..

அண்மையில் ஒரு ஓதுவாமூர்த்திகள் கூறிய தகவலைக் படிக்க  நேரிட்டது. பெரியவரின் சிவிகைக்குப் பின் சென்று  கொண்டிருந்த ஒதுவாமூர்த்திகளை அழைத்து , காஞ்சியில் உள்ள ஏகம்பநாதர் மீதும்,கச்சி மேற்றளியின் மீதும்,திருமுதுகுன்றம் என்ற விருத்தாசலத்தின் மீதும் அமைந்துள்ள பாடல்களைப் பாடுமாறு சொன்னவுடன் ஓதுவாரும் அவ்வாறே பாடி, பெரியவரின் ஆசியைப் பெற்றார் என்பதே அத்தகவல். இம்மூன்று பாடல்களையும் விளக்கி உதவுமாறு நமது ஆப்த நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்கி, திருவருளும் குருவருளும் துணை நிற்க ,அவற்றை இங்கே தர முயல்கின்றோம்.

 நமது துயரங்கள் தீர ஒரு வழியை அப்பர் பெருமான் உபதேசிக்கும் பாடலை முதலாவதாகக் காண்போம். துயரங்களுக்கு மூலகாரணம் பண்டு நாம் செய்த வினைகள் என்பதால் அவற்றிலிருந்து விடுபட்டால்தான் மீண்டும் வினைகள் செய்ய ஏதுவான பிறப்பை வெல்லலாம். அப்படியானால் அதை நாமே நீக்கிக் கொள்ள முடியுமா? ஒருக்காலும் முடியாது என்று திட்ட வட்டமாக அறிவிக்கிறது சைவ சித்தாந்தம். வினை நீக்கம் பெறும் பக்குவம் வரும்போது திருவருள் தானே முன்னின்று வினை நீக்கம் செய்து தூய்மை செய்யும். அப்போது உயிர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். இறைவனது திருவடியே துணை எனக் கொண்டு அதனைக் காண்டலே கருத்தாகி இருக்க வேண்டும். ஒருக்கால் பழவினை நல்லதாகவே இருந்து விட்டால் வினை நீக்கம் எளிதாகி விடுகிறது அல்லவா? அப்படிப்பட்டவர்களுக்கு ஆலய தரிசனம், குருவருள்,அடியவர் இணக்கம், ஆகியவை கிடைப்பது நல்வினைப்பயனால்தான். எனவே அப்பெருமானை மீண்டும் மீண்டும் கண்டு கண்டு, காதற் கசிவோடு களிக்க வேண்டும். அவன் சேவடிக்கீழ் நின்று இறுமாந்திருக்கும் பெருவாழ்வு பெற வேண்டும். இதற்கு என்ன புண்ணியம் செய்தோமோ என்று எண்ணி எண்ணி மகிழ்ந்து திருவருளைப் போற்ற வேண்டும். இதைத்தான் அப்பர் பெருமான் இப்பாடலில்,
" பண்டு செய்த பழ வினையின் பயன்
 கண்டும் கண்டும் களித்தி காண் நெஞ்சமே .."    எனப்பாடுகிறார்.

எனவே ஏகம்பநாதனுக்குத் தொண்டனாகத் திரிந்து பணி செய்ய வேண்டும். அப்பெருமானது ஜடை ,செஞ்சடையாக விளங்குகிறது. (அருண ஜடேச்வரர் என்று திருப்பனந்தாளில் சுவாமிக்குப் பெயர்.) அந்த ஜடாமுடியில் வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. அதாவது இயற்கையிலேயே மணம் வீசும் ஜடாபாரம் என்று  பொருள் கொள்ளலாம். ஏனென்றால் அவன் சூடும் மலர்கள் அத்துணை மணம் வாய்ந்தவை அல்ல. ஊமத்தை, தும்பை,ஆத்தி மலர்களை ஏற்றுக்கொண்டு மணம் வீசும் மலர்களை நமக்கு வழங்கிய தியாகராஜ வள்ளல் அவன்.   அச்சடையே மணம் வாய்ந்ததாக இருக்கும்போது மலர்களைத்தேடிப் போக வேண்டிய அவசியம் வண்டுகளுக்கு ஏது?  வண்டுகள் இறைவனை நாடுவதைப்போலத் தொண்டர்கள் அவனது திருவடிக் கமலங்களை நாடிப் பற்றவேண்டும். கண்டு கண்டு களிப்படைய வேண்டும். அதைக் குருமுகமாகக் காண்பதில் எத்தனை ஆனந்தம் ஏற்படுகிறது ! இதோ அப்பாடல்:

 பண்டு செய்த பழ வினையின் பயன்
 கண்டும் கண்டும் களித்தி காண் நெஞ்சமே
 வண்டுலாமலர்ச்  செஞ்சடை ஏகம்பன்
தொண்டனாய்த்  திரியாய் துயர் தீரவே.

என்பது அந்த அற்புதமான தேவாரப் பாடல்.
( தொடரும் )     

Tuesday, April 14, 2015

திருப்புகலூர்க் காட்சிகள்

திருப்புகலூர் கோயிலும் அகழியும் 
திருப்புகலூர் என்பது தேவார மூவர்களாலும் பாடல் பெற்ற தலம். மயிலாடுதுறையிலிருந்து சன்னாநல்லூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் வழியில் உள்ளது. இங்குதான் அப்பர் சுவாமிகள் சித்தரை சதயத்தன்று சிவ முக்தி அடைந்தார். இங்கு  அக்னி பகவான் பூஜித்ததால் சுவாமி அக்னீஸ்வரர் எனப்படுகிறார். இந்த சன்னதியைத் தவிரவும் மற்றோர் சிவசன்னதி இக் கோயிலுக்குள் உண்டு. அங்கு சுவாமிக்கு வர்த்தமாநீசுவரர் என்று பெயர் வழங்கப்படுகிறது. இம்மூர்த்தியின் மீதும் சம்பந்தர் அருளிய பதிகம் இருக்கிறது. இந்த வர்த்தமாநீசுவர சுவாமியை நாள்தோறும் பல்வேறு மலர்களாலும் மாலைகளாலும் ஆராதித்து வந்தவர் முருக நாயனார் என்பவர். இவரும் அறுபத்து மூவருள் ஒருவர்.

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருப்புகலூருக்கு வந்தபோது அவர்கள் முருக நாயனாரது இல்லத்தில் தங்கியிருந்ததாகப் பெரிய புராணம் கூறும். அவர்களது வருகையைப் பற்றிக் கேள்வியுற்றவுடன் ,  அருகிலுள்ள திருச்சாத்த மங்கை என்ற தலத்தில் வசித்து வந்த திருநீல நக்க நாயனாரும், திருச்செங்காட்டங்குடியில் வசித்த சிறுத்தொண்ட நாயனாரும் திருப்புகலூரை வந்தடைந்து அவர்களை வணங்கி அளவளாவி மகிழ்ந்தனர். சம்பந்தருடன் யாத்திரையில் கூட வரும் திருநீலகண்டப் பாணனாரும், அவரது மனைவியாரான மதங்க சூடாமணியாரும் அப்போது உடன் இருந்தனர். இவ்வாறு, பல நாயன்மார்கள் சந்தித்த தலமாக விளங்குகிறது திருப்புகலூர்.

மலர் கொண்டு மகாதேவனை முருக நாயனார் அர்ச்சித்த சிறப்பைக் காட்ட வந்த சேக்கிழார் பெருமான், அந்த ஊரின் இயற்கை வருணனையை நயம் பட எடுத்துரைக்கும் பாங்கு அறிந்து மகிழத் தக்கது. அது சோலைகளும் பொய்கைகளும் சூழ்ந்த வளம்மிக்க ஊராக இன்றும் காட்சி அளிக்கிறது. கோயிலைச் சுற்றிலும் அகழி இருக்கிறது. அங்கு களங்கமில்லாதவைகளாகக் காட்சி அளிப்பவைகளுள்  நல்லவர்களது மனமும் ஒன்று. களங்கம் உடைய சந்திரன் , அரவு (பாம்பு) வந்து சூழும் போது மேலும் களங்கமாகத் தோற்றம் அளிப்பான் அல்லவா? ஆனால் இங்கோ வெள்ளை வெளேரென்று காட்சி அளிக்கிறானாம். அது தூய வெண்ணீற்றை நினைவு படுத்துவது போல் இருக்கிறதாம். வெண்ணீறு களங்கம் இல்லாதது. " சுத்தமதாவது நீறு " என்று  ஞான சம்பந்தரும்  பாடுவார்.    " பால் வெள்ளை நீறு" என்றும் சொல்வார்கள். அந்த ஒளியில் அங்கு இரவும் பகல் போல் தோற்றமளிக்கிறதாம். அது மட்டுமல்ல. பூக்களில் மகரந்தம் உண்ட வண்டுகளும் களங்கமற்றவை என்கிறார் சேக்கிழார் பெருமான்.

கதிரவன் உதயம் ஆனவுடன் பொய்கைகளில் இருக்கும் தாமரை மொட்டுக்கள் மலரும். அப்போது அவற்றோடு ஒட்டிக் கொண்டிருந்த தண்ணீர் விடுபட்டாலும் ஈரத்தன்மை சிறிது நேரம் இருக்கும். மலரும் மகிழ்ச்சியில் அவை ஆனந்தக் கண்ணீர் அரும்புவதுபோல் இருக்கும் தானே ! ஆனால் அதைக்காட்டிலும் கண்ணீர் வடிப்பன எவை தெரியுமா ? தேவாதிதேவனாகிய சிவபெருமானின் புகழ் பாடும் அமுத கானங்களை ( பாடல்களை ) க் கேட்டு நெக்குருகும் பக்தர்களது முகமாகிய தாமரைகளின் கண்களே.அவற்றில்  இருந்து பெருகும் ஆனந்த நீர் அரும்பும் என்கிறது பெரிய புராணம்.

வண்டு பாடப் புனல் தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன

கொண்ட வாச முகை அவிழ்ந்த குளிர் பங்கயங்களே அல்ல;                                                                                                  
அண்டர் பெருமான் திருப்பாட்டின் அமுதம் பெருகச் செவி மடுக்கும்                    

 தொண்டர் வதன பங்கயமும் துளித்த கண்ணீர் அரும்புமால்.                                                                                                              
என்பது அந்த நயம் மிக்க பாடல்.

பொய்கையில் மலரும் தாமரையும் நீர் துளிக்கும். தொண்டர்களின் முகமாகிய தாமரையும் பெருமான் புகழ் கேட்ட ஆனந்தத்தில் கண்ணீர்  பெருக்கும். திருப்புகலூரிலோ  பங்கயங்கள் நீர் அரும்பாமல், தொண்டர் முகத்
தாமரைகளே கண்ணீர் பெருக்குவன என்பது மிக்க நயம் வாய்ந்தது.

இத் தெய்வத்தமிழைப் படிக்கும் நமக்கும் ஆனந்த நீர் அருவி கண்களிலிருந்து பெருகவேண்டும். அத்துணைச் சிறப்பு வாய்ந்தது தெய்வச் சேக்கிழாரது வாக்கு. 

Saturday, March 28, 2015

வினை நீக்கமும் இறை உணர்தலும்

" நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் " என்பது, திருநல்லூர் என்ற சிவ ஸ்தலத்தின் மீது திருநாவுக்கரசு நாயனார் அருளிய திருப்பதிகம் ஒன்றின் துவக்கம். இது, நினைதல்  உருகுதல் , நைதல் ஆகிய மூன்று நிலைகளைக் குறிப்பது. முதல் கட்டமாக இறைவனைப்பற்றிய நினைப்பு வர வேண்டும். அதன் பின்னர் அவனை எண்ணி எண்ணி உருக வேண்டும். மூன்றாவதாக, உருகி உருகி மனம் நைந்து குழைய வேண்டும். இது எல்லோருக்கும் சாத்தியமா என்று கேட்டால் இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.

ஒரு ஆப்த நண்பர்  " எனக்கு ஆழ்ந்த பக்தி ஏற்படுவதில்லை " என்றார். அவர் நாத்திகர் அல்ல. கோயில்களுக்குக் குடும்பத்துடன் செல்பவர் தான். ஆனால் அவரது ஆன்மீகப்பயணம் அதோடு முடிந்து விடும். நாம் ஏதாவது ஆன்மீக சிந்தனைகளைச் சொன்னால் கேட்கும் குணமும் அவருக்கு உண்டு. அதற்கு அடுத்தபடிக்குச் செல்ல முடியாமல் அத்துடன் நின்று விடுவார்.

நினைப்பு என்பது சிந்தையில் எற்படுவது.இறை சிந்தனையோ தானாகவே         ஏற்படுவதில்லை  .வீட்டில் உள்ளவர்களோ ,பிறரோ  சொல்லிக்கொடுத்து வருவதில்லை. அவர்களால் சொல்லத்தான் முடியுமே தவிர சிந்தையைத் திருத்தி ஆள முடியாது. ஆன்மீக ஈடுபாடு உள்ள ஒரு குடும்பத்திற்குள்  எல்லோருக்கும் ஒரே அளவிற்குத் தெய்வ சிந்தனை இருப்பதில்லை. ஒரு சிலர் அதில் நாட்டம் இல்லாமலே போய் விடுவதும் உண்டு.

 தெய்வத்தைக் காட்ட முடியுமா என்று கேட்பவர்களுக்கு விடையாக, " அவரவர்கள் உணரத்தான் முடியும் " என்று சமாதானம் சொல்கிறார்கள். அவ்வாறு உணருவது என்பது எல்லோருக்கும் சாத்தியமா? நூலறிவால் உணர முடியுமா? நூலின் பொருளை வரிக்கு வரி உரை நூல்களின் துணை கொண்டு படிப்பதால் அறிய முடியுமா? முற்றோதுதல் செய்தால் உணர முடியுமா? அப்படியே செய்தாலும் இன்னும் எத்தனை மணித்துளிக்கு நிறைவு பெறும் என்றுதானே மனம் கணக்குப் போடுகிறது! பாடலின் கருத்தையே ஏற்க முனையாத மனம் எவ்வாறு அதன் உண்மைப் பொருளாக விளங்கும் இறைவனை உணரப்போகிறது?  அப்படி உணரத்துவங்கிவிட்டால் சிவப் பிரகாச சுவாமிகள் சொல்வது போல் கண்கள் நீர் பெருக்கி, மேற்கொண்டு படிக்க முடியாமல் தடை செய்யும் அல்லவா? இந்நிலை ஏற்படாதவரை நினைப்பதோ, உருகுவதோ நைவதோ எங்ஙனம் சாத்தியம் ஆகும் ?

நம்மால் உயரிய நிலையை எட்ட முடியாதபோது நம் சிந்தை எவ்வாறு திருத்தம் பெறும்? இதற்கு விடையாகத் திருவாசகம், " சிந்தையைத் திருத்தி ஆண்ட சிவலோகா " என்பதால் இறைவனது துணையும் அருளும் இல்லாமல் சிந்தை திருத்தம் பெறாது என்பது வெளிப்படை. இதற்குத் தடையாக இருப்பது அவரவர்களது வினை. யாராக இருந்தாலும் அவரவர் செய்த நல்வினை- தீவினைப் பயனை அனுபவித்தே தீர வேண்டும். " அவ்வினைக்கு இவ்வினையாம் " " முந்திச் செய்வினை இம்மைக் கண் நலிய " என்ற தேவார வரிகள் இதையே காட்டுகின்றன.

வினை முழுவதும் நீங்கியவர்களுக்குத் தான் இறையருள் கிட்டுமா எனக் கேட்கலாம். பல்பிறவி எடுத்து, ஓரளவு வினை எஞ்சி நிற்பவர்கள் பால் இரக்கம் ஏற்பட்டு, அவர்களது சிந்தையைத் தாயைக் காட்டிலும் தயை உடைய பரமன் திருக்கண் நோக்கம் செய்கிறான். ஆன்மீக வாதிகளின் முதல் படி இதுவே. அந்தப் பேரருளைத் தந்த இறைவனை மீண்டும் நினைக்காமல் நம் மனம் அதோடு நின்று விடுகிறது. எதை  எதையோ சிந்திக்கத் தொடங்கி விடுகிறது. ஆழ்ந்த பக்தி ஏற்படாததன் முதற் காரணம் இதுதான்.

திருப்பெருந்துறையில் தனக்குத் தரிசனம் தந்த இறைவனை மீண்டும் காண வேண்டி மாணிக்க வாசகர் விண்ணப்பம் செய்கிறார். அவனை எண்ணி எண்ணிக்  கரையவில்லையே, உருகவில்லையே, அவன் புகழ் பாட வில்லையே, பாடி ஆடிக் கூத்து ஆட வில்லையே, பன் மலர்களை  அவனடிக்கு அர்ப்பணிக்க வில்லையே, அவனது நாமம் சொல்வோரும் கசிந்து உருகுவோரும்  எத்தனையோ அடியார் இருக்கும் போது தன்னை ஆட்கொண்ட பெருங்கருணையை எண்ணி,நையாமல் , விழி நீர் பெருக்காமல் மரக் கண் உடையவனாகியும், சிவநாமங்களைக் கேளாத இரும்பு போன்ற செவியனாயும் அலறும் எனக்கு அருள் செய்தமைக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் "  என அகம் குழைந்து பாடுகிறார்.

புராணங்களையும் பிற அற நூல்களையும்  படிப்பது என்பது நல்ல அடித்தளம் எற்படுத்துவது போன்றது. பள்ளங்களைச் சமன் செய்து மண்ணாலும் கல்லாலும் நிரப்புவது போன்றது. ஆனால் அதுவே, பயணம் செய்வதற்கு ஏற்றதாகி விடாது அல்லவா? அதற்கு மேல் செம்மண், ஜல்லி, தார் போன்ற பொருள்களை இட்டு ஏற்றதாகச் செய்வது போல நாமும் முதல் கட்டத்திலேயே நின்று விடக்கூடாது. மணி வாசகர் சொல்வது போல் நாம் அரிய வாய்ப்பை நழுவ விடலாகாது. பின்னால் பார்த்துக்கொள்வோம் என்று தாமதித்தால் அந்த அருள் மீண்டும் கிடைக்குமா என்று சொல்ல முடியாது  அவனது பாத மலர்களை விடாது பற்றினால், அடுத்த இரு நிலைகளும் வினை நீக்கம் பெற்றுப் பிறவா நிலைக்குக் கொண்டு  சென்று விடும்.அதனால் தான் இம்மூன்று நிலைகளையும் குறிப்பிட்ட நாவுக்கரசர், " நில்லாமே தீ வினைகள் நீங்க வைத்தார் " என்று அடுத்த வரியில் விளக்கமாக அருளிச் செய்கிறார்.

உணர்ந்து ஓதுதல் என்பது பாட்டின் பொருளை உணர்ந்து ஓதுதல் அன்று. பாட்டின் பேரின்பப்  பொருளாகிய பரமனை உணர்ந்து பாடுதலே ஆகும். " ஓதி யாரும் அறிவார் இல்லை " " யார் உன்னை அறியகிற்பாரே "  " இவர் தன்மை அறிவார் ஆர் " " சான்று காட்டுதற்கு அரியானை "  "இன்ன தன்மையன் என்று அறி வொண்ணா எம்மான் " முதலிய திருமுறை வரிகள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. எல்லா உலகத்து உயிர்களுக்கும் இது பொருந்தும். சந்திர சேகரனும் கங்காதரனுமாகிய சிவ பரஞ்சுடரின் குஞ்சித பாத மலர்களை இடையறாது நினைந்து ,உருகி, நைவதே முழுவதுமாக மலநீக்கம் பெற்றுச்  சிவானந்தம் பெற ஒரே வழி. : "நையாத மனத்தினனை நைவிப்பான்  " என்று திருவிசைப்பாவும் இந்த சைவ சித்தாந்த சாரத்தையே காட்டுகிறது.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவுலாவிய நீர் மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.                                                                                                        
   ,                                                                              - பெரிய புராணம்